04/01/2015

1992- சொதப்பிய இந்தியா

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் திருப்புமுனை ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா பிரிஸ்பேனில் விளையாடிய போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. கடைசி பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை எடுத்தது. பின்னர் இந்திய அணி 238 ரன் என்ற இலக்கைத் துரத்தியபோது 17வது ஓவரில் சிறிது நேரம் மழை பெய்தது. எனவே ஓவர் 47 ஓவராக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்த தருணம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. 1987-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையிலும் சென்னையில் நடந்த போட்டியில் இதே ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒரு ரன்னில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு இந்த உலகக் கோப்பையில் முதல் மூன்று போட்டிகளும் துரதிர்ஷ்டமாகவே அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 9 ரன்னில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வியைத் தொடர்ந்து மூன்றாவதாக இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் எஞ்சியப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

 மிகவும் சிக்கலான சூழ்நிலையில்தான் பாகிஸ்தானை மார்ச் 4 அன்று சிட்னியில் இந்திய அணி சந்தித்தது. இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் சந்தித்துக் கொள்ளும் முதல் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடிச் சேர்த்த 54 ரன்கள், ஜடேஜாவின் 46 ரன்கள், கபில்தேவின் 35 ரன்கள் இந்தியா 216 ரன்களை எடுக்க உதவியது.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் அமீர் சோகைல் மட்டுமே சிறப்பாக விளையாடி 62 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்களில் ஜாவித் மியாண்தத் தவிர மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றே சொல்லலாம். இந்தப் போட்டியில் இந்தியாவின் பவுலிங், பீல்டிங் மிகவும் துடிப்பாக இருந்தது.  இதனால் ரன் சேகரிக்கத் திணறிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.  இந்தப் போட்டியைத் தவிர இந்திய அணி ஹாமில்டனில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி வெற்றது. இந்தப் போட்டியில் மழை தொடர்ந்து குறுக்கிட்ட போதும் டக்வோர்த்-லீவிஸ் விதிபடி வெற்றி வெற்றது. மற்ற போட்டிகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு மழை பெரும்  இடைஞ்சலாக இருந்தது. இதுபோலவே இந்தியாவுக்கு  தொடக்க ஆட்டக்காரர்களும் பெரும் பிரச்சினையாக தொடர் முழுவதும் நீடித்து கொண்டே இருந்தது. போட்டிக்கு போட்டி தொடக்க ஆட்டக்காரர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இலங்கை, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிகளில்  ஸ்ரீகாந்தும் கபில்தேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் மஞ்ச்ரேக்கரும்  தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக ஸ்ரீகாந்தும் ஜடேஜாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் ரவிசாஸ்திரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இப்படி தொடக்க ஜோடி மாறிக் கொண்டே இருந்தது.

இந்தத் தொடரில் மொத்தம் இரு வெற்றிகளை மட்டுமே பெற்ற  இந்தியா புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 8 மற்றும் 9வது இடங்களை முறையே அப்போதைய கத்துக்குட்டி அணிகளான இலங்கையும் ஜிம்பாப்வேவும் பிடித்தன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 4
வெற்றிகளுடன் மூட்டையைக் கட்டியது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் விஸ்வரூபம் காட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.  இந்தத் தொடரில்  நியூசிலாந்தின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் விளையாடி ஆச்சர்யப்பட வைத்தது. கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மட்டுமே அது தோல்வியடைந்தது.

அதிகம் எதிர்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளுடன் முதல் உலகக் கோப்பையிலேயே அரையிறுதியில் காலடி எடுத்து வைத்து முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த அணிகள் தவிர  இங்கிலாந்தும் அரையிறுதிக்குச் சென்றது.

புலி பாய்ச்சல்

லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனில் விளையாடின. மேக்மிலன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயற்சி செய்வார். பந்து பேடில் பட்டு அருகேயே விழும். அதற்குள் ஒரு ரன் எடுக்க இன்சமாம் பிட்சில் கால்வாசி தூரத்தைக் கடந்து வருவார். எதிர்முனையில் இம்ரான்கான் ரன் வேண்டாம் என்று கூற, திரும்பவும் கிரிஸ்க்குள் வர இன்சமாம் முயற்சிப்பார். ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜாண்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை கையில் எடுப்பார். ஸ்டெம்ப்புக்கு சில அடி தூரம் வந்ததும் அப்படியே வேங்கைப் புலி மாதிரி பாய்ந்து அப்படியே ஸ்டெம்புகளை தகர்த்து இன்சமாமை ரன் அவுட் செய்தார். உலகக் கோப்பையில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது என புகழப்படுகிறது.

 ‘குரங்கு’ தவ்வல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடினார் ஜாவித்
மியாண்தத். 110 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் பந்து பேடில் படும்போதேல்லாம் விக்கெட் காப்பாளராக இருந்த கிரண் மோரே குதித்து குதித்து அம்பயரிடம் அடிக்கடி அவுட் கேட்டுக் கொண்டே இருந்தார்.  இதற்காக ஒரு கட்டத்தில் கிரண் மோரேயிடம் வாக்குவாதமும் செய்தார் மியாண்தத். அதன் தொடர்ச்சியாக  பேட்டை கையில் தூக்கிக் கொண்டு   ‘குரங்கு’ தாவுவது போல குதித்து கிரண் மோரேவைக் கிண்டல் செய்தார் அவர். இந்தச் சம்வபம் இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

- தி இந்து, 2015, ஜனவரி

No comments:

Post a Comment