14/01/2015

ஐ விமர்சனம்


வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார்.

சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறார். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ.

லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி கதை.

வழக்கமாக சமூகம் சார்ந்த ஒரு மெசேஜோடு கதைச் சொல்லும் இயக்குநர் ஷங்கர் இந்த முறை பழிவாங்கும் கதையை கையில் எடுத்திருக்கிறார். அதையும்கூட வழக்கமான பாணியில் இல்லாமல் பேண்டசியாகவும் வித்தியாசமாகவும் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர்
ஷங்கர். அவருக்கு சற்றும் குறைவில்லாமல், உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில்  நிச்சயம் பேசப்படும்.

 ஜிம்மில் பாடி பில்டர்களை தொங்கவிட்டு அடிப்பது, சீனாவில் சைக்கிளில் பறந்து பறந்து போடும் சண்டை, ரயிலில் சீறிப் பாய்ந்து போடும் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார் விக்ரம். பாடி பில்டராக, மாடலிங் மேனாக, அகோரமான கூனனாக நடித்து எல்லாரையும் மெர்சல் ஆக்கி மலைக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கூனன் பாத்திரம் பேசப்படும்.   சீரியஸான காட்சிகளுக்கு இடையேயும் சிரிக்க வைக்கிறார் சந்தானம்.

இருந்தாலும் உருவத்தை வைத்து கிண்டல் செய்வதை இன்னும் எத்தனை காலத்துக்கு சந்தானம் செய்யப்போகிறாரோ தெரியவில்லை.  எமி ஜாக்ஸன் அழகிலும் நடிப்பிலும் இன்னும் மெருகேறியிருக்கிறார். முதல் பாதியில் அரைகுறை ஆடையுடனும், இரண்டாம் பாதியில் குத்துவிளக்காகவும் மாறி விடுகிறார்.  ஒரு பிரபல பிசினஸ்மேனை நினைவுப்படுத்தும் பாத்திரத்தில்  நடிகர் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில இடங்களில் சிவாஜியை ஞாபகபடுத்துகின்றன.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் காட்சிக்குக் காட்சி தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். ஷங்கர் படங்களில் வசனங்கள் மிகக்கூர்மையாக இருக்கும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். எளிமையான கதைக்கு சரியான விகிதத்தில் திரைக்கதை என்ற முலாமை ஷங்கர் பூசியிருந்தாலும் படம் தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் கதையையும், கதாபாத்திரங்களையும் ஊகிக்க முடிவது மைனஸ்.  முதல் பாதி மிகவும் மெதுவாக நகருகிறது. சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் பத்து  நிமிடங்கள் வரை நீள்வது போரடிக்க வைக்கிறது.

 சக மாடலிங் பாலியல் தொந்தரவு தருகிறார் என்பதற்காக, வேறு ஒருவருடன் இணைந்து நாயகி  சேர்ந்து மாடலிங் செய்கிறார். அதற்கு மாடலிங் உலகில் வேறு ஆண்களே கிடையாதா? தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத பாடி பில்டரை நாயகி மாடலிங் ஆக்குவது யதார்த்தமாக இல்லை.  சர்வதேச அளவில் தொழில் செய்யும் ஒரு பிசினஸ் மேன் (ராம்குமார்) ஒரு சாதரண மாடலிங்கை காலி செய்வதற்காக லோக்கல் அளவுக்கு இறங்கி திட்டம் தீட்டுவது நம்பும்படியாக இல்லை.

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment