23/04/2019

காஞ்சனா 3 விமர்சனம்

கோவையில் உள்ள தாத்தா - பாட்டியின் 60-ம் கல்யாண விழாவுக்கு குடும்பத்தோடு செல்கிறார் நாயகன் ராகவா லாரன்ஸ். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட டென்ட் அடிக்க முயற்சிக்கிறார். அதற்காக அந்த மரத்தில் அடித்துவைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆணிகளைப் பிடுங்குகிறார். அதிலிருந்து வெளியே வரும் பேய்கள் லாரன்ஸோடு வீட்டுக்கு வந்து, பிறகு அவரது உடலில் புகுந்துவிடுகின்றன. இதன்பிறகு பேய்கள் அலப்பறையும் அதகளத்துடன் செய்யும் பழிவாங்கலும் அதற்கு ஃபிளாஷ்பேக்குடன் கூடிய முன் கதையும்தான் ‘காஞ்சனா 3’ படத்தின் கதை.

‘காஞ்சனா 1’, ‘காஞ்சனா 2’ படங்களில் எந்த டெம்ப்ளேட்டில் கதையைச் சொன்னாரோ, அதை டெம்ப்ளேட்டில் ‘காஞ்சனா 3’யையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். வழக்கம்போலவே காமெடியுன் கூடிய திகில் படமாக உருவாக்கியிருக்கிறார். பேய் என்ற சொல்லை கேட்டாலே பயப்படும் லாரன்ஸ், இந்தப் படத்திலும் வாண்டடாக பேயை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார்.  வீட்டில் இருக்கும் யார் உடம்பில் நுழையலாம் எனக் காத்திருக்கும் பேய், ஒவ்வொருவரையும் பயமுறுத்துகிறது. ஆனால், லாரன்ஸ் உடம்பில்தான் பேய் புகும் என்பதை ஊகிக்க முடிந்துவிடுவதால், மற்றவர்களுக்கு பேய் காட்டும் பயம், ரோலர் கோஸ்டரில் பயணிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

பல காட்சிகள் லாரன்ஸின் முந்தைய படங்களில் பார்த்ததை போலவும், சில காட்சிகள் இந்தப் படத்திலேயே பார்த்த உணர்வையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவது ஒரு பெருங்குறை. ஆனால், காமெடியுடன் கூடிய திகில் படம் என்பதில் இயக்குநர் சமரசம் செய்துகொள்ளாததால், சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார். படத்தில் பேய் செய்யும் சேட்டைகளைப் பார்த்து குழந்தைகள் கைகொட்டி சிரித்து மகிழ்கிறார்கள். முதல் பாகம் முழுவதுமே கதைக்குள் நுழையாமல் வீட்டில் பேய் இருப்பதையும் அது செய்யும் சேட்டைகளையுமே காட்சிப்படுத்தி ஓட்டியிருக்கிறார் லாரன்ஸ்.

இரண்டாம் பாகத்தில்தான் படத்துக்கான கதைக் கருவை வைத்திருக்கிறார். தான் செய்யும் நற்பணிகளையே கதைக்கான இரண்டாம் பாகத்தில் முதன்மையாகப் படமாக்கியிருக்கிறார். அதில் கொஞ்சம் அம்மா சென்டிமெண்ட், மாற்றுத்திறனாளிகளுடனான எமோஷனலையும் கலந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். முந்தைய படங்களில் பேய்கள்தான் தன்னோட ஃபிளாஷ்பேக் கதையைச் சொல்லும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு அகோரியே வந்து ஃபிளாஷ்பேக் கதையைச் சொல்லி பேய்க்கு உதவுகிறார். அதோடு குடும்பமே பேய்க்கு உறுதுணையாக மாறுகிறது. இதுதான் இந்தப் படத்தின் ஒரே வித்தியாசம்!

முதல் பாகத்தில் செல்லும் விறுவிறுப்பான காமெடி த்ரில்லிங் காட்சிகளுக்கு இரண்டாம் பாகம் ஃபிளாஷ்பேக் திரைக்கதையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துவிடுகின்றன. நீளமான ஃபிளாஷ்பேக் காட்சிக்குக் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒரே டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், அதை திரைக்கதை ஆக்கிய விதத்திலும் திகில் காட்சிகளைப் படமாக்கியவிதத்திலும் முந்தைய படங்களின் சாயல்களை தவிர்த்திருக்கலாம்.

தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணன் முன்னிலையிலேயே நாயகன் முறைப் பெண்களை கொஞ்சுவது, அதை அவர்கள் பார்த்து ரசிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன. படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் அந்தப் பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு ஏன் பேய் பிடிக்கிறது என்பதற்கு படத்தின் இறுதிவரை விடை இல்லை. அந்தக் காட்சியை இயக்குநர் அப்படியே மறந்துவிடுகிறார்.

ராகவா, காளி என இரு வேடங்களில்  நடித்திருக்கிறார் லாரன்ஸ். முந்தைய படங்களில் நடித்த அதே கதாபாத்திரத்தில் ராகவா வருகிறார். பேய் என்றால் அலறுவது, குழந்தைகளுடன் பேய்க் கதை கேட்பது, ஓடோடி வந்து அம்மா, அண்ணி இடுப்பில் உட்கார்ந்துகொள்வது, நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வது என அந்தக் கதாபாத்திரத்தில் பெரிய மாற்றம் இல்லை. காளி கதாபாத்திரத்துக்கு சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம். எதிரிகளைப் பந்தாடுவது, ஆசிரம குழந்தைகளுக்காகத் துடிப்பது, குப்பத்து மக்களுக்காக வாழ்வது என ராகவா பாத்திரத்துக்கு நேர் எதிர் கதாபாத்திரம். படத்தில் வேதிகா, ஓவியா,  நிக்கி தம்போலி என மூன்று நாயகிகள். அரைகுறை ஆடையுடன் லாரன்ஸைப் பார்த்து வழிவது, உரசுவது எனக் கவர்ச்சி பொம்மைகளாக வருகிறார்கள்.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினியின் கூட்டு காமெடி முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆனால், படம் முழுவதும் தத்துபித்தென்று மூவரும் உளரும் காட்சிகள் கண்ணைக் கட்டுகின்றன. காமெடி நடிகர் சூரிக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. டெல்லி கணேஷ், ஆத்மியா பாட்ரிக், ஸ்டண்ட் மாஸ்டர் தீனா, தருண் அரோரா, கபிர் துஹான் சிங் ஆகியோர் பாத்திர வார்ப்பில் புதுமையும் இல்லை; குறையும் இல்லை.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். ‘என் நண்பனுக்கு கோயிலை கட்டு’, ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ போன்ற குத்து பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. தமனின் பின்னணி இசையில் குறையில்லை. ஆனால், அவ்வப்போது ஊளையிடுவது போல வரும் இசை காதுகளை பதம் பார்த்துவிடுகின்றன. வெற்றி பழனிசாமி, சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவில் புதுமை இல்லை.

‘காஞ்சனா 3’ - சிரிக்க மட்டும்.

மதிப்பெண்: 2.5 / 5

1 comment: