25/08/2019

சவ்ரிமுத்து உருவாக்கிய சானடோரியம்

சென்னையில் தாம்பரம் சானடோரியத்தை ஒரு ரயில் நிலையமாகத்தான் பலரும் அடையாளப்படுத்துவார்கள். பல தசாப்தங்களுக்கு முன்னர் தாம்பரம் - குரோம்பேட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்ட மருத்துவமனையின் அடையாளம்தான் சானடோரியம். 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாம்பரம் சானடோரியம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னைக்கு எப்படி வந்தது? அதற்கு விதைப் போட்டது யார்?

 நூறாண்டுகளுக்கு முன்பு ‘டியூபர்குளோசிஸ்’ (டி.பி.) என்றழைக்கப்படும் காசநோய் மிகக் கடுமையான உயிர்க்கொல்லி நோயாகப் பார்க்கப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி எனும் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் கண்டுபிடிக்கும்வரை காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலாகவே இருந்தது. அதுபோன்ற சூழ்நிலையில் காசநோயால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவமனைகள் தேவைப்பட்டன.

பிரிட்டிஷ் நெஞ்சக மருத்துவரான ஜார்ஜ் பேடிங்டன் என்பவர் காசநோயாளிக்காக 1836-ல் பர்மிங்ஹாம் அருகே சானடோரியம் ஒன்றை நிறுவி சிகிச்சை அளித்தார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவ ரிசார்ட்டாகவே இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நோயாளிகளை நீண்டகாலம் தங்க வைத்து சிறப்பு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பிறகு ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளிலும் காசநோய் சிகிச்சைக்காக சானடோரியங்கள் உருவாயின.

ஐரோப்பாவில் உருவான சானடோரியங்களின் நீட்சியாகவே சென்னை தாம்பரத்திலும் சானடோரியம் வந்தது. தாம்பரத்தில் சானடோரியம் அமைந்ததற்கு முழு காரணமாக இருந்தவர் டாக்டர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவ்ரி முத்து என்ற மருத்துவரே. 1864-ல் பிறந்த சவ்ரி முத்துவைப் பற்றி ஆரம்பகால தகவல்கள் எதுவும் இல்லை. இங்கிலாந்தில் எம்.டி., எம்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவர் இவர். பிரிட்டனில் இருந்தபோது நிறவெறியின் தாக்கத்தை எதிர்கொண்டவர். என்றபோதும் 1891-ல் மார்க்ரெட் ஃபோக்ஸ் என்ற பிரிட்டிஷ் பெண்ணை திருமணம்
மனைவியுடன் சவ்ரி முத்து
செய்துகொண்டார்.

காசநோய் உள்பட நெஞ்சக மருத்துவத்தில் கைதேர்ந்தவராக இருந்தார் சவ்ரி முத்து. சுற்றுப்புறத் தூய்மை, தூயக் காற்று சுவாசிப்பு போன்ற விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சையை அளித்து வந்த சவ்ரிமுத்து, 1900-ல் இங்கில்வுட் சானடோரியம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு 1910-ல் சோமர்செட் பகுதியில் உள்ள மெண்டிப் மலைப்பகுதியில் சானடோரியம் ஒன்றை விரிவாக்கி காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். சானடோரியம் அமைத்து சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவராக விளங்கிவந்தார் சவ்ரிமுத்து.

சவ்ரி முத்துவுக்கு மகாத்மா காந்தியுடன் அறிமுகம் இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரத் தொடங்கிய சவ்ரி முத்து, 1920-ம் ஆண்டுக்கு பிறகு அதிக காலம் இந்தியாவில் தங்கினார். அப்போது சென்னைக்கு வந்தவர், இந்தப் பகுதியில் காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சானடோரியம் ஒன்றை நிறுவ விரும்பினார். அதற்காக தாம்பரத்தில் பச்சைமலை அடிவாரத்தைத் தேர்வு செய்தார். 1928-ம் ஆண்டில் 250 ஏக்கர் பரப்பில் அந்தப் பகுதியில் சானடோரியத்தை சவ்ரி முத்து அமைத்தார். 12 படுக்கைகளுடன் ரிசாட் குடில்கள் போல சானடோரியத்தை அமைத்து சிகிச்சையைத் தொடங்கினார்.

அதே காலகட்டத்தில் சவ்ரிமுத்துவின் மனைவி இங்கிலாந்தில் மரணமடையவே, 1930-ல் பிரிட்டனுக்குத் திரும்பினார். அப்போது சானடோரியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டுதான் சென்றார். அதை ஏற்று 1935-ல் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த மெட்ராஸ் மாகாண அரசு, தாம்பரம் சானடோரியத்தை ஏற்று நடத்தியது. இதன்பின்னர் சானடோரியத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, ஆய்வக வசதி, படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் இந்த சானடோரியம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு தாம்பரம் சானடோரியத்தில் காசநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திகொடுத்தது. அங்கே தங்கியிருந்த
சானடோரியம் ஆரம்ப கால தோற்றம்
நோயாளிகளுக்கு தொழிற் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. 1976-ம் ஆண்டில் 750 படுக்கை வசதிகளுடன் சானடோரியத்தை தமிழக அரசு விரிவுப்படுத்தியது. 1993-ல் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் காசநோய்க்காக இங்கே தங்கி இரண்டு பேர் சிகிச்சை பெற்றனர். எய்ட்ஸ் நோயாளிகளுக்கென தாம்பரம் சானடோரியத்தில் சிகிச்சை தொடங்கியது அப்போதுதான்.

தற்போது ‘தாம்பரம் டிபி சானடோரியம்’ அறியப்படும் இந்த மருத்துவமனை தமிழகத்திலேயே காசநோயாளிக்களுக்கென பிரத்யேகமான மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய எய்ட்ஸ் நோய் மையமாகவும் தாம்பரம் சானடோரியம் செயல்பட்டுவருகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென தனி சிகிச்சை பிரிவுகளும் இங்கே இயங்கிவருகின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவில் குடில்களுடன் தொடங்கிய இந்த சானடோரியம், இன்று சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையாகவும் கிரேட்டர் சென்னையின் தனி அடையாளமாகவும் உருவெடுத்திருக்கிறது.

- இந்து தமிழ், 24-08-2019

No comments:

Post a Comment