16/08/2019

கோமாளி விமர்சனம்


தொண்ணூறுகளின் இறுதியில் கதைத் தொடங்குகிறது. 12-ம் வகுப்பு படிக்கும் ஜெயம் ரவி, உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். சம்யுக்தாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்றுவிடுகிறார். 16 ஆண்டுகள் கழித்து கோமாவிலிருந்து ரவி மீளும்போது உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது. அந்த மாற்றத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளவே தடுமாறும் ரவிக்கு சோதனையாக பணத் தேவையும் வந்துசேருகிறது. இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு ரவி வென்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


தமிழ்ப் படங்களில் ‘கோமா’ காட்சிகள் படத்தில் சிறுபகுதியாகவே வந்திருக்கின்றன. கோமாவிலிருந்து மீண்டு நவீன வளர்ச்சிக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள தடுமாறும் இளைஞன் பற்றிய மாறுபட்ட கதையை யோசித்ததற்கே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு நாயகன் மிரள்வதையும், அதை நகைச்சுவையாகப் படமாக்கிய விதத்திலும் குறையில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்கள் கோமாவுக்கு சென்றுவிட்டதையும், மனிதமும் எமோஷனலும் மட்டுமே மனிதனுக்குள் மாறவில்லை என்ற சமூக கருத்துகளையும் படத்தில் பேசியிருப்பது படத்துக்கு பலம். 

தலைமுறை மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் 90-களின் மனநிலையோடு நாயகன் பரிதவிக்கும் காட்சிகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிடுகின்றன. மாறிபோன ஒவ்வொரு விஷயத்தையும் ‘என்னடா இப்படி பண்ணி வைச்சுருக்கீங்க’ என்று ரவி சொல்லும் இடங்கள், பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் முகத்தைக்கூட பார்த்து பேச மறுக்கிறோம் என்று பேசும் இடங்களும் ரசிக்க வைக்கின்றன. சண்டை காட்சிகளற்ற எமஷனலோடு கிளைமாக்ஸை நிறைவு செய்ததும் ஈர்க்கின்றன.  

படத்தின் பிரதானமே தலைமுறை மாற்றத்தாலும் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சியாலும் நாயகன் பரிதவிப்பதுதான். ஆனால், அதிலிருந்து விலகி, திரைக்கதை இரண்டாம் பாகத்தில் வேறொரு தளத்தில் பயணிக்கிறது. இதனால் ‘கோமாளி’யாகப் பார்க்கப்படும் நாயகன் அதிலிருந்து எப்படி மீளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  இரண்டாம் பாகத்தில் வீணாகிவிடுகிறது. முதல் பாகத்தில் காட்டப்பட்ட அத்தனை காட்சிகளுக்குமான நியாயங்கள் திரைக்கதையின் மாற்றத்தால் அடிப்பட்டுபோய்விடுகின்றன. கே.எஸ். ரவிக்குமார் வீட்டில் சிலையைத் திருட ஜெயம் ரவி செல்வதிலும் புதுமையில்லை. பள்ளிக்காலத்து காதலியை ரவியும் யோகிபாபுவும் சந்திப்பதும் அங்கே பேசும் வசனங்களும் மலிவான கற்பனை.  
படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பள்ளி  மாணவனுக்குரிய கதாபாத்திரத்திக்கும் சமகால பாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து மிரட்சியாக இருப்பதில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். கிழிந்த பேண்டுடன் வரும் கஜோலை கலாய்ப்பது, பள்ளி மாணவியை ரொமாண்டிக் செய்ய முற்படுவது, ஃபேஸ்புக் இத்யாதி, அமேசான் டெலிவரிக்காகக் காத்திருப்பது என தலைமுறை மாற்றத்தால் தவிக்கும் உணர்வை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார். கஜோல் அகர்வாலுக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை. கஜோலைவிட சம்யுக்தாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

படம் முழுவதும் வரும் யோகிபாபு ஒருவரியில் பேசும் நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. ரவியோடு சேர்ந்து யோகிபாபு அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன.  அடாவடி அரசியல்வாதியாக வரும் கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் குறையில்லை. மருத்துவராக வரும் தியாகேஷ், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் வழக்கம் அவர்களுடையய பாணியில்  நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் பிரதீப் ராகவ்வின் படத்தொகுப்புக்கும் படத்துக்கு பலம்.

நல்ல சவால்களோடு பொழுதுபோக்குள்ள படமாக்க எல்லா அம்சங்களும் இருந்தும், வலுவில்லாத இரண்டாம் பாக திரைக்கதையால் ‘கோமாளி’ கலகலத்துவிடுகிறான்.

மதிப்பெண்  2.5 / 5

No comments:

Post a Comment