03/09/2018

அண்ணனுக்கு ஜே விமர்சனம்

கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழும் நாயகன், சூது நிறைந்த அரசியல்வாதிகளால் அரசியல் அவதாரம் எடுப்பதை  நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘அண்ணனுக்கு ஜே’.
 

முல்லை நகர் என்ற கிராமத்தில் மயில்சாமி கள் இறக்கி வேலை செய்யும் பணிக்கு உதவியாக இருக்கிறார் அவரது மகனான தினேஷ். அதே ஊரில் அடாவடி அரசியல்வாதியாக இருக்கிறார் தினா. ஒரே கட்சியாக இருந்தாலும் அவருக்கும் மாவட்ட செயலாளர் ராதாரவிக்கும் ஆகாது. தினா அந்த ஊரில் மதுபான கடை ஒன்றை ஏலத்துக்கு எடுக்கிறார். அதற்கு மயில்சாமியின் கள் இறக்கும் தொழில் இடைஞ்சலாக இருக்கிறது. போலீஸ் மூலம் மயில்சாமிக்கு தொந்தரவுக் கொடுக்கிறார் தினா.
 

தன் தந்தைக்கும் அரசியல் செல்வாக்கு இருந்தால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தன் தந்தையை அரசியல்வாதியாக்க ராதாரவியின் உதவியை நாடுகிறார் தினேஷ். மயில்சாமியை அரசியல்வாதியாக்க உதவுவதாகக் கூறி, தினாவை கொலை செய்ய தினேஷை கொம்பு சீவி விடுகிறார் ராதாரவி. பயந்த சுபாவம் உள்ள தினேஷ், தினாவை கொலை செய்ய ஒத்திகைப் பார்க்கிறார். அன்றைய இரவில் தினேஷ் கொல்வதற்கு முன்பே சாலையில் குற்றுயிரும் கொலையுருமாகக் கிடக்கிறார் தினா. தினேஷ்தான் தீனாவை கொல்ல முயற்சித்தார் என்று ஊரே பேசுகிறது. போலீஸில் மாட்டிக்கொள்ளும்  தினேஷைக் காப்பாற்றமால் அரசியல்வாதி ராதாரவியும் நழுவிவிடுகிறார். ஜாமினில் வெளியேவரும் தினேஷ் என்ன செய்தார், அவர் எப்படி அரசியல் அவதாரம் எடுத்தார் என அடுத்த நகர்வுகளின் தொகுப்புதான் படத்தின் மீதிக் கதை.
 

இயக்குநர் வெற்றி மாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், உள்ளூர் அரசியலிலும் அரசியல்வாதிகளிடமும் நிறைந்திருக்கும் சூது, வாதுகளைப் பேசுகிறது. ஊரில் நடக்கும் சாவில் தொடங்கி, போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதுவரை எல்லாவற்றிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் செய்யும் அரசியலையும் அவர்களிடம் நிறைந்திருக்கும் ஈகோவையும் அதிகம் மிகைப்படுத்தாமல் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் வெளிபடுத்தியிருப்பதைப் பாராட்டலாம். உள்ளூர் சாதி அரசியல் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்காமல், அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும்  ரவுடியிசத்தை முன்வைத்து அதில் நகைச்சுவையையும் கலந்து திரைக்கதை அமைத்திருப்பது படத்துக்கு பலம்.
 

 படத்தின் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது. முதல் பாகம் முழுவதும் குடியும் நண்பர்களுமாகத் திரியும் தினேஷ், இரண்டாம் பாகத்தில்தான் அரசியல் அவதாரம் எடுக்கிறார். ஆனால், அவர் அரசியல்வாதி அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்கள் வழக்கமான அரைத்த மாவு. முதலில் யார் சவுண்டு விடுகிறானோ அவனே வீரன் என்று சிறையில் கற்கும் பாடத்தை வைத்து, ஒரு சண்டைக் காட்சியில் சவுண்டு விட்டபடியே ரவுடிகளை தினேஷ் விரட்டுவது ரசிக்க வைக்கிறது.
 

ஆனால், ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்ய முயற்சித்துவிட்டு சிறைக்கு சென்றுவந்தவுடனே, இன்னொரு அரசியல் கட்சியில் தினேஷூக்குப் பதவி கிடைப்பதாகக் காட்டுவது கற்பனைக்கு எட்டாதக் காட்சிதான். பொதுக்கூட்டத்தில் தாங்களாகவே கரண்ட்டை நிறுத்திவிட்டு  எதிர்கட்சியைத் திட்டி விமர்சிப்பது, பணத்தை அதிகம் செலவு செய்பவருக்கே தலைவரின் கடைக்கண் பார்வை கிடைக்கும் வரையிலான அனைத்து காட்சிகளிலும் சமகால அரசியலை இயக்குநர் நையாண்டி செய்திருக்கிறார். தினா ஏன் குற்றுயிராகக் கிடந்தார் என்று சொல்லப்படும் காரணம் அபத்தம்.
 

மட்ட சேகர் பாத்திரத்தில் தினேஷ் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நாயகி மகிமாவை சீண்டுவது, தந்தைக்காக உருகுவது, அரசியல்வாதியால் ஏமாறும்போது உடைவது எனக் காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறார். டியூட்டோரியலில் படிப்பவராக வருகிறார் நாயகி மகிமா. தினேஷை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். பேண்டு வாத்தியக் குழுவில் அவர் வேலை செய்வது படத்துக்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை.
 

வெள்ளையும் சுளையுமாக வரும் ராதாரவி அலட்டல் இல்லாத அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். பல காட்சிகள் அவரது முந்தைய படங்களின் சாயல்களைக் கொண்டிருக்கின்றன. காமெடியிலிருந்து விலகி குணச்சித்திரப் பாத்திரத்துக்குத் தாவியிருக்கிறார் மயில்சாமி.  மகனுக்காக உருகுவது, மகன் அரசியல்வாதியாகும்போது பயப்படுவது என மயில்சாமி தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தினாவின் அடாவடி அரசியலுக்கு அவரது உடல்மொழி கச்சிதம்.
 

அர்ரோல் கொரெல்லின் பின்னணி இசை படத்துக்கு பலம். ஆனால், பாடல்கள் ஒட்டவில்லை. விறுவிறுப்பான படத்தின் காட்சிகளுக்கு விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பும் உதவுகிறது.
 

உள்ளூர் அரசியல்வாதிகளை பல விதங்களில் தோலுரித்துக் காட்டிய விதத்தில் இந்த ‘அண்ணனுக்கு’ தாராளமாக ‘ஜே’ போடலாம்.

மதிப்பெண்: 2.5 / 5

No comments:

Post a Comment