10/11/2009

அழிகிறது ஆர்க்டிக் பனிமலை!

‘இன்னும் 10 ஆண்டுகளில் வட துருவ ஆர்க்டிக் கடலில் பனிமலையில் முழுவதும் உருகிவிடும்’ என்று புதிய குண்டை வீசியிருக்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் வாதம்ஸ். இவருடைய ஆராய்ச்சி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை அலற வைத்துள்ளது. இதற்கு முன்பு, 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இன்னும் 30 ஆண்டுகளில் பனிமலைகள் உருகிவிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி?

உலகம் வெப்பமயதாமதல் பிரச்சினை தொடங்கியதிலிருந்தே ஆர்க்டிக் கடலில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது, உலக வெப்பமயமாதலின் தீவிரத்தை ஆர்க்டிக்கில் மட்டுமே துல்லியமாகக் காண முடியும். ஆர்க்டிக் கடலில்தான் பனிமலைகள் அதிகளவில் சூழ்ந்துள்ளன.  2005-ம் ஆண்டுக்கு முன்புவரை அங்கு ஆய்வு மேற்கொண்ட பன்னாட்டு விஞ்ஞானிகள், ‘இன்னும் 100 ஆண்டுகளில் பனிமலைகள் உருகிவிடும்’ என்றே அபாய சங்கு ஊதிவந்தனர். இதை உலக நாடுகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

2002-ல் அமெரிக்காவின் கொலொராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்க்டிக் கடலின் மேற்பரப்பில் ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்ட பின்னரே எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. ‘ஆர்க்டிக் கடலில் உள்ள எல்லீம்சர் தீவில் நான்கில் ஒரு பகுதி பனிப்பரப்பு இப்போது இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு 9 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பனிப்பரப்பு இத்தீவில் இருந்தது. இப்போது இது வெறும் ஆயிரம் சதுர கிலோ மீட்டராக மாறிவிட்டது’ என்று சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்தனர் விஞ்ஞானிகள். அதோடு, அடுத்த குண்டையும் போட்டனர் ஆராய்ச்சிக் குழுவினர்... ‘இன்னும் 30 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடலில் பனிமலைகள் உருகிவிடும் அபாயம் உள்ளது!’

இதைக் கேட்டதும் லேசாக ஆடிப்போன உலகத் தலைவர்கள் உலக வெப்பமயமாதல் உயர்வைக் குறைக்க பல வழிகளிலும் தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். 2009 மார்ச் - மே மாதங்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் பீட்டர் வாதம்ஸ், பேராசிரியர் பென் ஹாடோவ் தலைமையிலான குழுவினர் ஆர்க்டிக் உறைகடல் மேற்பரப்பில் ஆய்வில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 450.6 கிலோ மீட்டர் நடந்துசென்ற ஆய்வுக் குழுவினர், சென்ற வழியெங்கும் பனிப்படலத்தின் ஆழத்தை அளந்தனர். சேகரித்த தகவல்களை 4 மாதங்களாக ஆய்வு செய்தனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் பலரது தூக்கத்தையே கெடுத்துவிட்டன. ‘இன்னும் 10 ஆண்டுகளில் வட துருவ ஆர்க்டிக் கடலில் பனிமலைகள் முழுவதும் உருகிவிடும். ஏற்கனவே கணித்திருந்த காலத்தைவிட மிகவும் முன்கூட்டியே இந்த நிலை ஏற்படலாம்’ என்று அணுகுண்டையே போட்டிருக்கிறது அக்குழு. இந்தக் கணிப்பு சரியா?

‘சரிதான்’ என்கிறார் பீட்டர் வாதம்ஸ். ‘புவிச் சூட்டின் காரணமாக ஆர்க்டிக் கடல் வட துருவத்தில் பனிமலைகள் வேகமாக உருகிவருகின்றன. குறிப்பாகக் கோடை காலங்களில் எகிறும் அதிகபட்ச வெப்பநிலையால் கீரின்லாந்து எல்லீம்சர் தீவுப் பகுதிகளில் உறைபனி மறைந்துவருகிறது. இதைக் கவனிக்கையில், ‘2020-ல் ஜப்பானிலிருந்து ஆர்க்டிக் வடதுருவ வழியாக அட்லாண்டிக்கிற்கு கப்பலில் சுலபமாகச் செல்ல முடியும். இந்த மாற்றம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது’ என்று அலராம் அடிக்கிறார் அவர்.

 ‘2008- ஆண்டு நவம்பரில் ஆர்க்டிக் கடலின் பனிப் பரப்பளவு 46 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இதே காலட்டம் 2009-ல் 41 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்தான். ஓராண்டுக்குள் சுமார் 5 லட்சம் சதுர கிலோ மீட்டர் பனிப்பரப்பு காணாமல் போய்விட்டது. அதோடு உறைபனி மேலே நடந்து ஆய்வு செய்தபோது பல இடங்களில் பனிக்கட்டியின் அடர்த்திக் குறைந்திருப்பதையும் காண முடிந்தது’ என்று தன் பங்குக்குக் கிலி ஏற்படுத்தியுள்ளார் பேராசிரியர் பேராசிரியர் பென் ஹாடோவ்.

2007-ம் ஆண்டு கொலோராடோ பல்கலைக்கழகமும் இதே கருத்தையே கூறியது. ‘கடந்த 35 ஆண்டுகளாக ஆர்க்டிக் கடல் பகுதியில் பனி அளவை செயற்கைக்கோள் மூலம் கணக்கிட்டு வருகின்றனர். ஆர்க்டிக் கடல் மேற்பரப்பில் பனிப் பரப்பளவு இப்போது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 1979 - 2000 ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி இப்போது 16 லட்சம் சதுர கிலோ மீட்டர் பனி உருகியுள்ளது. இது அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் டெக்ஸாஸ் மாநிலத்தின் பரப்பளவு அல்லது இங்கிலாந்தின் 10 மடங்கு பரப்பளவுக்குச் சமம்!’

ஆர்க்டிக் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளில் 2-7 பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். இதனால், கடலில் குளிர்ந்த காற்று மறைந்து வெப்பக் காற்று சுழன்று அடிக்கிறது. இதன் காரணமாக பூமி சூடாகி பனிச்சிகரங்களில் பனி மலைகள மறைவதும், துருவக் கடல்களில் பனிப்படலங்கள் உருகுதலும் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நடைபெறுகிறது.

100 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனி மறையும் என்ற முந்தைய கணிப்பு, இப்போது 10 ஆண்டுகளாகச் சுருங்கிவிட்டது. விரைவிலேயே உலகில் கடல் மட்டம் அதிகரித்து பல பகுதிகள் கடலுக்குள் சங்கமமாகி அழியும் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத - ஆனால், நிஜமாகக்கூடிய கற்பனை!

சொகுசு வாழ்க்கைக்கு விலையாக இயற்கையைக் காவுகொடுத்து வருகிறோம். இது எங்கு கொண்டு போய்விடுமோ? நிலவில் வளம் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா, மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ் முடியுமா? இப்படி வளர்ந்த நாடுகள் ஆய்வுகளில் மூழ்கிக்கிடக்கின்றன. கண் முன்னே மறைந்துவரும் ஆர்க்டிக் பனிமலையையும் கடலையும் காப்பாற்றாமல் போனால், வருங்காலச் சந்ததியினர் நம்மை மன்னிப்பார்களா?

- முத்தாரம், 9/11/2009 

No comments:

Post a Comment