10/12/2013

வில்லனாக உருவெடுக்கும் மின் குப்பைகள்

உலகில் எந்தத் துறையில் ஏற்படும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம்  ‘இ-வேஸ்ட்’ என்றழைக்கப்படும் மின் குப்பைகள். புவி வெப்பமடைதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது பல் நாடுகளில் கொட்டிக் கிடக்கும் மின்குப்பைகள்.

இன்று தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்கள் என எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்படுத்தாத இடங்களே இல்லை. டி.வி, கம்ப்யூட்டர், பிரிண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மொபைல், ஏ.சி., ஜெராக்ஸ் இயந்திரம், ஆடியோ-வீடியோ என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பயன்பாட்டில் உள்ளவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பழுதானால்..? பழைய கடையிலோ, குப்பையிலோ எறிந்து விடுகின்றனர். இப்படித் தூக்கியெறியப்படும் பழைய மின் சாதனப் பொருட்கள்தான் மின் குப்பைகளாகின்றன.

இந்தியாவில் பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை, புனே, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்குப்பைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றன என்று கூறுகிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி 8 லட்சம் டன் மின் குப்பைகள் இந்தியாவில் குவிந்துள்ளன. இது 2009ஆம் ஆண்டில் 3.30 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது கவனிக்கத்தக்க விஷயம். இந்தியாவில் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 1.85 மில்லியன் டன் மின் குப்பைகள் வீதம் சேர்ந்துவருகின்றன. குறிப்பாகப் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்குப்பைகள் சேர்ந்து வருவதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் மின் குப்பைகள் உருவாவதில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின் குப்பைகளில்  60 சதவீதத்திற்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.
இந்தியாவில் இப்படி என்றால், வளர்ந்த நாடான அமெரிக்காவில் இன்னும் மோசம். இங்கு ஆண்டுதோறும் 5 கோடி டன் மின் குப்பைகள் சேர்வதாகத் தெரிவித்துள்ளது ஐ.நா.சபை சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு. ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் அங்குக் குப்பைகள் அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது அது. சீனாவிலும் இதே நிலைமைதான். அங்கும் மின் குப்பைகள் குவிந்து வருகின்றன.

இது சில நாடுகளில் குவிந்துள்ள மின் குப்பைகளுக்கு உதாரணங்கள்தான். இப்படிப் பல நாடுகளிலும் மின் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றனவா என்றால், இல்லை. மின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனாலும் வளரும்  நாடுகளிலும் 10 சதவீதம் மட்டுமே சரியான வழியில் இவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை உடைத்துத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது  ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளே மின் குப்பைகளைக் கையாள முடியாமல் திணறும் நிலையில், வளரும் நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்நாடுகளில்  மறுசுழற்சி செய்வதற்கான சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், உபயோகமில்லாத மின்குப்பைகள் வளரும் நாடுகளில் மலை போலக் குவித்து வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மின் குப்பைகளைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இவற்றில் காரீயம், காட்மியம், பாதரசம்,  நிக்கல் போன்ற ஆபத்தான உலோகங்கள் உள்ளன. மின்குப்பைகளில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் டாக்சின், ப்யூரன் போன்ற நச்சு வாயுக்களும் கலந்துள்ளன. இவற்றினால் மனிதர்களுக்குப் பல நோய்கள் வரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கம்ப்யூட்டர், டி..வி.களில் மானிட்டராகப் பயன்படுத்தும் கேத்தோட் ரே டியூப்பில் பேரியம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றை உடைத்தும், தூளாக்கியும் எறியும் போது நிலங்கள்  மாசடைகின்றன.
மேலும் மின்குப்பைகளில் உள்ள ஈயம், பாதரசம், பொன் முதலிய உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காக அமிலம், ரசாயனங்களைப் பயன்படுத்திக் கரைக்கின்றனர். அல்லது நெருப்பிலிட்டு உருக்குகின்றனர். இதையே வளரும் நாடுகளில் மறுசுழற்சியாகச் செய்கின்றனர். இவற்றில் இருந்து வெளியேறும் நச்சுவாயுகளும் நச்சுக் கழிவுகளும் காற்று, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. வளரும் நாடுகளில் கிராமப்புறங்கள், சிறிய நகரங்களின் குடிசைத் தொழில் போல நடக்கும் இதுபோன்ற பணிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே  நடைபெறுகின்றன. இதனால் விவசாயத்துக்கு ஆதாரமான நிலம், நீர், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகின்றன.

மெல்லக் கொல்லும் விஷம் போன்ற மின் குப்பைகளைப் பற்றி 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை  உலக நாடுகள் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. உலக வெப்பமயமாதல் பிரச்சினை தீவிரமடைந்த பிறகே மின்குப்பைகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச மாநாடுகளின் தாக்கத்தால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கேத்தோட் ரே டியூப்பை நிலத்தில் கொட்டத் தடை விதித்துள்ளன. வளர்ந்த நாடுகளில் இருந்து மின் குப்பைகளை இறக்குமதி செய்யச் சீனா மற்றும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மின் குப்பைகளை மிக மோசமாகக் கையாளும் நைஜீரியாவில் மறு சுழற்சி செய்யத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் இங்கிலாந்து முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான், தைவான் இங்கெல்லாம் எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் மின்குப்பைகளை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யச் சட்டத்தின் மூலம் வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளன.

இப்படி ஒவ்வொரு நாடும் முடிந்த அளவு நடவடிக்கை மேற்கொண்டாலும், வளரும் நாடுகளில் மின் குப்பைகளைப் பாதுகாப்பாகக் கையாளப் போதுமான சட்டங்கள் இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் ஆபத்தான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்-2003) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, மின்குப்பைகளுக்கான பொறுப்பையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது. மின் குப்பைகளின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கச் சட்டங்கள் மட்டுமே போதாது. அவற்றின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகளும் அவசியம். அதுவே இன்றைய தேவை.

மறுசுழற்சி எப்படி?

வளர்ந்த நாடுகளில் மின் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்கின்றனர். இதற்காகவே பிளாண்ட் அமைக்கின்றனர். அங்கு மின்குப்பைகளை 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சாம்பலாக்கிப் பாதுகாப்பாகப் புதைக்கின்றனர். இந்தியாவில் மின்குப்பைகளை அகற்றும் பணி குடிசைத் தொழிலாகவே நடப்பதால், அவற்றை உடைத்து எறிந்து விடுகின்றனர். பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்குப்பைகளை மறுசுழற்சி செய்ய வசதிகள் உள்ளன.

எவ்வளோ நச்சு

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள நச்சுப் பொருட்கள் பட்டியலைப் பார்த்தாலே பயம் வரும். இப்போது பிரபலமாகியுள்ள ஃப்ளாட் ஸ்கிரீன் மானிட்டரில் பாதரசம் உள்ளது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் காரீயம், காட்மியம், நச்சுத் தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. டாக்சின் வாயுக்களை வெளிப்படுத்தும் பாலிவினைல் குளோரைடு, கேபிள் இன்சுலேசன் கம்ப்யூட்டரில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு கம்ப்யூட்டரிலேயே 20 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது.

இந்த நச்சுப் பொருட்கள் எல்லாம் தவறான முறையில் கழிக்கப்படும் போது சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும்? பல்வேறு வகையான புற்று நோய்கள், அலர்ஜி, தோல் நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண் நோய் என ஏராளம். இனப் பெருக்க, நரம்பு, ரத்த மண்டலங்களிலும் நாளமில்லாச் சுரப்பிகளிலும் பெரியப் பாதிப்புகளை நீண்
ட காலத்துக்கு ஏற்படுத்தும் ஆற்றல் மின்குப்பைகளுக்கு உள்ளது.

- தி இந்து, 9/12/13


No comments:

Post a Comment