24/08/2019

வாவ் போட வைக்கும் வட தமிழகம்!


செஞ்சிக்கோட்டை வாலிபன்!

செஞ்கிக்கோட்டை என்றது நம் நினைவுக்கு வருவது ராஜா தேசிங்கு. இத்தனைக்கும் ராஜா தேசிங்கு 18 வயது வரையே வாழ்ந்தார். முகலாய பேரரசின் படைத்தளபதியாக இருந்த ராஜபுத்திர வீரன் சொரூப்சிங் அந்தப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் துணைபுரிந்தார். இதனால் கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாயர்களின் வசம் இருந்த செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்ய அவர் தேர்வு செய்யப்பட்டார். சொரூப்சிங்கிற்கும் ராமாபாய்க்கும் மகனாகப் பிறந்தவரே ராஜா தேசிங்கு.
போர்க் கருவிகளைக் கொண்டு விளையாடுவதும், புலிகளுடன் சண்டையிடுவதுமே சிறுவயதில் தேசிங்கின் பொழுதுபோக்கு. டெல்லி அரசரிடம் இருந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கச் சென்ற ராஜா தேசிங்கின் தந்தை, அதை அடக்க முடியாமல் தோல்வியுற்றதால் சிறைப்படுத்தப்பட்டார். இதை  அறிந்த 15 வயது சிறுவனான தேசிங்கு, டெல்லி சென்று நீலவேணி என்ற குதிரையை அடக்கி தந்தையை சிறையிலிருந்து மீட்டது அவரது வீரத்துக்கு எடுத்துக்காட்டு.
யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கியதால் டெல்லி அரசர் நீலவேணி குதிரையை தேசிங்கிற்கு பரிசளித்ததோடு, தனது படைத்தலைவன் பீம்சிங்கின் மகளையும் திருமணம் செய்து வைத்தார். மகனால் சிறையிலிருந்து மீட்கப்பட்ட சொரூப்சிங் மீண்டும் செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆட்சியைத் தொடர்ந்தார்.
 சொரூப்சிங் இறந்ததும் டெல்லி அரசருக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்ட ராஜா தேசிங்கு மறுத்ததால் அவர் ராஜாவாக முடிசூட்டிக் கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தான். ஆனால்,  தேசிங்கு தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல், தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.
 இதனால், ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் போர் தர்மத்தை மீறி தொடுத்த ஒரு போரில் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார். அப்போது ராஜா தேசிங்கிற்கு வயது 18தான்.  கணவனின் பிரிவைத் தாங்கமுடியாமல் தேசிங்கின் மனைவியும் உயிர் துறந்தாள். தேசிங்குராஜன் மற்றும் அவரது படைத்தளபதி மகம்மதுகானின் சமாதி செஞ்சிக்கு அருகில் உள்ள நீலாம் பூண்டி கிராமத்தில் இன்றும் உள்ளது. இங்கு தேசிங்கின் நீலவேணி குதிரைக்கும் சமாதி உள்ளது.

கல்மர தரிசனம்!

பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தைப் பார்க்க வாய்ப்பு
கிடைக்குமா?  நிச்சயம் கிடைக்கும். அதற்கு பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் செல்ல வேண்டும். ஆனால், அந்தப் பழங்கால மரத்தை மர வடிவில் பார்க்க முடியாது. கல் மரமாகத்தான் பார்க்க முடியும்.  இந்த  கல் மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சாத்தனூரில் உள்ள கல்மரம் 18 மீட்டர் நீளமுள்ளது.  பூக்களில்லா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தியப் புவியியல் துறை கல்மரம் உள்ள பகுதியை பாதுகாத்து வருகிறது.  கல்மரம் உள்ள இடத்தில் தமிழக அரசு சார்பில்  அருங்காட்சியகமும் உள்ளது. இங்கு கல்மரத்தைக் கண்டுபிடித்த புவியியல் நிபுணர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர், பெரம்பலூர் பகுதி முழுவதும் கடலாக இருந்தாம். இந்தப் பகுதி கடலாக இருந்த போது மிகப்பெரிய விண் கல் ஒன்று விழுந்து, கடல் நீர் வற்றி, உயிரினங்கள் அழிந்து, கடல் உள்வாங்கியதாக  கூறுகின்றனர் புவியியலாளர்கள். இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின் முட்டை படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதி முழுவதும் சிறிது சிறிதாக மணல் குன்றுகள் போல் உள்ள சுண்ணாம்பு கல் படிமங்களைக் காண வித்தியாசமாக இருக்கும்.
 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறுவாச்சூர் வழியாக சாத்தனூர் சென்றால் கல்மரத்தைத் தரிசிக்கலாம்.

திக் திக் பரிசல் பயணம்

தர்மபுரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தளம் என்றால் அது ஒகேனக்கல்தான். கர்நாடகாவில் இருந்து கரைபுரண்டு ஓடிவரும் காவிரி ஆறு,  புகையை விண்ணில் பாய்ச்சியப்படி நீர்வீழ்ச்சியாகக் கொட்டுவது இங்குதான். வார இறுதி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, வட மா நிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் பார்க்க முடியும்.
தர்மபுரியிலிருந்து பென்னாகரம் வரை நிலப்பகுதியிலும், பின்னர் மலைப்பள்ளத்தாக்கிலும் சாலை வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வழிகள் உள்ளன. நீர்விழ்ச்சியில், தொடர்ச்சியாக ஓடும் காவிரி ஆற்றின் மறுபுறத்திலுள்ள கண்கவர் எழில் காட்சிகளைப் பார்த்து ரசிக்க தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியைச் சுற்றி ஆயில் மசாஜ் செய்யும் தொழிலாளர்களை அதிகம் பார்க்க முடியும். மசாஜ் செய்து விட்டு கொட்டும் அருவியில் குளிப்பது மிகவும் அலாதியான ஆனந்தம் தரும். ஒகேனக்கல் என்றாலே பரிசல் பயணம் தனி அடையாளமாகி விட்டது. அருவிகளின் பிரம்மாண்டமான பாறைகளுக்கு இடையே பரிசல் பயணம் மேற்கொள்வது மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.  ஐந்து முதல் ஆறு நபர்கள் ஒரு பரிசலில் பயணிக்கலாம். வேகமாக ஓடும் நீரின் எதிர்திசையில் பரிசலை ஓட்டுவது திகில் கலந்த ஒன்றாகும்.

ஆழிப்பேரலையின் எதிரி

உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் பிரேசில்
நாட்டில்தான் உள்ளன். அதற்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பிச்சாவரம் காடுகள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பெருமைச் சேர்க்கும் இந்த அலையாத்திக் காடுகள் இயற்கை அளித்த பெரும் கொடை.
 கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர் வரை  மோட்டார் படகில் சென்று அலையாத்திக் காடுகளை கண்டு ரசிக்கலாம். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் வனச்சுற்றுலா மையமாக விளங்குகிறது. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இகாட்டில் 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளன.
இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருவது இதன் தனிச்சிறப்பு. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக் கொண்டு அலையாத்திக் காடுகள் வளர்கின்றன.
இயற்கை அள்ளி வழங்கிய அலையாத்திக்காடுகளை அலட்சியமாக நினைத்தவர்கள் கூட, இன்று இவற்றைப் போற்றுகின்றன. 2004ஆம் ஆண்டில் தமிழக கடற்கரை மாவட்டங்களை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலையையே அலையாத்திக்காடுகள் தடுத்தன என்றால் இதன் வீரியம் அவ்வளவு சக்தி வாய்ந்தது.

- தி இந்து, தீபாவளி மலர், 2013

No comments:

Post a Comment