29/04/2019

இந்தியா கண்ட தேர்தல் மாற்றங்கள்

முதல் மக்களவைத் தேர்தலை எந்த அனுபவமும் இன்றி வெற்றிகரமாக நடத்திய காட்டிய இந்திய தேர்தல் ஆணையம், பிற்காலங்களில் தேர்தல் நடைமுறைகளை மேலும் மெருகேற்றின. தேர்தலில் புதிய அம்சங்களும் கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியத் தேர்தலில் நடந்த சில முக்கியமான மாற்றங்கள்:

வயது குறைப்பு

1952-ம் ஆண்டில் 21 வயது நிறைந்த எல்லோருக்கும் வாக்குரிமை

அளிக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்வரை இந்த நடைமுறையே அமலில் இருந்தது. 1988-ம் ஆண்டில் வாக்களிப்பதற்கான வயதை அரசு குறைத்தது. இதன்படி 21 வயதிலிருந்து 18 வயது நிறைந்தவர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். 1989-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் முதன்முறையாக வாக்களித்தனர்.

அடையாள அட்டை

இந்திய தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமானதொரு முயற்சியாக அமைந்தது வாக்காளர் அடையாள அட்டை. ஒரு வாக்காளர் ஒன்றுக்கும்

மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதைத் தடுக்கவும் கள்ள ஓட்டுகளுக்கு முடிவு கட்டவும் வாக்களர் அடையாள அட்டை வழங்கும் முறை 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனின் முயற்சியால் எடுக்கப்பட்ட முடிவு இது. இதன்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து வாக்களர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம்

தேர்தல் தொடங்கியதிலிருந்து வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி வாக்களிக்கும் முறையே அமலில் இருந்துவந்தது. செல்லாத ஓட்டுகளுக்கு முடிவு கட்டவும் வாக்களிப்பதை எளிமையாக்கவும் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்தது. சோதனை முயற்சியாக 1998-ம் ஆண்டில்  ராஜஸ்தான், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத்

தேர்தல்களில் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே தேர்தல்  நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக தமிழகத்தில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது.

நோட்டா அறிமுகம்

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், 49o என்ற விதியைப் பயன்படுத்தி தேர்தல் படிவம் 17-A-ல் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவிட்டு கையெழுத்திடும் நடைமுறை அமலில் இருந்துவந்தது. ஆனால். அதில் வாக்களிப்பதில் உள்ள ரகசியம் மீறப்பட்டுவந்தது. அதற்கு

மாற்றாக அறிமுகமானதுதான் நோட்டா. ‘None of the aboe’ என்பதன் சுருக்கமே இது. கடந்த 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகமானது. அதே ஆண்டில் நடைபெற்ற மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சட்டீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் நோட்டா அறிமுகமானது. தமிழகத்தில் 2013-ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் முதன்முறையாக  நோட்டா அறிமுகமானது.

திருத்தங்கள்

பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் தொடர்பான பல திருத்தங்களை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்புகளை மனுவில் குறிப்பிட வேண்டும் என்று 2003-ம் ஆண்டில் தேர்தல் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும்
நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், வழக்கில் தண்டனை பெற்ற விவரங்களைச் சேர்ப்பதையும் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியது. 2009-ம் ஆண்டு முதல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தவும் வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

- இந்து தமிழ், 02/04/2019

26/04/2019

நான் ஒரு மண்ணு சார்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘கில்லி’ படத்தில் நாயகனோடு கபடி விளையாடும் நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் முருகதாஸ். இன்றோ ‘ஆடுகளம்’ முருகதாஸ் என்று சொன்னால், எல்லோரும் அறியும் அளவுக்கு சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அற்புதக் கலைஞர். நாடகத் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்து வெற்றி பெற்ற யதார்த்தக் கலைஞர் இவர்.

புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம்தான் முருகதாஸின் சொந்த ஊர். இவருடைய தாத்தா ஒரு தெருகூத்துக் கலைஞர். அவருடைய அப்பா விபத்தில் கையை இழந்தவர். பெரிய வசதிகள் எதுவும் இல்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். நாடகங்களில் நடித்தால் காசு கிடைக்கும் என்பதற்காகச் சிறு வயதிலேயே ஆழி என்ற என்ற குழந்தைகள் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். நடிப்பை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள விரும்பிய முருகதாஸ், 2003-ம் ஆண்டில் சென்னையில் ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து நாடகங்களில் நடித்துவந்த முருகதாஷூக்கு, அவரே எதிர்பார்க்காத சமயத்தில் சினிமா வாய்ப்பு தேடிவந்தது.

 “சென்னை காந்தி மண்டபத்துல இருக்குற பூங்காவுல ‘படுகளம்’ங்கிற பேர்ல ஒரு நாடகத்தை முத்துசாமி ஐயா போட்டாரு. அங்கே நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தாங்க. இயக்குநர் தரணியும் அப்போ வந்திருந்தார். அவரோட கண்ணில் நான் பட்டது என்னோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன். என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு அவருதான் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசிங்கிற கதாபாத்திரத்தைக் கொடுத்தாரு. அதன்பிறகுதான் ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ன்னு நல்லப் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன” என தன்னுடைய சினிமாவுக்கு காலடி எடுத்த வைத்த கதையைச் சொல்கிறார் முருகதாஸ்.

2004-ம் ஆண்டுக்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த
முருகாஷூக்கு 2011-ல் ‘மெளனகுரு’ படம்  நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. முருகதாஸ் ஒரு திறமையான நடிகர் என்ற அடையாளம் காட்டிய படம் மெளனகுருதான். “எனக்கு அந்தப் படத்துல் வாய்ப்புக் கொடுத்ததற்காக இயக்குநர் சாந்தகுமாருக்கு காலம் பூரா நன்றி சொல்வேன்.” என்று முருகதாஸ் சொல்லும்போதே அந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த வீச்சை அறிய முடிகிறது.

சினிமாவில் நடித்துகொண்டிந்த காலகட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறனை தொடர்ந்து ஃபாலோ செய்துவந்திருக்கிறார் முருகதாஸ். அவருடைய அலுவலகத்தையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ‘ஆடுகளம்’ படத்தில் நடிக்க முருகதாஷுக்கு வாய்ப்பு கொடுத்தார் வெற்றிமாறன். ‘மெளனகுரு’ படத்துக்குப் பிறகு ‘ஆடுகளம்’ படம் முருகதாஸூக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது. அப்போது முதலே ‘ஆடுகளம்’ முருகதாஸ் என்ற பட்டப் பெயரும் அவரோடு ஒட்டிக்கொண்டது.  “சினிமா உலகில் என்னை அடையாளப்படுத்தியது இயக்குநர் வெற்றிமாறன்தான்” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் முருகதாஸ்.

 மிகை நடிப்பு என்பது நாகடங்களில் தூக்கலாக இருக்கும். சினிமாவிலோ நடிப்பில் யதார்த்தம் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள்.  நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த உங்களால் எப்படி அதை தகவமைத்துக்கொள்ள முடிந்தது?

 “உண்மைதான். நாடகத்தில் எல்லாவற்றையும் பெரிதாக செய்யணும். அதற்காக நிறைய மெனக்கெடணும். ஆனா, சினிமாவுல எல்லாவற்றையும் சின்ன சின்னதாத்தான் நடிக்க வேண்டியிருக்கும். தொடக்கத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்துச்சு. இயக்குநர் வெற்றிமாறன்தான் யதார்த்த  நடிப்பை கற்றுகொடுத்தார். கொஞ்சம் மிகையா தெரிஞ்சாகூட, ஓவர் ஆக்டிங் கொடுக்காத என்று சொல்லிவிடுவார். கொஞ்சம்கொஞ்சமாக கற்றுக்கொண்டு நடிக்க ஆரம்ச்சபிறகுதான் என்னிடமிருந்த நாடக்கத்தன்மை குறைஞ்சது. வெற்றிமாறன் போலவே உடல்மொழியால் எப்படி நடிக்கணும் என்பதை ‘மெளனகுரு’ படத்தை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார்தான் கற்றுக்கொடுத்தார்” என்று தன்னடக்கம் குறையாமல் பேசுகிறார் முருகதாஸ்.

வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்தில் காவல் நிலையத்தில் அடிவாங்கி தவிக்கும் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார் முருகதாஸ். அந்த பட வாய்ப்பு பற்றி பெரிய கதையையே சொல்கிறார்.  “‘விசாரணை’ படத்துக்கு முன்னாடி ‘வட சென்னை’ படத்தை எடுக்க வெற்றி மாறன் நினைத்திருந்தார். எனக்கு
அந்தப் படத்துல எந்த ரோலும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனா, நான் அவரை விடல. எனக்கு ஏதாவது ஒரு ரோல் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் அடம் பிடித்தேன். அந்த நேரத்துல ‘வட சென்னை’ படம் தள்ளிப்போனது. ‘விசாரணை’ படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.

‘வட சென்னை’யில் ரோல் இல்லாததால், ‘விசாரணை’ படத்துல நடிக்க வெற்றிமாறன் வாய்ப்புக்கொடுத்தார். என்னை செதுக்கியதை வெற்றிமாறன்தான்” என்கிறார் முருகதாஸ். இந்தப் படங்களுக்குப் பிறகு ‘தகராறு’, ‘தடையற தகர்க்க’, ‘குட்டிப்புலி’ என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் முருகதாஸ், கடைசியாக வெளிவந்த ‘96’ படத்திலும் தன் நடிப்பின் மூலம் முத்திரைப் பதித்திருந்தார்.  “தொடர்ந்து வெற்றி படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைச்சதுக்கு கலைத் தாய்க்குதான் நன்றி சொல்லணும்.” என்று உருகுகிறார் முருகதாஸ்.

தொடக்கத்தில் சிறு வேடங்களில் நடித்துவந்த முருகதாஸ், இன்று காமெடி, குணச்சித்திரம் என இரட்டைச் சவாரி செய்துவருகிறார். மாறுப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்த வேண்டிய இந்தக் கதாபாத்திரங்களில் எப்படி ஜொலிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டால், வெடித்து சிரிக்கிறார். “நான் ஒரு நடிகன். களிமண்ணு போலத்தான் நானும். அதுல இயக்குநருக்கு என்ன பொம்மை தேவையோ அதைப் பிடிச்சு வைக்குறாங்க.” என்று யதார்த்தம் குறையாமல் பேசும், முருகதாஸ், ஹென்றி இயக்கும் ’ராஜா மகள்’ என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 8 வயது குழந்தைக்கு அப்பாவாக முக்கியமான ரோலில் நடிக்கும் அந்தப் படத்துக்காகக் காத்திருக்கிறார் முருகதாஸ்.


பட எண்ணிக்கை?

குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறேன்.

இலக்கு?

சீசனில் வருகிற பறவை போல அல்லாமல் காலம்பூரா நடித்துக்கொண்டே

இருக்க வேண்டும்.
புதுப்படம்?

‘கன்னிமாடம்’ என்ற படத்தில் முழு காமெடி ரோலில் நடித்துவருகிறேன்.

எதிர்பாராத வாய்ப்பு?

‘விசாரணை’, ‘மெளனகுரு’ படங்களைப் பார்த்துவிட்டு மலையாளப் படத்தில் நடிக்க அழைத்தது.

நடிக்க விரும்பும் பாத்திரம்?

எனக்கு நல்ல காமெடி சென்ஸ் உண்டு. காமெடி ரோலில் நடிக்க ஆசை.

இந்து தமிழ், 26/04/2019

23/04/2019

காஞ்சனா 3 விமர்சனம்

கோவையில் உள்ள தாத்தா - பாட்டியின் 60-ம் கல்யாண விழாவுக்கு குடும்பத்தோடு செல்கிறார் நாயகன் ராகவா லாரன்ஸ். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட டென்ட் அடிக்க முயற்சிக்கிறார். அதற்காக அந்த மரத்தில் அடித்துவைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆணிகளைப் பிடுங்குகிறார். அதிலிருந்து வெளியே வரும் பேய்கள் லாரன்ஸோடு வீட்டுக்கு வந்து, பிறகு அவரது உடலில் புகுந்துவிடுகின்றன. இதன்பிறகு பேய்கள் அலப்பறையும் அதகளத்துடன் செய்யும் பழிவாங்கலும் அதற்கு ஃபிளாஷ்பேக்குடன் கூடிய முன் கதையும்தான் ‘காஞ்சனா 3’ படத்தின் கதை.

‘காஞ்சனா 1’, ‘காஞ்சனா 2’ படங்களில் எந்த டெம்ப்ளேட்டில் கதையைச் சொன்னாரோ, அதை டெம்ப்ளேட்டில் ‘காஞ்சனா 3’யையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். வழக்கம்போலவே காமெடியுன் கூடிய திகில் படமாக உருவாக்கியிருக்கிறார். பேய் என்ற சொல்லை கேட்டாலே பயப்படும் லாரன்ஸ், இந்தப் படத்திலும் வாண்டடாக பேயை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார்.  வீட்டில் இருக்கும் யார் உடம்பில் நுழையலாம் எனக் காத்திருக்கும் பேய், ஒவ்வொருவரையும் பயமுறுத்துகிறது. ஆனால், லாரன்ஸ் உடம்பில்தான் பேய் புகும் என்பதை ஊகிக்க முடிந்துவிடுவதால், மற்றவர்களுக்கு பேய் காட்டும் பயம், ரோலர் கோஸ்டரில் பயணிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

பல காட்சிகள் லாரன்ஸின் முந்தைய படங்களில் பார்த்ததை போலவும், சில காட்சிகள் இந்தப் படத்திலேயே பார்த்த உணர்வையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவது ஒரு பெருங்குறை. ஆனால், காமெடியுடன் கூடிய திகில் படம் என்பதில் இயக்குநர் சமரசம் செய்துகொள்ளாததால், சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார். படத்தில் பேய் செய்யும் சேட்டைகளைப் பார்த்து குழந்தைகள் கைகொட்டி சிரித்து மகிழ்கிறார்கள். முதல் பாகம் முழுவதுமே கதைக்குள் நுழையாமல் வீட்டில் பேய் இருப்பதையும் அது செய்யும் சேட்டைகளையுமே காட்சிப்படுத்தி ஓட்டியிருக்கிறார் லாரன்ஸ்.

இரண்டாம் பாகத்தில்தான் படத்துக்கான கதைக் கருவை வைத்திருக்கிறார். தான் செய்யும் நற்பணிகளையே கதைக்கான இரண்டாம் பாகத்தில் முதன்மையாகப் படமாக்கியிருக்கிறார். அதில் கொஞ்சம் அம்மா சென்டிமெண்ட், மாற்றுத்திறனாளிகளுடனான எமோஷனலையும் கலந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். முந்தைய படங்களில் பேய்கள்தான் தன்னோட ஃபிளாஷ்பேக் கதையைச் சொல்லும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு அகோரியே வந்து ஃபிளாஷ்பேக் கதையைச் சொல்லி பேய்க்கு உதவுகிறார். அதோடு குடும்பமே பேய்க்கு உறுதுணையாக மாறுகிறது. இதுதான் இந்தப் படத்தின் ஒரே வித்தியாசம்!

முதல் பாகத்தில் செல்லும் விறுவிறுப்பான காமெடி த்ரில்லிங் காட்சிகளுக்கு இரண்டாம் பாகம் ஃபிளாஷ்பேக் திரைக்கதையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துவிடுகின்றன. நீளமான ஃபிளாஷ்பேக் காட்சிக்குக் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒரே டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், அதை திரைக்கதை ஆக்கிய விதத்திலும் திகில் காட்சிகளைப் படமாக்கியவிதத்திலும் முந்தைய படங்களின் சாயல்களை தவிர்த்திருக்கலாம்.

தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணன் முன்னிலையிலேயே நாயகன் முறைப் பெண்களை கொஞ்சுவது, அதை அவர்கள் பார்த்து ரசிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன. படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் அந்தப் பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு ஏன் பேய் பிடிக்கிறது என்பதற்கு படத்தின் இறுதிவரை விடை இல்லை. அந்தக் காட்சியை இயக்குநர் அப்படியே மறந்துவிடுகிறார்.

ராகவா, காளி என இரு வேடங்களில்  நடித்திருக்கிறார் லாரன்ஸ். முந்தைய படங்களில் நடித்த அதே கதாபாத்திரத்தில் ராகவா வருகிறார். பேய் என்றால் அலறுவது, குழந்தைகளுடன் பேய்க் கதை கேட்பது, ஓடோடி வந்து அம்மா, அண்ணி இடுப்பில் உட்கார்ந்துகொள்வது, நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வது என அந்தக் கதாபாத்திரத்தில் பெரிய மாற்றம் இல்லை. காளி கதாபாத்திரத்துக்கு சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம். எதிரிகளைப் பந்தாடுவது, ஆசிரம குழந்தைகளுக்காகத் துடிப்பது, குப்பத்து மக்களுக்காக வாழ்வது என ராகவா பாத்திரத்துக்கு நேர் எதிர் கதாபாத்திரம். படத்தில் வேதிகா, ஓவியா,  நிக்கி தம்போலி என மூன்று நாயகிகள். அரைகுறை ஆடையுடன் லாரன்ஸைப் பார்த்து வழிவது, உரசுவது எனக் கவர்ச்சி பொம்மைகளாக வருகிறார்கள்.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினியின் கூட்டு காமெடி முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆனால், படம் முழுவதும் தத்துபித்தென்று மூவரும் உளரும் காட்சிகள் கண்ணைக் கட்டுகின்றன. காமெடி நடிகர் சூரிக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. டெல்லி கணேஷ், ஆத்மியா பாட்ரிக், ஸ்டண்ட் மாஸ்டர் தீனா, தருண் அரோரா, கபிர் துஹான் சிங் ஆகியோர் பாத்திர வார்ப்பில் புதுமையும் இல்லை; குறையும் இல்லை.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். ‘என் நண்பனுக்கு கோயிலை கட்டு’, ‘ஒரு சட்டை ஒரு பல்பம்’ போன்ற குத்து பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. தமனின் பின்னணி இசையில் குறையில்லை. ஆனால், அவ்வப்போது ஊளையிடுவது போல வரும் இசை காதுகளை பதம் பார்த்துவிடுகின்றன. வெற்றி பழனிசாமி, சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவில் புதுமை இல்லை.

‘காஞ்சனா 3’ - சிரிக்க மட்டும்.

மதிப்பெண்: 2.5 / 5

17/04/2019

வாட்ச்மேன் விமர்சனம்

வாங்கிய கடனை ஒரு நாளுக்குக் கொடுக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். விடிந்தால், காதலியுடன் நிச்சயதார்த்தம் என்ற கூடுதல் நெருக்கடியில் இருக்கும் ஜி.வி.பி., ஒரு பங்களாவுக்குள் திருடச் செல்கிறார். அந்த பங்களாவை காவல் காக்கும் நாயிடம் மாட்டிக்கொள்கிறார் ஜி.வி.பி. ஆனால், அந்த  நாயோ அவரை வெளியே செல்ல விடாமல் வீட்டுக்குள் துரத்துகிறது. பங்களாவில் நுழையும் ஜி.வி.பி.க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பங்களாவில் வசிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியான சுமனை கொல்ல தீவிரவாதிகள் முயற்சி செய்கிறார்கள். சுமனோடு சேர்ந்து ஜி.வி.பி. என்ன செய்கிறார் என்பதுதான் ‘வாட்ச்மேன்’ படத்தின் கதை.

ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நகர்த்தி செல்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், இயக்குநர் விஜய் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார். ஒரு திடீர் திருடனுக்கு நேரும் எதிர்பாராத அதிர்ச்சியை சுவாரசியம் குறையாமல் காட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். திருடப் போகும் இடத்தில் நாயிடம் மாட்டிக்கொள்ளும்போது அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றம் நாயகனை போல பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால், பங்களாவுக்குள் தீவிரவாதிகள் நடத்தும் துப்பாக்கிச் சண்டை வீடியோ கேம்ஸ் போல மாறி காட்சியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட பங்களாவுக்குள் திருட செல்ல ஜி.வி.பி. எடுக்கும் முடிவுக்கான காரணத்தை இயக்குநர் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த சிசிடிவி யுகத்தில் சர்வ சாதாரணமாகத் திருடச் செல்லுவது சாத்தியமா என்பதைக் கவனிக்க இயக்குநர் மறந்துவிட்டார்.

பெரிய துப்பாக்கிகளுடன் வீட்டைச் சுற்றி சுமனை தேடுகிறார்கள் தீவிரவாதிகள். ஆனால், விட்டலாச்சாரியர் படத்தில் வருவதுபோல சுமனும் ஜி.வி.பியும் அவர்கள் கண்ணில் படாமல் மறைந்துபோகிறார்கள். அவர்கள் கிடைக்கும்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தோட்டா சுடுவேனா என்கிறது. மாறாக, தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். கொஞ்சமும் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் இல்லாத இந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர்களை அயர்ச்சியில் தள்ளிவிடுகிறது.

இரண்டாம் பாகம் முழுவதுமே காட்சிகள் வேறு எங்குமே நகராமல், அந்த அரை வெளிச்ச பங்களாவிலேயே நடப்பது அலுப்பூட்டிவிடுகிறது. போலீஸ் அதிகாரியைப் பழித் தீர்க்க தீவிரவாதிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாக இல்லை.  துப்பாக்கிச் சத்தம் பங்களாவைத் தாண்டி வெளியே கேட்காதா என்ற கேள்வி படம் முடியும்வரை நம் மனதை துளைத்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் கதையை அவ்வப்போது நேரத்தை மாற்றி மாற்றி காட்சிப்படுத்தியிருப்பது திரைக்கதைக்கு வேகத்தடை. கடனை திருப்பி கொடுக்க ஒரு நாள் கெடு விதிக்கும் கடன்காரன், இரவு 12 மணிக்கெல்லாம் போன் செய்வது லாஜிக் ஓட்டை.

படத்தின்  நாயகன் ஜி.வி.பி. இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறார். கதையின்படி படம் முழுவதும் பதற்றமாகவும் பரபரப்பாகவும் இருக்கிறார். ஹீரோயிஸம் காட்ட முடியாத அந்தக் கதாபாத்திரத்தை அறிந்து  நடித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே என்ற நாயகி இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு காட்சிகளில் வந்துபோகிறார். ஜி.வி.பி.யின் நண்பனாக வரும் யோகி பாபுவின் பாத்திர வார்ப்பில் காமெடியும் இல்லை; அவர் ஸ்கோர் செய்ய காட்சி அமைப்புகளும் இல்லை.

தீவிரவாதியாக வரும் ராஜ் அர்ஜுனின் உடல்மொழி அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தவேயில்லை. முன்னாள் போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், தாய் மாமனாக வரும் முனீஸ்காந்த் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் புரூனே என்ற கதாபாத்திரத்தில் வரும் நாய்தான். பிற கதாபாத்திரங்களைவிட நாய் நன்றாக நடித்திருக்கிறது.

படத்துக்கு பலம் ஜி.வி.பி.யின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசை ஹைடெசிபிளில் காது சவ்வை பதம் பார்த்துவிடுகிறது. இருட்டு பங்களாவைச் சுற்றிச் சுற்றி படம் பிடித்திருக்கும் நீரவ் ஷாவின் கேமராவைப் பற்றி என்ன சொல்வது? கனகச்சிதமாகக் காட்டாத அந்தோணியின் படத் தொகுப்பை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

திருடப் போகும் வீட்டுக்கே ‘வாட்ச்மேன்’ ஆக மாறும் இந்தக் காவலாளியிடம் ஈர்ப்பு இல்லை.

மதிப்பெண் 2 / 5










14/04/2019

வெற்றிகரமான தோல்வி வேட்பாளர்

தேர்தலில் கட்சிக்காகப் போட்டியிடுவோர் ஒரு வகை. சுயேச்சைகளாகக் களமிறங்குவோர் ஒரு வகை.  சுயேச்சைகளிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அதிகம் தோற்ற வேட்பாளர் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர், சேலம் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான இவர், 1989-ம் ஆண்டு முதன்முறையாக மேட்டூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக ஓயாமல் தேர்தலில் போட்டியிட்டுவருகிறார். இதுவரை மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் 200 முறை போட்டியிட்டிருக்கிறார். இதில் மக்களவைத் தேர்தலில் 28 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவதோடு சரி, தேர்தல் செலவு என எதையும் இவர் செய்வதில்லை.
ஆனால், தேர்தலில் போட்டியிட்டு அவர் இழந்த தொகையே 20 லட்சம் ரூபாய்க்கும் மேலிருக்கும். இதுவரையில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பத்மராஜன். தற்போது,  201-வது
முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் பத்மராஜன்.
- இந்து தமிழ், 11/04/2019

அரிச்சல்முனையின் புதிய அரிதாரம்..!


ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூறாவளி, இருந்த தடம் தெரியாமல் ஒரு ஊரையே உருக்குலைய செய்யும் என்பதை அந்தத் தீவு மக்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு டிசம்பர் மாத பின்னிரவில் அந்தத் தீவைக் கடந்து சென்ற சூறாவளியால் அது நடந்தேறியது. அந்தச் சூறாவளிக்குப் பிறகு ஊரே இருந்ததற்கான அடையாளம் தெரியாமல், மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அந்த ஊர் மாறிபோனது. ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு வாழ்ந்த அந்த ஊரை, பேய்கள் வாழும் இடம் என்று மனிதர்கள் ஒதுக்கிவைத்து, அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

இன்றோ வானில் தோன்றும் ஒரு நம்பிக்கை கீற்றாய் அந்த ஊருக்குள் வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக அந்த ஊருக்குள் இன்று மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஊருக்குள் வரும் மனிதர்களை நம்பி அங்கேயே காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்கள், இருண்ட வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்ததைப்போல மகிழ்கிறார்கள். தமிழகத்தில் இன்று புதிய சுற்றுலாதளமாக உருவெடுத்திருக்கும் அந்த ஊர், தென் கோடியில் ஒரு காலத்தில் செழிந்து வளர்ந்து, காணாமல்போய், இன்று உயிர்த்தெழ காத்திருக்கும் தனுஷ்கோடி.

ரயில் ஓடிய காலம்

ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியை மிகப் பெரிய வணிக நகரமாகவே வரலாறு பதிவு செய்திருக்கிறது. தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குக்கும் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கும் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடிக்கட்டி பறந்த வணிகத்தை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சென்னையிலிருந்து இலங்கை செல்ல
விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான  இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு  வர வேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கைக்கு செல்ல முடியும். அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து இலங்கையின் தலை மன்னார், மதவாச்சி வழியாக கொழும்புவரை ரயில் பயணம் நீண்டதெல்லாம் பழங்கதைகள்.

1964-ம் ஆண்டு டிசம்பரில் ராமேஷ்வரத்தைப் புரட்டிப் போட்ட புயல், தனுஷ்கோடியைத் துண்டு துண்டாகச் சிதைத்து விட்டுச் சென்றது. புயலுக்குப் பிறகு தனுஷ்கோடியின் எச்சங்களாக பாழடைந்த கட்டிடங்கள் மட்டுமே அந்த ஊரின் சோகமயமான பக்கத்தை இன்று உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் அன்று மூழ்கடிக்கப்பட்டது. அங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், அரசு அலுவலகங்கள், வீடுகள் என எல்லாமே மண்ணில் புதைந்தும், பாழடைந்தும் காட்சியளிக்கின்றன.

வசதிகளற்ற ஊர்

 தனுஷ்கோடியைப் புயல் அழித்துவிட்டு போனாலும், இருக்கவே லாயக்கியற்ற ஊர் என்ற தகுதியை ஊர் இழந்தாலும், வாழ்ந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல பூர்வக்குடிகள் விரும்புவார்களா? அப்படி விரும்பாத பூர்வக்குடிகள் சிலர் குடும்பம் குடும்பமாக தனுஷ்கோடியில் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள். மீன் பிடித் தொழில் மட்டுமே அவர்களுடைய பிரதான தொழில். இலங்கை கடற்படையால் அச்சுறுத்தல் இருந்தாலும், தங்கள் வாழ்வாரத்துக்காகக் கடலில் தினந்தோறும் சாகசப் பயணம் செய்துவருகிறார்கள். இருக்க இடம் கிடையாது; குடிக்க நீர் கிடையாது; மாலை 5 மணியைத் தாண்டி விட்டால் கும்மிருட்டு; எந்தப் பாதுகாப்புக்கும் உறுதி கிடையாது என அடிப்படை
கட்டமைப்புகள் எதுவும் இல்லாததுதான் புயல் தீண்டிய தனுஷ்கோடியின் இன்றைய அடையாளங்கள்.

ஆனால், அரை நூற்றாண்டுகள் கழித்து  ராமேஸ்வரத்திலிருந்து அரிச்சல்முனை வரை போடப்பட்டிருக்கும் சாலை, அந்த ஊருக்கான புதிய வாசலை திறந்துவிட்டிருக்கிறது. 1964-ம் ஆண்டு புயலில் மிச்சமாக இருந்த முகுந்தராயர் சத்திரம் பகுதியில் தொடங்கி, இந்திய நிலப்பரப்பின் எல்லையான அரிச்சல் முனை வரை சாலை போடப்பட்டிருக்கிறது. இது தவிர ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு உதவுவதற்காக துறைமுகம் ஒன்றும் முகுந்தராயர்சத்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய சோகப் பின்னணியைக் கொண்ட தனுஷ்கோடிக்கு ஒரு நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு கார்க் காலத்தில் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.

அழகான அரிச்சல் முனை

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆரவாரமற்ற சாலையில் பயணிக்கும்போதே தனுஷ்கோடியைப் பற்றி மனதில் ஊடுவிய சோகங்கள் உள்ளத்தை அமைதியாக்கிவிடுகிறது. மணல் குன்றுகளும் புதர்களும் ஒரு சேர காட்சியளிக்கும் சாலையைக் கடந்துபோகும்போது, காதுகளின் செவிப்பறைகளைக் கிழிக்கும் அளவுக்கு காற்று தீண்டுகிறது. முகுந்தராயர் சத்திரத்தைத்  நோக்கி செல்லும்போதே சற்று தொலைவில் கடல் தெரிய ஆரம்பித்து விடுகிறது. ஒரு பிரம்மாண்ட ஏரிபோல பரந்துவிரிந்திருக்கும் கடல், மஞ்சள் வெயிலில் தகதகவென மின்னுகிறது. அதன் எதிரொலி
குவிந்துக்கிடக்கும் மணல் திட்டுகளைப் பொன்னிறமாக்கி ஜொலிக்க செய்கின்றன. அந்த ரம்மியமான காட்சிகளுக்கு மத்தியில் வடுக்களாக மாறிபோன தனுஷ்கோடியின் பாழடைந்த கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தபடி எட்டி பார்க்கின்றன.

 தனுஷ்கோடியை நெருங்க நெருங்க இருபுறமும்  சாலையை நெருங்கி வரும் கடல், இறுதியில் ஒரு முனையை அடைகிறது. அந்த முனையை அடையும்போது நம் கண்முன்னே பெரும் நீர்ப் பரப்பாய் விரிகிறது கடல். அந்த முனைக்கு அரிச்சல் முனை என்று பெயர். கடல் நீரால் அரிக்கப்பட்ட முனை என்பதால் அதை அரித்த முனை, அரிச்ச முனை, அரிச்சல் முனை எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.   நம் நாட்டின் எல்லை இந்த முனை என்பதால் இங்கே இந்திய தேசிய சின்னம் ஏந்திய தூணை நிறுவியிருக்கிறார்கள். இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வெறும் 15 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.

அரிச்சல் முனையைப் பார்க்கிறபோது மனதுக்குள் மகிழ்ச்சி துள்ளிக்கொண்டு குதிக்கிறது. அரிச்சல் முனையிலிருந்து இடதுபுறம் அமைதியாக ஓர் ஏரியைப்போல் காட்சியளிக்கிறது வங்கக்கடலின் பாக் ஜலசந்தி. வலதுபுறம்  ஆர்ப்பரிக்கும் இந்திய பெருங்கடலின் மன்னார் வளைகுடா என பிரிந்து வைத்திருக்கிறது. இரு புறங்களிலும் விதவிதமான பறவைகள் கரையோரத்தில் அமர்ந்தபடி இரைகளுக்காகக் காத்திருக்கின்றன. அதன் முனையிலிருந்து அந்த கடல் அழகையும் பறவைகளையும் காண கோடிக் கண்கள் வேண்டும். 

படையெடுக்கும் கூட்டம்

அரிச்சல் முனை வரை போடப்பட்டிருக்கும் சாலைதான் இன்று தனுஷ்கோடிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பெல்லாம் தனுஷ்கோடி வரவே அச்சப்படுவார்கள். முகுந்தராயர் சத்திரத்தைத் தாண்டி அப்போது தனுஷ்கோடி செல்ல சாலை வசதி எதுவும் இல்லை.  வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததால், சேரும் சகதியுமாக
உள்ள கடல் மணல் பரப்பில் ஃபோர் வீல் ட்ரைவ் கொண்ட ஜீப்புகளைக் கொண்டு தனுஷ்கோடிக்கு வருவார்கள். சாதாரண வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கிக் கொள்ளும்.

சாகசப் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடிக்கு வரும்போது உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றோ நிலைமை தலைகீழ். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டிருப்பதால் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா வேன்களில் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சாகசப் பயணங்களை மேற்கொண்டு இங்கே வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தனுஷ்கோடிக்கும் அரிச்சல் முனைக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இதனால், விடுமுறை நாட்களில் தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல்முனைவரை சுற்றுலா பயணிகளாலும் வாகனங்களாலும் அந்தச் சாலை நிறைந்துகிடக்கிறது.

பெருகும் கடைகள்

அரிச்சல் முனையின் இறுதியில் இந்திய அரசின் நினைவு தூணை நிறுவியிருப்பதுபோல, சாலையைச் சுற்றி உட்காரவும் வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள். புதிதாகப் போடப்பட்டுள்ள சாலையை கடல் அலை அரித்துவிடக் கூடாது என்பதற்காக சாலையின் இருபுறமும் பாறைகளைக் கயிற்றி கட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல சாலையின் இரு மருங்கே பல இடங்களில் பவளப் பாறைத் துண்டுகள் கிடப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. சில இடங்களில் தொட்டியில் தண்ணீரை வைத்து அதில் இந்தக் கற்களை மிதக்க வைத்திருக்கிறார்கள். இதைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.

தனுஷ்கோடிக்கும் அரிச்சல்முனைக்கும் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளால் இரு இடங்களுமே இன்று களைகட்டியிருக்கின்றன. ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாமல் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனையிலும் இறந்த முன்னோர்களுக்காக திதி கொடுப்பது, சடங்கு செய்வது போன்ற வழிபாடுகளில் பலரும்
ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. அரிச்சல்முனைக்கு வருவோரின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இங்கே வசதியும் இல்லைல். குறிப்பாக கழிப்பறை வசதி, உணவக வசதி என எதுவுமே இல்லை. மாறாக, சிறுசிறு கடைகள் அதிகமாக முளைத்திருக்கின்றன.

ஊர் மீது நம்பிக்கை

இந்தக் கடைகளைப் பெரும்பாலும் பெண்கள்தான் நடத்துகிறார்கள். ஆண்கள் கஷ்டப்பட்டு மீன் பிடிக்கக் கடலுக்கு செல்ல, அவர்களுக்கு உதவியாக ஏராளமான பெண்கள் இங்கே பழக்கடை, ஐஸ் கடை, தண்ணீர் விற்பனை என பல கடைகளை விரித்து வியாபாரம் செய்கிறார்கள். அரிச்சல்முனையில் பழக்கடை வைத்திருக்கும் நாகம்மா என்ற மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன். அரிச்சல்முனைக்கும் தனுஷ்கோடிக்கும் பயணிகள் வருவதால் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி நிறைய பேசினார்.

“என்னோட ஊர் ராமநாதபுரம். தனுஷ்கோடியிலதான் என்னை கட்டிக் கொடுத்தாங்க. புயலுக்கு பிறகு ஊரைவிட்டு போக வேண்டியிருந்துச்சு. ஆனா, கொஞ்ச வருஷத்துல திரும்பவும் இங்கேயே வந்துட்டோம். வீட்டுல ஆம்பளைங்க மீன் பிடிக்க கடலுக்கு போயிடுவாங்க. ஆம்பளைங்க கடலுக்குள்ள போனால், உசுரோட திரும்ப வருவாங்களான்னு மனசு திக்திக்குன்னு அடிச்சு கெடக்கும். இலங்கை கடற்படை எப்ப ஏது செய்யுமோன்னு பயப்பட வேண்டிகிடக்கு.

இப்போ அரிச்சல்முனை வரை ரோடு போட்ட பிறகு விடுமுறை நாட்கள் கூட்டம் அதிகமா வருது. இவுங்கள நம்பிதான் ஒரு வருஷமா கடை போட்டுக்கிட்டு இருக்கிறேன். விடுமுறை தினங்களில் முதலுக்கு போக 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கிடைக்கும். ஒரு மாசத்துல 1500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எங்களுக்கு இந்தத் தொழில் ஒரு மாற்றுத் தொழிலாக இருக்குப்பா. ஏதோ குடும்பத்தை ஓட்ட இது உதவியா இருக்கு. சாலை அமைத்த பிறகு தனுஷ்கோடிக்கும் அரிச்சல்முனைக்கும் கூட்டம் வர்ரதைப் பார்த்து,
இப்போ எங்களுக்கே இந்த ஊர் மீது நம்பிக்கை வந்திருக்கு” என்று சொல்கிறார் நாகம்மா.

மீண்டு வருமா?

தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல்முனை வரையிலான சாலை வசதி அந்த ஊரை புதிய சுற்றுலாதளமாக மாற்றியிருக்கிறது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே இல்லாமல் போன ரயில் போக்குவரத்தையும் தொடங்க தற்போது மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல்போன தனுஷ்கோடி ரயில் நிலையம், மீண்டும் அமைக்கப்பட்டால், தனுஷ்கோடி மீண்டும் உயிர்ப்பெற்று இயங்க வாய்ப்புள்ளது. ஆன்மிக நகரமான ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடியும் அரிச்சல் முனையும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றன.


இந்து தமிழ், தமிழ்ப் புத்தாண்டு மலர், 2019 (07-08-19)

13/04/2019

நட்பே துணை விமர்சனம்

பல நாடுகளும் ஒதுக்கி வைத்த பன்னாட்டு மருந்து கம்பெனியை  காரைக்காலில் அமைக்க உள்ளூர் அமைச்சர் அரிச்சந்திரன் (கரு. பழனியப்பன்) முயற்சி செய்கிறார். இதற்காக வரலாற்றுப் பின்னணி கொண்ட ஹாக்கி மைதானம் குறி வைக்கப்படுகிறது. இதைத் தடுக்க ஹாக்கி பயிற்சியாளர் (ஹரிஷ் உத்தமன்) போராடுகிறார். மைதானத்தை மீட்க வேண்டுமென்றால், அகில இந்திய ஹாக்கி போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த ஊருக்கு வரும் பிரபாகரன் (ஹிப்ஹாப் ஆதி) ஹாக்கி விளையாடுவதைப் பார்த்து, தங்கள் அணிக்கு வருமாறு பயிற்சியாளர் அழைக்கிறார்.

ஹாக்கி விளையாட்டால், தனக்கு நேர்ந்த கதியைப் பற்றி சொல்லி முதலில் விளையாட மறுக்கிறார் ஆதி. ஆனால், அந்த மைதானத்தை மீட்க நடக்கும் போராட்டத்தைப் பார்த்து அவராகவே ஹாக்கி அணிக்கு வருகிறார். அவரால் ஹாக்கி அணி வெற்றி பெற்றதா, இல்லையா? ஹாக்கி மைதானம் மீட்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘நட்பே துணை’.

விளையாட்டையும் அரசியலையும் கலந்து எடுக்கப்பட்ட சமகால படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் இது. மிகவும் பார்த்து பரிட்சயமான கதைக்களம். அதில் மசாலாக்களைத் தூக்கலாகச் சேர்த்து உணர்வுபூர்வமகாத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு. அரசியல்வாதியும் கார்ப்பரேட் கிரிமனல்களும் சேர்ந்து ஒரு பழமையான ஹாக்கி மைதானத்தை ஸ்வாகா செய்ய நடத்தும் தகிடுதத்தங்களை கதையெங்கும் அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர். அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை தோலுரித்துகாட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தக் காட்சி அமைப்புகளில் புதுமையும் இல்லை; சுவாரசியமும் இல்லை.

இளைஞர்களை குறி வைத்து மட்டுமே படத்தை எடுத்திருக்கிறார்கள். எனவே, அவர்களைக் கவரும்விதமாகக் படமெங்கும் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கான விஷயங்களைப் படம் முழுக்க படரவிட்டிருப்பதே அதற்கு சாட்சி. அதற்கு ஏற்றார்போல யூடியூப் சேனல் கலைஞர்களுக்குப் படத்திலும் காட்சியமைப்பிலும் முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். இவர்கள் அலப்பறையாலும் ஆதியின் காதல் சேட்டைகளாலும் சிரிக்கவே முடியாத காமெடிகளாலும் முதல் பாகம் கொஞ்சமும் விறுவிறுப்பில்லாமல் செல்கின்றன.


இரண்டாம் பாகத்தில்தான் கதைக்குரிய களத்தை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பார்த்து பார்த்து சலித்துபோன காட்சிகளால் திரைக்கதை அலுப்பூட்டுகிறது.  மைதானத்தை மீட்க  போராட்டம், அதை முறியடிக்க இனம், மொழி, மதம், சாதி ஆகியவற்றை தூண்டிவிடும் அரசியல்வாதி என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் ஈர்ப்பு இல்லாமல் வெறுமனே காட்சிகளாக நகர்கின்றன.

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு சர்வதேச வீரரையே காரைக்காலில் உள்ள ஹாக்கி பயிற்சியாளருக்குத் தெரியாமல் இருப்பது போன்ற அபத்தங்களும் படத்தில் உள்ளன. கொஞ்சமும் உப்பு சப்பில்லாத ஹிப்ஹாப் ஆதியின் ஃபிளாஸ்பேக் காட்சிகள் படத்துக்கு வேகத்தடையாக அமைகின்றன. உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய கிளைமாக்ஸ் ஹாக்கி போட்டி காட்சியை ரன்னிங் ரேஸ் கணக்காக மாற்றிவிடுகிறார்கள். படத்தில் தொடர்ச்சியாக வரும் சில பாடல்களை கத்திரி போட்டிருக்கலாம். கடைசியில் எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; கெட்ட அரசியல்வாதிகளுக்கு காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது யார் என்று கேள்வியோடு சோஷியல் மெசேஜோடு படத்தை முடித்துவிடுகிறார்கள்.

தனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அவ்வப்போது மாஸ் ஹீரோவாகக் காட்டப்படும் காட்சிகளிலும் பலவீனமாகவே தெரிகிறார். அவருடைய உடல்மொழியும் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஆனால், ஆதியின் ஏரியாவான ஆட்டம், பாட்டம் ஆகியவற்றில் மாஸ் காட்டியுள்ளார்.  நாயகியாக வரும் அனாகாவுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. மோசடியான அரசியல்வாதியாக வரும் கரு. பழனியப்பன் அந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதம். அரசியல்வாதிக்குரிய உடல்மொழியும் அவருடைய கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. சமகால அரசியலை கிண்டலடித்து சிரிக்க வைக்கிறார்.

விக்னேஷ்காந்த், எருமசாணி விஜய், ஷாரா என யூடியூப் பிரபலங்கள் படத்தில் அணிவகுத்துவருகிறார்கள். மைதானத்தை மீட்கப் போராடும் பயிற்சியாளர் வேடத்தில் ஹரீஸ் உத்தமன் நிறைவாகச் செய்திருக்கிறார்.  பாண்டியராஜன், கவுசல்யா போன்றோர் அவ்வப்போது வந்துசெல்கிறார்கள். படத்துக்கு இசையையும் ஹிப்ஹாப் ஆதி கவனித்திருக்கிறார். ஆத்தாடி என்ன உடம்பு, முரட்டு சிங்கிள் போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

 நட்பே துணை - தலைப்பில் மட்டுமே.. மற்றபடி படத்தை நம்பி எடுத்த இளைஞர்களே படத்துக்கு துணை!

மதிப்பெண் 1.5 / 5 

12/04/2019

கத்தாழம்பட்டி டூ சென்னை!


சினிமாவில் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போடும் நடிகர் காளி வெங்கட். காமெடி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பரிணமித்துவரும் ஓர் அழகான கலைஞர். குறும்படத்திலிருந்து வரும் இயக்குநர்களின் விருப்பமான கலைஞனும்கூட. தூத்துக்குடியின் ஒரு குக்கிராமத்திலிருந்து எளிய பிண்ணனியோடு சென்னைக்கு வந்து போராடி சினிமாவுக்குள் நுழைந்த காளி வெங்கட், வளர்ந்துவரும் நடிகராக மாறியிருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள கத்தாழம்பட்டி என்ற குக்கிராமம்தான் வெங்கட்டின் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட், சினிமா ஆசையோடு ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவர். வந்த கையோடு சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார். ஆனால், சினிமா வாய்ப்பு தேடுவது என்பது ஆலக்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் வேலை என்பதை உணர்ந்தார். வாய்ப்பு கிடைக்கும் ஜீவணத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக சென்னை அண்ணா நகரில் மளிகை கடை வேலை பார்த்திருக்கிறார். அதோடு தண்ணீர் கேன் போடுவது என வெங்கட் செய்யாத வேலைகளே கிடையாது. இடையிடையே சினிமாவுக்கு வாய்ப்புத் தேடுவது என்று இருந்திருக்கிறார்.

ஊரிலிருந்து வந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்தும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் அலைந்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தபோது, வேறு வேலைக்கு போகவும் யோசித்திருக்கிறார். ஆனால், சென்னையில் சினிமா தேடி விட்ட ஐந்தாண்டுகளை வேறு எங்கே போய் எடுப்பது என்ற கேள்வி அவருடைய மனதுக்குள் வந்தது. விளைவு, ஒரு முடிவெடுத்து சினிமா வாய்ப்பு முன்பைவிட தீவிரமாகத் தேடத் தொடங்கினார். பாதுகாப்புக்காக டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார் வெங்கட். கும்பலோடு டப்பிங் பேசும் வாய்ப்புகளைப் பெற்றுவந்த காலத்தில், கதாநாயகி ஒருவருக்கு டப்பிங் பேசியதாகத் திகிலூட்டுகிறார் வெங்கட்.

“நடிப்புக்கான வாய்ப்பு தேடுவதைவிட டப்பிங் பேச வாய்ப்பு தேடுவது மிகவும் சிரமம் என்பதை டப்பிங் சங்கத்தில் சேர்ந்த பிறகுதான் உணர்ந்தேன். ஆனால், ‘மரகதநாணயம்’ படத்தில் கதாநாயகி நிக்கி கல்ராணி அவ்வப்போது ஆண் குரலில் பேசும் காட்சி வரும். அந்தக் காட்சிக்கு நான்தான் டப்பிங் பேசினேன்” என்கிறார் காளி வெங்கட்.

தொடர்ந்து சினிமாவுக்கு வாய்ப்பு தேடியபோது 2008-ம் ஆண்டில் ‘தசையினை தீ சுடினும்’ என்ற படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவைப் பற்றியும் நடிப்பைப் பற்றியும் அவர்தான் வெங்கட்டுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் முழுமையாக சூட்டிங் செய்யப்படாமல் நின்று போகவே வெங்கட்டின் சினிமா தேடல் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், பலருக் ‘காளி’ வெங்கட் என்று அழைக்கத் தொடங்கவே, அந்தப் பெயரையே வைத்துக்கொண்டதாகச் சொல்கிறார் காளி
வெங்கட்.

பிறகு எப்படித்தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று காளி வெங்கட்டிடம் கேட்டால், பெருமூச்சு விடுகிறார். “அப்போ கலைஞர் டி.வி.யில ‘நாளைய இயக்குநர்’ போய்க்கிட்டு இருந்தது. சீசன் 3-ல் நான் ஐந்து குறும்படங்கள்ல நடிச்சேன். அந்த சீசன்ல சிறந்த நடிகருக்கான விருது எனக்குக் கிடைச்சது. அங்கே இருந்துதான் எனக்கு நிறைய சினிமா தொடர்புகள் கிடைக்கத் தொடங்குச்சி. நட்பு வட்டாரங்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைச்சது. ‘வா’(குவார்ட்டர் கட்டிங்) படம்தான் என்னுடைய முதல் படம்” என்கிறார் காளி வெங்கட்.

 ‘வா’ படத்தில் காமெடியனாக நடித்தத்தை தொடர்ந்து சில படங்களில் காளி வெங்கட் நடித்தபோதும் ‘உதயம் என்.ஹெச். 4’ அவரை ஒரு காமெடி நடிகராக அடையாளப்படுத்தியது. அதன் பிறகு ‘தடையற தகர்க்க’ ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி காளி வெங்கட்டுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.  காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கையில் ‘முண்டாசுப்பட்டி’ மிக முக்கியமான படமாக அமைந்தது. முண்டாசுப்பட்டி பட வாய்ப்பு கூட அவருக்கு எதேச்சையாகத்தான் கிடைத்து.

 “‘முண்டாசுப்பட்டி’யை ராம்குமாருடைய குறும்படங்களில் நான் ஏற்கெனவே டப்பிங் பேசியிருக்கிறேன். அதன்பிறகு கண்ணபிரான் என்ற நண்பர் மூலமாகவே இயக்குநர் ராம்குமார் நேரிடையாக அறிமுகமானார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் விஷ்ணுவோடு வரும் காமெடியன் ரோலுக்கு வேறோருவரை புக் செய்திருந்தார். அவர் வராத காரணத்தால் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அந்தப் படத்தில் நடிச்சது ஓர் இனிய அனுபவம். படம் முழுவதும் நான் டிராவல் பண்ணியிருப்பேன்.  எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம்.” என்கிறார் காளிவெங்கட்.

குறும்படங்களிலிருந்து காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கை தொடங்கியதால், குறும்படங்களிலிருந்து  சினிமாவுக்குள் வரும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க காளி வெங்கட்டுக்கு வாய்ப்பு வந்துவிடுகிறது. அவர்களோடு நல்ல நட்பில் இருப்பதாலும் தொடக்கக் காலத்தில் குறும்படங்களில் டிராவல் செய்ததாலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து சினிமாவில் காமெடியனாக தோன்றிய காளி வெங்கட், தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார். ஏன் இந்த மாற்றம்? “எனக்கு சினிமாவில் வெரைட்டியாக நடிக்கவே ஆசை. தொடர்ந்து ஒரே மாதிரியான வட்டத்துக்குள் நடிப்பதில் எனக்கும் விருப்பம் இல்லை. அதற்கேற்றார்போல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அந்த வாய்ப்பையும் விடவில்லை. ‘இறுதிச்சுற்று, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற படங்களில் காமெடியைத் தாண்டி நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் அமைந்தன. குறிப்பாக என்னால் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது கொடுத்தது.” என்கிறார் காளிவெங்கட்.

சினிமாவில் காலடி எடுத்து வைக்க 10 ஆண்டுகளைச் செல்விட்ட காளி வெங்கட், கடந்த 5 ஆண்டுகளில் ஐம்பது படங்கள் வரை நடித்து முடித்துவிட்டார். பரபரப்பாகச் சில ஆண்டுகள் நடித்துவிட்டு பிறகு காணாமல்போய்விடுவதில் காளி வெங்கட்டுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்; நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே தன்னுடைய லட்சியம் என்று உறுதியாகச் சொல்கிறார் இந்தக் கலைஞர்.

கேள்வி - பதில்



மறக்க முடியாத அழைப்பு?

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு வந்த அழைப்பு. 30 வயதிலேயே கதாநாயகிக்கு அப்பாவாக நடித்துவிட்டேன்.

 ஹீரோ ஆசை?

 நான் ஹீரோ மெட்டீரியல் கிடையாதுங்கோ.

பட என்ணிக்கை?

கிடைக்கிற வரை நடிக்க வேண்டியதுதான்.

சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டதா?

இலக்கை அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது.

 நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்?

தளபதி கூட நடித்துவிட்டேன். சூப்பர் ஸ்டார், தல கூட ன் நடிக்க வேண்டும்.

எதிர்கால ஆசை?

என்னுடைய சினிமா அனுபவங்களை எழுத ஆசை இருக்கு.

கவர்ந்த படம்?

ராஜா மந்திரி படம். என்னோட இயல்பான கேரக்டர் என்னவோ, அதே கதாபாத்திரத்தில் நடித்த படம்.





- இந்து தமிழ், 12/04/2019

09/04/2019

தஞ்சை இடைத்தேர்தல்: எம்ஜிஆர் எடுத்த விநோத முடிவு



ஜனதா கூட்டணியின் சார்பில் 1977-ல் பிரதமரானார் மொரார்ஜி தேசாய். 1979-ல் தஞ்சை, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதுவரை, இந்திரா காந்தியை ஆதரித்துவந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார். டெல்லி சென்று முதல்நாள் மொரார்ஜி தேசாயையும் அடுத்தநாள் இந்திரா காந்தியையும் சந்தித்தார் எம்ஜிஆர்.
தஞ்சாவூர் இடைத்தேர்தலில் இந்திராவை ஆதரிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். கூடவே, அதிமுக சார்பில் யாரும் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ஒரேநேரத்தில் இரண்டு தேசியக் கட்சிகளைச் சமாளிப்பதற்காக அப்படியொரு முடிவை எடுத்தார் எம்ஜிஆர். கடைசியில், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஆதரவோடு காங்கிரஸ் வென்றது. நாகப்பட்டினத்தில் திமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வென்றது. தஞ்சையில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், நாகையில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.

- இந்து தமிழ், 09-04-2019

08/04/2019

பதவியேற்காத வெற்றி வேட்பாளர்


இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை மக்களவைத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினரானார். அடுத்து, 1957-ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். 

வழக்கம்போல, இரண்டிலுமே வெற்றிபெற்றார். ஆனால், இரண்டாவது தடவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். 1962 தேர்தலின்போது அருப்புக்கோட்டை மக்களவைத் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார். உடல் நலக் குறைவின் காரணமாக, ஒரே ஒரு மேடையில் மட்டுமே பேசினார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும், டெல்லி செல்லவில்லை. அவரது உடல்நலக் குறைவை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்திற்குள் பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தினார் பிரதமர் நேரு. உடல்நிலை மேலும் மோசமானதால், தேர்தலில் வென்றும் பதவியேற்காமலே காலமானார் முத்துராமலிங்கத் தேவர்.

07/04/2019

மண் கவ்வி தர்த்தி பக்கட்


அரசியல் கட்சிகளைக் கலங்கடிக்கும் இன்றைய சுயேச்சைகளுக்கெல்லாம் முன்னோடி, போபால் துணி வியாபாரியான மோகன்லால். இந்திரா காந்தி, சரண்சிங், ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் என்று ஐந்து பிரதமர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் அவர். தேர்தல் நேரங்களில் தனக்குத் தானே மகுடமும் மாலையும் சூட்டிக்கொண்டு வீதிகளில் வலம் வருவார். அவர் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாமே டெபாசிட் இழந்தார். மண்ணைக் கவ்வுபவர் என்ற பொருளில் ‘தர்த்தி பக்கட்’ என்று பட்டப்பெயரும் வைத்துக்கொண்டார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட்டது வெறும் வேடிக்கைக்காக அல்ல.
‘இந்திய ஜனநாயகம் எல்லோரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறது என்பதைக் காட்டவே நான் தேர்தலில் நிற்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பதிலளித்தார் மோகன்லால். ‘தர்த்தி பக்கட்’ என்ற பெயரில் மோகன்லால் தவிர காகா ஜோகீந்தர் சிங், நகர்மால் பஜோரியா ஆகியோரும் பிரபலம். 93 வயதாகும் பஜோரியா, இந்தத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

06/04/2019

தோற்றவர் வென்றார்!

தேர்தலில் தோல்வியடைந்தவராக அறிவிக்கப்பட்டவர் மறுநாளே வெற்றியாளராக மாறிய ஒரு விநோதத் தேர்தலையும் தமிழகம் சந்தித்திருக்கிறது. 1989-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத்   தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. திருநெல்வேலியில் உள்ள ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் எம்.பி.முருகையா, காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.ராமசுப்பு, அதிமுக (ஜா) அணி சார்பில் ஆலடி அருணா, அதிமுக (ஜெ) அணி சார்பில் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு திமுக வேட்பாளர் முருகையா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளரின் வெற்றிபெற்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் அடுத்த நாள் காலையில் வெளிவந்தன. ஆனால், அதற்கு முன்பே ஒரு வாக்குப் பெட்டியிலில் இருந்த வாக்குகள் எண்ணப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அந்தத் தொகுதியின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்பு 31,314 வாக்குகளைப் பெற்றார். முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்

எம்.பி.முருகையா 30,832 வாக்குகளை மட்டுமே பெற்றார். 482 வாக்குகள் வித்தியாசத்தில் முருகையா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்ற செய்தி அன்றைய மாலை செய்தித்தாள்களில் வெளிவந்தது. முதல்நாள் தோல்வியடைந்தவர், மறுநாள் வெற்றியாளராக மாறியது தமிழகத் தேர்தல் வரலாற்றில் அதுதான் முதல் தடவை.

-
இந்து தமிழ், 04/04/2019

02/04/2019

விழிபிதுங்கவைத்த நளகொண்டா வேட்பாளர்கள்


வாக்குச்சீட்டு காலத்தில் சின்னத்தைப் பார்த்து முத்திரை இட்டு, அதைச் சரியாக மடித்து, ஓட்டுப் பெட்டிக்குள் போடுவதற்குள் சிலருக்குப் போதும் போதும் என்றாகிவிடும். வாக்குச் சீட்டுக்கே இந்த நிலை என்றால், வாக்குச்சீட்டு புத்தக வடிவில் இருந்தால், வாக்காளர்கள் நிலை எப்படி இருக்கும்? இப்படியான ஒரு விநோதத் தேர்தலை 1996-ல் ஆந்திரத்தின் நளகொண்டா (தற்போது தெலங்கானாவில் இருக்கிறது) தொகுதி வாக்களார்கள் எதிர்கொண்டார்கள்.

அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நளகொண்டா தொகுதியில் 480 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். பாதிப்பை அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், ‘ஜல சாதனா சமிதி’ என்ற அமைப்பின் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

66 பெண்கள் உட்பட 537 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 35 பேருடைய வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. 22 பேர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இறுதியில் 480 பேர் களத்தில் நின்றார்கள். இத்தனைப் பேர் போட்டியிட்டதால் வாக்குச்சீட்டுக்குப் பதிலாக வாக்குப்புத்தகத்தையே தயாரிக்க வேண்டியிருந்தது. ஒரு ஆளே அமர்ந்துகொள்ளும் அளவுக்கு வாக்குப் பெட்டிகள் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற பெயர் நளகொண்டாவுக்கு உண்டு. இதேபோல அதே ஆண்டில் கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியிலும் 456 பேர் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்துக்குப் பீதியை உண்டாக்கினார்கள்.

01/04/2019

ஏமாற்றிய மறுவாக்கு எண்ணிக்கை!

வாக்குச்சீட்டு காலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் ஆணையத்துக்குத் தலைவலியான விஷயம். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈவிஎம்) வந்த பிறகு மறுவாக்கு எண்ணிக்கை முன்பைவிட எளிதாகிவிட்டது.

 அதேசமயம், ஈவிஎம் கொண்டுவரப்பட்ட பின்னர், மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதில் ஆணையிடுவதுமில்லை.  தமிழகத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அப்பாவு, மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகினார். இதேபோல காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த விசிக தலைவர்
தொல்.திருமாவளவனும் மறுவாக்கு எண்ணிக்கை கோரினார்.

ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.அதேவேளையில், கடந்த டிசம்பர் மாதம் மிசோரம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை விஷயத்தில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியது. டுவால் தொகுதியில் மிசோ தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட லால்சந்தாமா ரால்டி என்ற வேட்பாளர் 5,207 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். 5,204 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எல். பியான்மாவியா  தோல்வியடைந்தார்.

மூன்றே ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்,  மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரித் தேர்தல் ஆணையத்தை அணுகினார். மறுப்பேதும் சொல்லாமல் தேர்தல் ஆணையமும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உடனே உத்தரவிட்டது. எனினும், மறுவாக்கு எண்ணிக்கை நடந்தபோது, அதே மூன்று ஓட்டுகள் வித்தியாசத்தில் பியான்வியாமா தோல்வியடைந்தது உறுதியானது.

எப்படியும் மறுவாக்கு எண்ணிக்கையில் மாறுபட்ட முடிவு கிடைக்கும் என்று காத்திருந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

- இந்து தமிழ், 01-04-2019