12/04/2019

கத்தாழம்பட்டி டூ சென்னை!


சினிமாவில் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போடும் நடிகர் காளி வெங்கட். காமெடி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பரிணமித்துவரும் ஓர் அழகான கலைஞர். குறும்படத்திலிருந்து வரும் இயக்குநர்களின் விருப்பமான கலைஞனும்கூட. தூத்துக்குடியின் ஒரு குக்கிராமத்திலிருந்து எளிய பிண்ணனியோடு சென்னைக்கு வந்து போராடி சினிமாவுக்குள் நுழைந்த காளி வெங்கட், வளர்ந்துவரும் நடிகராக மாறியிருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள கத்தாழம்பட்டி என்ற குக்கிராமம்தான் வெங்கட்டின் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட், சினிமா ஆசையோடு ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவர். வந்த கையோடு சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார். ஆனால், சினிமா வாய்ப்பு தேடுவது என்பது ஆலக்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் வேலை என்பதை உணர்ந்தார். வாய்ப்பு கிடைக்கும் ஜீவணத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக சென்னை அண்ணா நகரில் மளிகை கடை வேலை பார்த்திருக்கிறார். அதோடு தண்ணீர் கேன் போடுவது என வெங்கட் செய்யாத வேலைகளே கிடையாது. இடையிடையே சினிமாவுக்கு வாய்ப்புத் தேடுவது என்று இருந்திருக்கிறார்.

ஊரிலிருந்து வந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்தும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் அலைந்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தபோது, வேறு வேலைக்கு போகவும் யோசித்திருக்கிறார். ஆனால், சென்னையில் சினிமா தேடி விட்ட ஐந்தாண்டுகளை வேறு எங்கே போய் எடுப்பது என்ற கேள்வி அவருடைய மனதுக்குள் வந்தது. விளைவு, ஒரு முடிவெடுத்து சினிமா வாய்ப்பு முன்பைவிட தீவிரமாகத் தேடத் தொடங்கினார். பாதுகாப்புக்காக டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார் வெங்கட். கும்பலோடு டப்பிங் பேசும் வாய்ப்புகளைப் பெற்றுவந்த காலத்தில், கதாநாயகி ஒருவருக்கு டப்பிங் பேசியதாகத் திகிலூட்டுகிறார் வெங்கட்.

“நடிப்புக்கான வாய்ப்பு தேடுவதைவிட டப்பிங் பேச வாய்ப்பு தேடுவது மிகவும் சிரமம் என்பதை டப்பிங் சங்கத்தில் சேர்ந்த பிறகுதான் உணர்ந்தேன். ஆனால், ‘மரகதநாணயம்’ படத்தில் கதாநாயகி நிக்கி கல்ராணி அவ்வப்போது ஆண் குரலில் பேசும் காட்சி வரும். அந்தக் காட்சிக்கு நான்தான் டப்பிங் பேசினேன்” என்கிறார் காளி வெங்கட்.

தொடர்ந்து சினிமாவுக்கு வாய்ப்பு தேடியபோது 2008-ம் ஆண்டில் ‘தசையினை தீ சுடினும்’ என்ற படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவைப் பற்றியும் நடிப்பைப் பற்றியும் அவர்தான் வெங்கட்டுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் முழுமையாக சூட்டிங் செய்யப்படாமல் நின்று போகவே வெங்கட்டின் சினிமா தேடல் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், பலருக் ‘காளி’ வெங்கட் என்று அழைக்கத் தொடங்கவே, அந்தப் பெயரையே வைத்துக்கொண்டதாகச் சொல்கிறார் காளி
வெங்கட்.

பிறகு எப்படித்தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று காளி வெங்கட்டிடம் கேட்டால், பெருமூச்சு விடுகிறார். “அப்போ கலைஞர் டி.வி.யில ‘நாளைய இயக்குநர்’ போய்க்கிட்டு இருந்தது. சீசன் 3-ல் நான் ஐந்து குறும்படங்கள்ல நடிச்சேன். அந்த சீசன்ல சிறந்த நடிகருக்கான விருது எனக்குக் கிடைச்சது. அங்கே இருந்துதான் எனக்கு நிறைய சினிமா தொடர்புகள் கிடைக்கத் தொடங்குச்சி. நட்பு வட்டாரங்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைச்சது. ‘வா’(குவார்ட்டர் கட்டிங்) படம்தான் என்னுடைய முதல் படம்” என்கிறார் காளி வெங்கட்.

 ‘வா’ படத்தில் காமெடியனாக நடித்தத்தை தொடர்ந்து சில படங்களில் காளி வெங்கட் நடித்தபோதும் ‘உதயம் என்.ஹெச். 4’ அவரை ஒரு காமெடி நடிகராக அடையாளப்படுத்தியது. அதன் பிறகு ‘தடையற தகர்க்க’ ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி காளி வெங்கட்டுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.  காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கையில் ‘முண்டாசுப்பட்டி’ மிக முக்கியமான படமாக அமைந்தது. முண்டாசுப்பட்டி பட வாய்ப்பு கூட அவருக்கு எதேச்சையாகத்தான் கிடைத்து.

 “‘முண்டாசுப்பட்டி’யை ராம்குமாருடைய குறும்படங்களில் நான் ஏற்கெனவே டப்பிங் பேசியிருக்கிறேன். அதன்பிறகு கண்ணபிரான் என்ற நண்பர் மூலமாகவே இயக்குநர் ராம்குமார் நேரிடையாக அறிமுகமானார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் விஷ்ணுவோடு வரும் காமெடியன் ரோலுக்கு வேறோருவரை புக் செய்திருந்தார். அவர் வராத காரணத்தால் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அந்தப் படத்தில் நடிச்சது ஓர் இனிய அனுபவம். படம் முழுவதும் நான் டிராவல் பண்ணியிருப்பேன்.  எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம்.” என்கிறார் காளிவெங்கட்.

குறும்படங்களிலிருந்து காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கை தொடங்கியதால், குறும்படங்களிலிருந்து  சினிமாவுக்குள் வரும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க காளி வெங்கட்டுக்கு வாய்ப்பு வந்துவிடுகிறது. அவர்களோடு நல்ல நட்பில் இருப்பதாலும் தொடக்கக் காலத்தில் குறும்படங்களில் டிராவல் செய்ததாலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து சினிமாவில் காமெடியனாக தோன்றிய காளி வெங்கட், தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார். ஏன் இந்த மாற்றம்? “எனக்கு சினிமாவில் வெரைட்டியாக நடிக்கவே ஆசை. தொடர்ந்து ஒரே மாதிரியான வட்டத்துக்குள் நடிப்பதில் எனக்கும் விருப்பம் இல்லை. அதற்கேற்றார்போல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அந்த வாய்ப்பையும் விடவில்லை. ‘இறுதிச்சுற்று, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற படங்களில் காமெடியைத் தாண்டி நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் அமைந்தன. குறிப்பாக என்னால் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது கொடுத்தது.” என்கிறார் காளிவெங்கட்.

சினிமாவில் காலடி எடுத்து வைக்க 10 ஆண்டுகளைச் செல்விட்ட காளி வெங்கட், கடந்த 5 ஆண்டுகளில் ஐம்பது படங்கள் வரை நடித்து முடித்துவிட்டார். பரபரப்பாகச் சில ஆண்டுகள் நடித்துவிட்டு பிறகு காணாமல்போய்விடுவதில் காளி வெங்கட்டுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்; நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே தன்னுடைய லட்சியம் என்று உறுதியாகச் சொல்கிறார் இந்தக் கலைஞர்.

கேள்வி - பதில்



மறக்க முடியாத அழைப்பு?

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு வந்த அழைப்பு. 30 வயதிலேயே கதாநாயகிக்கு அப்பாவாக நடித்துவிட்டேன்.

 ஹீரோ ஆசை?

 நான் ஹீரோ மெட்டீரியல் கிடையாதுங்கோ.

பட என்ணிக்கை?

கிடைக்கிற வரை நடிக்க வேண்டியதுதான்.

சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டதா?

இலக்கை அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது.

 நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்?

தளபதி கூட நடித்துவிட்டேன். சூப்பர் ஸ்டார், தல கூட ன் நடிக்க வேண்டும்.

எதிர்கால ஆசை?

என்னுடைய சினிமா அனுபவங்களை எழுத ஆசை இருக்கு.

கவர்ந்த படம்?

ராஜா மந்திரி படம். என்னோட இயல்பான கேரக்டர் என்னவோ, அதே கதாபாத்திரத்தில் நடித்த படம்.





- இந்து தமிழ், 12/04/2019

No comments:

Post a Comment