07/01/2020

ஹம்பியின் சதுரங்க வேட்டை!


சதுரங்கம் (செஸ்) என்றாலே இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் என்ற ஒற்றைச் சொல்லை, ஒற்றைப் போட்டியில் மாற்றிக் காட்டியிருக்கிறார் கொனேரு ஹம்பி. சதுரங்கம் ‘கிளாசிக்கல்’ மகளிர் பிரிவில் சைலண்டாக முன்னேறி வந்தவர், இன்று உச்சம் தொட்டுள்ளார். ‘ரேபிட்’ பிரிவு சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடிக் கொடுத்திருக்கிறார் ஹம்பி.

 சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்த இந்தியாவில் வீரர், வீராங்கனைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், சதுரங்கம் என்றாலே கடந்த இரு தசாப்தங்களாக நினைவுக்கு வருபவர் விஸ்வநாதன் ஆனந்த்தான். சதுரங்க விளையாட்டில் தன்னுடைய சாம்பிராஜ்ஜியத்தை உலக அளவில் விஸ்தரித்து வைத்திருக்கிறார். அவரைத் தாண்டி பல வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சதுரங்கத்தில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வயது வித்தியாசமின்றி செஸ் மாஸ்டர்களும் கிராண்ட் மாஸ்டர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சில போட்டிகளில் வெல்வதன் மூலம் சதுரங்க விளையாட்டின் ராஜா, ராணியாக வலம் வருவோர் குறைவுதான்.

சதுரங்க விளையாட்டில் ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ பிரிவுகளில் வெல்வோருக்கு தனி மரியாதையும் அந்தஸ்தும் கிடைக்கும். இதில் வெற்றி பெறுவோர் சதுரங்க விளையாட்டின் பிதாமகர்ளாகக் கருதப்படுவார்கள். சதுரங்க விளையட்டில் பல உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 2017-ம் ஆண்டில்‘ரேபிட்’ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்குப் பிறகு தற்போது ‘ரேபிட்’ பிரிவில் பட்டம் வென்று காட்டியிருக்கிறார் கொனேரு ஹம்பி. இந்தப் பிரிவில் பட்டம் வெல்லும் முதல்
இந்திய பெண்ணும் ஹம்பிதான்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 122 வீராங்கணைகள் பங்கேற்றார்கள். இதில் இந்தியா சார்பில் கொனேரு ஹம்பி வாய்ப்பு பெற்றார். பல்வேறு சுற்றுப் போட்டிகளைத் தாண்டி வந்த கொனேரு ஹம்பி, இறுதிப் போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். இருவருமே புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தலில் ஈடுபட்டார்கள். இருவருடைய இடைவிடாது முயற்சியால் ஆட்டம் டிரா ஆனது. வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 2-1 என்ற கணக்கில் வென்றுதான் உலக சாம்பியன் பட்டத்தை கொனேரு ஹம்பி தனதாக்கினார்.

சதுரங்கம் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல கட்டைப் போட்டு மெதுவாக ஆடும் விளையாட்டுதான். இதை ‘கிளாசிக்கல்’ பிரிவு என்பார்கள். ஆனால், ‘ரேபிட்’ பிரிவு என்பது விரைவாக ரன் சேர்க்கும் ஒரு நாள் கிரிக்கெட்டைப் போன்றது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நகர்த்தல்கள் மூலம் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதுதான் ‘ரேபிட்’ பிரிவு. இந்தப் பிரிவில் வெற்றி பெற்று ஒற்றை ராஜாவாக விஸ்வநாதன் ஆனந்த் இருந்த ‘கிளப்’பில் ராணியாக சேர்ந்திருக்கிறார் கொனேரு ஹம்பி.

கொனேரு ஹம்பியின் இந்த வெற்றியில் இன்னொரு தனி சிறப்பு உண்டு. 32 வயதான ஹம்பி, மகப்பேறுக்கு பிறகு இரண்டு ஆண்டு காலம் ஓய்வில் இருந்தார். பேறுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சதுரங்க அரங்கில் நுழைந்த கொனேரு ஹம்பி, மீண்டும்  ‘டேக் ஆஃப்’ ஆகியிருக்கிறார். சில மாதங்களுக்கு  ஜார்ஜியாவில் நடந்த ஒலிம்பியாட் செஸ் பந்தயத்தில் காய்களை வேகமாக நகர்த்த முடியாமல் தடுமாறினார். தற்போது ‘ரேபிட்’ சுற்றில் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றது அவருக்குத் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

மாஸ்கோவில் இதே செஸ் தொடரில் ‘பிளிட்ஸ்’ என்ற அதிவேக சதுரங்க சாம்பியன் போட்டியும் நடைபெற்றது. அதாவது, அதிரடியாக
விளையாடக்கூடிய டி20 கிரிக்கெட்டைப் போன்றது. இதில் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ஹம்பி, இறுதியில் சறுக்கி 12-வது இடத்தை மட்டுமே பிடித்து ஏமாற்றினார். ஆனால், கொனேரு ஹம்பியைப் பொறுத்தவரை இதுவும் அவருடைய ‘கேரிய’ரில் உச்சம்தான். சதுரங்கத்தில் கொனேரு ஹம்பி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் வீரரைப் போன்றவர். அதாவது ‘கிளாசிக்கல்’ வீராங்கனை. ஆனால், தற்போது ‘ரேபிட்’ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதோடு, ‘பிளிட்ஸ்’ பிரிவிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது சதுரங்கப் பயணத்தைத் தொடங்கினார் கொனேரு ஹம்பி. கடந்த 22 ஆண்டுகளில் மேடு பள்ளங்களைக் கடந்து, இந்தியாவின் சதுரங்க நாயகியாக உருவெடுத்திருக்கிறார் கொனேரு ஹம்பி.  வாழ்த்துகள் ஹம்பி!

இந்து தமிழ், 07/01/2020

No comments:

Post a Comment