
சென்னை நீலாங்கரையில் போதை பொருள், ஆள் கடத்தல், சொத்துகளை அபகரிப்பது என சட்டவிரோத காரியங்களை செய்து வருகிறார் காளிராஜன் (பார்த்திபன்). தன்னை எதிர்த்து கேள்வி கேட்காத, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பகுதிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அந்த இடத்துக்கு எப்போதும் பணத்தாசை பிடித்த கர்ணனை (விஷால்) அமைச்சர் உதவியுடன் கொண்டுவருகிறார். பார்த்திபனுடன் விஷால் கைகோர்க்க ஈவு இரக்கம் இன்றி எல்லா காரியங்களும் நடக்கின்றன.
ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தம்பிகளால் ஓர் இளம்பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அந்த வழக்கை எதிர்கொள்ளும் விஷால், தன் காதலியின் மனம் கவர நல்ல போலீஸாக மாறவே, பார்த்திபனுடன் விரோதம் ஏற்படுகிறது. தன் தம்பிகளைக் காப்பாற்ற விஷாலுடன் பார்த்திபன் மல்லுக்கட்டுகிறார். இந்தப் போட்டியில் யார் வென்றது என்பதை ஒரு திருப்பமான கிளைமாக்ஸுடன் பேசுகிறது ‘அயோக்யா’.
தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் மறுஆக்கம்தான் ‘அயோக்யா’. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை இருக்கிறது என்று டைட்டில் போட்டுவிடுகிறார்கள். அந்தக் கடமையைச் செய்து காட்ட எந்த எல்லைக்கு நாயகன் செல்கிறார் என்பதை உரக்கப் பேசுகிறது படம். ஓர் அவலமாக மாறிவிட்ட பாலியல் குரூரங்களை முன்னெடுத்து படத்தில் பேசியிருப்பது இயக்குநரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்காக அவருக்கு சபாஷ் போடலாம்.
படத்தின் முதல் பாதி, நாயகன் பிம்பத்தை தூக்கியபடி திரைக்கதை நகர்கிறது. ஆனால், அதை அலுப்பூட்டாமல் படமாக்கிய விதத்தில் இயக்குநர் வெங்கட் மோகன் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் செய்யும் முறையற்ற எல்லா வேலைகளுக்கும் விஷால் துணையாக இருக்கிறார். அடாவடி செய்கிறார். ஆனால், கடிவாளம் இல்லாத குதிரையாக, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இத்தனை வானாவிய அதிகாரமா என மனதில் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நாயகனை அந்த உடையில் காட்டாமலேயே படத்தை எடுத்திருப்பது விநோதம். இல்லாத ஆதாரத்தை நீதிமன்றத்துக்கு விஷால் எப்படி கொண்டுவரப்போகிறார் என்ற பரபரப்பை அழகாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்காக ‘உங்களால் தூக்குத் தண்டனை வழங்க முடியுமா’ என்று நீதிபதிகளைப் பார்த்து நாயகன் கேட்பதும், அதன்படியே தீர்ப்பு எழுதப்படுவதும் அபத்தம்.
பணத்துக்காக எதையும் செய்ய அஞ்சாத விஷால், பாலியல் குரூரத்துக்காக மட்டும் மனம் மாறுவதாக காட்டும் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. விஷால் பார்த்திபன் பிரிவில் காட்டப்படும் காட்சிகளிலும் புதுமை இல்லை. அது வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட்.
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற சிறுவனாக தொடங்கி, சுயநலத்தின் உச்சமாகி, பணவெறியில் அலைந்து திரியும் பாத்திரத்தில் விஷால் கச்சிதம். நான் அயோக்கியந்தான் என்று விளக்கம் கொடுக்கும் இடத்திலும், மனமாற்றத்துக்கு பிறகு தடுமாறும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய மிகை நடிப்பு சற்றே எரிச்சலைக் கூட்டினாலும், போலீஸூக்கே உரிய அவருடைய மிடுக்கான தோற்றம் ரசிக்க வைக்கிறது. படத்தின் நாயகி ராஷி கண்ணா அழகு பதுமையாக வந்துபோகிறார். ஒரு சில இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
எப்போதும் குடிப்பது, சுற்றிலும் அடியாட்கள் என வழக்கமான வில்லனாக வருகிறார் பார்த்திபன். அவருடைய வழக்கமான உடல்மொழி படத்தில் மிஸ்ஸிங். ஹெட் கான்ஸ்ட்பிளாக கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் கவர்கிறார். விஷால் நல்லவராக மாறிய பிறகு அவர் அடிக்கும் சல்யூட் ரசிக்க வைக்கிறது. திருடனாக இரு காட்சிகளில் வந்துபோகிறார் யோகி பாபு. ராதாரவி, சச்சு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, ‘ஆடுகளம்’ நரேன், பூஜா தேவரியா என நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லை. பிண்ணனி இசையில் சாம்.சி.எஸ் கவனம் கொள்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவில் குறையில்லை.
கூட்டு பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழக்க வேண்டும்; அதை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற ஒற்றை வரியில் படம் உயர்ந்து நிற்கிறது. மற்றபடி வழக்கமான மசாலா தூவப்பட்ட அக்மார்க் படம் 'அயோக்யா’.
மதிப்பெண்: 2.5 / 5
No comments:
Post a Comment