29/09/2019

நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்

அப்பா (சமுத்திரகனி) இல்லாத அரும்பொன் (சிவகார்த்திகேயன்) உடன் பிறக்காத துளசியுடன் (ஐஸ்வர்யா ராஜேஷ்) ‘பாசமலர்’ வாழ்க்கை வாழ்கிறார். இரு பெரியப்பாக்கள் (சுப்பு பஞ்சு, வேல ராமமூர்த்தி) இருந்தும், அவர்களுடைய உதவி இல்லாமல் தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் தடைபடுகிறது. வேறு வழியில்லாமல் சிவகார்த்திக்குப் பிடிக்காத அய்யனாரை (நட்டி) ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்கிறார். ஒரு கொலையும் அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளும் உறவுகளை ஒன்றிணைத்ததா இல்லையா என்பதுதான் ‘ நம்ம வீட்டு பிள்ளை’யின் கதை.

 ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற ஒரு குடும்பக் கதையைச் சொன்ன பாண்டிராஜ், இந்த முறை அதை விஸ்தரித்து பெரிய குடும்பக் கதையாகக் கொடுத்து கூட்டாஞ்சோறு ஆக்க முயற்சி செய்திருக்கிறார். குடும்பக் கதைகளை வைத்து படம் எடுக்கும் போக்கு அருகி வரும் காலத்தில், உறவுகளை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். அண்ணன் - தங்கை பாசக் கதைகள் தமிழுக்குப் புதிதில்லை என்றாலும், தன்னுடன் பிறக்காத தங்கைக்காக அண்ணன் உருகி மருகும் ‘பாசமலர்’ கதைக்கு அட போட வைக்கிறது. தம்பி உயிருடன் இல்லாத குடும்பத்துடன் ஒட்டாத பங்காளிகள், பாசம் காட்டாத தாய்மாமன்கள், அவர்களுக்காக உருகும் தாத்தா என ஒரு கிராமத்து பெரிய குடும்பத்தின் கதையைக் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அண்ணன் - தங்கை பாசக் கதை என்றால், தங்கைக்கு வரும் கணவன் வில்லனாகவும், அண்ணனுக்கு பிடிக்காதவனாகவும் இருக்க வேண்டும் என்ற தமிழ்ப் படத்தின் இலக்கணத்துக்கு இந்தப் படமும் தப்பவில்லை. ஆனால், சிவகார்த்திக்கும் நட்டிக்கும் முன்பகை இல்லாத வேளையில் இருவரும் முறுக்கிக்கொள்வது ஏன் என்பதற்கும் படத்தில் தெளிவாக விடையும் காட்சிகளும் இல்லை. ஒரு பெரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவம் யார், யார் யாருக்கு உறவு என்பதைப் புரிந்துகொள்ளவே அரை மணி நேரத்தை படம் விழுங்கிவிடுகிறது. புரியும்படியான பாத்திர வார்ப்பில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

படத்தின் அடிநாதமாக இருந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யா, சிவகார்த்திக்கு உடன் பிறக்காத தங்கை என்ற காட்சி,  போகிற போக்கில் காட்டி முடித்துவிடுகிறார்கள். சமுத்திரகனியின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் நீட்டி முழக்காமல் கொடுத்ததற்கு இயக்குநரைப் பாராட்டலாம் என்றாலும், அவர் மின்சாரம் பாய்ந்து சாகும் காட்சியை அபத்தமாகக் காட்டி விழி பிதுங்க வைக்கிறார்.

 படம் தொடங்கியது முதல் முடியும் வரை சடங்கு, சம்பிரதாயம், குடும்ப விழா என இழுவையாக இழுக்கும் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருந்தால், சுவாரசியம் கொஞ்சம் கூடியிருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக  பாசம், வேஷம், காதல், மோதல் எனக் காட்டிவிட்டு, கிளைமாக்ஸ் காட்சிக்காகவே புகுத்தப்படும் கொலையும், அதையொற்றி வரும் காட்சிகளும் படத்தின் முழு கட்டமைப்பையும் காலி செய்துவிடுகிறது. அறிமுகக் காட்சியில் கபடி வீரனாக சிவகார்த்தியைக் காட்டுவது ஏன் என்ற கேள்வி படம் முடிந்த பிறகும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அரும்பொன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்தி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கிராமத்து இளைஞன், அண்ணன், மகன், நண்பன், காதலன் என படத்தில் ஜமாய்த்திருக்கிறார் சிவகார்த்தி. வழக்கம்போல அவருடைய டைமிங் காமெடியும் வசனத்துக்கு பலம் சேர்க்கிறது. சிவகார்த்தியின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிராமத்தில் எளிய வீட்டில் வாழும் பெண்ணாகவும் பாசம் காட்டும் தங்கையாகவும், கொடுமை செய்யும் கணவனின் மனைவியாக ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனு இம்மானுவேல் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.

காமெடியனாக வரும் சூரி வழக்கம்போல் நையாண்டி செய்திருக்கிறார். சிவகார்த்தி - சூரி காம்பினேஷன் மீண்டும் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. தாத்தாவாக படம் முழுவதும் வரும் பாரதிராஜா, வசனங்களில் வார்த்தை விளையாட்டு விளையாடிவிடுகிறார். சூரியின் மகனாக வரும் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்பு, குறும்பு வசனங்களால் சிரிக்க வைக்கிறான். வில்லன் இல்லாத குறையைப் போக்கியிருக்கிறார் நட்டி. முன்னணி காமெடியனாக உயர்ந்துவரும் யோகிபாபு, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஏன் நடித்தார் என்றே புரியவில்லை. அர்ச்சனா, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, கராத்தே வெங்கடேஷன், ஆதிரா என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் வந்து செல்கின்றன.

படத்துக்கு இசை டி. இமான். காந்த கண்ணழகி, ஜிகிரி தோஷ்த், மயிலாஞ்சி போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.  நிரவ் ஷாவின் படமாக்கம் கச்சிதம். குடும்ப கதையைத் திரைக்கதையாக்கியதில் குறையில்லை என்றாலும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற ஹைதர்காலத்து  பாத்திர வார்ப்புகளால் மெகா சீரியலைப் பார்த்த உணர்வை ‘நம்ம வீட்டு பிள்ளை’ தருகிறான்.

மதிப்பெண்: 2.5 / 5

28/09/2019

இந்திய அரசியலில் பெண் ஆளுநர்கள்!

தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன். அவரையும் சேர்த்து இந்தியாவில் பெண் துணை நிலை ஆளுநர், பெண் ஆளுநர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்கள் அதிக அளவில் பதவியில் இருப்பது இப்போதுதான் முதன் முறை.
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு இதுவரை தமிழிசையோடு சேர்த்து வெறும் 24 பெண்கள் மட்டுமே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்கள் பதவியில் இருந்ததும் மிகக் குறைவுதான். 1988-90-ம் ஆண்டு காலகட்டத்தில் குமுத்பென் ஜோஷி (ஆந்திரா), ராம் துள்ரி சின்ஹா (கேரளா), சரளா கிரிவால் (மத்திய பிரதேசம்) ஆகியோர் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்களாக இருந்ததுதான் அதிகம் என்ற நிலை இருந்தது.
அந்தப் பெருமை 2009-10-ம் ஆண்டுவாக்கில் தகர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் ஆளுநர்கள் பதவியை அலங்கரித் தார்கள். பிரபா ராவ் (இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான்), மார்கரெட் ஆல்வா (உத்தர காண்ட்), கமலா பென்னிவால் (குஜராத்), ஊர்மிளா சிங் (இமாச்சலபிரதேசம்) ஆகிய நால்வர் இந்தக் காலகட்டத்தில்தான் ஆளுநர்களாக இருந்தார்கள்.
தற்போது முந்தைய சாதனையும் முறியடிக்கப்பட்டு விட்டது. மிருதுளா சின்ஹா (கோவா), திரவுபதி முர்மு (ஜார்கண்ட்), நஜ்மா ஹெப்துல்லா (மணிப்பூர்), ஆனந்திபென் பட்டேல் (உத்தரப்பிரதேசம்), பேபி ராணி மவுரியா (உத்தரகாண்ட்), அனுசுயா யுகே (சட்டீஸ்கர்), தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா) ஆகியோர் ஆளுநர் பதவியில் இருந்துவருகிறார்கள். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பணியாற்றிவருகிறார். ஒரே நேரத்தில் 7 ஆளுநர்கள், 1 துணை நிலை ஆளுநர் பதவியில் பெண்கள் இருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறை.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. தமிழிசைக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் 1977 அக்டோபர் முதல் 1982 அக்டோபர்வரை கேரள ஆளுநராக இருந்திருக்கிறார். இவர் பர்மாவில் பிறந்தவர். தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இவர் தேசிய கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவர். அவருக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆளுநர் ஆகியிருக்கிறார்.

தெரியுமா?
# இமாச்சலப் பிரதேச மாநிலத்தில்தான் மிக அதிகமாக 4 முறை பெண் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள். அடுத்ததாக ராஜஸ்தானில் 3 முறை பெண் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள்.
# புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 முறை பெண் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகித்திருக்கிறார்கள்.
# தமிழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பெண் ஆளுநராக இருந்திருக்கிறார். 1997-2001-ம் ஆண்டுவரை பதவி வகித்த அவர் ஃபாத்திமா பீவி. ஆளுநராக பதவியேற்ற முதல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இவரே.
# இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த பெண், பத்மஜா நாயுடு. 1956 நவம்பர் முதல் 1976 மே வரை மேற்கு வங்காள ஆளுநராக இவர் இருந்திருக்கிறார்.
# ஆளுநராக இருந்து குடியரசுத் தலைவரானவர், பிரதிபா பாட்டீல். குடியரசுத் தலைவர் பதவிக்கு இவருடைய பெயர் அறிவிக்கப்பட்டபோது ராஜஸ்தான் ஆளுநராக இருந்தார்.

- இந்து தமிழ். 17-09-2019

25/09/2019

பேர் சொல்லும் பாரம்பரிய பெருமைகள்!

தமிழக ஊர்கள் சிலவற்றின் பெயரைக் கேட்டதுமே அந்த ஊர்களின் தயாரிப்புகள் மனத்திரையில் தோன்றும். அப்படியான நான்கு தயாரிப்புகளுக்கு அண்மையில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காரைக்குடி கண்டாங்கிச் சேலை, திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, பழநி பஞ்சாமிர்தம் ஆகிய நான்கு பாரம்பரிய தயாரிப்புகளுக்குப் ‘புவிசார் குறியீடு’ வழங்கப்பட்டிருக்கிறது.

காரைக்குடி கண்டாங்கிச் சேலை

‘கண்டாங்கி... கண்டாங்கி... கட்டி வந்த பொண்ணு...’ எனத் திரைப்
பாடல்கள் தொடங்கிக் கவிதைகள்வரை கண்டாங்கியைப் புகழாதவர்கள் குறைவு. தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. செட்டிநாடு எனப்படும் காரைக்குடிதான் இந்தச் சேலையின் பிறப்பிடம். கண்டாங்கிச் சேலையின் வயது 300 எனச் சொல்கின்றன செவிவழித் தகவல்கள். கண்டாங்கிச் சேலையின் தனித்த அடையாளம் இரு பக்கங்களிலும் உள்ள ‘பெரிய பார்டர்’களே. ‘கண்டாங்கி பார்டர்’ என்றே இதற்குப் பெயர்.

‘கெண்ட அங்கி’ (கெண்டைக்கால் அங்கி) என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் ‘கண்டாங்கி’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. சேலையின் நடுவே விதவிதமான கட்டங்கள், கோபுரம், மயில் போன்ற டிசைன்கள் இந்தச் சேலையை அழகாகக் காட்டும். தடித்த பருத்தியில் தரமாக நெய்யப்படுவதே இந்தச் சேலையின் தனிச்சிறப்பு. காரைக்குடியில் மட்டுமே புகழ்பெற்றிருந்த இந்தச் சேலைகள் நகரத்தார் சமூகத்தினர் மூலம் ஊரெங்கும் புகழ்பெற்றன. வேதிப்பொருள் கலப்பின்றிக் கண்டாங்கிச் சேலைகள் நெய்யப்படுவதும் இதன் பெருமைகளுள் ஒன்று. தமிழகத்தின் பாரம்பரிய சேலைகளுள் ஒன்றாகிவிட்ட இந்தச் சேலையை, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.

திண்டுக்கல் பூட்டு


திண்டுக்கல் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருபவை பூட்டும் பிரியாணியும்தான். பிரசித்திபெற்ற திண்டுக்கல்
பூட்டை வைத்து அந்த ஊரை ‘லாக் சிட்டி’ என்றும் அழைப்பார்கள். குண்டு மாங்காய் வடிவிலான திண்டுக்கல் பூட்டை ஒரு காலத்தில் எல்லோர் வீட்டிலும் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் பூட்டு நூற்றாண்டுப் பாரம்பரிய பெருமைகொண்டது.

திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கும் தொழில் 1900-ம் ஆண்டுவாக்கில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்திலேயே 50 வகையான பூட்டுகள் வடிவமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், இவற்றில் மாங்காய் வடிவிலான பூட்டுகளே திண்டுக்கல் பூட்டின் மகிமையை ஊர்தோறும் பறைசாற்றின.

திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நாகல் நகர், நல்லம்பட்டி, குடைபாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பூட்டுத் தொழிற்கூடங்கள் செயல்பட்டுவந்தன. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. திண்டுக்கல் பகுதியில் இரும்பு அதிகமாகக் கிடைத்ததாலேயே இந்தத் தொழிலில் பலரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நவீனப் பூட்டுகள் வந்துவிட்டாலும் பாரம்பரியமிக்க திண்டுக்கல் பூட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. திண்டுக்கல் பூட்டு வகைகளில் டெலோ பூட்டின் சாவி தொலைந்துவிட்டால், பூட்டை உடைக்கத்தான் வேண்டும் என்பதிலிருந்தே திண்டுக்கல் பூட்டின் மகிமையை அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

ஊரெல்லாம் பால்கோவா கிடைத்தாலும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு நிகராகாது. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாதது இந்தப் பால்கோவா.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டாள் கோயிலில் பாலையும் வெல்லத்தையும் கலந்து, திரட்டுபாலைப் படைத்து வழிபட்டுவருகிறார்கள். அந்த வழியாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா நிலைபெற்றதாக நம்பப்படுகிறது. என்றாலும், 1940-களுக்குப் பிறகே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா புகழ்பெறத் தொடங்கியது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் பண்ணைகள் அதிகம். அதிகமாகக் கிடைக்கும் பாலைக் கொதிக்கவைத்து, அதனுடன் சர்க்கரையைக் கலந்து திரட்டி செய்யப்படுவதே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா. இந்த ஊரில் பல கடைகளிலும் தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளில் பால்கோவா சுடசுடச் தயாரிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டுவந்தது. தற்போது பால் அல்வா, பால் பேடா, பால் கேக், கேரட் பால்கோவா எனப் பல விதங்களில் பால்கோவா தயாராகிறது.

பழநி பஞ்சாமிர்தம்

அறுபடை வீடுகளில் ஒன்று, பழநி தண்டாயுதபாணி கோயில். முருகனுக்கு அறுபடை வீடுகளிலும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக
வழங்கப்பட்டாலும், பழநி பஞ்சாமிர்தம் தனித்த பெருமை கொண்டது. பழநியில் முருகனுக்குப் படைக்கப்படும் பஞ்சாமிர்தம், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பார்த்ததுமே நாவூறவைக்கும் பழநி பஞ்சாமிர்தம் தனித்த ருசி கொண்டது.

இது நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதற்கேற்ப மலை வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, பசு நெய், தேன், பேரீச்சம்பழம், ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டே பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இவற்றுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு இதன் ருசி கூட்டப்படுகிறது.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட சேர்க்காமல் செய்யப்படுவதே இதன் தனிச் சிறப்பு. பஞ்சாமிர்தத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கலந்தாலும் கெட்டுப்போய்விடும்.

- இந்து தமிழ், 22/09/2019

23/09/2019

காப்பான் விமர்சனம்

விவசாயியாக மக்களோடு மக்களாகக் கலந்திருக்கிறார் ராணுவ உளவு அதிகாரியான கதிர் (சூர்யா). பிரதமரான சந்திரகாந்த் வர்மாவை (மோகன்லால்) கொல்லத் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது வில்லன் கூட்டம். பிரதமரைக் கா(ப்பான்)க்கும் பணியில் சூர்யா வந்துசேருகிறார். பிரதமரை சூர்யா காப்பாறினாரா, அந்த வில்லன் கூட்டம் யார், எதற்காக பிரதமரைக் கொல்ல திட்டமிடுகிறது போன்ற கேள்விகளுக்கு கமர்ஷியலாக விடை சொல்கிறான் ‘காப்பான்’.

‘அயன்’, ‘மாற்றான்’ பட வரிசையில் இணைந்திருக்கிறது கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி. விறுவிறுப்பாக கதை சொல்லும் கே.வி. ஆனந்த், இந்தப் படத்திலும் அதை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இரண்டே முக்கால் நேர படத்தை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்தியிருக்கிறார். தீவிரவாதம், பாகிஸ்தான் சதி, விவசாயம், கார்ப்பரேட், அரசியல், எஸ்பிஜி, ராணுவ புலனாய்வு எனப் பல விஷயங்களையும் துணைக்குச் சேர்த்து கூட்டாச்சோறு படைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பிரதானமாகத் தொற்றி நிற்கும் பிரதமரின் உயிருக்கு உலை வைக்கும் கூட்டத்தின் சதியைத் துப்பறியும் கதையா, சமகால விவசாய பிரச்னையைத் தீர்க்கும் கதையா என்று சொல்ல முடியாமல் சங்கிலி தொடர்பு இல்லாமல் அறுந்துவிழுகிறது திரைக்கதை. இது படத்துக்கு பெரும் பலவீனமாக அமைந்துவிடுகிறது.

விவசாயம், விவசாய விளை நிலங்களை வளைக்க நினைக்கும் கார்ப்பரேட் மூளையைப் பற்றி படம் பேசியிக்கிறது. ஆனால், தீவிரமாகப் பேசக்கூடிய இந்த விஷயங்களை திரைக்கதை நகர்வுக்காக மேம்போக்காக இயக்குநர் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நெகட்டிவ் தோற்றத்தில் காட்டி அதைப் பாசிட்டிவாக காட்டும் உத்தியைப் படம் முழுவதுமே இயக்குநர் நிரவிவிட்டிருக்கிறார். கதையின் ட்விஸ்டுகளாக இருந்திருக்க வேண்டிய இந்த உத்தியில் புதுமையும் இல்லை சுவாரசியமும் இல்லை. 

விளைந்த பயிர்களை உண்ணும் சிலிபெரா பூச்சிகள் பகீர் ரகங்கள்.
இந்தியாவின் சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவரை ஒரு கார்ப்பரேட் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதெல்லாம் அதீத கற்பனை. பிரதமரின் அறையிலேயே ஒட்டுக் கேட்பு சாதனங்கள் இருப்பது, பிரதமரைச் சுற்றி இருப்பவர்களே கருப்பு ஆடுகளாக இருப்பது என மிகை கற்பனைகளுக்கும் படத்தில் பஞ்சமில்லை. பிரதமரைக் காக்கும் எஸ்பிஜி படையை இவ்வளவு பலவீனமாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. தற்போதைய பிரதமர் தோற்றத்தில்வரும் மோகன்லால் முந்தைய ஆட்சியைப் பற்றி குறைகூறி பேசுகிறார்; பாகிஸ்தான் மக்கள் மீதும் கருணை காட்டி பேசுகிறார். இதில் ஏதேனும் அரசியல் குறியீடு இருக்கிறதா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

மலிவான இரட்டை அர்த்த வசனங்களை முன்னணி நாயகனான சூர்யா பேசியிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. வில்லனாக வரும் பொம்மன் இரானியின் தகிடுதத்தங்கள் எல்லாம் அறிந்தும் அவரை பிரதமர் ஏன் விட்டுவைத்தார் என்ற கேள்விக்கும் படத்தில் விடை இல்லை. யார் உடம்பில் வேண்டுமானாலும் குண்டு வெடிப்பதைப் பார்க்கும்போது நகைச்சுவை இல்லாத குறையைப் படம் போக்கிவிடுகிறது. பிரதமர் இறந்தவுடன் அவருடைய வாரிசு பிரதமராக ஆவதைக் காட்டி வாரிசு அரசியலையும் படத்தில் காட்டியிருப்பது நல்ல உத்தி.

புலனாய்வு அதிகாரி, பிரதமரைக் காக்கும் முதன்மை அதிகாரி, விவசாயி என வெவேறு கெட்டப்புகளில் வருகிறார் சூர்யா. ஆனால், விரைப்பான மிடுக்கான அதிகாரி வேடம் அவருக்குக் கச்சிதம். ‘துப்பாக்கிச் சத்தம் கேட்டா பதுங்குறவங்களுக்கு மத்தியில், நெஞ்சைக் காண்பித்து துப்பாக்கிக் குண்டை வாங்குறவங்க நாங்க’ என சில இடங்களில் வசனம் பேசி சூர்யா ஈர்த்திருக்கிறார். பிரதமராக மோகன்லால் பொறுமையாக நடித்திருக்கிறார். அவருடைய மலையாள தமிழும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்திவிடுகிறது.

மோகன்லாலின் மகனாகவும் பிறகு பிரதமராகவும் வரும் ஆர்யாவுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. என்றாலும், வழக்கமாக துடுக்குத்தனத்தோடு நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் சாயிஷா, சூர்யாவைச் சுற்றிசுற்றி வருகிறார். கார்ப்பரேட் வில்லனாக வரும் பொம்மன் இராணியின் உடல்மொழியும்,  கொலைகளை செய்யும் சிராக் ஜானியின் நடிப்பும் கச்சிதம். சமுத்திரகனி, தலைவாசல் விஜய், பிரேம், பூர்ணா, நாகி நீடு, உமா பத்மநாபன் எனப் படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. படத்துக்கு இசை ஹாரீஷ் ஜெயராஜ். குழந்தைகள் பாடும் பாடலை தவிர எதுவும் மனதில் ஒட்டவில்லை.

எதையோ சொல்ல வந்து குறி தப்பி நிற்கிறான் ‘காப்பான்’.

மதிப்பெண்: 2 / 5

16/09/2019

சீறிப் பாயும் இரும்புக் குதிரை!

சீறி பாயும் வேகத்தில் பைக்கிலோ காரிலோ செல்வது
ஆண்களுக்கான சாகசம் மட்டுமல்ல. அவர்களுக்கு சரி சமமாக பெண்களாலும் சவால் விட முடியும் என்பதற்கு சரியான உதாரணம் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பைக் ரேஸர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இந்தச் சென்னைப் பெண். பெண் பைக் ரேஸில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கெல்லாம் இவர்தான் ஆதர்ஷனம்!

பைக்கில் பறக்க ஆசை

அலிஷாவின் அப்பா ஆர்.ஏ. அப்துல்லா ஒரு பைக் ரேஸ் வீரர். பைக் ரேஸில் ஏழுமுறை தேசிய சாம்பியன். அப்துல்லா பைக் ரேஸ் பயிற்சிக்கு போகும்போதெல்லாம் சிறுமியாக இருந்த அலிஷாவும் உடன் செல்வது வழக்கம். சீறும் பைக்கில் அமர்ந்து அவர் செய்யும் ரேஸ் சாகசங்களைக் கண்டு அதில் லயித்துபோவார் அலிஷா. தன் அப்பாவைபோல தானும் பந்தய தடத்தில் பறக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே அவருக்கு றெக்கை முளைத்து பறந்தது ஆசை.

அலிஷாவுக்கு 9 வயது இருக்கும்போது ‘கோ கார்ட்டிங்’ எனப்படும் 4 டயர்கள் கொண்ட சிறிய பந்தயக் கார்களை ஓட்டி பயிற்சி பெறத் தொடங்கினார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தன்னை மெருகேற்றிக்கொண்டார். 11 வயதில் போட்டிகளில் பங்கேற்று வெல்லவும் தொடங்கிவிட்டார் அலிஷா. அவருக்கு 13 வயதானபோது எம்.ஆர்.எஃப். நேஷனல் கோ கார்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைவிட வயதில் மூத்தவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில்  பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று ஆச்சரியமூட்டினார் அலிஷா.

கார் டூ பைக்

அலிஷாவின் கோ கார்டிங் பயணத்தில் 2004-ம் ஆண்டு மைல்கல்லாக அமைந்தது. ஜே.கே. டயர் தேசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் பங்கேற்ற போட்டியில் அலிஷா பங்கேற்றார். இந்தப் போட்டியில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் ஆண்களோடு போட்டிப்போட்டு அவர் பந்தயத்தில் பங்கேற்றது அவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. கார் பந்தயத்தில் கொஞ்சம்கொஞ்சமாக அலிஷா முன்னேறிவந்த வேளையில் அதிலிருந்து விலகும் சூழலும் வந்தது.

மற்ற விளையாட்டுகளைப் போல அல்லாமல், கார் பந்தயம் ரொம்பவே காஸ்ட்லி. எனவே அலிஷாவின் அப்பா தன் மகளின் கவனத்தை பைக் ரேஸ் பக்கம் திருப்ப முடிவு செய்தார். மேலும் அவருடைய அப்பா அப்துல்லா பைக் ரேஸ் வீரர் என்பதால், அந்தப் பந்தயத்தின் நுணுக்கங்களைச் சுலபமாக தன் மகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்று நம்பினார். இதுபோன்ற காரணங்களால் பைக் பந்தயத்தில் கவனம் செலுத்தும்படி அலிஷாவிடம் அப்துல்லா கூறினார். ஆனால், கார் பந்தயங்களில் பங்கேற்றுக்கொண்டிருந்த அலிஷா, பைக் பந்தயங்களுக்கு மாறுவது கடினமாக இருந்தது.

பைக்கில் வந்த பெருமை

பைக் பந்தயத்தில் தன்னால் ஜொலிக்க முடியுமா என்று அலிஷாவுக்குப் பயமும் இருந்தது. ஆனால், அவருடைய அப்பா அதை மிக எளிதாக்கினார். இயல்பாகவே அலிஷாவின் அப்பா கண்டிப்பானவர். அந்தக் கண்டிப்பும் வழிகாட்டலும் அலிஷாவை பைக் பந்தயங்களுக்கு தயார்ப்படுத்தியது. தொடக்கத்தில் குறைந்த திறன் கொண்ட பைக்குகளை ஓட்டி அலிஷா பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகே பந்தயங்களுக்கு ஏற்ற சூப்பர் ரக பைக்குகளை ஓட்டி, பைக் பந்தயங்களுக்கும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார் அலிஷா.

பைக் பந்தயத்துக்கு தயாரான பிறகு 2009-ல் தேசிய பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் அலிஷா பங்கேற்றார். இதில் 600 சிசி திறன் கொண்ட பைக்கை அலிஷா ஓட்டினார், இந்தப் போட்டியில் 15 ஆண்கள் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரே பெண் அலிஷா மட்டுமே. 15 ஆண்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு அலிஷா பைக்கில் சீறிப் பாய்ந்தார். 302 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த இந்தப் போட்டியில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கைச் செலுத்தி, அலிஷா மூன்றாமிடத்தைப் பிடித்தார். 12 ஆண்களை முந்திக்கொண்டு, அவர் மூன்றாமிடத்தைப் பிடித்தது சாதாரண விஷயமல்ல. இதன்மூலம் இந்தியாவின் முதல் பைக் ரேஸர் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

மீண்டும் கார் ஆசை

பைக் பந்தயங்களில் அலிஷா பங்கேற்றாலும், கார் பந்தயங்கள் மீதான ஆசை அவருக்கு விடவே இல்லை. மீண்டும் அந்த ஆசை அவருக்குத் துளிர்த்தது. கொஞ்சமும் யோசிக்காமல் மீண்டும் கார் பந்தயங்களுக்குத் திரும்பினார். அதற்கு சென்னை இருங்காட்டுக்கோட்டை தடத்தில் அவர் சந்தித்த விபத்தும் ஒரு காரணம். பைக் பந்தயங்களிலிருந்து விலகி, கார் பந்தயத்தில் அவர் மீண்டும் கால் பதித்த பிறகு, அதிலும் சீரான முன்னேற்றத்தைக்
காண ஆரம்பித்தார்.

2010-ம் ஆண்டில் வோக்ஸ்வேகன் போலோ கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று 10-வது இடத்தைப் பிடித்தார் அலிஷா. அதற்கு அடுத்த ஆண்டு அதே போட்டியில் ஏழாவது இடத்துக்கு முன்னேறினார். கோவையில் நடந்த கார் பந்தயம் ஒன்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து முதன் முறையாக வெற்றி மேடையில் ஏறினார் அலிஷா. அந்த வகையில் மேடை ஏறிய முதல் வீராங்கனையும் அலிஷாதான். அந்தப் போட்டியில் அவர்தான் முதலிடம் வந்திருக்க வேண்டும். அதிக நேரம் முன்னணியில் இருந்த அலிஷா, கடைசியில் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

உடல் தகுதி வேண்டும்

கார் மற்றும் பைக் பந்தயங்கள் ஆண்களின் விளையாட்டாகவே அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அந்த விளையாட்டில் பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் அலிஷா அப்துல்லா. இந்த விளையாட்டுகளில் அவர் பதித்த அழுத்தமான தடம், பல இளம் பெண்களை இந்த விளையாட்டுக்குள் இழுத்துவந்திருக்கிறது. தற்போது 30 வயதாகிவிட்ட அலிஷா, தன்னைப் போல இளம் பெண்களை பைக் பந்தயக்காரர்களாக மாற்றவும் ஆர்வம் காட்டிவருகிறார். இதற்காகப் போட்டிகள் கூட வைத்து
பெண்களுக்கு தைரியமூட்டிவருகிறார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு வாழும் உதாரணமாகியிருக்கிறார் அலிஷா. இளம் பெண்களால் இந்தப் பந்தயங்களில் நிச்சயம் சாதிக்க முடியும் என்று உற்சாகமூட்டுகிறார் அலிஷா. “பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு உடல் தகுதியும், தாக்குப் பிடிக்கும் திறனுமே முக்கியம். ஆனால், பெண்களைப் பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லி அவர்களை அப்படியே ஆக்கிவிட்டோம். உடல் தகுதியோடு உள்ள எந்தப் பெண்ணும் இந்தப் பந்தயங்களில் ஈடுபட முடியும்” என்கிறார் அலிஷா.

- இந்து தமிழ், 31/03/2019

09/09/2019

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

சாலை விதிகளை அலட்டிக்கொள்ளாத ஒரு பைக்ரேஸர் (ஜி.வி.பிரகாஷ்). அவருக்கு ஓர் அக்கா (லிஜோமோல் ஜோஸ்). பாசமலர் வாழ்க்கை வாழ்கிறார்கள். அக்காவின் வாழ்க்கையில் நுழைகிறார் ஒரு போக்குவரத்து சார்ஜன்ட் (சித்தார்த்). பைக்ரேஸருக்கும் போக்குவரத்து சார்ஜன்டுக்கும் ஏற்கெனவே முன்விரோதம். மூவரையும் முக்கோணப் புள்ளியில் இணைக்கிறது வாழ்க்கைச் சக்கரம். அதில் வெளிப்படும் பாசம், நேசம், பரிவு, பிரிவு, சோகம், கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளின் சங்கமம்தான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.

சாலை விதிகளைக் கொஞ்சமும் மதிக்காத ஒரு பைக் ரேஸரையும் போக்குவரத்து காவல் பணியை ஆத்மார்த்தமாகச் செய்யும் போக்குவரத்துக் காவலருக்குமான வாழ்க்கையை முடிச்சுப்போட்டு படம் எடுத்திருக்கும் இயக்குநர் சசியைப் பாராட்டலாம். பைக் ரேஸ், டிராஃபிக் விதிமுறை என்று படத்தைக் கடத்தி செல்லாமல், அதில் மனித உணர்வுகளை சம விகிதத்தில் கலந்திருப்பது திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

சென்னையில் ஆபத்தாக விளையாடும் பைக்ரேஸ்களின் பின்னணியில் நடக்கும் விபரீதமான பந்தயத்தையும், அற்ப பந்தயத்துக்காக உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் பைக்ரேஸர்களின் துடுக்குத்தனமான வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். சென்னையின் பரபரப்பான சாலையில் நடக்கும் படபடக்க வைக்கும் பைக் ரேஸ் காட்சி, பைக் ரேஸர்கள் எமனோடு விளையாடுவதை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. போக்குவரத்துக் காவலர்களுக்கும் பைக்ரேஸர்களுக்குமான சடுகுடு ஆட்டத்தையும் உள்வாங்கி படமாக்கியிருக்கிறார்கள்.

ஆபத்தான பைக்ரேஸ் விட்டதால் ஜி.வி. பிரகாஷை  அசிங்கப்படுத்தி கைது செய்கிறார் போக்குவரத்து காவலர் சித்தார்த். இது தெரியாமல் தம்பிக்கும் தன்னை விரும்புபவருக்கும் இடையே இருதலைக் கொல்லி எறும்பாகத் தவிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்திய விதம் பாராட்டும்படியாக உள்ளது. பைக் ரேஸ் - போக்குவரத்துக் காவலர் மோதல் என்பது மாமா - மச்சான் மோதலாக மாறும்போதும் அதே டெம்போவில் படம் பயணிப்பது ரசிக்க வைத்துவிடுகிறது. சித்தார்த் - ஜிவிபி இருவருக்குமான மோதலாக மட்டுமே படத்தை முழுமையாக நகர்த்தாமல், அதே அளவுக்கு அக்கா - தம்பி பாசப் பிணைப்பையும் காட்சிப்படுத்தியதில் இயக்குநர் ஸ்கோர் செய்துவிடுகிறார். பெண் உடைகளை ஆண்கள் அணுகும்விதத்தைப் பற்றி பேசியிருப்பதும் திரைக்கதையோட்டத்துக்கு வலு சேர்க்கிறது. படத்தில் ஆங்காங்கே எமோஷனல் ‘டச்’களை அள்ளித் தெளித்திருப்பது ரசிக்க வைக்கின்றன.

தொடக்கம் முதல் உணர்வுகளின் சங்கமமாக செல்லும்
திரைக்கதையில் முரட்டு வில்லன், வில்லனுடன் சித்தார்த் மோதல் எனக் காட்சி அமைப்புகள் வழக்கமான சினிமா மசாலாவுக்குள் சென்றுவிடுவது பெரும் குறை. மாமாவையும் மாச்சானையும் இணைப்பதற்காகவே ஒரு வில்லன் தேவைப்பட்டிருக்கிறார் என்ற அளவில்தான் அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதுவும் அந்தக் கால் மணி நேர கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த படத்துக்கு  பெரிய ஸ்பீடு பிரேக்காக விழுகிறது. கடைசியில் போக்குவரத்து காவலரே பைக் ரேஸ் செல்வது எதைக்கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்பதை இயக்குநர் மறந்துபோனது பெரும் பலவீனம்.

 படத்தின் நாயகன்களாக சித்தார்த் - ஜிவி பிரகாஷ் இருவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மிடுக்கான தோற்றத்திலும், லிஜோமோலை உருகி காதலிப்பதிலும், ஜிவிபியுடன், ‘ நான் உன் மாமாடா’ என்று கெத்து காட்டுவதிலும் இயல்பாக நடித்திருக்கிறார் சித்தார்த். பைக்ரேஸ் செல்லும் இளைஞனாக ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார். பைக் ரேஸில் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைப்பது, அக்காவுக்கு தந்தையாக இருப்பது, சித்தார்த்தை வெறுப்பு பார்வையால் பார்ப்பது என ஜிவிபிக்கு நடிக்க வாய்ப்புகள் அதிகம்.

மலையாள தேசத்திலிருந்து வந்திருக்கும் லிஜோமோல் ஜிவிபியின் அக்காவாகவும் சித்தார்த்தின் மனைவியாகவும் உருகியிருக்கிறார். ஜிவிபியின் ஜோடியாக வரும் காஷ்மிராவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். முரட்டுவில்லனாக மதுசூதன், ஜிவிபியின் அத்தை கதாபாத்திரம், பிரேம் குமார், தீபா ராமானுஜம் ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். படத்துக்கு இசை சித்துகுமார். ‘மயிலாஞ்சி..’ பாடல் ரசிக்க வைக்கிறது. பிரசன்னகுமாரின் கேரமா, சென்னையில் நடக்கும் பைக் ரேஸை பீதியூட்டும் வகையில் படம் பிடித்திருக்கிறது. ஷான் லோகேஷின் படத்தொகுப்பு படத்துக்கு பக்கபலம்.

விறுவிறுப்பான பைக் ரேஸ் கதையைப் பாசபிணைப்போடும் ஆத்மார்த்தமாகவும் சொன்ன விதத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’க்கு கிரீன் சிக்னல் கொடுக்கலாம்.

மதிப்பெண்: 3 / 5

கொங்கு - இயற்கையின் கொடை


வளம் தரும் கொடிவேரி அணை

தமிழகத்தில் மிகப்பெரிய அணைக்கட்டுகளில் ஒன்று கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது இந்த அணைக்கட்டு. 17ஆம் நூற்றாண்டில் இந்த அணையைக் கட்டினார் மைசூர் மகாராஜா. மிகப்பெரிய பரப்பில் அழகுற விரிந்திருக்கும் இந்த அணைதான் இப்பகுதி முழுவதுமே வளமாக இருக்க முக்கியக் காரணம்.

 பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு பிரித்து விடப்படுகிறது. மீதமுள்ள தண்ணீரே கொடிவேரி அணை வழியாக அருவியாகக் கொட்டுகிறது.  கொடிவேரி அணையில் கொட்டும் தண்ணீர் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்த தவறுவதேயில்லை.

ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று.பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணையில் கொட்டும் தண்ணீரைப் பார்த்தாலே குளிக்கும் எண்ணம் வந்துவிடும். தமிழ் சினிமாவையும் கொடிவேரி அணையையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இங்கு ஏராளமான சினிமா சூட்டிங்குகள் நடைபெற்றுள்ளன. 

புகழ்ப்பெற்ற இந்த கொடிவேரி அணை ஈரோடு நகரலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.


ஆகாய கங்கையும் அறப்பளீஸ்வரரும்


நாமக்கல் என்றதும் நினைவுக்கு வரும் சுற்றலாத்தளம் கொல்லிமலை. அற்புத மூலிகைகள் நிறைந்த மலை இது. மலைவாசஸ்தளங்களுக்குரிய நீர்வீழ்ச்சி, வியூ பாயிண்ட், படகு சவாரி என கொல்லிமலையில் சொல்லும் அளவுக்கு நிறைய இடங்கள் இருந்தாலும், கொல்லிமலைக்கு சிறப்பு சேர்ப்பது அறப்பளீஸ்வரர் கோயில்.

கருவறையில் மூலவரான அறப்பளீஸ்வரர், லிங்க வடிவில் அருள் புரிகிறார். இவருக்கு மகாலிங்க நாதர், தர்மகோனீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. தர்ம கோடீஸ்வரி, தாயம்மன் ஆகிய பெயர்களுடன் தனிச் சந்நிதியில் அம்பிகை காட்சித் தருகிறாள்.

கருவறை அருகே பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் ஆகியோர் எழிலோடு வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஈசனை வைத்து கரிகாலன் வழிபட்டதாகவும் அவனைத் தொடர்ந்து ஒரு மன்னனும், மகேந்திரவர்மனும் வழிபட்டதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கோவில் அருகே ஓடும் ஐந்தாறின் முடிவில் 350 அடி உயரத்திலிருந்து ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகக் கொட்கிறது.

அறப்பளீஸ்வரர் ஆலயத்திலில் இதுவரை 20 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சோழ மன்னர்கள் பரகேரிவர்மன், ராஜகேசரிவர்மன், பராந்தக சோழன் ஆகியோர் காலத்தில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் மூலக்கருவறை விமானம், சோழப் பேரரசி செம்பியன் மாதேவி (10ஆம் நூற்றாண்டு) காலத்தில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆண்டுதோறும் ஆடி பதினெட்டு அன்று  நடைபெறும் வல்வில் விழா தனிச்சிறப்பு பெற்றது.


கஞ்சமலை சித்தர்


சேலத்தில் சிறப்பு வாய்ந்தப் பகுதிகள் எத்தனையோ இருந்தாலும், சித்தர் கோயிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. சேலம் நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் கஞ்சமலையில் இருக்கிறது இக்கோயில். 

காலங்கிநாதர் என்ற சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள திருக்கோயிலாகும். இக்கோயிலில் உள்ள கல் கட்டடம் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ஆனால், கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும்.  கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மலைக்குச் சென்று இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இக்கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என இன்னொரு பெயரும் உண்டு.

கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத்தக்கது. கஞ்சம் என்றால் தங்கம், இரும்பு, தாமரை என மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம். மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.


திருமூர்த்தி கொடை!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை குறிப்பிட்டத்தக்க சுற்றுலாத் தளமாகும். உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ
தூரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இந்த இடத்தில் திருமூர்த்தி அணை, திருமூர்த்தி அருவி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்துப் படைக்கும் பகுதிகளாகும்.

திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியுள்ள கோயில் இது.  இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மலையடிவாரத்தில் இருந்து மலையில் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று திருமூர்த்தி அணையைத் தரிசிக்கலாம்.

அருகில் உள்ள திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. அணையின் கரையில் வண்ண மீன் காட்சியகம் ஒன்றும் உள்ளது. அரிய வகை மீன்கள் உள்ளன. அடுத்து நீச்சல் குளம் உள்ளது. மிகப்பெரிய சிவன் சிலையில் இருக்கும் ஐந்து தலை நாகத்தின் வாயிலிருந்து குளத்தில் தண்ணீர் கொட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி மலையில் வாழ்ந்த அத்தரி மஹரிஷியும், ரிஷி பத்தினியான அனுசூயா தேவியும் மும்மூர்த்திகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றதால், இம்மலை, மும்மூர்த்திகளின் பெயரிலேயே அழைக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

சிலிர்ப்பூட்டும் சிறுமுகைப் பட்டு

பட்டுப் புடவைகள் என்றவுடன்  காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, திருபுவனம், கும்பகோணம் ஆகிய ஊர்கள்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும்.  இப்போது சிறுமுகையும் அந்த ஊர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது. சிறுமுகைப் பட்டு தமிழகம் தாண்டி இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வனப்பகுதியையொட்டிய சிறிய ஊர்தான் இந்தச் சிறுமுகை. இங்கு காலங்காலமாக நெசவாளர்கள் உள்ளார்கள். பல ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் இந்தப் பகுதி நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தாலும் சிறுமுகைப் புடவைக்கு பெயர் கிடைத்தது என்னவோ 40 ஆண்டுகளுக்கு முன்புதான். 1970-களில் இங்கு முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட காட்டன் புடவைகள் தமிழகத்தில் பிரசித்திப் பெற்றது.

பல நெசவாளர்கள் வறுமையில் வாடியதால் பெங்களூரு, காஞ்சிபுரம் ஊர்களுக்கு சிறுமுகை நெசவாளர்கள் வேலைக்குப் போனார்கள். பட்டுப் புடவைகளை நுணுக்கமாகத் தயாரிக்க கற்றுக்கொண்டார்கள். அப்படிப் போனவர்கள்  1977-ம் ஆண்டில் சிறுமுகை திரும்பி முதன்முதலாகப் பட்டுச் சேலை தயாரிப்பை அறிமுகப்படுத்தினார்கள்.  பின்னர் சிறுமுகையில் இருந்த நெசவாளர்கள் கொஞ்சம்கொஞ்சமாக பட்டுப் புடவை நெய்யக் கற்றுக் கொண்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான்  கோராப்பட்டு சிறுமுகையில் அறிமுகமானது. பட்டும் காட்டனும் இணைந்து தயாரிக்கப்பட்டதே இந்தக் கோராப்பட்டு.  பெரிய பெரிய டிசைன் பட்டுப் புடவைகள் கோராப்பட்டில் தயாரிக்கப்பட்டன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிறுமுகை பட்டு உற்பத்தியில் முன்னேறியது. இதைத்தொடர்ந்து ஏராளமான கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு பட்டுப் புடவைகளும், கோராசேலைகளும் தயாரிக்கப்பட்டன.

காலத்துக்கு ஏற்ப  புதிய நுட்பங்களில் சிறுமுகை பட்டுப் புடவைகள் வந்தவண்ணம் உள்ளன.  கணினி மூலம் புதுப்புது டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. மயில் தோகைப் பட்டு, திருக்குறள் பட்டு, காந்திப் பட்டு என புதிய பட்டுப்புடவைகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கின்றன. இந்தப் பட்டுப் புடவை தயாரிப்புகள்  தேசிய விருதுகள் பெற்று சிறுமுகைப் பட்டுக்கு  நற்பெயரையும் கொடுத்திருக்கின்றன. இதன்மூமல் தற்போது  சிறுமுகைப் பட்டுக்கென்றே தனி மறியாதை கிடைத்துள்ளது.

பட்டுப்புடவை மட்டுமல்ல, சாப்ட் சில்க், சில்க் காட்டன், ப்ரைடல் சில்க் என தினந்தோறும் புதுப்புது ரக புடவைகள் சிறுமுகையில் அறிமுகமாகி வருகின்றன.


மிடுக்கான காங்கேய காளைகள்

தமிழகத்தின் பழமையான அடையாளங்களில் ஒன்று காங்கேயம்
காளை.   சாதாரண மாடுகளைவிட காங்கேயம் காளைகளின் முகத்தோற்றம், கொம்பு, கால், திமில், பல், தாடை, எலும்பு, தொப்புள், வால் மிடுக்காக இருக்கும். தோற்றத்தில் காங்கேயம் காளைகள் மிரள வைக்கும். உலகிலேயே அச்சமூட்டும் திமில் உள்ள ஒரே இனத்துக்கு சொந்தமும் இந்த காங்கேயம் காளைகள்தான். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் காளைகள் என்ற பெருமையும் காங்கேய காளைகளுக்கு உண்டு.

தமிகத்தில் காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட இந்தக் காளைகளுக்கு இன்னொரு புகழும் உண்டு. உலகில் ஏராளமான காளை வகைகள் இருந்தாலும் காங்கேய காளைகளுக்கு மட்டுமே உருண்டு திரண்டு காணப்படும் திமில்கள் உள்ளன. சிந்து சமவெளியில் ஏறுதழுவல் என்ற ஜல்லிக்கட்டு நடத்திய முல்லை நில ஆயர்கள், அங்கிருந்து இந்தக் காளையைத் தமிழகத்துக்கு அழைத்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காங்கேய காளைகள் கடும் வெயிலிலும்கூட பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் திறன் பெற்றது.  உழவு வேலையாக இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் வண்டியாக இருந்தாலும் சரி களைப்பில்லாமல் வேலை செய்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டியில் 4 டன் எடை உள்ள பொருள்களைகூட நீருள்ள பாதையில்  இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை.

காங்கேய வகைகளில் பால் தரும் வகைகளும் உள்ளன. ஆனால், பசு, எருமை மாட்டைப் போல அதிகளவு பால் தராது.  எனவே உழவு வேலைகளுக்கே காங்கேய காளைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஒரு ஜோடி காங்கேய எருதுகள் 1.75 லட்சம் ரூபாய்க்கும்,  காங்கேய காளையின் ஒரு பிரிவான பூச்சி காளை 60 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகின்றன.

விற்பனையின் போது  ‘சுளி சுத்தம்' பார்க்கப்படும். காளை மற்றும் பசுமாட்டின் உடலில் இருக்க வேண்டிய இடங்களில்  ‘சுளி' இருந்தால் அது சுளி சுத்தம். நல்ல விலை கிடைக்கும். கொம்பு நேராக, கூர்மையாக இருக்க வேண்டும். தலையும் வாலும் நீளமாக இருக்க வேண்டும். இவற்றையும்கூட விற்பனையின்போது பார்க்கப்படும்.  காங்கேயம் காளைகளின் வாழ்நாள் 20 ஆண்டுகள். பராமரிப்பைப் பொறுத்து வாழ்நாள் 10 ஆண்டுகள்வரை அதிகரிக்கலாம்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள   ‘கண்ணபுரம் காங்கேயம் காளை சந்தை' பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இந்தச் சந்தை நடைபெறுகிறது.

- இந்து தமிழ் தீபாவளி மலர், 2013