30/01/2015

1992- வண்ணமயமான உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்ற தொடர் என்றால்,  1992-ம் ஆண்டில்  நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடர் ரசிகர்களுக்கு புதிய விருந்து படைத்தது என்றுகூடச் சொல்லலாம். வெள்ளை உடையில் ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்கள் கலர்ஃபுல் உடைகளுக்கு மாறினார்கள். அழகான மைதானங்கள், வெள்ளைப் பந்து, பகல்-இரவு ஆட்டங்கள்,  கறுப்பு ஸ்கிரீன்கள், ரீப்ளே ஸ்கிரீன்கள், ஸ்டெம்ப் விஷன், புதிய கிரிக்கெட் விதிமுறை எனப் புதிய பரிணாமம் பெற்றிருந்தது இந்தத் தொடர்.

ஒன்பது அணிகள்

 1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாக தென் ஆப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறி கொள்கைக் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.  இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. புதிதாக தென் ஆப்பிரிக்கா அணி வந்ததால், 9 அணிகளை இரண்டாக பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியுடனும் மோதுவது போல அட்டவணையை மாற்றியமைத்தார்கள். ( 1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).

சச்சின் அறிமுகம்

இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சியளித்தது. இதற்கு முந்தைய 1987-ம் ஆண்டு
உலககோப்பையில் விளையாடிய வீரர்களில் கபில்தேவ், அசாருதீன், ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, ரவிசாஸ்திரி ஆகியோர் மட்டுமே 1992 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உலகக் கோப்பை தொடர்தான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதல் தொடர்.

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையையும், 1987-ம் ஆண்டு அரையிறுதி வரையும் அணியை வழிநடத்தி அழைத்துச் சென்ற கபில்தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். இந்தத் தொடரில் இடம் பெற்ற  ஸ்ரீகாந்த்,  தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் இரண்டு ஆண்டுகள் கழித்து  அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


அறிமுகங்கள்

சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளியாக உருவான இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.


இப்போது  ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா? அதுபோலவே 1992-லும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அங்குள்ள சூழ்நிலையை நன்றாக பழகியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை.

அதிர்ச்சி தொடக்கம்

இந்த உலகக்கோப்பையில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை.  அது உண்மை என்பது பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்று கோப்பையைக் கைப்பற்றியபோது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது.  ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அணித் தலைவர் மார்டின் குரோவ் 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.

புதுமை உத்தி

முதல் முறையாக இந்தத் தொடரில் நியூசிலாந்து கேப்டன்  மார்டின் குரோவ் தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வீச செய்தார்.  நியூசிலாந்தின் தீபக் பட்டேல் முதல் ஓவரை வீசி எதிரணிகளை ரன் எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தினார்.  இது அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய   நியூசிலாந்தின்


ஒரு வீரர்; இரு அணி

மார்க் கிரேட்பாட்ச்  முதலில் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடக்க வீரரான ஜான் ரைட்டுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக மார்க் கிரேட்பாட்ச் அணியில் இடம்
பெற்றார். தொடக்க வீரராக  களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி ருத்ரதாண்டவமாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இதன்பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்.




 தி இந்து, 30/01/2015

 


14/01/2015

ஐ விமர்சனம்


வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார்.

சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறார். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ.

லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி கதை.

வழக்கமாக சமூகம் சார்ந்த ஒரு மெசேஜோடு கதைச் சொல்லும் இயக்குநர் ஷங்கர் இந்த முறை பழிவாங்கும் கதையை கையில் எடுத்திருக்கிறார். அதையும்கூட வழக்கமான பாணியில் இல்லாமல் பேண்டசியாகவும் வித்தியாசமாகவும் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர்
ஷங்கர். அவருக்கு சற்றும் குறைவில்லாமல், உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில்  நிச்சயம் பேசப்படும்.

 ஜிம்மில் பாடி பில்டர்களை தொங்கவிட்டு அடிப்பது, சீனாவில் சைக்கிளில் பறந்து பறந்து போடும் சண்டை, ரயிலில் சீறிப் பாய்ந்து போடும் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார் விக்ரம். பாடி பில்டராக, மாடலிங் மேனாக, அகோரமான கூனனாக நடித்து எல்லாரையும் மெர்சல் ஆக்கி மலைக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கூனன் பாத்திரம் பேசப்படும்.   சீரியஸான காட்சிகளுக்கு இடையேயும் சிரிக்க வைக்கிறார் சந்தானம்.

இருந்தாலும் உருவத்தை வைத்து கிண்டல் செய்வதை இன்னும் எத்தனை காலத்துக்கு சந்தானம் செய்யப்போகிறாரோ தெரியவில்லை.  எமி ஜாக்ஸன் அழகிலும் நடிப்பிலும் இன்னும் மெருகேறியிருக்கிறார். முதல் பாதியில் அரைகுறை ஆடையுடனும், இரண்டாம் பாதியில் குத்துவிளக்காகவும் மாறி விடுகிறார்.  ஒரு பிரபல பிசினஸ்மேனை நினைவுப்படுத்தும் பாத்திரத்தில்  நடிகர் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில இடங்களில் சிவாஜியை ஞாபகபடுத்துகின்றன.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் காட்சிக்குக் காட்சி தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். ஷங்கர் படங்களில் வசனங்கள் மிகக்கூர்மையாக இருக்கும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். எளிமையான கதைக்கு சரியான விகிதத்தில் திரைக்கதை என்ற முலாமை ஷங்கர் பூசியிருந்தாலும் படம் தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் கதையையும், கதாபாத்திரங்களையும் ஊகிக்க முடிவது மைனஸ்.  முதல் பாதி மிகவும் மெதுவாக நகருகிறது. சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் பத்து  நிமிடங்கள் வரை நீள்வது போரடிக்க வைக்கிறது.

 சக மாடலிங் பாலியல் தொந்தரவு தருகிறார் என்பதற்காக, வேறு ஒருவருடன் இணைந்து நாயகி  சேர்ந்து மாடலிங் செய்கிறார். அதற்கு மாடலிங் உலகில் வேறு ஆண்களே கிடையாதா? தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத பாடி பில்டரை நாயகி மாடலிங் ஆக்குவது யதார்த்தமாக இல்லை.  சர்வதேச அளவில் தொழில் செய்யும் ஒரு பிசினஸ் மேன் (ராம்குமார்) ஒரு சாதரண மாடலிங்கை காலி செய்வதற்காக லோக்கல் அளவுக்கு இறங்கி திட்டம் தீட்டுவது நம்பும்படியாக இல்லை.

மதிப்பெண்: 2.5 / 5

04/01/2015

1992- சொதப்பிய இந்தியா

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் திருப்புமுனை ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா பிரிஸ்பேனில் விளையாடிய போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. கடைசி பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை எடுத்தது. பின்னர் இந்திய அணி 238 ரன் என்ற இலக்கைத் துரத்தியபோது 17வது ஓவரில் சிறிது நேரம் மழை பெய்தது. எனவே ஓவர் 47 ஓவராக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்த தருணம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. 1987-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையிலும் சென்னையில் நடந்த போட்டியில் இதே ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒரு ரன்னில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு இந்த உலகக் கோப்பையில் முதல் மூன்று போட்டிகளும் துரதிர்ஷ்டமாகவே அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 9 ரன்னில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வியைத் தொடர்ந்து மூன்றாவதாக இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் எஞ்சியப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

 மிகவும் சிக்கலான சூழ்நிலையில்தான் பாகிஸ்தானை மார்ச் 4 அன்று சிட்னியில் இந்திய அணி சந்தித்தது. இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் சந்தித்துக் கொள்ளும் முதல் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடிச் சேர்த்த 54 ரன்கள், ஜடேஜாவின் 46 ரன்கள், கபில்தேவின் 35 ரன்கள் இந்தியா 216 ரன்களை எடுக்க உதவியது.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் அமீர் சோகைல் மட்டுமே சிறப்பாக விளையாடி 62 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்களில் ஜாவித் மியாண்தத் தவிர மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றே சொல்லலாம். இந்தப் போட்டியில் இந்தியாவின் பவுலிங், பீல்டிங் மிகவும் துடிப்பாக இருந்தது.  இதனால் ரன் சேகரிக்கத் திணறிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.  இந்தப் போட்டியைத் தவிர இந்திய அணி ஹாமில்டனில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி வெற்றது. இந்தப் போட்டியில் மழை தொடர்ந்து குறுக்கிட்ட போதும் டக்வோர்த்-லீவிஸ் விதிபடி வெற்றி வெற்றது. மற்ற போட்டிகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு மழை பெரும்  இடைஞ்சலாக இருந்தது. இதுபோலவே இந்தியாவுக்கு  தொடக்க ஆட்டக்காரர்களும் பெரும் பிரச்சினையாக தொடர் முழுவதும் நீடித்து கொண்டே இருந்தது. போட்டிக்கு போட்டி தொடக்க ஆட்டக்காரர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இலங்கை, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிகளில்  ஸ்ரீகாந்தும் கபில்தேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் மஞ்ச்ரேக்கரும்  தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக ஸ்ரீகாந்தும் ஜடேஜாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் ரவிசாஸ்திரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இப்படி தொடக்க ஜோடி மாறிக் கொண்டே இருந்தது.

இந்தத் தொடரில் மொத்தம் இரு வெற்றிகளை மட்டுமே பெற்ற  இந்தியா புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 8 மற்றும் 9வது இடங்களை முறையே அப்போதைய கத்துக்குட்டி அணிகளான இலங்கையும் ஜிம்பாப்வேவும் பிடித்தன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 4
வெற்றிகளுடன் மூட்டையைக் கட்டியது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் விஸ்வரூபம் காட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.  இந்தத் தொடரில்  நியூசிலாந்தின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் விளையாடி ஆச்சர்யப்பட வைத்தது. கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மட்டுமே அது தோல்வியடைந்தது.

அதிகம் எதிர்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளுடன் முதல் உலகக் கோப்பையிலேயே அரையிறுதியில் காலடி எடுத்து வைத்து முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த அணிகள் தவிர  இங்கிலாந்தும் அரையிறுதிக்குச் சென்றது.

புலி பாய்ச்சல்

லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனில் விளையாடின. மேக்மிலன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயற்சி செய்வார். பந்து பேடில் பட்டு அருகேயே விழும். அதற்குள் ஒரு ரன் எடுக்க இன்சமாம் பிட்சில் கால்வாசி தூரத்தைக் கடந்து வருவார். எதிர்முனையில் இம்ரான்கான் ரன் வேண்டாம் என்று கூற, திரும்பவும் கிரிஸ்க்குள் வர இன்சமாம் முயற்சிப்பார். ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜாண்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை கையில் எடுப்பார். ஸ்டெம்ப்புக்கு சில அடி தூரம் வந்ததும் அப்படியே வேங்கைப் புலி மாதிரி பாய்ந்து அப்படியே ஸ்டெம்புகளை தகர்த்து இன்சமாமை ரன் அவுட் செய்தார். உலகக் கோப்பையில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது என புகழப்படுகிறது.

 ‘குரங்கு’ தவ்வல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடினார் ஜாவித்
மியாண்தத். 110 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் பந்து பேடில் படும்போதேல்லாம் விக்கெட் காப்பாளராக இருந்த கிரண் மோரே குதித்து குதித்து அம்பயரிடம் அடிக்கடி அவுட் கேட்டுக் கொண்டே இருந்தார்.  இதற்காக ஒரு கட்டத்தில் கிரண் மோரேயிடம் வாக்குவாதமும் செய்தார் மியாண்தத். அதன் தொடர்ச்சியாக  பேட்டை கையில் தூக்கிக் கொண்டு   ‘குரங்கு’ தாவுவது போல குதித்து கிரண் மோரேவைக் கிண்டல் செய்தார் அவர். இந்தச் சம்வபம் இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

- தி இந்து, 2015, ஜனவரி

03/01/2015

1992 - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மழை!

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் சுலபமாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு கடைசி போட்டி வரை சிக்கல் நீடித்துக் கொண்டிருந்தது.   பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் கிறைட்சர்ச்சில் மோதியது. இந்தப் போட்டியில் லீக் சுற்றில் எந்த அணியுடனும் தோற்காத நியூசிலாந்து தோல்வியைச் சந்தித்தது. பாகிஸ்தான் கடைசி சுற்றில் வெற்றி பெற்றும் உடனே அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் புள்ளி 9 ஆக மட்டுமே இருந்தது.

இந்தப் போட்டி நடைபெற்ற அதே நாளில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதின. வெஸ்ட்இண்டீஸ் அணி 8 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டம் வெஸ்ட்இண்டீஸ் அணி பக்கமே இருந்தது. அதிர்ஷ்டம் பாகிஸ்தான் அணிக்கு அடித்தது. போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியைத் தழுவியது. எனவே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முதல் அரையிறுதி

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் தொடங்கின. முதல் அரையிறுதியில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் ஆக்லாந்தில் மார்ச் 21 அன்று மோதின. முதலில்  நியூசிலாந்து பேட்டிங் செய்தது.    மத்திய வரிசையில் மார்டின் குரோவ் எடுத்த 91 ரன்கள், ரூதர்போர்ட் எடுத்த 50 ரன்கள் நியூசிலாந்து 262 ரன்கள் எடுக்க உதவியது. பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 140 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் நெருக்கடியைச்  சந்தித்தது. நியுசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போதுதான் இன்சமாம் உல்-ஹக் களத்தில்

இறங்கினார்.
சந்தித்த முதல் பந்தில் இருந்தே வெளுத்து வாங்கத் தொடங்கினார் இன்சமாம். எந்த பந்தையும் மிச்சம் வைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசினார். எதிர்முனையில் அனுபவ வீரர் ஜாவித் மியாண்தத் அவரை சிறப்பாக வழி நடத்தி ரன் குவிக்க உதவினார். இன்றைய இருபது ஓவர் ஆட்டத்தை அன்றே இன்சமாம் விளையாடினார். 37 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 60 ரன்களை குவித்து பாகிஸ்தானை வெற்றிப் பக்கம் அழைத்து வந்தார். இந்தப் போட்டியில் இன்சமாமின் அதிரடிதான் பாகிஸ்தானை இறுதிபோட்டிக்கு அழைத்துச் சென்றது. தொடரில் சிறப்பாக விளையாடிய  நியூசிலாந்து பரிதாபமாக  வெளியேறியது.

இரண்டாவது அரையிறுதி

பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப் போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாது அரையிறுதிப் போட்டி மார்ச் 22 அன்று சிட்னியில் நடைபெற்றது. அதிகம் எதிர்ப்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்காவும் பலமிக்க இங்கிலாந்தும் மோதின. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கெப்ளர் வெசல்ஸ் இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய சொன்னார்.
மழை காரணமாக ஓவர்கள் 45 ஆக குறைக்கப்பட்டன. கிரஹாம் ஹிக் சேர்த்த 82 ரன் உதவியுடன் அந்த அணி 252 ரன்களை எடுத்தது. இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் வீழ்ச்சியும் சராசரி ரன் விகிதமும் சரி சமமாக ஏறிக் கொண்டே இருந்தது.

போட்டி பரபரப்பு கட்டத்துக்கு வந்து கொண்டிருந்தது. 13 பந்துகள் மீதமிருக்கையில் தென் ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரையன் மேக்மிலனும், டேவ் ரிச்சர்ட்சனும் களத்தில் இருந்தார்கள். இருவருமே பேட்ஸ்மேன்கள். எனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வருணபகவான் மழையை பொழிய 12  நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது எல்லோருக்குமே பேரதிர்ச்சி. புதிய விதிப்படி 1 பந்தில் 21 ரன் என்ற இலக்கு பெரிய ஸ்கிரீனில் பளிச்சிட்டது. அவ்ளோதான் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மழை விதி கடும் விவாதத்தைக் கிளப்பியது. மழை புண்ணியத்தால் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி

 
மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருக்க இறுதிப்போட்டி இங்கிலாந்தும் பாகிஸ்தானும் கோப்பைக்காக மல்லுகட்டின. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற இம்ரான்கான், மியாண்தத், இன்சமாம், வாசிம் அக்ரமின் கடைசி நேர அதிரடி காரணமாக 249 ரன்களைக் குவித்தது. முன்கள வீரர்கள் அடுத்தடுத்த சொதப்ப ஃபேர்பிரதரும் லாம்ப்பும் இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசிம் அக்ரம் சிறப்பாக வீசிய இரண்டு பந்துகள்தான் அந்த அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. லாம்ப்பும், லூயிசும் வாசிமின் அற்புதமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஸ்டெம்புகளை சிதறவிட இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடித் தர 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோற்கடித்தது.

தொடக்கத்தில் சறுக்கிய பாகிஸ்தான் அணி பின்னர் சுதாரித்து ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை பெற்ற தந்த கையோடு இம்ரான்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

முதல் விருது

முதல் நான்கு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்  நாயகன் விருது அறிமுகப்படுத்தப்படவில்லை. 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைத்
தொடரில்தான்  இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முதல் விருதை நியூசிலாந்து அணித் தலைவர் மார்டின் குரோவ் பெற்றார். 9 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை அவர் குவித்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் சோகம்

மூன்று முறை உலகக் கோப்பைத் தொடரில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்துக்கு துரதிர்ஷ்டம் துரத்தியது. 1979-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், 1987-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இறுதி ஆட்டத்தில் தோற்ற இந்த அணி, இந்த முறை பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல, அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது இதுதான் கடைசி முறையும்கூட. இதன்பிறகு இதுவரை நடைபெற்று
முடிந்துள்ள உலகக் கோப்பைத் தொடரில்  இங்கிலாந்தால் அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியவில்லை.


- தி இந்து, ஜனவரி 2015