25/12/2019

ஹீரோ விமர்சனம்

சிறு வயதிலிருந்து சக்திமான்போல ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). சந்தர்ப்ப சூழ்நிலையால், பிழைப்புக்காக போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலை செய்கிறார்.  கல்லூரியில் மாணவர்களைச் சேர்த்துவிட்டு கமிஷனும் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். ஆனால், அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினை வைத்து சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை திருடிவிட்டார் என்று போலீஸ் கைது செய்கிறது. இதனால் மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக இருக்கும் சத்தியமூர்த்தி (அர்ஜுன்)யுடன் சிவகார்த்திகேயன் கைகோர்க்கிறார். இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் கார்ப்பரேட் உலகின் தாதாவான மகாதேவை (அபய் தியோல்) அழைக்க சிவகார்த்தி ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அதில் அவர் வென்றாரா, இல்லையா என்பதுதான் ‘ஹீரோ’ கதை.

நம் நாட்டின் கற்றல் முறையைக் கேள்விக்கொள்ளாக்கியிருக்கிறது இப்படம். படம் நெடுகிலும் இந்தக் கருத்தை இயக்குநர் மித்ரன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஒற்றை விஷயத்தைதான் திரைக்கதைக்கான கன்டண்டாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால், காட்சிகளாக மாற்றுவதில் இயக்குநர் சறுக்கிவிடுகிறார். கன்னிவெடிகளைப் போல படம் நெடுகிலும் சரடுகள் வெடித்துக்கிளம்புகின்றன. மருத்துவக் கல்லூரி ஊழல்களைக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியைப் பாந்தமாக மிரட்டுவதில் தொடங்கும் சரடு படம் முடியும்வரை வெடித்துக் கிளம்புகின்றன.

அரசுக்கே தெரியாமல் நடக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி எப்படி உயர்க்கல்வியில் சேர முயற்சிக்க முடியும் என்ற கேள்வியும் பிரதானமாக எழுகிறது. தனித்தேர்வராக எழுதினார் என்றால்கூட, அதை நியாயப்படுத்தும் காட்சிகள் படத்தில் மிஸ்ஸிங். வில்லனாக வரும் மகாதேவ், கல்லூரி நடத்துபவரா, கார்ப்பரேட்டா என படத்தில் ஏகக் குழப்பம். ஒரே ஆள் இரண்டையும் செய்வதாகவும் காட்சிகள் எதுவும் இல்லை. புத்திசாலிகளை உடன் வைத்துக்கொண்டு அவரையும் நன்றாகக் கவனித்து தானும் சம்பாதிப்பதுதான் கார்ப்பரேட்டுகளின் பாணி. புத்திசாலிகளின் சிந்தனையை மகாதேவ் ஏன் அழிக்க முயற்சிக்க வேண்டும் என்ற கேள்விக்கும் படத்தில் விடை இல்லை.

படத்தின் நடுவில் அர்ஜூன் - சிவகார்த்திகேயன் என யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதிலும் இயக்குநர் தடுமாறிவிடுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காசு கொடுத்தால் கள்ளத்தனமாக சான்றிதழ் அடித்துக்கொடுக்கும் நாயகன், பின்பகுதியில் அறச்சீற்றம் கொள்வது சிரிப்பை வரவழைத்துவிடுகிறது. பிராட்டாக உருவாக்கும் கல்வி முறையை விமர்சித்து, தன்னம்பிக்கையைக் கொடுக்கும் கல்வி என அர்ஜூன் பேசும் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை செய்வதாகக் காட்டும் காட்சியும் லாஜிக் ஓட்டை. வில்லன்களை அழிக்க சூப்பர் ஹீரோ தேவை என்ற படத்தின் மையக்கருத்துக்கே படத்தின் பின்பகுதியில்தான் இயக்குநர் வருகிறார்.

 நாயகன் ‘ஹீரோ’ அவதாரம் எடுக்கும்போது படமும் முடிந்துவிடுகிறது.
சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தான் இன்னும் ஆக்‌ஷன் கிங் என்பதை நிரூபிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் வருகிறார். இவர் படத்தில் தேவையில்லாத ஆனி.  அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் சினிமாவில் வந்துபோகிறார்கள். பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவும் இல்லை.

இந்த ‘ஹீரோ’வின் சாகசங்களில் லாஜிக்கும் இல்லை; மேஜிக்கும் இல்லை.

மதிப்பெண் - 2 / 5

No comments:

Post a Comment