05/11/2019

துரோகத்தால் வீழ்ந்த திப்பு சுல்தான்!

மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தான் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. நான்காம் ஆங்கிலோ - மைசூர் போரின்போதே ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு திப்புவின் கோட்டை இரையாகிவிட்டது. அத்துடன் இது மைசூர் அரண்மனைகளைவிட ஒரு நூற்றாண்டு பழமையானதும்கூட. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது.

திப்பு சிறை

மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே
திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை
தெரிகிறது சிறைக்கூடம். தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவரையொட்டி காவிரி ஓடுகிறது. தரை மட்டத்துக்குக் கீழே சிறைச்சாலை என நுட்பமாகக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கினால், பூமிக்கு 30 அடி ஆழத்தில்தான் சிறைக் கூடம் தெரிகிறது.
உள்ளே நுழைந்தால் இன்னும் ஆச்சரியம். சிறை இரண்டு வரிசையாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பெரிய தூண்கள் உள்ளன. தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவரில் வரிசையாய்ச் சிறுசிறு கற்கள். ஓர் அடி நீளத்துக்கு ஒரே அளவாகச் சம இடைவெளியில் இந்தச் சிறுகற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையே நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு நீட்டச் செய்து இந்தச் சிறு கற்களுடன் கைகளைப் பிணைத்துக் கட்டிவிடுவார்களாம். சுவரில் உள்ள ஒரு துவாரத்தைத் திறந்துவிட்டால், காவிரி நீர் இந்தச் சிறையை மெல்ல நிரப்பிவிடும். மரண பீதியுடன் கைதிகள் ஜலசமாதி ஆகிவிடுவார்களாம்.
அது சரி, இந்தச் சிறைக்கு ஆங்கிலேய அதிகாரியின் பெயர் எப்படி வந்தது? நான்காம் ஆங்கிலோ-மைசூர் போருக்கு முன்பாக திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டார் ஆங்கிலேய அதிகாரியான கர்னல் பெய்லிஸ். அதனால், இந்தச் சிறைக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.

தண்ணீர் வாயில்

அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத்  ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். திப்பு சுல்தான் நாள்தோறும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். மூன்றுமுறை ஆங்கிலோ- மைசூர் போர் நடந்தும் வீழ்த்த முடியாத திப்புவை, மீர் சாதிக் எனும் திப்புவின் படைத் தளபதி மூலமே
‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’
வீழ்த்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஒரு நாள் வழக்கம்போல இங்கே நீராட வந்த திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் படை திடுமென நுழைந்து எதிர்பாராமல் தொடுத்த தாக்குதலை முறியடிக்க முடியாமல் கொல்லப்பட்டார் திப்பு. ஒரு வீரனை வேறெப்படி வீழ்த்த முடியும்?
கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.

திப்பு இறந்த இடம்

சற்றுத் தள்ளி திப்பு சுல்தான் கட்டிய ஜும்மா மசூதியைப்
திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
பார்த்தோம். இந்த மசூதி இருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சிக்கு வந்த பிறகே ஆஞ்சநேயர் கோயில் போய், மசூதி வந்ததாகவும் சொன்னார் வழிகாட்டி. கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயர் சில வரலாற்றுப் புத்தகங்களில் திப்புவுக்கு உண்டு. ஆனால், இந்த மசூதிக்கு நேர் எதிரே ரங்கநாதர் கோயிலும் உள்ளது. கோயில்களை இடித்தவர் திப்பு என்றால், ரங்கநாதர் கோயிலை மட்டும் அவர் எப்படி விட்டுவைத்தார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் மானியமும் வழங்கியவர் திப்பு. இதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது.

திப்பு சுல்தானின் கோடை மாளிகை
கோடை மாளிகை

திப்புவின் வரலாறு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிபடியே அங்கிருந்து வெளியே வந்தோம். 15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மஹால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம்.

மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு
திப்பு சமாதி
சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள். திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாய் பாத்திமா பேகத்தின் சமாதிகளுக்கு அருகிலேயே திப்புவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்திலும் திப்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வெளியேயும் எங்கே பார்த்தாலும் சமாதிகள்தாம். ஆனால், கண்ணைக் கவரும் நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகளும் முகப்பில் உள்ள பெரிய தோட்டமும் இந்த இடத்தை அழகாக்குகின்றன.


No comments:

Post a Comment