தேனியில் தன் அண்ணனை (பாலாஜி சக்திவேல்) கொலை செய்ய முயற்சிக்கும் கூட்டத்தில் இருவரைக் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் சுபாஷ் (சரத்குமார்). இதனால், தன்னுடைய இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறார் சரத்குமாரின் மனைவி ராதிகா. அவர்கள் கஷ்டப்பட்டு வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மகன் செல்வா (விக்ரம் பிரபு) வாழைக்காய் பிசினஸ் செய்கிறார். மகள் மங்கை (ஐஸ்வர்யா ராஜேஷ்) வழக்கறிஞருக்குப் படிக்கிறார்.
16 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து சரத்குமார் வீட்டுக்கு வருகிறார். ஆனால், பிள்ளைகள் இருவரும் அவரிடம் ஒட்டாமல் ஒதுங்குகிறார்கள். அதே வேளையில் சரத்குமார் செய்த கொலைக்கு பழிவாங்க காத்திருக்கிறார் நந்தா. இதில் சரத்குமாருக்கு என்ன ஆனது? பிள்ளைகள் சரத்குமாரை ஏற்றார்களா, இல்லையா என்பதுதான் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் கதை.
இயக்குநர் மணிரத்னம் தயாரித்துள்ள படம் இது. குடும்பக் கதைகள் அருகிவரும் காலத்தில், தைரியமாக ஒரு குடும்பத்தை வைத்து கூட்டாஞ்சோறு செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் தனசேகரனைப் பாராட்டலாம். கணவன் - மனைவி பாசம், அம்மா-பிள்ளைகள் பாசம், பிள்ளைகளின் காதல், குடும்பம், பழிக்குப் பழி, சென்டிமெண்ட் என ஒரு குடும்பக் கதைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் படத்தில் அளவாக வைத்திருக்கிறார் இயக்குநர். படம் தொடங்கி முடியும் வரை கிராமம், நகரம் என கதைக் களம் சுற்றிவருவதும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறது. படம் தொடங்கியதுமே அங்கே இங்கே எனச் சுற்றாமல் நேரடியாகக் கதைக்குள் வந்துவிடுகிறது திரைக்கதை.
ஆத்திரத்தில் ஒருவன் செய்யும் செயல், அவன் குடும்பத்தை எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும், மனைவியும் பிள்ளைகளின் நிலையும் என்னவாகும் என்பதையும் படம் சொல்ல முயன்றிருக்கிறது. பழிக்குப் பழி கூடாது என்ற கருத்தையும் படத்தின் போக்கோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஒரு குடும்பக் கதையை அழகியலாகச் சொல்ல பல விஷயங்கள் இருந்தபோதும், அவை எல்லாமே மேம்போக்காகக் காட்சிப்படுத்தியிருப்பது படம் நம் மனதைத் தொடாமலேயே செல்வது பெருங்குறை. சரத்குமாருடன் பிள்ளைகள் ஏன் ஒட்ட மறுக்கிறார்கள் என்பதற்கு படத்தில் வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. படத்தில் இயல்பாகவே காட்டப்பட்டிருக்கும் விக்ரம் பிரவுவை, சிறு வயதில் அடாவடி செய்பவனாக ஏன் காட்டினார்கள் என்பதற்கும் விடை இல்லை.
மடோனா செபாஸ்டின் குடும்பக் காட்சிகள் எதுவும் பிரதான கதைக்குக் கொஞ்சமும் உதவாத வகையிலே உருவாக்கப்பட்டிருக்கிறது. கடன் வாங்கி பிசினஸ் செய்யும் விக்ரம் பிரபு, 2 கோடிக்கு ரூபாய்க்கு அஸ்யூரன்ஸ் கொடுப்பது, புத்தி சுவாதீனம் இல்லாதவன் கொலைக் செய்யக் காத்திருப்பதாகக் காட்டுவது, அவன் கொலை செய்தால், சிறைக்கு சென்றுவிடுவான் என்று பேசுவது என டன் கணக்கில் பூச்சுற்றல்கள் உள்ளன. பழி வாங்க 16 ஆண்டுகள் காத்திருந்தவன், ஒரு நிமிட வசனத்தில் மனம் மாறுவது வழக்கமான அரைத்த மாவு.
சிறிய இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் தமிழில் நடித்திருக்கும் படம் இது. சுபாஷ் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு செல்வது, சிறையில் மருகுவது, மனைவி மீது அன்பை பொழிவது, பிள்ளைகளின் பாசத்துக்காக ஏங்குவது எனக் கச்சிதமாக நடித்தியிருக்கிறார். மனைவியாக ராதிகா சரத்குமார். சரத்குமார் கொலை செய்ததைக் கேட்டவுன் ராதிகாவின் பதற்றம், பிள்ளைகளுடனான பாசம், நேசம், கோபம், இயலாமை என ஒரு சராசரி குடும்பப் பெண்ணின் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சரத்குமார் - ராதிகாவின் மகனாக வரும் விக்ரம் பிரபுக்கு நீண்ட நாள் கழித்து நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம். அதை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். எந்த வேடத்திலும் பொருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாவும், தங்கையாகவும் நெகிழ்ச்சியாகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சாந்தணுவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. மடோனா செபாஸ்டின், நந்தா, பாலாஜி சக்திவேல், அமிதாஷ் என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளன. படத்துக்கு இசை கே மற்றும் ஷித் ராம். படத்தில் அவ்வப்போது இரண்டு வரிகளாகப் பாடல்கள் வருகின்றன. ஆனால், அவை எதுவும் மனதில் ஒட்டவில்லை. பிரீத்தா ஜெயராமனின் கேமரா சென்னை, தேனியை அழகாகப் படம் பிடித்துள்ளது.
வானம் கொட்டட்டும் - நனைய வைக்காத சிறு தூறல்!
No comments:
Post a Comment