25/02/2018

மயிலு ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் குமரியாகத் திரையுலகில் வலம்வந்து மலைக்க வைத்தவர் ஸ்ரீதேவி. 1970-களில் கதாநாயர்களைப் போலவே நாயகிகளின் இடத்திலும் ஒரு வெற்றிடம். 1960-களில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்தவர்கள் அம்மா, அக்கா வேடத்துக்கு மாறியபோது 1970-களில் இளமை பஞ்சம் ஏற்பட்டது. 1970-களில் மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுமித்ரா போன்ற நடிகைகள் புதிதாக அறிமுகமாகிக் கவனம் ஈர்த்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக மஞ்சுளாவும் லதாவும் பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்ததால், அவர்கள் சீனியர்களுக்கான ஜோடிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அப்போது   டீன்ஏஜ் பருவத்தில் சினிமாவில் காலடி வைத்த ஸ்ரீதேவியின் வருகை ரசிகர்கள் மனதில் இளமை அலை அடிக்க வைத்தது.

 ரஜினிக்கு மூன்று முடிச்சி படம் எப்படியோ அதுபோல ஸ்ரீதேவிக்கும் அந்தப் படம் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஈகோ பார்க்காமல் மூன்று முடிச்சி படத்தில் முதியவரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது முத்தாய்ப்பாக அமைந்தது. பதினாரு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நடித்தபோது அவருக்கு 14 வயதுதான். டீன்ஏஜ் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி காதலை அழகாக உள்வாங்கி நடித்து அந்தக் கால இளைஞர்களை ‘மயில்..மயில்..’ என்று சொல்ல வைத்துத் தூக்கத்தைக் கெடுத்தவர் ‘மயில் ஸ்ரீதேவி’. இந்தப் படத்தில் மயில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா உள்ளவரை  நிச்சயம் நிலைத்திருக்கும்.


ஸ்ரீதேவியின் அழகும், அவரது இயல்பான நடிப்பும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. குறுகிய காலத்திலேயே கனவுக்கன்னியாக வலம் வரத் தொடங்கினார் ஸ்ரீதேவி.  வணக்கத்துக்குரிய காதலியே’ படத்தில் இரட்டை வேடம். ரஜினி,  விஜயகுமார் என இருவருடனும் டூயட் பாடிய இரண்டு ஸ்ரீதேவிகளுமே கருப்பு வெள்ளையிலும் கலர்ஃபுல்லாக தெரிந்தார்கள்.  பாரதிராஜா, கமல் கூட்டணியில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் கதாநாயகி சாரதாவை எளிதில் மறந்துவிட முடியுமா?  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு பாட்டில் அந்தக் காலத்திலேயே பிகினி  உடையில் வந்த ரசிகர்களைக் கிறங்கடித்தார் ஸ்ரீதேவி.


ஸ்ரீதேவி-கமல் கூட்டணியில் வந்த ‘மீண்டும் கோகிலா’ ஒரு இதமான நகைச்சுவை இழையோடிய அழகு படம்.  ‘குரு’ ‘ தாயில்லாமல் நானில்லை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்று கமலுடன் அவர் ஜோடி சேர்ந்த ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து. கமல்-ஸ்ரீதேவி ஜோடி கனவு ஜோடியாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தது 1970-களின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது.  கமலுடன் ஸ்ரீதேவி நடித்ததைப் போலவே ரஜினியுடனும் 1970-களில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ப்ரியா, தர்மயுத்தம், தனிக்காட்டு ராஜா எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1970-களின் பிற்பகுதியும், 1980-களின் முற்பகுதியும் என 10 ஆண்டுகள் தமிழ் சினிமா என்றால் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று சொல்லுமளவுக்கு கொடிகட்டிப் பறந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு படங்களையும் சேர்த்துக் கமல்-ஸ்ரீதேவி ஜோடி 21 படங்களிலும் நடித்துள்ளது. அதேபோல ரஜினி-ஸ்ரீதேவி ஜோடி 22 படங்களில் நடித்துள்ளது. இதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி தமிழில் மட்டும் 15 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். ரஜினி-ஸ்ரீதேவி 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று பேரும் இரண்டு படங்களில் சங்கமித்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் முதன்முதலில் ஒன்றாகச்
சேர்த்தது ‘மூன்று முடிச்சி’ படம்தான்.
அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத்தான். ஸ்ரீதேவிக்குப் பிறகு அவரைப் போல ஒரு தமிழ் நடிகை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கவேயில்லை. கமல், ரஜினி என இருவருடன் சேர்ந்து நடித்தளவுக்கு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.

- தி இந்து தீபாவளி மலர், 2015

23/02/2018

'பேட்’ முதல்வன்

இந்திய கிரிக்கெட் அணி முன்பு எப்படி சச்சின் டெண்டுல்கரை மையம் கொண்டிருந்ததோ, அப்படி இன்று விராட் கோலியை மையம் கொண்டிருக்கிறது. அவரது ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை பிறந்துவிடுகிறது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் மட்டும் அவர் செய்த சாதனைகள் மூக்கில் விரல் வைக்கச் செய்கின்றன. இதோ அந்தச் சாதனைகள்:

ஐ.சி.சி. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடருக்குப் பிறகு தரவரிசையில் 909 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் கோலி. ஏற்கெனவே டெஸ்ட் போட்டியில் 912 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இரண்டுவிதமான போட்டிகளையும் சேர்த்து 900 புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரரானார் கோலி. ஒட்டுமொத்தமாக இந்த வகையில் அதிகப் புள்ளி பெற்றவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். இவர் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இரு நாடுகளுக்கு இடையேயா
ன ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு ஒரு நாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 551 ரன்களைக் குவித்த வீரர் கோலி மட்டும்தான். இதற்கு முன்பாக 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா 491 ரன்களைக் குவித்ததே இரு தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இப்போது அந்தப் பெருமையும் கோலியிடம் வந்விட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 286 ரன், ஒரு நாள் போட்டியில் 551, டி20 போட்டியில் 26 (21-ம் தேதி நிலவரப்படி) என விளாசியிருக்கிறார் விராட் கோலி. அந்த வகையில் இதுவரை 863 ரன் சேர்த்திருக்கிறார். ஒரு அணிக்கு எதிரான தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச மூன்றாவது ரன் குவிப்பு இது.

இதற்கு முன்பு 1976-ல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 829, ஒரு நாள் போட்டியில் 216 ரன் என 1045 ரன் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். ஆஸ்திரேலியாவின் டொனால்ட் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 974 ரன் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் ஏற்கெனவே சதங்களாக விளாசிவரும் விராட் கோலி, அதிக சதம் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்துவருகிறார். செஞ்சுரியனில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் 35-வது சதத்தைத் தொட்ட விராட் கோலி ஓசையில்லாமல் ஒரு சாதனையையும் செய்திருக்கிறார். 35 சதங்களை விளாச அவருக்கு 200 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன.

49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கருக்கு, 35 சதங்களை விளாச 309 போட்டிகள் தேவைப்பட்டிருந்தன. அந்த வகையிலும் ஒரு சாதனையைத் தன் கணக்கில் சேர்த்திருக்கிறார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் போட்டிகளை விளையாடத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா பெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் (5 -1) தொடர் வெற்றி அண்மையில் முடிந்துதான். அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக சிறப்பாக இந்தியா வென்ற தொடரும் இதுதான். இந்தத் தொடருக்கு கேப்டனாக விராட் கோலி இருந்ததன் மூலம் அந்தப் பெருமையும் அவருக்கே கிடைத்திருக்கிறது. இதற்கு முந்தைய தொடர்களில் (1992 - அசாருதீன், 2001 - கங்குலி, 2006 - டிராவிட், 2011, 2014- டோனி) கேப்டன்களுக்குக் கிடைக்காத பெருமையும் அவருக்கே கிடைத்திருக்கிறது.

- தி இந்து, 23/2/18

13/02/2018

சவரக்கத்தி விமர்சனம்



 ரு அப்பாவி சிகையலங்கரத் தொழிலாளிக்கும் அடே பாவி ரவுடிக்கும் ஒரு நாளில் நடக்கும் மோதலும், அதனால் நடக்கும் துரத்தல்களும் சம்பவங்களும்தான்சவரக்கத்திபடத்தின் ஒருவரிக் கதை.
சுவாரசியமான பொய்களையும் நம்பும்படி அவிழ்த்துவிடும் குணாதியத்துடன் வாழ்க்கையை ஓட்டிவருகிறார் சலூன் கடை வைத்திருக்கும் பிச்சை (ராம்). அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியின் (பூர்னா) தம்பிக்கு திருட்டுக் கல்யாணம் செய்துவைக்க குடும்பத்துடன் கிளம்புகிறார் ராம். இன்னொருபுறம் ஜெயிலிலிருந்து பரோலில் வெளியே வந்த ரவுடி மங்கா (மிஸ்கின்), அன்றைய தினம் மாலைக்குள் ஜெயிலுக்குத் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் தனது சகாக்களுடன் காரில் சுற்றுகிறார்.
வழியில் ராமுக்கும் மிஸ்கினுக்கும் நடக்கும் எதிர்பாராத மோதல், அன்றைய தினத்தை தலைகீழாக்குகிறது. ராமைக் கொல்ல மிஸ்கினும் அவரது சகாக்களும் துரத்துகின்றனர். மனைவியையும் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ரவுடிகளிடமிருந்து தப்பிக்க ராம் தலைத்தெறிக்க ஓடுகிறார். திருட்டுக் கல்யாணம் செய்வதற்காக வெளியே வந்த வசதியான பெண்ணின் குடும்பத்தினரும் ராமைத் துரத்துகிறார்கள். இறுதியில் ராம் என்ன ஆனார், ரவுடிகளிடம் சிக்கும் அவரது நிறைமாத கர்ப்பிணிக்கு என்ன ஆனது, தன்னுடைய மச்சானுக்குத் திருமணம் நடந்ததா என்பதுதான்சவரக்கத்திபடத்தின் கதை.
எப்போதும் சீரியஸான படங்களைத் தரும் மிஸ்கின் - ராம் ஆகியோரை வைத்து பிளாக் காமெடி படத்தைத் தந்திருக்கும் இயக்குநர் ஆதித்யாவைப் பாராட்டலாம். வழக்கமாக ரன்னிங் - சேஸிங் படங்களில் காணப்படும் மசாலத்தனங்கள் எதுவும் இல்லாமல் இயல்பாக படம் எடுத்தவிதத்திலும் இந்தப் படம் கவர்கிறது. ஒரு சாதாரண மோதல், உடன் இருப்போரால் எப்படித் தவறாக வழிகாட்டப்பட்டு பெரிய சம்பவத்துக்கு வித்திடுகிறது என்பதையும் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வகையில் சற்று சென்சிட்டிவான கதை இது. ஆனால், அதை காமெடியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கையாண்டு திரைக்கதையை விறுவிறுப்பாகப் பதிவு செய்திருப்பது படத்துக்கு பலம்.
வாசல்ல ஒருவர் பிச்சையெடுத்திட்டிருப்பார், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாங்க, உங்க கல்யாணத்தை சுயமரியாதைத் திருமணமா பதிவு பண்ணிடலாம்என்று பதிவாளர் சொல்லும் காட்சி; பொய்யாமொழி தேநீர் கடை, பரிசுத்தம் மிதிவண்டி நிலையம் என படத்தோடு பயணிக்கும் சிறு காட்சிகளும் மிஷ்கினுடைய அக்மார்க் நிழலை இயக்குநர் படத்தில் படரவிட்டிருக்கிறார். தந்தையை (ராம்) வெட்டுவதற்காக ரவுடியால் வாங்கப்படும் கத்தி, கடைசியில் அவரது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டப் பயன்படுவது போலக் காட்டப்படுவது சபாஷ் போடவைக்கிறது.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நகைச்சுவை என்பதற்காக நிறைமாதக் கர்ப்பிணி சுவர் ஏறி குதிப்பதெல்லாம் ரொம்ப ஓவர். கோபத்தில் இன்ஸ்பெக்டரின் மீசையை வலித்துவிட்டுசெல்வது எந்த ஊரில் நடக்கும்? திருட்டுக் கல்யாயணம் செய்யும் பெண்ணின் குடும்பத்தினரின் திடீர் மனமாற்றம், துரத்தல்களில் நிகழும் சந்திப்புகள் கேலியாக மாறுவது, கணிக்கக்கூடிய விதத்தில் பல இடங்களில் காட்சிகளை வைத்திருப்பது என நெகட்டிவ் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
மங்கா என்ற ரவுடி பாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ஜெயிலுக்குப் போவதை எண்ணி விரக்தியாக இருப்பது; ராமைத் துரத்திப் பிடிக்க முடியாமல் ஏமார்ந்துபோவது; கோபப்படும்போது தன் சகாக்களை அடிப்பது, சூப்பர் ஐடியா கொடுக்கும் சகாவுக்கு நகைகளைப் பரிசாகக் கொடுப்பது என நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார். அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும், உடல்மொழியால் அதை நேர் செய்திருக்கிறார். ஆனால், ஒரேயடியாக மிஸ்கின் அடிக்கடி கத்திக்கொண்டிருப்பது காது ஜவ்வை கிழித்துவிடுகிறது.
மிஸ்கின் பாத்திரத்துக்கு அப்படியே நேர்எதிர் பாத்திரம் ராமுக்கு. தன்னோட சவரக்கத்திப் பற்றியும் தன்னைப் பற்றியும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவது, வாய்ச்சவடால் பேசுவது, மனைவியோடு ஆற்றாமையால் மல்லுக்கட்டுவது, அப்பாவித்தனத்தின் மொத்த உருவாக இருப்பது, சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது கொதிப்பது என புதிய முகத்தைக் காட்டியிருக்கிறார் ராம்.
ராமுக்கும் மிஸ்கினுக்கும் சற்றும் சளைக்காமல் நடிப்பை வழங்கியிருக்கிறார் பூர்னா. காது கேளாதவராக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, நிறைமாதக் கர்ப்பிணியாக என  மூன்று அவதாரங்களில் அரிதாரம் பூசி நிறைவாக நடித்திருக்கிறார். அதுவும் பழமொழி சொல்லி அவர் அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கின்றன. இன்னும் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் தேவையறிந்து நடித்திருக்கிறார்கள்.
அரோல் கொரேலியின் பின்னணி இசை படத்துக்கு பலம். திரைக்கதையோடு சேர்ந்து அழுத்தமாக ஒலிக்கிறது இசை. வழக்கமான மிஸ்கின் படக் காட்சிகள்போல இல்லாமல், காட்சிகள் பிரெஷ்ஷாகக் காட்டியிருப்பதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமுக்கு பங்கு அதிகம். 
சென்சிட்டிவான கதையை அழகியலாகவும் நகைச்சுவையோடும் படம் பிடித்தவிதத்தில், இது கூர்மையானசவரக்கத்தி’.

மதிப்பெண்: 3 / 5