கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறான் நாயகன் வெற்றி. பெரிதாகப் படிக்காவிட்டாலும் எதையும் அறிந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். வீட்டு கஷ்டத்தால் சென்னை வருகிறான். சென்னையில் நண்பர் கருகாரணுடன் சேர்ந்து டீக்கடையில் வேலை செய்கிறான். என்ன வேலை சம்பாதித்தாலும் காசு இல்லாமல் திரிகிறான். காசு இல்லாததைக் காரணம் காட்டி காதலியும் கழன்றுகொள்கிறாள். விரக்தியில் இருக்கும் வெற்றிக்கு தான் வசிக்கும் வீட்டுக்கரம்மா ரோஹினி வீட்டில் 50 சவரன் நகையைத் திருட வாய்ப்பு கிடைக்கிறது.
அழகாகத் திட்டம்போட்டு கருகாரணுடன் சேர்ந்து நகையைத் திருடிவிடுகிறான். மாட்டிக்கொள்ளாமல் இருக்க போலீஸையும் குழப்புகிறான். இதற்கிடையே தன் வீட்டிலும் வீட்டுகாரம்மா ரோஹினி வீட்டிலும் நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள் அவன் மனதைத் துளைத்தெடுக்கிறது. அதன்பின்னர் நாயகன் என்ன செய்தான்? திருடிய நகை என்ன ஆனது? போலீஸ் அவனை என்ன செய்தது என்று எழும் கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவி’.
சுடோகு போல மூளைக்கு மட்டுமே வேலை தரக்கூடிய ஒரு அறிவுபூர்வமான திரைக்கதையை எடுத்துக்கொண்டு அதை பிசிறு இல்லாமல் இயக்கிய அறிமுக இயக்குநர் விஜெ கோபிநாத்துக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. ஒரு திருட்டு சம்பவத்தையும் அதனோடு குடும்பம் சார்ந்த உளவியலையும் கலந்து ஊகிக்க முடியாத கதைக்கு திரைக்கதை எழுதியவிதமும் நேர்த்தி. பார்வையாளார்களுக்கு எளிதில் புரியும் வகையில் முக்கோண தொடர்பு மூலம் காட்சிகளைப் படமாகப் பிடித்த வகையிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
திரில்லர் குறிய அம்சங்கள் கொண்ட படம் இது. ஆனால், திரில்லர் படங்களுக்கே உரிய திகில் காட்சிகளாக இல்லாமல் கதையோட்டத்தை விறுவிறுப்பாகப் படமாக்கியிருப்பது படத்துக்கு பெரும் பலம். காட்சிகளில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நண்பன் கருணாகரனுக்கு நாயகன் விளக்கும் காட்சிகள் கதையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் வராமல் இயக்குநர் பார்த்துக்கொள்கிறார். படத்தை எப்படி நிறைவு செய்யப்போகிறார்கள் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படும்போது ஒரு திருப்பத்துடன் படத்தை முடித்திருப்பதில் ‘ஜீவி’ கெத்து காட்டுகிறது.
திருட்டு வழக்குகளில் விளிம்பு நிலை மக்களை போலீஸ் குறி வைப்பதையும் காட்சிகளில் உணர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. எப்போது விழுமோ என தெரியாத அளவுக்கு ஒரு பழைய ஃபேனையும் படத்தில் ஒரு பாத்திரம்போல காட்டி பயமுறுத்தியிருப்பது அழகு. ஒரு வீட்டின் அறைக்குள்ளே காட்சிகளை அலுப்பூட்டாமல் கடத்தியிருக்கும் விதமும் அருமை.
மிகவும் உரிமையோடு பழகும் வீட்டுக்காரம்மா ரோஹினி, தன் பார்வையற்ற மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருக்கும் நகைகளை நாயகன் திருட வேண்டும் என்ற முடிவு செய்வதற்கு வலுவான காரணங்களை இயக்குநர் படத்தில் இன்னும் சொல்லியிருக்கலாம். போலீஸின் விசாரணை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு திருடும் முயற்சியில் இறங்குகிறான் நாயகன். ஆனால், போலீஸைவிட புத்திசாலித்தனமாக நாயகனைக் காட்டியிருப்பது நெருடல். பயந்த சுபாவம் கொண்ட கருணாகரனை வைத்துக்கொண்டு நாயகன் திருட்டு ரகசியத்தைக் காப்பாற்றுவதாகக் காட்டும் காட்சிகள் பூச்சுற்றல். கதையோட்டத்துக்காகவே காதல் காட்சியையும் நாயகியையும் வைத்திருக்கிறார்கள்.
நாயகன் வெற்றி இந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வேலை வெட்டி இல்லாமல் சண்டியர்த்தனம் செய்வது, சென்னையில் வேலை இல்லாமல் அலைவது, திருட பிளான் போடுவது, மாட்டிக்கொள்ளாமல் இருக்க தகிடுத்தத்தங்கள் செய்வது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். ஆனால், உடல்மொழி ஒத்துழைக்க மறுக்கிறது. நண்பனாக வரும் காமெடி நடிகர் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். திருதிருவென முழித்துக்கொண்டு சந்தேகப் பார்வையோடு அணுகும் அவரது பாத்திர வார்ப்பு ரசிக்க வைக்கிறது. ரோஹினி, மைம் கோபி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
காட்சிக்கேற்ற பாபு தமிழின் வசனங்கள் கூர்மையாக விழுகின்றன. ஒளிப்பதிவில் பிரவீன் குமார் பலம் என்றால் படத்தொகுப்பில் கே.எல். பிரவீன் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். மிக எளிமையான முக்கோண தொடர்பியலை காட்சிகளாகப் படமாக்கியிருக்கும் விதத்தில் இருவரும் ஜொலிக்கிறார்கள். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்துக்கு பலம்.
காலங்காலமாகக் காட்டப்படும் திரில்லர் படங்களிலிருந்து விலகி அறிவுபூர்வமான திரைக்கதையால் உயர்ந்து நிற்கிறது ‘ஜீவி’.
மதிப்பெண் 3 / 5
மதிப்பெண் 3 / 5
No comments:
Post a Comment