03/02/2020

கோடம்பாக்கத்தின் ஸ்வீட் மம்மி!

தமிழ் சினிமாவில் ‘ஸ்வீட் மம்மி’கள் என்றால், ஒரு சிலரே சட்டென நினைவுக்கு வருவார்கள். அவர்களில் அனுபமா குமாருக்கும் எப்போதும் இடமுண்டு. அண்மையில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு 2’ படத்திலும் விக்ராந்துக்கு வெள்ளந்தியான அம்மாவாக நடித்திருந்தார் அனுபமா. நாற்பத்தைந்து வயதாகும் அனுபமாவுக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர், மாடல், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர் எனப் பல முகங்கள் உண்டு.

பச்சைத் தமிழச்சியான அனுபமாவின் சொந்த ஊர் கோவை. அவருடைய அப்பா ராணுவத்தில் இருந்ததால், சண்டிகர், அஸ்ஸாம், டெல்லி என வடஇந்தியாவில்தான் வாசம். படிப்பெல்லாம் டெல்லியில்தான். ஆங்கில இலக்கியத்தை ஆர்வமாகப் படித்தவருக்கு யு.ஜி.சி.யில் மாணவ ஆங்கராகப் பணியாற்றியதிலிருந்து மீடியா மீது மோகம். குறிப்பாக, நடிப்பில் நாட்டம். ஆனால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் நடிக்க தடைப் போட்டுவிட்டார்கள். பிறகு போனால் போகட்டும் என்று சினிமா தவிர்த்த மீடியாவில் சேர்ந்துகொள்ள அனுமதி கொடுத்தார்கள். படித்த முடித்தவுடன் தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்தார் அனுபமா. அங்கேதான் நிகழ்ச்சி தயாரிப்பு, படத்தொகுப்பு எனப் பல்வேறு தளங்களில் பணியாற்றியிருக்கிறார்.

ஊடகம் மீதும் அனுபமாவுக்கு விருப்பம் ஏற்படவே, டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றினார். அங்கே  செய்தியாளர், ஆங்கராகவும் பணியாற்றிவந்த அனுபமாவுக்கு விளம்பரப் படங்களின் மீது ஆசை துளிர்த்தது. விளம்பரப் படங்களில் தலைகாட்டத் தொடங்கினார். மும்பையில் இருந்தபடி 400 முதல் 500 விளம்பர படங்களில் நடித்த அனுபமாவுக்கு சினிமாவில் நடிக்கவும்  வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், சினிமாவில் நுழைய வீட்டில் முட்டுக்கட்டை விழவே, மீண்டும் அந்த ஆசையை மூட்டைக் கட்டி வைத்தார் அனுபமா.

பொதுவாக திருமணம் பலருக்கு வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிடும். ஆனால், அனுபமாவுக்கு திருமணம்தான் சினிமாவுக்கான வாசலை அகல திறந்துவிட்டது.  ராணுவ கமாண்டரை மணந்த அனுபமாவுக்கு, கணவரிடமிருந்துதான் சினிமாவில் நடிக்க கிரீன் சிக்னல் கிடைத்தது. ‘சினிமா ஆசை இருந்தால் நடி’ என்று ஊக்கமூட்டினார். அந்த ஊக்கம் அனுபமாவுக்கு தித்தித்தது. அந்த சூட்டோடு ‘இஷ்கியா’ என்ற இந்திப் படத்தில் அறிமுகமனார். இந்தியில் தொடங்கிய அவருடைய சினிமா வாழ்க்கை தமிழுக்கு எப்படி மாறியது?

“தமிழில் 2009-ல் வெளியான ‘பொக்கிஷம்’தான் என்னுடைய முதல் படம். இந்தப் பட வாய்ப்பு கிடைத்ததில் ஒரு சுவையான கதை இருக்கு. அப்போ சென்னையில் ஒரு விளம்பர படத்துக்காக வந்திருந்தேன். செய்தித்தாள் ஒன்றை படித்தபோது இயக்குநர் சேரன், ஒரு கதாபாத்திரத்துக்காக 50 பேரை ஆடிஷன் செய்தும் யாரும் தேர்வாகவில்லை என்ற செய்தியைப் படித்தேன். அந்தக் கதபாத்திரத்துக்கு நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. சேரனை தொலைபேசியில் அழைத்து விருப்பத்தைத் தெரிவித்தேன். போனில் என் குரலை கேட்டுவிட்டே வேண்டாம் என்றார். ரொம்ப பிடிவாதமாகக் கேட்டதால், ஆடிஷனுக்கு வரச் சொன்னார். ஆடிஷனில் எப்படியோ என்னை ஓ.கே. செய்தார். அந்தப் படத்தில் 65 வயதுகிழவி வேடத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 35 வயதுதான்.  நடிக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் நடித்த கதாபாத்திரம் இது” என்று தமிழில் அறிமுகமான கதையைச் சொல்கிறார் அனுபமா.

தமிழில் முதல் படமே 65 வயது கிழவியாக நடித்த பிறகு அனுபமாவுக்கு அதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய தேடிவரத் தொடங்கின. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது சிலருக்கு சலித்துவிடும். அனுபமாவுக்கு அப்படித்தான். ஒரே மாதிரியான அழைப்புகள் வந்தாலும், அதிலிருந்து சற்று மாறுபட்ட முக்கியத்தும் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க அனுபமா முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

“குணச்சித்திரம் கதாபாத்திரம் என்றாலும் எப்போதும் கதை கேட்காமல் நடிக்கவே மாட்டேன். பிடித்திருந்தால் மட்டுமே செய்வேன். அம்மா, அக்கா என எந்தக் கதாபாத்திரமாக் இருந்தாலும் தோற்றத்தில் மாற்றம் காட்ட விரும்பினேன். என்னுடைய படங்களிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் தெரிந்திருக்கும். 25 வயது கர்ப்பிணி கதாபாத்திரம் தொடங்கி குடுகுடு கிழவிவரை எல்லா கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்துவிட்டேன்” என்கிறார் அனுபமா குமார்.

சேரனின் ‘பொக்கிஷ’த்துக்கு பிறகு ‘அய்யனார்’, ‘ஆடுபுலி’, ‘வம்சம்’, ‘துப்பாக்கி’, ‘மீகாமன்’ , ‘நீர்ப்பறவை’, ‘மூடர்கூடம்’, ‘ நீதானே என் பொன் வசந்தம்’ எனத் தொடங்கி இந்த ஆண்டு ‘காஞ்சனா 3’, ‘வெண்ணிலா கபடி குழு 2’ என அனுபமாவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. எல்லாமே அம்மா வேடங்கள்தான். உங்களைவிட வயது அதிகமுள்ளவர்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டால், வெடித்து சிரிக்கிறார்.

“என்னைவிட அதிக வயதுள்ள நாயகன்களுக்கு அம்மாவாக நடிக்கும்போது சிரிச்சுக்குவேன். படப்பிடிப்பிலேயே கூட நடிக்குறவங்க கலாய்ப்பாங்க. ஆனால், இது எல்லாமே இயக்குநர், “ஸாட் ரெடி” என்று சொல்லும்வரைதான். நடிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் கதாபாத்திரமாக மாறிவிடுவேன். எதிரே நடிப்பவர் என் மகன் என்ற நினைப்பு வந்துவிடும். உடல்மொழியும் மாறிவிடும்.” என்று யதார்த்தமாகப் பேசுகிறார் அனுபமா.

அம்மா போன்ற குணச்சித்திர கதாபடங்களில் பெரிய வித்தியாசம் காட்ட வாய்ப்பிருக்காது. ஆனால், ‘வம்சம்’ படத்தில் இரண்டு மாறுபட்ட வயதுகளில் தோன்றி நடிப்பில் பெயர் எடுத்தவர் அனுபமா.  “அந்தப் படத்தில் 25 வயசுல ஒரு கதாபாத்திரம். 45 வயசுல ஒரு கதாபாத்திரம். ஒரு கதாபாத்திரத்துக்கு ஒல்லியாக வேண்டியிருந்தது. இன்னொரு கதாபாத்திரத்துக்கு குண்டாக வேண்டியிருந்தது. குண்டாக நிறைய சாப்பிட்டேன். ஒல்லியாக ஒரு மாசம் அவகாசம் கொடுத்தார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்தேன். டயட்டை பின்பற்றினேன். மேக்கப்பிலும் மெனக்கெட வேண்டியிருந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் சவாலாக அமைந்த படம் ‘வம்சம்’தான்” என்கிறார் அனுபமா.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அனுபமா, ஆண்டுக்கு ஓரிறு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தன்னுடைய 14 வயது மகனுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. தற்போது சினிமாவைத் தாண்டி ‘வெப்’ தொடர் ஒன்றிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். “அடுத்து என்ன செய்வோம் என்பது நம் கைகளில் இல்லை” என்பதை அடித்துக்கூறு அனுபமாவுக்கு இயக்குநராகும் ஆசையும் உள்ளது. “எதிர்காலத்தில் அதையும் பார்ப்பீர்கள்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அனுபமா.

கேள்வி - பதில்

ரோல் மாடல்?


ஸ்ரீவித்யா. அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரை மனதில் வைத்து நடிப்பேன்.

 நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

‘பாபநாசம்’ படத்தில்  நடித்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் போல நடிக்க வேண்டும்.

அம்மா நடிகைகளில் போட்டி?

சிவரஞ்சனி. ரொம்ப அழகானவர். பிரமாதமாக நடிக்கக்கூடியவர். அவரே என் போட்டியாளர்.

‘மை சன் இஸ் கே’?

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற படம். பட ரிலீஸூக்காகக் காத்திருக்கிறேன்.

அடுத்த படங்கள்?

4 படங்கள் வர இருக்கின்றன. இதில் நானும் கிஷோரும் இணைந்து தயாரித்த ‘கதவு’ என்ற படமும் அடக்கம்.

- இந்து தமிழ், 30-07-2019

No comments:

Post a Comment