27/12/2013

2013: மின்னிய நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கக் காரணம், புதிய புதிய திறமை மிக்க கலைஞர்கள் உருவாவதுதான்.  அந்த வகையில் அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவில் நுழைந்து தவிர்க்க முடியாதக் கலைஞர்களாக உருவெடுத்திருப்பது ஒரு சிலரே. வாரிசு கலைஞர்களாக இருந்தாலும் சரி, சினிமா பின் புலம் இல்லாத கலைஞர்களாக இருந்தாலும் சரி,  திரை வானில் நட்சத்திரமாக ஜொலிக்க மிகவும் மெனக்கெட வேண்டும்.  அப்படி மெனக்கெட்டு நடித்து,  ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டு ஜொலித்த சிலர்:

சிவ கார்த்திகேயன்

பெரிய திரையில் ஜொலித்து ரிட்டயர்மென்ட் ஆன பிறகு சின்னத்திரை பற்றி நினைக்கும் தமிழகச் சினிமா நட்சத்திரங்களின் எண்ணத்தைச் சிதறடித்தவர் சிவ கார்த்திகேயன். மிமிக்ரி கலைஞராகத் தோன்றியத் தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, அங்குத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, இன்று பெரிய திரையில் வெற்றிக்கொடி கட்டியவர் இந்த நாயகன்.

கடந்த ஆண்டு ‘மெரினா’ படத்தில் அறிமுகமானபோது பத்தோடு பதினொன்று என நினைத்தவர்கள்கூட இன்று அவரது கேரியர் கிராப் மேலே ஏறி வருவதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஓர் ஆண்டில் ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே பெரிய நட்சத்திரங்கள் மல்லுக்கட்டும் இந்தக் காலகட்டத்தில்  ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்து அமைதியாகப் பயணிக்கிறார் இந்த  நாயகன்.

 காமெடி என்ற பலத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த சிவ கார்த்திகேயன் அந்த இமேஜில் இருந்து வெளி வர  மெனக்கெடுவதும் இப்போது தெரிகிறது. அது அவருக்குச் சாதகமாகப் பாதகமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.   ‘மான் கராத்தே’, ‘அந்த ஒன்னுதான் இது’ என அடுத்த ஆண்டிலும் நிறையப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவ கார்த்திகேயன் இந்த ஆண்டில் பிராகசித்த கலைஞனாக மின்னுகிறார்.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இப்போது பிசியான  நடிகர் யார் தெரியுமா?  அது விஜய்
சேதுபதிதான். ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ எனத் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது 5-க்கும் மேற்பட்ட படங்கள். இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்வார்கள். இதற்கு  நல்ல உதாரணம் விஜய் சேதுபதி.  2010-ம் ஆண்டில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்.
அந்த அனுபவத்தையே களமாக அமைத்துக்கொண்டு வேகமாக முன்னேறி வருகிறார்.

 தற்போது பாப்புலராக உள்ள இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டு நிலையில், விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்காகச் செயல்படுகிறார். சீனியர் இயக்குநர்களின் இணை, துணை மற்றும் குறும்படங்களின் இயக்குநர்கள்தான் இவரது சாய்ஸ்.
முன்னணி ஹீரோக்களுடன் இரட்டையர்களில் ஒருவராகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் விஜய் சேதுபதி,  தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதக் கலைஞனாக உருவெடுத்து வருகிறார்.

விக்ரம் பிரபு


நடிகர் திலகத்தின் பேரன், இளைய திலகத்தின் மகன் என்ற பெருமையோடு சினிமாவுக்குள் நுழைந்த விக்ரம் பிரபு,  தாத்தா, அப்பாவின் பெயரைக் காப்பாற்றத் தவறவில்லை. தாத்தா போலவே பேரன் விக்ரம் பிரபுவுக்குக் ‘கும்கி’ வெற்றிப் படமாக அமைந்தது இவருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, சிறந்த இயக்கம், வருடும் இசை எனச் சம விகிதத்தில் கலந்த ‘கும்கி’ப் படத்தில் யானைப் பாகன் பொம்மனாக மிளிர்ந்தார் விக்ரம் பிரபு.

முதல் படம் வெற்றியாக அமைந்து அவருக்கு யானைப் பலம் கொடுத்தது என்றால், ஓராண்டு கழித்து இப்போது வேற மாதிரியாக வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சமகாலத்தில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த கலவரத்தை ஒன் லைனாக கொண்ட கதையில்  கோபம் கொப்பளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. வர்த்தக ரீதியாக வெற்றி பட்டியலில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும்.
இரு படங்களைக் கடந்து அடுத்த கட்டமாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தில் இறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு.

 விஜயகாந்துக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த இந்தப் படம் விக்ரம் பிரபுவுக்கும் பெயர் கொடுக்கலாம். நடிப்பையும், சினிமாவையும் கடலளவு நேசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த இந்த மீன் குஞ்சுக்கு, நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

லட்சுமி மேனன்

கோடம்பாக்கத்தில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் லட்சுமி மேனன்.
பாவாடை, தாவணியைத் தமிழ் நாட்டு இளம் பெண்களே மறந்து விட்ட இந்தக் காலத்தில் பாவாடை, தாவணியில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அறிமுகப்படம் வெற்றி பெற்றாலே தலைகால் புரியாத திரையுலகில் வரிசையாகச் ‘ சுந்தரப்பாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என நான்கு வெற்றி படங்களில் நடித்தும் அலட்டிக்கொள்ளாத நடிகை.  தொடர்ந்து  ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘சிப்பி’, ‘வசந்தகுமாரன்’ என 4 படங்கள் இவரது கைவசம் உள்ளன.

 சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ளக்  கிளாமர் எனும் ஆயுதத்தை ஏந்தாமல் இருப்பது பெண்கள் மத்தியிலும் லட்சுமிக்கு ரசிகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  நடிப்புக்கு இடையேயும் பள்ளிப் படிப்பையும் விடாமல் ஆச்சரியம் தரும் லட்சுமி மேனன்  நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார்.

நஸ்ரியா

நடிகர் சிவ கார்த்திகேயன் போலச் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நஸ்ரியா.  அழகும் திறமையும் உள்ள நடிகை. மலையாளப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தமிழ் படத்தில் நடித்த  ‘நேரம்’ இவருக்குப்  நல்ல நேரமாகவே அமைந்தது என்று சொல்லலாம். இவர் தேர்ந்தெடுக்கும் படங்களுக்காகவே இவரை நிச்சயம் பாராட்டலாம்.

அறிமுகமான நேரம் திரைப்படம் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக  நஸ்ரியாவை அடையாளம் காட்டியது. அடுத்த படமான  ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு இணையாக இவரது நடிப்பும் பேசப்பட்டது. தனுசுடன்  நடித்த  ‘நையாண்டி’ படம் சரியாகப் போகாவிட்டாலும், இவருக்கான வாய்ப்புகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. நடிகர் ஜெய்யுடன் இவர் சேர்ந்து நடித்த  ‘திருமணம் எனும் நிக்காஹா’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் ‘நீ நல்லா வருவடா’, ‘வாய் மூடி பேசவும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இருக்கிறார் நஸ்ரியா.

- தி இந்து, 27-12-2013







24/12/2013

வியன்னா ஒப்பந்தமும் அமெரிக்காவும்

வியன்னா ஒப்பந்தத்தை ஏற்ற நாடுகள் பச்சை நிறத்தில்...
இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் தேவயானி, அமெரிக்கா அத்துமீறல் என்கிற வார்த்தைகளுக்
கு அடுத்து அதிகம் அடிபடும் பெயர் வியன்னா ஒப்பந்தம். வியன்னா ஒப்பந்தம் என்றால் என்ன?

சர்வதேச நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளைப் பேணுவதற்காக 1963-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது. ஒரு நாட்டில் ராஜ்ஜிய ரீதியில் பணியாற்றும் நபர் (தூதர்) பயமின்றித் தன் பணியை மேற்கொள்ளவும், எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்று 48 நாடுகள் கையெழுத்திட்டன.

2013-ம் ஜூன் நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை ஏற்று 189 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டில் உள்ள தூதர் சிறப்பு விருந்தினர் என்ற தகுதியைப் பெறுகிறார். சிறப்புச் சலுகைகளுக்குத் தகுதி படைத்தவராகிறார். தாய்நாட்டுடன் அவர் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், சுதந்திரமாகவும் பயமின்றியும் தூதர்கள் பணி செய்வதை ஒவ்வொரு நாடும் உறுதிசெய்ய வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
முக்கிய ஷரத்துகள்

வியன்னா ஒப்பந்தத்தில் மொத்தம் 79 ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. சில முக்கியமான ஷரத்துகளைப் பார்ப்போம்.

ஷரத்து 1 டி: ஒரு தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிறப்பு விலக்குரிமையைப் பெறத் தகுதி படைத்தவர்கள்.

ஷரத்து 9 : ஒரு நாட்டில் உள்ள தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்களை, சம்பந்தப்பட்ட நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என எந்த விளக்கமும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இதை ஏற்று சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லா விட்டால் ராஜதந்திரப் பாதுகாப்பை இழக்க நேரிடும்.

ஷரத்து 22: தூதரகம் அமைந்துள்ள வளாகம் கேடு, சேதம் விளைவிக்கக் கூடாத இடமாகும். தூதரின் அனுமதியின்றிச் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த எவரும் வளாகத்துள் நுழையக் கூடாது. தூதரகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. தூதரகத்துக்குள் எதையும் தேடுவதற்கோ, ஆவணங்களைப் பறிமுதல் செய்யவோ அனுமதி கிடையாது.

ஷரத்து 30: தூதர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் இது பொருந்தும்.

ஷரத்து 27: தூதர்கள் தங்கள் தாய்நாட்டுடன் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்துக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்க வேண்டும். சந்தேகத்தின்பேரில் தூதரின் கைப்பையைத் திறந்து சோதனையிடக் கூடாது. தூதரின் தபால்கள், கூரியர் கவர்கள் தடுத்து வைக்கப்படக் கூடாது.

ஷரத்து 29: தூதர்கள் எந்த வடிவத்திலும் கைதுசெய்யப்படுவதற்கு உள்ளாக மாட்டார்கள். சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு உண்டு.

ஷரத்து 31 (1சி): ராஜதந்திரப் பாதுகாப்புப்படி நடவடிக்கைகள் பொருந்தாது. வெளி இடங்களில் அலுவலகம் சார்ந்த பணியில் இருக்கும்போதும் இது பொருந்தும்.

ஷரத்து 34 மற்றும் 36: வரியில் இருந்து விலக்கு. சுங்க வரியில் இருந்தும் விலக்கு.

தேவயானி கோப்ரகடே
ஷரத்து 37: தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்தச் சலுகைகள் அனைத்தையும் பெற முடியும். - இவை வியன்னா ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமான ஷரத்துகள்.

அத்துமீறல் வரலாறு

சர்வதேச ஒப்பந்த ஷரத்துகளைத் தங்கள் விருப்பப்படியும், தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போலவும் பயன்படுத்துவது எல்லா நாடுகளுக்கும் வழக்கமே. முக்கியமாகப் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு. சில உதாரணங்கள்:

# 1997-ல் அமெரிக்காவுக்கான ஜார்ஜியா நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். நால்வர் காயம் அடைந்தனர். ஜார்ஜியா, தூதரகச் சட்டப் பாதுகாப்பு கோராமல் துணைத் தூதரின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியது

# 2004-ல் ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்து விட்டு கார் ஓட்டி இசைக் கலைஞர் ஒருவரைக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்கு ஓட்டம் பிடித்தார். ஆனால், அமெரிக்க அரசு தூதரக விலக்கைக் காரணம் காட்டி, அவரை ருமேனியாவுக்கு அனுப்ப மறுத்தது.

# 2011-ல் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றது லாகூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய சி.ஐ.ஏ. முகவர் ரேமண்ட் அலென் டேவிஸ். பாகிஸ்தான் அவர்மீது நடவடிக்கை எடுத்தது. உடனே அமெரிக்க அரசு வியன்னா ஒப்பந்தத்தைக் காரணம் காட்டியதோடு ராஜதந்திரப் பாதுகாப்பு என்ற வாதத்தையும் முன்வைத்துப் பாகிஸ்தானை அடிபணிய வைத்தது (சுட்டுக்கொல்லப்பட்ட இரு பாகிஸ்தானியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து ரேமண்ட் அலென் டேவிஸ் வழக்கிலிருந்து தப்பித்தது தனிக் கதை).

# இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் ஒருவருக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பியதாக  அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தேவாசிஷ் விஸ்வாஸின் 18 வயது மகள் கைதுசெய்யப்பட்டு, பாலியல் தொழிலாளர்களுடன் தங்க வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் இல்லை. வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிச் சட்ட விலக்கு கோரியபோது, தூதரகப் பணியாளர்களுக்கு மட்டுமே விலக்கு பொருந்தும் என்று மறுத்தனர் அமெரிக்க அதிகாரிகள். இந்த வழக்கில் இருந்து பின்னர் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தனக்குச் சாதகமானது என்றால், வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டுவதும், பாதகமானது என்றால் ஒப்பந்தத்தைக் காலில் போட்டு மிதிப்பதும் அமெரிக்காவுக்குக் கைவந்த கலை. கடந்த காலங்களில் வியன்னா ஒப்பந்தத்தை அமெரிக்கா சாக்குப்போக்குக் காட்டி மீறியிருக்கிறது என்பதே உண்மை.

- தி இந்து நடுப்பக்கம், 23/12/13

10/12/2013

வில்லனாக உருவெடுக்கும் மின் குப்பைகள்

உலகில் எந்தத் துறையில் ஏற்படும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம்  ‘இ-வேஸ்ட்’ என்றழைக்கப்படும் மின் குப்பைகள். புவி வெப்பமடைதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது பல் நாடுகளில் கொட்டிக் கிடக்கும் மின்குப்பைகள்.

இன்று தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்கள் என எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்படுத்தாத இடங்களே இல்லை. டி.வி, கம்ப்யூட்டர், பிரிண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மொபைல், ஏ.சி., ஜெராக்ஸ் இயந்திரம், ஆடியோ-வீடியோ என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பயன்பாட்டில் உள்ளவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பழுதானால்..? பழைய கடையிலோ, குப்பையிலோ எறிந்து விடுகின்றனர். இப்படித் தூக்கியெறியப்படும் பழைய மின் சாதனப் பொருட்கள்தான் மின் குப்பைகளாகின்றன.

இந்தியாவில் பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை, புனே, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்குப்பைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றன என்று கூறுகிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி 8 லட்சம் டன் மின் குப்பைகள் இந்தியாவில் குவிந்துள்ளன. இது 2009ஆம் ஆண்டில் 3.30 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது கவனிக்கத்தக்க விஷயம். இந்தியாவில் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 1.85 மில்லியன் டன் மின் குப்பைகள் வீதம் சேர்ந்துவருகின்றன. குறிப்பாகப் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்குப்பைகள் சேர்ந்து வருவதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் மின் குப்பைகள் உருவாவதில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின் குப்பைகளில்  60 சதவீதத்திற்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.
இந்தியாவில் இப்படி என்றால், வளர்ந்த நாடான அமெரிக்காவில் இன்னும் மோசம். இங்கு ஆண்டுதோறும் 5 கோடி டன் மின் குப்பைகள் சேர்வதாகத் தெரிவித்துள்ளது ஐ.நா.சபை சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு. ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் அங்குக் குப்பைகள் அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது அது. சீனாவிலும் இதே நிலைமைதான். அங்கும் மின் குப்பைகள் குவிந்து வருகின்றன.

இது சில நாடுகளில் குவிந்துள்ள மின் குப்பைகளுக்கு உதாரணங்கள்தான். இப்படிப் பல நாடுகளிலும் மின் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றனவா என்றால், இல்லை. மின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனாலும் வளரும்  நாடுகளிலும் 10 சதவீதம் மட்டுமே சரியான வழியில் இவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை உடைத்துத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது  ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளே மின் குப்பைகளைக் கையாள முடியாமல் திணறும் நிலையில், வளரும் நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்நாடுகளில்  மறுசுழற்சி செய்வதற்கான சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், உபயோகமில்லாத மின்குப்பைகள் வளரும் நாடுகளில் மலை போலக் குவித்து வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மின் குப்பைகளைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இவற்றில் காரீயம், காட்மியம், பாதரசம்,  நிக்கல் போன்ற ஆபத்தான உலோகங்கள் உள்ளன. மின்குப்பைகளில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் டாக்சின், ப்யூரன் போன்ற நச்சு வாயுக்களும் கலந்துள்ளன. இவற்றினால் மனிதர்களுக்குப் பல நோய்கள் வரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கம்ப்யூட்டர், டி..வி.களில் மானிட்டராகப் பயன்படுத்தும் கேத்தோட் ரே டியூப்பில் பேரியம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றை உடைத்தும், தூளாக்கியும் எறியும் போது நிலங்கள்  மாசடைகின்றன.
மேலும் மின்குப்பைகளில் உள்ள ஈயம், பாதரசம், பொன் முதலிய உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காக அமிலம், ரசாயனங்களைப் பயன்படுத்திக் கரைக்கின்றனர். அல்லது நெருப்பிலிட்டு உருக்குகின்றனர். இதையே வளரும் நாடுகளில் மறுசுழற்சியாகச் செய்கின்றனர். இவற்றில் இருந்து வெளியேறும் நச்சுவாயுகளும் நச்சுக் கழிவுகளும் காற்று, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. வளரும் நாடுகளில் கிராமப்புறங்கள், சிறிய நகரங்களின் குடிசைத் தொழில் போல நடக்கும் இதுபோன்ற பணிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே  நடைபெறுகின்றன. இதனால் விவசாயத்துக்கு ஆதாரமான நிலம், நீர், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகின்றன.

மெல்லக் கொல்லும் விஷம் போன்ற மின் குப்பைகளைப் பற்றி 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை  உலக நாடுகள் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. உலக வெப்பமயமாதல் பிரச்சினை தீவிரமடைந்த பிறகே மின்குப்பைகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச மாநாடுகளின் தாக்கத்தால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கேத்தோட் ரே டியூப்பை நிலத்தில் கொட்டத் தடை விதித்துள்ளன. வளர்ந்த நாடுகளில் இருந்து மின் குப்பைகளை இறக்குமதி செய்யச் சீனா மற்றும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மின் குப்பைகளை மிக மோசமாகக் கையாளும் நைஜீரியாவில் மறு சுழற்சி செய்யத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் இங்கிலாந்து முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான், தைவான் இங்கெல்லாம் எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் மின்குப்பைகளை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யச் சட்டத்தின் மூலம் வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளன.

இப்படி ஒவ்வொரு நாடும் முடிந்த அளவு நடவடிக்கை மேற்கொண்டாலும், வளரும் நாடுகளில் மின் குப்பைகளைப் பாதுகாப்பாகக் கையாளப் போதுமான சட்டங்கள் இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் ஆபத்தான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்-2003) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, மின்குப்பைகளுக்கான பொறுப்பையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது. மின் குப்பைகளின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கச் சட்டங்கள் மட்டுமே போதாது. அவற்றின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகளும் அவசியம். அதுவே இன்றைய தேவை.

மறுசுழற்சி எப்படி?

வளர்ந்த நாடுகளில் மின் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்கின்றனர். இதற்காகவே பிளாண்ட் அமைக்கின்றனர். அங்கு மின்குப்பைகளை 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சாம்பலாக்கிப் பாதுகாப்பாகப் புதைக்கின்றனர். இந்தியாவில் மின்குப்பைகளை அகற்றும் பணி குடிசைத் தொழிலாகவே நடப்பதால், அவற்றை உடைத்து எறிந்து விடுகின்றனர். பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்குப்பைகளை மறுசுழற்சி செய்ய வசதிகள் உள்ளன.

எவ்வளோ நச்சு

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள நச்சுப் பொருட்கள் பட்டியலைப் பார்த்தாலே பயம் வரும். இப்போது பிரபலமாகியுள்ள ஃப்ளாட் ஸ்கிரீன் மானிட்டரில் பாதரசம் உள்ளது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் காரீயம், காட்மியம், நச்சுத் தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. டாக்சின் வாயுக்களை வெளிப்படுத்தும் பாலிவினைல் குளோரைடு, கேபிள் இன்சுலேசன் கம்ப்யூட்டரில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு கம்ப்யூட்டரிலேயே 20 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது.

இந்த நச்சுப் பொருட்கள் எல்லாம் தவறான முறையில் கழிக்கப்படும் போது சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும்? பல்வேறு வகையான புற்று நோய்கள், அலர்ஜி, தோல் நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண் நோய் என ஏராளம். இனப் பெருக்க, நரம்பு, ரத்த மண்டலங்களிலும் நாளமில்லாச் சுரப்பிகளிலும் பெரியப் பாதிப்புகளை நீண்
ட காலத்துக்கு ஏற்படுத்தும் ஆற்றல் மின்குப்பைகளுக்கு உள்ளது.

- தி இந்து, 9/12/13


03/11/2013

ஒரு நடிகர், ஒரு நடிகை, ஒரு இயக்குநர்

ஒரு நிஜக் கலைஞன்
 

"நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில், ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது" - நடிகர் விக்ரம் தன்னைப் பற்றியும், தனது திரையுலகப் போராட்டம் பற்றியும் ஒரு விழாவில் பேசிய கருத்துகள் இவை.
 

உண்மைதான்.  1990-ம் ஆண்டு அறிமுகமாகி பல படங்களில் விக்ரம் நடித்திருந்தாலும், 2000-ம் ஆண்டில் வெளியான 'சேது' படமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரைச் சிறந்த நடிகராகவும் அடையாளம் காட்டியது. சினிமாவில் ஓர் இடத்தைப் பிடிக்க ஒரு நடிகருக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல.
 

ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால், அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான்.  பாலா இயக்கிய ‘சேது’ ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தை திரையிட ஆளில்லாமல் 6 மாதங்கள் இயக்குனர் பாலா தவித்தது தனிக்கதை.
 

‘சேது’வுக்குப் பிறகு  ‘தில்’, ‘காசி’, ‘தூள்’, ‘சாமி’, ‘ஜெமினி’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘தெய்வத்திருமகள்’ ஆகியவை விக்ரம் முத்திரைப் பதித்த படங்கள். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் அற்புத கலைஞர் விக்ரம். ‘காசி’ படத்தில் நடிப்பையும் தாண்டி நிஜமாகப் பார்வையில்லாதவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை கண் முன்னே நிறுத்தியவர் விக்ரம். அந்தளவுக்கு நடிப்பிற்காக மெனக்கெடும் கலைஞன்.
 

‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களில்  பரபரவென ஓடிய திரைக்கதைக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. ‘பிதாமக’னின் சித்தன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்திருந்தால், பொருந்தியிருப்பாரா எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தில் வசனம் பேசாமலே தன்  திறமையை நிரூபித்துக் காட்டியவர் இந்த சினிமா ‘பிதாமகன்’. இப்படி விக்ரமை பற்றியும் அவரது  நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
 

சமீபகாலமாக விக்ரமின் சில படங்கள் சரிவர போணியாகமல் போயிருந்தாலும், இவரது அடுத்தடுத்தப் படங்களுக்கு எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை.  ஏனெனில் நடிகர் விக்ரம் சொன்னது போல, ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். விக்ரமின் அந்தத் திறமைதான் அவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
 

சர்ச்சைகளுக்கு அப்பால்...
 

“யானை கீழே விழுந்தால் உடனே எழுந்திருக்க முடியாது; ஆனால், குதிரை விழுந்தால் உடனே எழுந்து ஓடும், நான் குதிரை மாதிரி’’ என்று சில
ஆண்டுகளுக்கு முன்பு விழா ஒன்றில் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அது அவருக்கு மட்டுமல்ல, நடிகை நயன் தாராவுக்கும் பொருந்தும். காதல் சர்சைகளுக்குப் பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டு, மீண்டும் ஃபீல்டில் பிஸியாக  நடிக்க முடியும் என்றால், அதுதான்  நயன் தாரா.
 

2003-ம் ஆண்டில் மலையாளப் படத்தில் அறிமுகமான நயன் தாரா தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். குண்டாக இருந்த நயன் தாராவைப் பார்த்து, தமிழில் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏளனம் செய்தவர்கள் ஏராளம். ஆனால், அடுத்தப் படத்திலேயே குண்டு உடலை ஸ்லிம்மாக்கி, ‘சந்திரமுகி’யில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து அப்போதைய முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தளவுக்கு தன்னம்பிக்கை நடிகை நயன் தாரா.
 

‘ஏகன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வில்லு’ என சீரான வேகத்தில் முன்னேறிய நயன் தாராவுக்கு ஸ்பீடு ப்ரேக்கர்களாக அமைந்தன அவரது காதல் சர்ச்சைகள். சிம்புடன் காதல் முறிவு, பிரபுதேவாவுடன் காதல், காதலுக்காக மத மாற்றம், மீண்டும் காதல் முறிவு என நயன் தாராவின் பர்சனல் பக்கங்கள் முழுவதும் சர்ச்சை மயம்தான். இந்தச் சர்ச்சைக்கு மத்தியிலும் பழைய சம்பவங்களை நினைத்து கலங்காமல் அடுத்த இன்னிங்ஸிற்காகக் களத்தில் இறங்கி கில்லி ஆடி வருகிறார் என்றால், அதுதான் நயன் தாராவின் ஸ்பெஷாலிட்டி.
 

யார் அன்புக் காட்டினாலும் இளகிய மனதுடன் அதை நம்புவது நயன் தாராவின் பலவீனம் என்று பொதுவாக அவரைப் பற்றி சினிமா வட்டாரத்தில் கூறுவார்கள். ஆனால், அதற்காக அந்தப் பண்பை நயன் தாரா இதுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஓர் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள நயன் தாரா கைவசம் 5 படங்கள் இருக்கிறது என்றால்,  மேலே சொன்னது போல அவர் குதிரை மாதிரி.
 

இலக்கண இயக்குநர்

மதுரை மாவட்டம் எத்தனையோ சினிமா இயக்குநர்களை தமிழ்
திரையுலகிற்கு வழங்கியுள்ளது. அவர்களில் இயக்குநர் அமீர் சுல்தான் என்ற அமீரும் ஒருவர்.  முதல் படத்தில் மட்டுமல்ல; தன் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைவிட தன்னை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பதுதான் ஒரு இயக்குநருக்கான மிகச் சிறந்த இலக்கணமாக இருக்க முடியும். அந்த இலக்கணத்துக்குரியவர் அமீர்.
 

‘சேது’ படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா பாடம் கற்றவர் அமீர். பாலாவின் சிஷ்யன் என்ற தகுதியுடன் 2002-ம் ஆண்டில் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் இவர். காதல் என்றாலே வெறுக்கும் இளைஞன், கடைசியில் காதலில் விழுவதுதான் கதை. இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும், பலரது பாரட்டுக்களைப் பெற தவறவில்லை.
 

இயக்குனர் பாலாவின் சிஷ்யன் என்பதாலோ என்னவோ அவரது அடுத்தப் படமான ‘ராம்’ படத்தில் அவரது பாதிப்புகளும் முத்திரையும் படத்தில் தெரிந்தது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘ராம்’ படம் அமீருக்கு  நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கும் அவனை வாஞ்சையோடு வளர்க்கும் தாயிக்குமானப் பாசத்தை காட்சிக்குக் காட்சி செதுக்கியிருந்தார் அமீர். பாசத்தையும்  சஸ்பென்ஸையும் கலந்து கொடுத்ததில் ‘ராம்’ படத்துக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பரிசாகத் தந்தனர். சைபிரஸ் திரைப்பட விழாவிலும் ‘ராம்’ படம் விருதை தட்டிச் சென்றது.
 

அமீரை முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம் ‘பருத்தி வீரன்’. 2007-ம் ஆண்டில் வெளியான இப்படம் மூலம் கார்த்தி என்ற பட்டைத் தீட்டப்பட்ட நடிகரை தமிழ் திரையுலகிற்கு வழங்கினார் அமீர். சாதிய சாயலை இலைமறை காயாகக் கூறி கதாநாயகனின் காதல், நய்யாண்டி, சண்டியர்தனத்தை படத்தில் அழகாக சொல்லியிருந்தார் அமீர். படத்தின் முடிவு விமர்சனத்துக்கு ஆளானாலும்,  தமிழக ரசிகர்கள் இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, பெர்லின் சர்வதேச திரைப்பட விருது உள்பட பல விருதுகளை இப்படம் வென்றது.
 

அமீர் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவியை வைத்து வெளியான ‘ஆதிபகவன்’ படம், தனது பாணியிலிருந்து மாறுபட்டு கமர்ஷியல் ஃபார்முலாவுக்குட்பட்டு  இயக்கினார் அமீர். அவருக்கே உரித்தான ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். கதை சொன்ன பாணியிலும் தொய்வு ஏற்பட்டதால் படம் வெ
ற்றி பெறாமல் போனது. கடந்த 16 ஆண்டுகளில் வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அமீர். ஆனால், முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் அது  சாதாரண விஷயமல்ல.
 

- ‘தி இந்து’ தீபாவளி மலர், 2013

01/11/2013

பாலாஜி சக்திவேல்: யதார்த்த கதைச் சொல்லி

வருடத்துக்கொரு படம்கூட இல்லை. தன் மனதில் உள்ள கதைக் கருவுக்காக முழுமையான வடிவம் கிடைக்கும்வரை காத்திருந்து, ஆத்மார்த்தமாகப் படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.  2002-ம் ஆண்டில் தொடங்கி 2012-ம் ஆண்டுவரை நான்கே படங்கள். ‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’ மற்றும்  ‘வழக்கு எண் 18/9’. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய யதார்த்தமான படங்கள்.

வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்திலிருந்து மாறி,  எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்தில் அடித்தாற்போல சொல்வது பாலாஜி சக்திவேலின் ஸ்டைல். விக்ரம் நடித்து, அவர் இயக்கிய ‘சாமுராய்’ படம் மட்டும் கொஞ்சம் ஹீரோயிசம் கலந்த பாணியில் சொல்லப்பட்ட கதை. அதை  நடிகர் விக்ரமுக்காக செய்தாரோ என்னவோ! 

‘சாமுராய்’ படம் நன்றாக வந்திருந்தாலும், சரியாக ஓடாமல் போனதால் தமிழ் சினிமா உலகில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்ட
சத்திய சோதனைக்கும் ஆளாக வேண்டியிருந்தது.  சினிமா வாழ்க்கைக்காக கமர்ஷியல் சினிமா சூழலில், இவர் சிக்காமலிருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.

மூன்று ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ படம் வெளியானது. படத்தில் பெரிய  நட்சத்திரங்கள் இல்லை. ‘பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்த பரத் தவிர ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். உண்மை சம்பவம் என்ற அறிமுகத்துடன்
வெளியானது அந்தப் படம். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதலித்து திருமணம் செய்த பிறகும், அந்த இளைஞனை அடித்து உதைத்து மனநலம் பாதிக்கப்பட்டவனாக மாற்றும் சாதிய கொடூரத்தை சோகத்துடன் காட்டியிருந்தார் பாலாஜி சக்திவேல். சாதிய சதியால் காதலனை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் காதலி, மனநலம் பாதிக்கப்பட்ட காதலனை அரவணைத்து செல்லும் காதலியின் கணவன் மூலம் மனிதநேயத்தை சொன்ன பாணி பாலாஜி சக்திவேலுக்கு மட்டுமே வாய்த்த வரம். மிக வலிமையான கதையை இப்படத்தில் சொல்லியதன் மூலம், பங்கேற்ற எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வு கிடைத்தது. முதல் வாய்ப்பைத் தவற விட்ட பாலாஜி சக்திவேல், இந்தமுறை மிகச் சரியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

‘காதல்’ படம் தமிழ் ரசிர்களை உலுக்கியெடுத்தது என்றால், அவரது அடுத்தப் படமான ‘கல்லூரி’ மனதைப் பிசைந்தது. இந்தப் படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் ஒரு சிறு நகரில் இருக்கும் அரசு கல்லூரி பற்றியும் அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லப்படாத பல செய்திகளைப் பதிவு
செய்தது ‘கல்லூரி’ படம். படத்தின் கிளைமாக்ஸ், உண்மையாக நடந்த ஓர் அரசியல் கேவலத்தை யதார்த்தமாக உணர்த்தியிருந்தது.

‘காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஓர் இடைவெளி. 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அழுத்தமான கதையுடன் மீண்டும் களத்திற்குள் வந்தார். ஒரு அடித்தட்டு இளைஞன், அவனை நித்தமும் கடந்து செல்லும் அவனது காதலி, அவள் வேலை செய்யும் வீட்டு பெரிய இடத்துப் பெண், அவளை போகப் பொருளாக மட்டும் பார்க்கும் அதைவிட பெரிய இடத்துப் பையன். இவர்கள் நால்வருக்கும் பொதுவாக ஒரு சம்பவம். படம் அந்தப் புள்ளியில் இருந்துதான் விரிகிறது. ஐந்தாவது கதாபாத்திரமாகக் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் காவல் துறை அதிகாரி.  அதுதான் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் கதைக் கரு.

குடும்பங்களின் ஏழ்மை நிலை, உயர்தட்டு குடும்பப் பிள்ளைகளின் பாலியல் ஒழுக்கக்கேடு, ஏழை பெண் மீதான புனிதமான காதல், தன் இச்சைக்கு அடங்க மறுக்கும் பெண்ணுக்கு அமில வீச்சை பரிசாகத் தரும் இளைஞன், எளிய மக்களை ஏமாற்றும் நயவஞ்சக காவல் அதிகாரி என சமூகத்தின் அங்கங்களையும் சீரழிவுகளையும் பாலாஜி சக்திவேல் காட்சிப்படுத்தியிருந்த விதம் சிக்ஸர் ரகங்கள்.

இவரது எல்லாப் படங்களையும் உற்று கவனித்தால், ஒன்று புலப்படும். எல்லாப் படங்களிலும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு, சினிமாவுக்கே உரிய மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை முடிவாக தந்திருப்பார் பாலாஜி சக்திவேல். அதானால்தான் என்னவோ இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.

சினிமா வெறும் பொழுதுபோக்கை தருவது மட்டுமல்ல; வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கையும் வளர்க்க வேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல், தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் இயக்குனராகப் பரிணமித்து வருகிறார்.

(2013, தி இந்து தீபாவளி மலர்)

தென் தமிழகத்தின் சிறப்புகள்

தமிழ்நாட்டுக்குள் ஒரு நாடு (சிவகங்கை)
 

 தமிழ்நாட்டுக்குள் புகழும் பெருமையும் கொண்ட ஒரு நாடு இருப்பது தெரியுமா? ஆமாம், தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டிடக் கலைக்கு முன்னோடியாக திகழும் நாடு அது. இன்னும் கணிக்க முடியவில்லையா? அதுதான் செட்டிநாடு!

 தமிழகத்தின் தெற்கே உள்ள சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்களே   ‘செட்டிநாடு’ என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் இப்படி குறிக்கப்படுகிறது. இவற்றை பொதுவாகச்  செட்டிநாடு என்றுகூட அழைக்கிறார்கள்.


இந்த செட்டிநாடு கிராமத்தில் காரைக்குடி, தேவகோட்டை,  கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி என பல ஊர்கள் அடங்கியுள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, ‘நாட்டுக்கோட்டை’ என்றும் அழைப்பது உண்டு.


செட்டி நாடு சமையல் எந்தளவுக்கு புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு புகழ் பெற்றது செட்டி நாடு வீடுகள். குறிப்பாக ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள செட்டிநாடு வீடுகள் மிகவும் பிரபலம்.  செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை கட்டப்பட்டவை.  எல்லா வீடுகளுமே 80 அடி முதல் 120 அடிவரை அகலம், 160 அடி முதல் 240 அடிவரை நீளம் கொண்டவை. பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் வீடுகள் இழைத்துக் கட்டப்பெற்றவை.  ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள்வரையிலும் பிடித்திருக்கிறது.


 கலையம்சம் உள்ள செட்டி நாடு வீடுகள் போலவே அதன் வீதிகளும் மிகவும் வித்தியாசமனவை. குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமை பேசினாலும், தமிழ்நாட்டின் பெருமை என்று செட்டிநாட்டை உறுதியாகக் கூறலாம்.
 

இது ஊட்டி மாதிரி (தேனி)


மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி பச்சை பசேல் எனப் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு இந்த மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த ஊர். அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் வெகு பிரசித்தம். 


குன்னூர், ஊட்டியில் இருப்பதுபோல மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை சராசரியாக 12 டிகிரி செல்சியஸ். அதனால், எப்போதும் இதமான குளிர் இருக்கும். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில்கூட ‘ஸ்வெட்டர்’ தேவைப்படும். 


வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள் என ரம்மியமாகக் காட்சியளிக்கிறது மேகமலை. எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது இங்கு தனிச்சிறப்பு. இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. திடீர் திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு, காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்) என விலங்குகளின் நடமாட்டத்தை அதிகம் காணலாம். 


சின்னமனூரிலிருந்து நேராக மேகமலைக்கு செல்ல பேருந்து வசதி உண்டு. காரில் செல்வதாக இருந்தால், ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்கு செல்லலாம்.
 

நாகரீகத் தொட்டி (நெல்லை)
 

திருநெல்வேலி செல்லும் பாதையில் இருக்கும் ஆதிச்சநல்லூர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? பொட்டல் காடாக காணப்படும் ஆதிச்சநல்லூர்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த, நம்முடைய கலாச்சாரம் செழித்தப் பகுதி என்றால் நம்புவீர்களா? 

1876-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜகோர் எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மானுடவியல் ஆராய்ச்சிக்காக, இந்தியாவுக்கு வந்தார். ஆதிச்சநல்லூரில் உடைந்த மண்பாண்டத் துண்டுகளைக் கண்டு தோண்டிப் பார்த்தபோது முதுமக்கள் தாழி, செம்புப் பட்டை, இரும்பு ஆயுதங்களைக் கண்டெடுத்தார். 


1900-ம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தபோது வாணலி, தயிர்ப் பானை, முக்கனிசட்டி, முக்காலிக் குதில், ஜாடி, உருளி, மையக் கிண்ணம் என சுமார் 100 வகையான சமையல் பாத்திரங்களும் ஈட்டி, எறிவேல், கைக் கோடாரி, பலிவாள், அம்புதலை, வேலாயுதம், அகன்றவாய்ப் பரசு, கத்தி, குத்துவாள் போன்ற  ஆயுதங்களும் தோண்டத் தோண்ட கிடைத்தன. இவையெல்லாம் வெளிநாட்டு அருங்காட்சியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


சமூக ஆர்வலர்களின் கோரிக்கையால்  நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் சுமார் ஆறு மாதங்கள் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி துறை இங்கு ஆய்வு நடத்தியது. அடுக்கு மண்பாண்டங்கள், 168 முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், விளக்குகள் கிடைத்தன. மேலும் பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று ஆதிச்சநல்லூரும் மிகத் தொன்மையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


ஆதிச்சநல்லூர் 3,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மொத்தம் உள்ள 114 ஏக்கரில் சுமார் 10 சென்ட் அளவுக்கு மட்டுமே குழிதோண்டி பழங்கால பொருட்களைச் சேகரித்துள்ளனர். 


கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களைத் தட்டினால் வெண்கல ஒலி கேட்கிறது, கீழே போட்டால் உடைவது இல்லை. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே இவர்கள் திராவிடர்களாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வங்கதேசத்து தொல்லியல் நிபுணர் பானர்ஜி, ஆதிச்சநல்லூரை 'நாகரிகத்தின் தொட்டில்’ என்கிறார்.


அதிசய தொட்டிப் பாலம் (கன்னியாகுமரி)



கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.  நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 1962-ல் தொடங்கப்பட்டு 1969-ல் கட்டி முடிக்கப்பட்டது. மாத்தூர் என்ற கிராமத்தில் கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கு நடுவில் இப்பாலம் கட்டப்பட்டது.


தொட்டிப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியும் தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் இப்பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. பெரிய பெரியத் தொட்டிகளாகத் தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் ‘தொட்டிப் பாலம்’ எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் ‘தொட்டில் பாலம்’ எனவும் இதை அழைக்கிறார்கள். இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று பார்த்தால், ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.


ஆசிய அளவில் புகழ்பெற்ற இப்பாலம் திருவட்டாற்றிலிருந்து 3 கி.மீ. தொலையிலும், கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் அமைந்துள்ளது.


தங்கமான நல்லதங்காள் (விருதுநகர்)


 ‘நல்லதங்காள்’ படம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நல்லதங்காள் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதை. விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கதை மிகப் பிரபலம்.


 நல்லதங்காள் தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் என நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்பதே நல்லதங்காள் கதை.


 நல்லதம்பி-நல்லதங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. தற்போது நல்லதங்காளை தெய்வமாக விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வணங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில்தான்  நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் நல்லதங்காளுக்கு இப்பகுதியில் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. 


 கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து காணப்படுகிறது. நல்லதங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் இங்கு நடைபெறும்  திருவிழா பிரசித்தம்.


 ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வாத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து அர்ச்சுனாபுரம் சென்றால், அங்கு  நல்லதங்கள் கோயிலை தரிசிக்கலாம்.


கல்லிலே ஒரு கலைவண்ணம் (தூத்துக்குடி)



ஒரே கல்லில் கோயில் உருவாக்கிய தமிழர்களின் தனித்திறமையைக்  கேள்விபட்டிருக்கிறீர்களா?  இல்லையென்றால், நீங்கள்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள  வெட்டுவான்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குதான் தமிழர்களின் பழம்பெருமை பேசும் கழுகுமலை பாண்டிய குடவரை கோயில்  உள்ளது


  கழுகு மலையின் அடிவாரத்தில் அப்படியே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது இந்தக் கோயில். ஒரு  மலையைக் குடைந்து ஒரு கலைப் பெட்டகத்தையே நிறுவியிருக்கிறார்கள் சமண முனிவர்கள். பண்டையக் காலத்தில் சமணர்கள், மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் இடமாக இருந்தது இந்தக் கழுகு மலை. அப்போது பல சமண முனிவர்கள் சேர்ந்து அற்புதமான சிற்பங்கள் மற்றும் கோயிலை கழுகு மலையில் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.


இது மற்ற குடவரை கோயில்போல கிடையாது. யாரும் எளிதில் செதுக்க முடியாத கடினமான பாறையில் ஆனது இந்த கழுகு மலை. அப்படி இருந்தும் அவ்வளவு துல்லியமாகவும் கலை உணர்வுடனும் சமண முனிவர்கள் இந்தச் சிலைகளைச் செதுக்கியிருக்கிறார்கள். வரகுணப் பாண்டியன் காலத்தில், சிவனுக்காகக் கழுகு மலையின் பாறையில் 7.50 மீ. ஆழத்துக்கு சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதியை ‘வெட்டுவான் கோயிலாக' செதுக்கியுள்ளனர்.


பண்டையத்  தமிழர்களின் சிற்பக் கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

- தி இந்து தீபாவளி மலர், 2013

20/10/2013

ரூத் மனோரமா: சமூகப் போராளி

அது 1975ஆம் ஆண்டு. மதுராந்தகம் அருகே புலம்பாக்கம் என்ற  கிராமத்தில் 5 கல்லூரி மாணவிகள் சமூகச் சேவை செய்வதற்காகச் சென்றனர். ஏழ்மை தாண்டம் ஆடிய அந்த ஊரில் மிகப்பெரிய  நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஊரில் விவசாயக் கூலிகளாக வேலைப் பார்த்தவர்களுக்கு வெறும் ஒன்னரை ரூபாய் மட்டுமே கூலியாகக் கொடுத்துகொண்டிருந்தனர் அவர்கள். அக்கம்பக்கத்து ஊரில் 5 ரூபாய் கூலியாக வழங்கும் நிலையில், இங்கு மட்டும் ஒன்னரை ரூபாய் கூலியாக வழங்கப்படுவதைக் கண்டு கொதித்தார் ஒரு மாணவி.

விவசாயக் கூலிகளின் குடும்பங்கள் உண்ண உணவில்லாமலும் உடுத்த உடையில்லாமலும் சாதிய அடக்குமுறைகளுடன் ஒடுங்கி இருப்பதைக் கண்ட அந்த மாணவி, கூலியை உயர்த்தி தரக்கோரி நிலச்சுவான்தாரர்களுடன் மல்லுக்கட்டினார். கல்லூரிப் பருவத்திலேயே ஏழை விவசாய கூலிகளுக்காகத் தைரியமாகக் குரல் கொடுத்த அந்த மாணவி வேறு யாருமில்லை, ரூத் மனோரமாதான் அவர். அப்போது சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துக்கொண்டிருந்த ரூத் மனோரமா, முதுகலையில் சமூகச் சேவை படிப்பை எடுத்து படிக்கவும் இந்தச் சம்பவமே  காரணமாக அமைந்தது.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரூத் மனோரமா, இன்று தேசிய அளவில் அறியப்பட்ட முதல் நிலை தலித் செயற்பாட்டாளராகவும், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்ணியவாதியாகவும் பரிணமித்துள்ளார். ‘மாற்று நோபல் விருது’ என அழைக்கப்படும்  ‘ரைட் டூ லைவ்ஹூட்’ என்ற விருது பெற்றவர் இவர். இது இவரது செயல்பாட்டுக்கான ஒரு சோறு பதம்.

1975 - 77-களில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேரிப் பகுதிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தது, சைதாப்பேட்டையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்தது ஆகியவை சென்னையில் அவரது குறிப்பிட்டத்தக்க பணிகளில் முக்கியமானவை. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ரூத் மனோரமா,  1980-களில் பெங்களூருவில் தனது தளத்தை மாற்றிக்கொண்டபோது அவரது போராட்டம் வீரியமடைந்தது. அந்தக் காலகட்டத்தில் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த 'ஆபரேஷன் டொமாலிஷன் ' என்ற திட்டத்தை எதிர்த்து ரூத் மனோரமா  நடத்திய போராட்டம், வெகுஜனப் போராட்டமாக மாறியது. ரூத் மனோரமாவுக்கென தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது இந்தப் போராட்டம்.

குடிசைவாழ் மக்களுக்காகக் குரல் கொடுத்த வேளையில் தலித் மற்றும் ஏழைப் பெண்களுக்காகவும் ரூத் மனோரமாவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தவறவில்லை.  சேரிகளில் வாழும்  ஏழைப் பெண்களுக்காக உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு இவரது போராட்டக்களம் அமைந்தது. பிற சமுதாயத்தில் இருப்பதுபோன்ற, ஆணாதிக்க மனோபாவம் தலித் ஆண்களிடம் காணப்படுவதை எதிர்க்கும் ரூத் மனோரமா, அதற்காகத் தலித் பெண்களையும் அணித்திரட்டி வெற்றி பெற்றவர்.
 
பல தளங்களில் பணி செய்துள்ள ரூத் மனோரமா, இஸ்மாமிய பெண்களுக்காகவும், மற்ற சமுதாயத்து பெண்களுக்காகவும், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள்தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம் என்பது இவரது வாதம். “இந்திய துணைக்கண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் எப்படி சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை’’ என்கிறார் ரூத் மனோரமா.

கர்நாடக மாநில குடிசை மக்களுக்கான சங்கம், பெண் குரல், பெண்கள் தேசிய கூட்டமைப்பு, கிறிஸ்தவர் தலித் அணி, அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான தேசிய மையம்,  தலித் பெண்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு வலுப்பெற்றன.

- தி இந்து, 2013 தீபாவளி மலர்