30/12/2018

வட சென்னையின் கேரம் இளவரசி!

கேரம் வடசென்னையின் விளையாட்டு என அழைக்கப்படுவதுண்டு. இன்றும்கூட வடசென்னைப் பகுதியில் உலாவந்தால், வீதியோரங்களில் நின்றுகொண்டு கேரம் விளையாடு பவர்களைப் பார்க்கலாம். வடசென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தார், அதே பகுதியிலிருந்து வந்த ஒரு பெண். மூன்று முறை கேரம் உலக சாம்பிய னாக வெற்றிக்கொடி கட்டிய இளவழகிதான் அவர்.

சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட இளவழகி, பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை இருதயராஜ் பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்திய ஏழை கூலித் தொழிலாளி. வடசென்னைக்கே உரிய கேரம் விளையாட்டு மீதான ஆர்வம் அவருக்கும் இருந்தது. வடசென்னையில் எங்கே கேரம் போட்டி நடந்தாலும், அங்கே இருதயராஜ் ஆஜராகிவிடுவார்.

தந்தையிடமிருந்துதான் கேரம் விளையாட்டு மீது இளவழகிக்கும் ஆர்வம் பிறந்தது. ஆனால், சொந்தமாக ஒரு சிறிய கேரம் போர்டு வாங்கி விளையாடும் அளவுக்கு அவருடைய வீட்டில் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை; வீடும் பெரியதில்லை. குடிசைமாற்று வாரிய வீட்டில்தான் சகோதரிகளுடன் வசித்துவந்தார்.

திருப்புமுனைப் பரிசு

ஆனால், கேரம் விளையாட்டு மீது இளவழகிக்குத் தணியாத தாகம். ஆறு வயது முதலே அக்கம் பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கிவிட்டார். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிளப்பில் தன் தந்தையின் நண்பர் உதவியுடன் கேரம் பயிற்சியை இளவழகி மேற்கொண்டுவந்தார். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்குச் சென்றுவிடுவார். கேரம் காய்களைக் குறிபார்த்து ‘பாக்கெட்’ செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட இளவழகி, அந்த விளையாட்டின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

அந்த நேரத்தில் பள்ளிகள் அளவிலான கேரம் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளவழகி வெற்றிபெற்றார். இளவழகியின் வெற்றிக்காக அவருக்குப் பரிசாக கிடைத்தது, ஒரு கேரம் போர்டு. அந்தப் பரிசு அவருக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நினைத்த நேரத்தில் கேரம் விளையாடவும் பயிற்சி மேற்கொள்ளவும் அது உதவியது.

கேரம் விளையாட்டில் முன்னேறிவந்த இளவழகி, பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். முதன்முதலாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது, இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது. ஆனால், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரம் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கினார். மாநில அளவிலான போட்டிகளைத் தாண்டி, தேசிய அளவிலும் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.

உலக சாம்பியன்

தேசிய அளவில் முன்னேற்றம்கண்ட இளவழகி, 13 வயதில் தேசிய சாம்பியனாக உருவெடுத்தார். இதனால், மாலத்தீவில் நடந்த கேரம் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்க இளவழகிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போட்டியில் இளவழகியின் பக்கம் வெற்றிக்காற்று வீசியது. கேரம் ஆசிய சாம்பியன் என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். கேரம் விளையாட்டில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னேறிவந்த இளவழகிக்கு, 2006 மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமைந்தது.
தேசியப் போட்டிகளில் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகித்துவந்ததால், 2006-ல் டெல்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி 2-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இளவழகிக்குக் கிடைத்தது. இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆயிஷா முகமதை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார் இளவழகி. தொடர்ந்து 2008-ல் பிரான்சில் நடைபெற்ற 5-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

கஷ்டத்துக்கு மத்தியில்...


தொடர்ந்து கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இளவழகி, 2010-ல் அமெரிக்காவின்  ரிச்மாண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை ராஷ்மி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடினார். ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2012-ல் பிரான்சில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெற்றியைத் தட்டிவந்தார். மொத்தமாக மூன்று முறை கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்குப் பெருமைசேர்த்தார் இளவழகி.
இளவழகி கேரம் விளையாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருக்கிறார். அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, இலங்கை, மாலத்தீவு எனப் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கிடைத்ததுபோல் ஸ்பான்ஸர் யாரும் இளவழகிக்குக் கிடைக்கவில்லை.

இதனால், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பல நேரம் செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். நல்ல உள்ளங்களின் உதவியால்தான் அவரால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிந்தது. அப்படிக் கிடைத்த உதவியாலும் கேரம் விளையாட்டில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தாலும் அந்த விளையாட்டில் இந்தியாவில் கோலோச்சும் பெண்ணாக மாறினார் இளவழகி.


கிடைக்காத அங்கீகாரம்



இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். இதேபோல் சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 111.  இந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் சாதித்த இளவழகிக்குப் பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை. கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு ஒரு முறை தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்தது. அப்படிக் கிடைத்த பணத்தில் தள்ளுவண்டியால் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்தார் இளவழகி.

இந்தியாவில் கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை வடசென்னையைச் சேர்ந்த மரிய இருதயத்துக்கு உண்டு. ஆனால், பெண்கள் பிரிவில் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த இளவழகிக்கு அந்த விருதுகூடக் கிடைக்காமல்போனது. நல்லவேளையாக கேரம் விளையாட்டில் சாதித்ததற்காக ஓ.என்.ஜி.சி.யில் வேலை கிடைத்தது மட்டுமே அவருக்கான அங்கீகாரம்.

தேசிய முன்னாள் கேரம் சாம்பியனான சக்திவேலைத் திருமணம் செய்துகொண்ட இளவழகி, தற்போது மாதவரத்தில் வசித்துவருகிறார்.  தான் கற்றதைப் பிறருக்குக் கற்றுத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  ‘உலக கேரம் சாம்பியன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்கு கேரம் விளையாட்டைக் கற்றுக்கொடுத்துவருகிறார்.

கேரம் என்பது செஸ் விளையாட்டைப் போலவே அறிவுப்பூர்வமான விளையாட்டு. வறுமை, புறக்கணிப்பு போன்றவற்றைத் தாண்டி தன்னிடம் இருந்த கேரம் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்கு இளவழகியின் மன உறுதியே காரணம்.




- இந்து தமிழ், 30/12/2018

23/12/2018

மாரி 2 விமர்சனம்

சென்னையில் ரவுடி ராஜ்ஜியம் நடத்திவருகிறார்கள் தனுஷும் அவருடைய நண்பர் கிருஷ்ணாவும். போதைப் பொருள் மட்டும் கடத்தக் கூடாது என்று தனுஷுக்கு உயர்ந்த நோக்கம்! தனுஷை  எதிர்க்கும் கூட்டம் போதைப் பொருள் கடத்தும் தொழிலை செய்ய துடிக்கிறது. இன்னொருபுறம் தனுஷை எப்படியும் கொல்வது என்ற பழைய பகையுடன் சிறையிலிருந்து தப்பிவருகிறார் டொவினோ தாமஸ். போதை பொருள் கடத்த துடிக்கும் கூட்டத்தோடு சேர்ந்து, அந்தத் தொழிலை செய்ய திட்டம் போடுகிறார் டொவினோ தாமஸ். இதற்கு கிருஷ்ணாவின் தம்பி உதவுகிறார்.

போதை பொருளைக் கடத்த தனுஷை ஒருதலையாகக் காதலிக்கும் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவியைப் பயன்படுத்தும் டொவினோ தாமஸ், தனுஷையும் கிருஷ்ணாவையும் பிரிக்கவும் காய்  நகர்த்துகிறார். அந்த முயற்சியில் நண்பர்கள் தனுஷும் கிருஷ்ணாவும் பிரிகிறார்கள். அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி தனுஷைத் தீர்த்துக்கட்ட டொவினோ தாமஸ் முயற்சிக்கிறார். கொலை முயற்சியில் சாய் பல்லவி சிக்குகிறார். இதன்பிறகு தலைமறைவாகும் தனுஷ் என்ன ஆனார்? அரசியல்வாதியாக உயரும் டொவினோ தாமஸை தனுஷ் என்ன செய்தார்? பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மாரி 2.

‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. சில கதாபாத்திரங்களையும் தனுஷின் தோற்றத்தையும் தவிர முந்தைய படத்தின் சாயல் துளியும் இல்லாமல் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். ரவுடி கோஸ்டி கதைக்கான  கரு இருந்தும், திரைக்கதையைப் பற்றி கவலை இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். விளைவு, கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடுகிறது திரைக்கதை. ரவுடித்தன கதைகளுக்கே உரிய விறுவிறுப்பு படத்தில் இல்லை. பழிவாங்கல் கதையில் இருக்கும் சடுகுடு ஆட்டங்களும் இல்லை. இந்தக் குறையைப் போக்க நகைச்சுவைக் காட்சிகளை தூக்கலாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் ஈர்ப்பு இல்லை.  இந்தக் கதையை துணிந்து இயக்கிய பாலாஜி மோகனையும் நம்பி நடித்த தனுஷையும் நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

முதல் பாகத்தில் ரவுடியில் நல்ல ரவுடி என்ற பாத்திர வார்ப்பாக வருகிறார் தனுஷ். இரண்டாம் பாகத்தில் மாரியப்பனாக சாதுவாக  மாறிவிடுகிறார். கிளைமேக்ஸில் மீண்டும் ரவுடி மாரியாக மாறி வில்லனை வதம் செய்கிறார். ‘பாட்ஷா’ பாதிப்பிலிருந்து எப்போதுதான் தமிழ் சினிமா மீளும் என்றே தெரியவில்லை. டொவினோ தாமஸ் வில்லனாக அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்களில் கொஞ்சமும் வலுவில்லை. தலைமறைவாகிவிடும் தனுஷை, எட்டு ஆண்டுகள் கழித்தும் விட்ட இடத்திலிருந்து இயக்குநர் காட்ட முனைந்திருப்பது அயற்சியை ஏற்படுத்திவிடுகிறது. கொலைகளை சர்வ சாதாரணமாகச் செய்கிறார் தனுஷ். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத ஐ.ஏ.எஸ். அதிகாரி வரலட்சுமியும் போலீசும், தனுஷை வைத்து டொமினோ தாமஸை கொலை வழக்கி சிக்க வைக்க செய்யும் உத்தி பெரிய நகைமுரண்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க தனுஷ்தான் இந்தப்
படத்தில் பெரிய பலம். ரவுடியாக வெடிப்பது, சாதுவாக உருகுவது, கோபத்தில் கொப்பளிப்பது, ஒருதலையாகக் காதலிக்கும் சாய் பல்லவியைக் கலாய்ப்பது என தனுஷ் படம் முழுவதும் தன் ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறார். ‘அராத்து ஆனந்தி’யாக ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவி, அமர்க்களப்படுத்தியிருக்கிறார். துரத்திக் காதலிப்பதிலும், செண்டிமென்ட் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கே உரிய அவரது உடல்மொழியும் கச்சிதம்.

தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரும் வரலட்சுமியும், போலீஸாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  வில்லனாக அறிமுகமாகியிருக்கும் டொவினோ தாமஸ் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், ரவுடிக்குரிய உடல்மொழி அவரிடம் மிஸ்ஸிங்.  தனுஷூக்கு வலது, இடதுவாக பகடிப் பேர்வழிகளாக வருகிறார்கள் ரோபோ சங்கரும் வினோத்தும். படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. பின்னணி இசையை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

'மாரி’ படமே பராவாயில்லை என்று சொல்ல வைத்ததுதான் ‘மாரி 2’வின் வெற்றி.

மதிப்பெண்: 1.5 / 5

09/12/2018

கிரிக்கெட் புயல்!

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக ஏழு அரை சதங்களை விளாசிய வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் அதிக அரை சதங்களை விளாசிய வீராங்கனை; ஒட்டுமொத்தமாகச் சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களை ஓரங்கட்டி அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை என இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் யார்? ‘இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்’ என அழைக்கப்படும் மித்தாலி ராஜ்தான் அவர். இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா கேப்டன்.

17 வயதில் இடம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்தான் மித்தாலி ராஜ் பிறந்துவளர்ந்தார். ஆனால், அடிப்படையில் அவர் ஒரு தமிழர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின் தந்தை துரைராஜ் விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். இன்று மகளிர் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கும் மித்தாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர். மித்தாலியை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவரது பெற்றோர் கிரிக்கெட் பக்கம் அவரை தள்ளிவிட்டனர்.  மித்தாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது. ஆனால், 17 வயதிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தன்னை மெருக்கேற்றிக் கொண்டார்.

அறிமுகப் போட்டியில் சதம்

1999-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிதான் அவரது முதல் சர்வதேச ஆட்டம். முதல் போட்டியிலேயே 114 ரன்கள் விளாசி மகளிர் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். முதல் போட்டியே அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் மித்தாலியும் மற்றொரு அறிமுக வீராங்கனையான ரேஸ்மா காந்தியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இந்தப் போட்டியில் இருவருமே சதம் அடித்தார்கள். மித்தாலி ராஜ்க்கு முன்பாக ரேஷ்மா காந்தி சதம் அடித்ததால், அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்புதான் மித்தாலிக்குக் கிடைத்தது. இந்தப் போட்டிதான்  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மித்தாலிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அபாயகரமான வீராங்கனை

இதேபோல 2002-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது போட்டியில்  214 ரன்களைக் குவித்து கவனத்தை ஈர்த்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுவரை இதுதான் இரண்டாவது அதிகபட்ச ரன். சச்சின் டெண்டுல்கரைப்போல சூழ்நிலைக்கு தகுந்தார்போல விளையாடும் அற்புதமான வீராங்கனை மித்தாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப்போல தெரிந்தாலும், ரன் குவிப்பதில் வல்லவர். மித்தாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே ‘அபாயகரமான கிரிக்கெட் வீராங்கனை’ என்ற சிறப்பையும் பெற்றார் மித்தாலி ராஜ்.

சாதனை மேல் சாதனை

சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டிகளே பெண்களுக்கு நடத்தப்படுவது
நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் முடி சூடா ராணியாகக் கோலோச்சிவருகிறார் மித்தாலி ராஜ். இதுவரை 198 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள 6,550 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். இதில் 7 சதங்கள், 51 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 51. உலக அளவில் எந்த வீராங்கனையுமே 6 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை இதுவரை தொட்டதில்லை. 2017-ம் ஆண்டில் அந்தச் சாதனையைப் படைத்த முதல் வீராங்கனையானார் மித்தாலி. அதே ஆண்டில் மித்தாலி ராஜ் கிரிக்கெட் ராணியாக உச்சம் தொட்டார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7 அரை சதங்கள் இந்தப் பெயரை அவருக்குப் பெற்று தந்தது. ஆண்கள் அணியில்கூட எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இந்திய அணியின் வெற்றிகரமான சேஷிங்குகளில் மித்தாலியின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை. சேஷிங்குகளி மட்டும் அவரது சராசரி  109.68 ரன்.

டி20 முத்திரை

ஒரு நாள் போட்டிகளைபோலவே விரைவாக ரன் சேர்க்கக்கூடிய டி20 போட்டியிலும் மித்தாலி ராஜ் தன் ராஜ்ஜியத்தைப் படரவிட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடினார். 35 வயதை எட்டியபோதும் டி20 போட்டியில் இப்போதுவரை அணியின் முக்கிய வீராங்கனையாக மித்தாலி ராஜ் தொடர்கிறார். 85 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மித்தாலி, 2,283 ரன்களைக் குவித்தார். ஒட்டுமொத்தமாக டி20 ரன் குவிப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்கூட மித்தாலிக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். டி20 போட்டியில் 18 அரைசதங்களும் இதில் அடங்கும். எவ்வளவோ சந்தர்ப்பங்களில் ஒரு நாள் போட்டியிலும் டி20 போட்டியிலும் தனி ஆளாக நின்று இந்திய அணியை மீட்டிருக்கிறார்.

வெற்றிகரமான கேப்டன்

வீராங்கனையாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் மித்தாலி ராஜ் வெற்றிகரமானவராகத் திழந்துவருபவர். மகளிர் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், இந்திய அணியையும் அந்த அணிகளுக்கு இணையாகப் பேச வைத்தவர் மித்தாலி ராஜ். உச்சகட்டமாக இவரது தலைமையின் கீழ் 2016 முதல் 2017-ம்
ஆண்டுவரை தொடர்ச்சியாக 16 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்ததை இதற்கு உதாரணமாக்ச் சொல்லலாம். சுமார் 19 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்துவரும் மித்தாலி ராஜூக்கு மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கடந்த ஆண்டு வந்தும், நூலிழையில் மித்தாலி ராஜ் கோட்டைவிட்டார். ஆனாலும், இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலியின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்  2013-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 2015-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.  இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் எனப் போற்றப்பட்டபோதும், கிரிக்கெட் வீராங்கனைகள் அதில் ஒரு பங்கு அளவுக்குக்கூடப் போற்றப்பட்டதில்லை. ஆனால், அந்த ஓரவஞ்சனையைக்கூட தனது பேட்டால் விரட்டி, மகளிர் கிரிக்கெட்டுக்கும் விசாலமான பார்வையைக் குவியத் தொடங்கி வைத்ததில் மித்தாலி ராஜூக்கு இந்திய மகளிர் கிரிக்கெட்  என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

- இந்து தமிழ், 06/12/18


26/11/2018

இறுதிச்சுற்று!


வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் சிலரை ஏணியிலும் ஏற்றி வைக்கும். சிலரை
தலைகீழாகக் குப்புற கவிழ்த்துவிடும். தடகளத்தை உயிர் மூச்சாக நினைத்த அந்தப் பெண்ணுக்கு, ஒரு வெற்றியாளரின் மூலம் குத்துச்சண்டை என்ற விளையாட்டு பெரும் திருப்பமாக அவருக்குள் ஊடுருவியது. அந்த ஊடுருவலும் அந்த விளையாட்டின் மீதான அதீத ஆர்வமும் பின்தங்கிய மாநிலத்தில் பிறந்த அவரை, உலக சூப்பர் ஸ்டாராக மாற்றியது. அவர், ‘மெக்னிஃபிசியன்ட் மேரி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மேரி கோம்.
மணிப்பூரில் உள்ள கங்காதேய்தான் மேரி கோமின் சொந்த ஊர். பள்ளியில் படித்த காலத்தில் படிப்பின் மீது அவருக்குப் பெரிதாக  ஈடுபாடு இல்லை. படிப்பு, தேர்வு போன்ற வார்த்தைகள் எல்லாம் அவருக்கு பாகற்காய். மாறாக விளையாட்டு என்றால் கல்கண்டு. கஷ்டப்படும் தன் தாய், தந்தையருக்கு உதவியாக விவசாய வேலை பார்ப்பதிலும் அவருக்கு தீவிர ஈடுபாடு இருந்தது. பள்ளியில் விளையாட அழைத்தால் முதல் ஆளாகப் பெயர் கொடுத்துவிடுவார். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகள்தான் அவருக்கு பிடித்தமானவை.
குத்துச்சண்டையில் ஆர்வம்
இந்த ஆர்வம் எல்லாம் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் பதக்கம் வெல்லும்வரைதான் இருந்தது. 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிங்கோ சிங் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அந்த விளையாட்டின் மீது மேரி கோமுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 200-0-ம் ஆண்டில் குத்துச்சண்டை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்து, அந்த விளையாட்டில் அடியெடுத்து வைத்தார் மேரி கோம். ஆனால், குத்துச்சண்டை விளையாட கையுறை வாங்கக்கூட காசு இல்லாத வறுமையான சூழலில் இருந்தார் மேரிகோம். கையுறை இல்லாமலேயே வெறுங்கைகளால் குத்துச்சண்டையைப் பழக ஆரம்பித்தார். வெறும் 18 நாட்களிலேயே குத்துச்சண்டை நுணுக்கங்களை அக்குவேறு ஆணி வேறாக கற்றுக்கொண்டார்.
வீட்டுக்குத் தெரியாமல்...
குத்துச்சண்டை விளையாடுவதை வீட்டில் யாருக்கும் மேரி கோம் சொல்லவில்லை. சொன்னால், விளையாட விடமாட்டார்கள் என்பதால், யாருக்கும் சொல்லாமலேயே குத்துச்சண்டை கற்றுக்கண்டதோடு போட்டிகளுக்கும் சென்றுவந்தார். மாநில அளவில் விளையாடியபோதும்கூட வீட்டில் யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மேரி கோமின் தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது திடுக்கிட்டுப் போனார். செய்தித்தாளில் சிரித்த முகத்தோடு மேரி கோமின் ஒளிப்படத்தைப் பார்த்ததுதான் இதற்குக் காரணம். இதனால் அவருக்குக் கோபம் தலைக்கேறியது.  “குத்துச்சண்டை விளையாடுறியா, காயம் ஏற்பட்டுச்சுன்னா உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவா?” என்று மேரி கோமிடம் சத்தம் போட்டார் அவரது தந்தை.
சர்வதேச வாய்ப்பு
குத்துச்சண்டை விளையாட மேரி கோமின் தந்தை விரும்பாவிட்டாலும், தாயின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. அப்போதே மாநிலம், தேசிய அளவில் தன்னை நிலை நிறுத்திகொண்ட மேரி கோம், சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். அவரது திறமையை நிரூபிக்க 2001-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பெரும் வாய்ப்பாக அமைந்தது. 48 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய மேரி கோம், இறுதிச் சுற்றுவரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பினார். இதுதான் அவர் பெற்ற முதல் சர்வதேச
பதக்கம்.
உலக சாம்பியன்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த வீராங்கனையும் செய்யாத ஒரு சாதனையை மேரி கோம் செய்துகாட்டினார். 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார் மேரி கோம். இது மட்டுமல்ல, 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஒரே வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். குத்துச்சண்டையில் சிறந்து விளங்கிய பல வெளிநாட்டு வீராங்கனைகளை  வீழ்த்தி, தொடர்ந்து வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், மகளிர் குத்துச்சண்டை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார் மேரி கோம்.
உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் எப்படி உச்ச நாயகியாகத் திகழ்ந்தாரோ அதேபோல ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் தனிக் காட்டு ராணியாக இருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 5 முறை தங்கப் பதக்கத்தையும் ஒரு முறை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் மேரி கோம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தலா ஒரு முறை தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் மேரி.  
முத்தாய்ப்பான வெற்றி
இவற்றில் 2008-ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற தங்கப் பதக்கமும் இந்தியாவில்  நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற வெள்ளிப் பதக்கமும் தன்னிகரற்றவை. 2005-ம் ஆண்டில் மேரி கோம் கருங் ஆன்ஹோலர் என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 2007-ம் ஆண்டில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தது. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருந்ததால் குத்துச்சண்டை பக்கமே தலைவைக்கவில்லை மேரி கோம். பயிற்சி எடுத்தே மாதக்கணக்காகியிருந்தது. மேரி கோம் பதக்கம் வெல்வார் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒரு மாதம் மட்டுமே பயிற்சி எடுத்து, தன்னை மட்டும் நம்பி களத்தில் இறங்கிய மேரி உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கங்களை வென்று குத்துச்சண்டை உலகை புருவம் உயரச் செய்தார். மேரி கோமின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது என்று குத்துச்சண்டை உலகம் மேரி கோமை உச்சி முகர்ந்தது.
ஒலிம்பிக்கில் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ராணியாக வலம்வந்த மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தவமாய் காத்திருந்தார். இறுதியில் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்பு மேரிக்குக் கிடைத்தது.  51 கிலோ ஃபிளைவெயிட் பிரிவில் களமிறங்கிய மேரி கோம் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தாலும்,  இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார் மேரி கோம். குத்துச்சண்டை யில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
எல்லா பதக்கங்களையும் பார்த்திருந்தாலும், காமன்வெல்த்தில் மட்டும் மேரி பதக்கம் வெல்லவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறையையும் இந்த ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தீர்த்துக்கொண்டார். 48 லைட் ஃபிளை வெயிட் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் எல்லாவிதமான தொடர்களிலும் பதக்கம் வென்றவரானார் மேரி கோம்.
அங்கீகாரங்கள்   

குத்துச்சண்டையில் தனக்கென தனிப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதில் தனிக்காட்டு ராணியாகப் பயணித்த மேரி கோம், இந்திய மகளிர் குத்துச்சண்டைக்கு முன்னுரை எழுதிய மகத்தான வீராங்கனை. மற்ற வீரர், வீராங்கனைகளைவிட அவர் பெற்ற விருதுகளே அதற்கு அத்தாட்சி. 2003-ம் ஆண்டில் அர்ஜூனா விருது, 2006-ல் பத்மஸ்ரீ விருது, 2009-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 2013-ல் பத்மபூஷன் விருது என அவரது சாதனையில் மகுடங்களாக விருதுகள் ஜொலிக்கின்றன. இதுமட்டுமல்ல கபில்தேவ், டோனி, அபினவ் பிந்த்ரா என சிலருக்கு மட்டுமே கிடைத்த இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியும் மேரி கோமுக்குக் கிடைத்தது. இந்தக் கவுரவப் பதவியைப் பெற்ற பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் மேரி கோம்தான்.
மேரி கோமால் மகளிர் குத்துச்சண்டை இன்று இந்தியாவில் பீடு நடைபோடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டைக்கான கதவுகளைத் திறந்தவர் மேரி கோம். குத்துச்சண்டை விளையாட பணம் இல்லாமல் தவித்த காலத்தை மேரி கோம் இன்னும் மறந்துவிடவில்லை. தன்னைப் போல வேறு யாருக்கு ஏழ்மையால் குத்துச்சண்டை விளையாடமல் இருக்கக் கூடாது என்பதற்காக இம்பாலில் ‘எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி’யை நிறுவி இளம் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கிவருகிறார். தனது பரிசுப் பணத்திலிருந்து இந்த உதவியைச் செய்துவருவது அவரது உன்னதமான மனதுக்கு ஓர் உதாரணம்.  
ஒலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் மேரி கோமின் லட்சியம். 2020-ல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார். அந்த லட்சியத்தை அடைய மேரி கோமை நாமும் வாழ்த்துவோம்.
- இந்து தமிழ், 03/11/2018

23/11/2018

நான் ‘ராட்சசன்’ அல்ல!

தமிழ் சினிமாவில் அறிமுக நாயர்களைவிட வில்லன்கள் பெயரெடுப்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் வெளியான படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டார்.  சைக்கோ கொலையாளியாக ‘ராட்சசன்’ படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ சரவணன் என்ற இதுவரை அழைக்கப்பட்டு வந்த அவர், இந்தப் படத்துக்குப் பின்  ‘ராட்சசன்’ சரவணனாக மாறியிருக்கிறார். அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்திலிருந்து...

உங்கள் பின்னணி என்ன?

அரியலூர்தான் எனக்கு சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கேதான் என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாம் நகர்ந்தது. கல்லூரியை முடித்த பிறகு 7 ஆண்டுகள் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தேன். வாழ்க்கையில்  பிடித்ததை செய்ய வேண்டும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. என்னெ செய்யலாம் என யோசித்தபோது, சினிமாவுக்கு செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடகக் கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?


சென்னைக்கு வந்தபிறகு படியேறாத படக் கம்பெனிகளே இல்லை. நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ப கதைகளைத் தேடினேன். ஒரு சினிமா பி.ஆர்.ஓ.வின் உதவி கிடைத்தது. சினிமா உலகத்தைப் பற்றி அவர் எனக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார். அதைப் பின்பற்றியபோது நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன.

‘ராட்சசன்’ படத்துக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

 சினிமா தவிர்த்து நிறைய குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை குறும்படத்துக்கு டப்பிங் பேச சென்றபோதுதான், இயக்குநர் ராம்குமார் அறிமுகம் கிடைத்தது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை அவர் இயக்கியபோது, அந்தப் படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரைப் போய் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். இப்படித்தான் ‘ராட்சசன்’ படத்துக்குள் நுழைந்தேன்.

 சைக்கோ கொலைக்காரப் பாத்திரத்துக்கு உங்களை எப்படி இயக்குநர் தேர்வு செய்தார்?

அதற்கு என்னுடைய தோற்றம் பொருந்தியதுதான் முதல் காரணம். அது மட்டுல்ல, பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன்போல இருந்ததும் பெர்ணான்டோ கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது இன்னொரு காரணம். இயக்குநர் எனக்கு நிறைய ‘ஆடிசன்’ வைத்தார். அதில் எல்லாம் தேறினேன். அந்தக் கதாபத்திரத்துக்கு முழுமையாக நான் பொருந்துவேன் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு வந்த பிறகே சைக்கோ கதாபாத்திரத்துக்கு என்னை இயக்குநர்  ‘டிக்’ செய்தார்.

அந்தப் பாத்திரத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்ததோ?

படத்துக்காக எவ்வளவு அளவுக்கு உடல் எடையைக் குறைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் குறைக்கச் சொன்னார்கள். இந்தப் படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். தயா என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்தக் கலையை கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக சூட்டிங் இருக்கும் காலத்தில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் உங்கள் உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டதா?

உண்மையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. படத்தில் வசனம்  இல்லை என்றும் நான் வருந்தவில்லை. ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கதாபாத்திரம்தான் மிக முக்கியமானது என்பதை தெரிந்துகொண்ட பிறகு அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்தப் படம்தான் என்னுடைய வாழ்க்கை என்பதால், இயக்குநர் சொன்னா அனைத்தையும் செய்தேன். ஒரு நல்ல வாய்ப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன். அதைப் பிடித்துதான் முன்னேற வேண்டும் என்ற நிலையில், மற்றதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.
தவிர, இந்தப் படத்தில் சரவணன் முகம் தேவைப்படவில்லை. ஆங்கிலோ இந்தியன் முகம்தான் தேவை. ஆங்கிலோ இந்தியன் தாய் - மகன்தான் கதையே. உடல்மொழியால் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது என் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் இயக்குநர் சொன்னதை மட்டுமே நான் செய்தேன். படத்தைப் பார்த்து யார் இந்த வில்லன் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். படம் வெளியான பிறகு நான் நினைத்ததுபோலவே நடந்தது. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சிதான்.

இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது?

என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படம் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய மதில் சுவரை மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் சுற்றிச்சுற்றி வந்தவனுக்கு வாசல் திறந்ததைப் போல உணர்கிறேன்.

 ‘ராட்சசன்’ படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களில் மறக்க முடியாத பிரபலம் யார்?

ரஜினி, அஜித் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைல்லா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன். ஸ்டைலுக்கே உதாரணமாகச்சொல்லக்கூடிய ரஜினி வாயிலிருந்து கிடைத்த பாராட்டு என்பதால் இதை மறக்க முடியாது. அஜித் அவருடைய மேனேஜரிடம் வில்லன் யார், உண்மையிலேயே வெளிநாட்டுக்காரரா, அவருடைய வில்லன் ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு பாரட்டையும் நான் உச்சபச்ச வாழ்த்தாக கருதுகிறேன்.

சரவணன் நிஜத்தில் எப்படி?
சரவணன்


 நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போது சென்டிமெண்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.

 ‘ராட்சசன்’ வரவேற்புக்கு பின்னர் புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?


இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன.  இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

- இந்து தமிழ், 23/11/2018

17/11/2018

மீண்டும் ஒரு ‘96’ கதை!

தலைப்பைப் படித்ததும் மீண்டும் ஒரு காதல் கதையோ என்று நினைத்துவிடாதீர்கள். இது அரசியல் கூடல் கதை. ஆந்திராவுக்கும் தேசிய அளவிலான அணி உருவாக்கத்துக்கும் தொடர்பைச் சொல்லும் கதை.
பல்வேறு காலகட்டங்களில் தேசிய அளவில் அணிச் சேர்க்கைகளின் தொடக்கப் புள்ளியாக ஆந்திராவே இருந்திருக்கிறது. முப்பது ஆண்டுகள் தேசிய அரசியல் வரலாற்றில் ஆந்திராவை மையப்படுத்தி உருவான கூட்டணிகள் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன.


முதன் முறையாக 1989-ம் ஆண்டில்தான் தேசிய அளவில் ஓர் அணிக்கு அச்சாரமிடப்பட்டது. அன்றைய காலத்தில் அசுர பலத்துடன் இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்க்க இந்த அணி உருவானது. ‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணியை அன்றைய தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ்தான் முன்னெடுத்தார். போர்ப்ஸ் ஊழல், விபிசிங்கின் எழுச்சி ஆகியவற்றை மையப்படுத்தி அகில இந்திய அளவில் என்.டி. ராமாராவ் இதற்கான விதையை விதைத்தார். இந்த முயற்சிக்கு திமுக, அசாம் கனபரிஷத், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தோள் கொடுத்தன. 1988-ம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட பேரணியுடன் தேசிய முன்னணி உருவானது. தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக என்.டி.ராமாராவ் இருந்தார்.


1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி பெற்றது. பாஜகவும், இடதுசாரிகளும் வெளியே இருந்து தேசிய முன்னணி அரசை ஆதரித்தன. வி.பி.சிங் தலைமையிலான அரசு, 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது.  ஆனால், அந்தக் காலகட்டத்தில் கடிவாளமில்லாத குதிரையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேசிய முன்னணிதான் குடைச்சல் கொடுக்கும் அணியாக இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தபோதும், அகில இந்திய அளவில் தேசிய முன்னணியால் தெலுங்கு தேசக் கட்சி அந்தஸ்தைக் கூட்டிக்கொண்டது.


தேசிய முன்னணியைப் போலவே 1996-ம் ஆண்டிலும் தேசிய அளவிலான

அணிச் சேர்க்கை உருவானது. ஆனால், இது தேசிய முன்னணியைப்போல தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி அல்ல. தேர்தல் முடிவுக்குப் பின்னர் உருவான கூட்டணி. குறிப்பாக பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் உருவான கூட்டணி. இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார் அப்போதைய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

ஜனதா தளம், சமாஜ்வாடி, திமுக, தெலுங்கு தேசம், தமாகா, மகாராஷ்டிரா கோமந்தவாடி கட்சி, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை உள்ளடக்கி இந்தக் கூட்டணி உருவானது. ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுதான் அமைப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரிக்க, ஐக்கிய முன்னணியின் ஆட்சி 20 மாதங்கள்வரை நீடித்தது. என்.டி.ராமாராவுக்குப் பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவும் இந்தக் கூட்டணி உருவாக்கத்தின் மூலம் தேசிய அளவில் தனி கவனம் பெற்றார். பிரதமருக்கான ரேஸில் இவரது பெயரும் அந்தக் காலகட்டத்தில் அடிபட்டது.


இந்த இரு பெரும் கூட்டணிகளுக்குப் பிறகு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றுதான் இந்தியாவின் முகம் மாறியது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிகள்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றன. ஆனால், இடையிடையே தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போல கூட்டணியை உருவாக்க வேறு பல கட்சிகள் முயன்றாலும், அந்த முயற்சி கைகூடவில்லை. இதற்குக் காரணம். ஒரு காலத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணியில் இடம் பிடித்த கட்சிகள் பலவும் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இடம் பிடித்ததுதான். தெலுங்கு தேசம் கட்சியும் பெரும்பாலும் பாஜக கூட்டணியில் இடம் பிடித்து வந்தது.


2018-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் சந்திரசேகர ராவ் ஆகியோர் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியைக் கட்டமைக்க முயன்றார்கள். அதற்காக பல்வேறு மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்கள். ஆனால், அந்த முயற்சி மேற்கொண்டு முன்னேற்றம் காணவில்லை.


திடீர் திருப்பமாக பரம எதிரியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி சேர்ந்து, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அணி அமைக்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, ஆந்திரா மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு எதிராக கூட்டணி அமைத்த, கூட்டணியில் இடம் பெற்ற தெலுங்கு தேசம், இந்த முறை காங்கிரஸ் அணியுடன் இணைந்து பிற கட்சிகளையும் அந்தக் கூட்டணியில் சேர்க்க எடுக்கும் முயற்சியின் மூலம் மீண்டும் தேசிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.


2004, 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி வளர்ப்பதில் அக்கறை காட்டியது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளைக் கொண்டுவரும் பொறுப்பை அக்கட்சி எடுக்கவில்லை. மாறாக இப்போது சந்திரபாபு நாயுடு அதற்கான

முயற்சியைத் தொடங்கியிருப்பதன் மூலம் தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் கூடியிருக்கிறது. திமுக, மஜத, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து, தேசிய பார்வை முழுவதும் ஆந்திரா பக்கம் சந்திரபாபு குவியச் செய்திருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க சந்திரபாபு
உத்தேசித்துள்ளார்.


சந்திரபாபுவின் இந்த முயற்சி 1996-ம் ஆண்டில் நடந்ததைப் போல சுபத்தில் முடியுமா அல்லது சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி ஆகியோர் எடுத்த முயற்சிகளைப் போல பேச்சுவார்த்தையோடு சுருங்கிவிடுமா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரிந்துவிடும்.


09/11/2018

உலகம் பேசிய திரைப் போர்கள்!

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
சமூகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் திரை வழியே கொண்டுவந்துவிடும் திரைத்துறையினர், போர்கள் தொடர்பான கதைகளையும் போரிலும் போரைக் காரணம் காட்டியும் அரங்கேற்றப்படும் மனிதத் தன்மையற்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு போரையும் அதன் அரசியலையும் மையமாக வைத்து பிரம்மாண்டமானப் படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் ஹாலிவுட்டில் பலர் உண்டு.

மாறாக, போர் காட்சிகளை மையப்படுத்தாமலேயே, போரின் விளைவுகளைச் சொன்ன படங்கள் உலக அரங்கிலேயே குறைவுதான். போரால் மக்கள் படும் துயரங்களையும் போரின் தாக்கங்களையும் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கசிந்துருகும் மனிதத்தையும் குண்டுமழை பொழியும் போர் மேகங்களுக்கு மத்தியில் வாழ்ந்தபடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் எடுக்கும் முடிவுரை இல்லா முயற்சிகளையும் போர்த் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன.


திரைப்படம் வழியே போரின் ஆக்கிரமிப்பு சுயநலம் எனும் முகமூடியைக் கிழித்துக் காட்டிப் பெரும் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. பொதுவாக சினிமாவில் போர்க் காட்சிகளைவிட, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமாக்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா பெரிய போர்களை எதையும் சந்திக்காததாலோ என்னவோ, சொல்லிக்கொள்ளும்படியான போர்த் திரைப்படங்கள் நம்மிடம் இல்லை.

கார்கில்

பாலிவுட்டில் ‘1971’, ‘கார்கில்’ சமீபத்தில் வெளியான ’காஸி அட்டாக்’ எனச் சில படங்களே போர்களை அடிப்படையாகக் கொண்ட தேசியப்பற்றை நேரடியாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றன. மிக அருகாமையில் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்துவந்தபோதும் அதன் பின்னணியைக் கொண்டு தமிழ் சினிமாவில் எந்தப் படமும் உருவாகவில்லை.
 

16 படங்கள்

போர்ப் படங்களைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என நினைக்கலாம். ஏனென்றால், முதலாம் உலகப் போர் நிறைவுற்ற நூற்றாண்டு இது. 1914-ல் தொடங்கிய இந்தப் போர், 1918 நவம்பர் 11-ம் தேதி அதிகாரபூர்வமாக முடிந்தது.
நாகரிக வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பு நாடு பிடிக்கும் ஆசையிலும் பலத்தைக் காட்டும் கர்வத்தாலும் மனிதர்களுக்குள் இருந்த குரூரங்களின் வெளிப்பாட்டாலும் போர்கள் நடந்தேறின. ஆனால், நாககம் தழைத்தோங்கத் தொடங்கிய பிறகு இனம், நிறம், மொழி, மதம், நாடு, கலாச்சாரம், ஆயுதப் போட்டி, அயல்நாட்டின் வளங்களை சூறையாடுதல் எனப் போர்களின் பின்னுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் காரணங்கள் ஏராளம்.


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போரைப் பற்றி உலகில் உள்ள எல்லாத் தரப்பு மக்களும் நுணுக்கமாக உணர்ந்துவிட முடியாது. போரும் அதன் தாக்கமும் எப்படியிருக்கும் என்பதைத் திரைப்படங்கள்தான் மக்களுக்குத் திரை வழியே வெளிச்சம் போட்டுகாட்டின. அப்படி உலகை உலுக்கிய சிறந்த திரைப்படங்கள் பலவற்றைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். ‘போர்த்திரை’ என்ற பெயரில் வெளியான இந்த நூல், சர்வதேச அளவில் பேசப்பட்ட 16 போர் தொடர்பான திரைப்படங்களைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளரின் பார்வையில் இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.


இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர், கொரியப் போர் போன்ற பரிச்சயமான போர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களை நூலாசிரியர் தேர்ந்துகொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதில் தொடர்புடைய போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையைச் சொல்லும் ‘ஜட்ஜ்மெண்ட் அட் ந்யூரெம்பர்க்’ (1961); அல்ஜீரிய விடுதலைப் போரின் கதையைத் திரை வழியே சொன்ன ‘தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ (1967); அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் துணை நின்ற ‘மைக்கேல் காலின்ஸ்’ (1996) போன்ற படங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டமான 1939-ல் வார்சா வானொலி
தி பியானிஸ்ட்
நிலையத்தின் மீது போடப்பட்ட வெடிகுண் டால், நிறுத்தப்பட்ட வானொலி சேவையையும் செய்தி அறிவிப்பாளரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி பியானிஸ்ட்’ (2002), இரண்டாம் உலகப் போரின் மனித உணர்வுகளற்ற கோரத்தை நுணுக்கமாக வெளிச்சம் போட்டு காட்டியது. இந்தப் படமும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைவிட நாஜிக்களின் உச்சபட்ச கொடுமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்துக்கும் நூலாசிரியர் அறிமுகம் தந்திருக்கிறார்.
 

அரிதான முயற்சி

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த ஒரு சிறுமியின் அலறல் ஒளிப்படம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. போர்க்களத்தில் உயிரைத் துச்சமென நினைத்து பகுங்குக் குழிகள் வழியாக போர்க் களத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஒளிப்படக்காரர்கள் பற்றிய ‘தி பேங் பேங் கிளப்’ (2011) படம் வாசிக்கும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

சமூக ஊடகங்கள் வழியாக எகிப்து தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ‘தி சோஷியல் நெட்வொர்க்’ (2010) போன்ற அண்மைக்கால படங்களையும் ‘போர்த்திரை’ தொட்டுப் பேசியிருக்கிறது. போர்கள் பற்றிய பல படங்கள் தொகுக்கப்பட்டிருந்தாலும், முதலாம் உலகப் போர் பற்றிய படம் எதுவும் இல்லாதது ஏமாற்றம்தான்.


போர்த் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எழுதாமல், அந்தப் போரின் பின்னணியையும் அதில் ஆழமாகப் பொதிந்துள்ள அரசியலையும் எளிமையான வார்த்தைகளில் கோத்திருப்பது ‘போர்த்திரை’ புத்தகத்தில் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது. தமிழில் திரைத்துறை குறித்த நூல்கள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், போர் திரைப்படங்களை மையப்படுத்தி வந்திருக்கும் இந்த நூல் ஒரு அரிதான முயற்சி. திரை ஆர்வலர்கள் நூலகத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
 

நவம்பர் 11: முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவையொட்டிய கட்டுரை.
 

நூல்: போர்த்திரை
ஆசிரியர்: விஜய் ஆம்ஸ்ட்ராங்
பக்கம்: 120 விலை: ரூ. 100
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 044 65157525ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
 

- இந்து தமிழ், 09-11-2018

30/10/2018

ரேவதி: அபூர்வ நடிகை!

தமிழ் சினிமாவில் அறிமுகப் படத்தில் தொடங்கி அடுத்தடுத்த படங்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்பதுகளில் ஒருவரை கைநீட்டி கூர வேண்டுமென்றால், நடிகை ரேவதியைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது. அறிமுகமான ‘மண்வாசனை’ படத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வந்தவர் ரேவதி.

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்துகொண்டிருந்தார்கள் நடிகை ஸ்ரீதேவியும் ஸ்ரீபிரியாவும். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே ஸ்ரீதேவியின் முழு கவனமும் இந்திக்குத் திரும்பிவிட, இன்னொரு நடிகையான ஸ்ரீபிரியாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்துகொண்டிருந்த காலம். அப்போது  ஏற்பட்ட வெற்றிடத்தை ராதிகா, அம்பிகா, ராதா போன்றோர் நிரப்ப முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு இணைந்தார் நடிகை ரேவதி. அவர்களிலிருந்து மாறுபட்டு தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார். அந்தக் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் தந்த அமோக ஆதரவால், தமிழில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாகப்  பதித்தவர் ரேவதி.

கோலோச்சிய நடிகை

இயக்குநர் பாரதிராஜாவால் 1983-ம் ஆண்டில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் ரேவதி அறிமுகமானபோது அவரை ஓர் அசல் தெற்கத்தி பெண் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ‘முத்துபேச்சி’ என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பான கிராமத்துப் பெண்ணாக மாறிப் போயிருந்தார். முதல் பாகத்தில் பழமொழி பேசி துடுக்குத்தனமாகவும் இரண்டாம் பாகத்தில் தாய் மாமனுக்காகக் காத்திருந்து ஏமாறும் பெண்ணாகவும் தேர்ந்த நடிப்பை ரேவதி வழங்கியிருந்தார்.  முதல் படமே தமிழில் அவருக்கு அமர்க்களமான
புதுமைப் பெண்
வரவேற்பை பெற்றுதந்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகள் தமிழ் சினிமாவின் இளவரசியாக கோலோச்சினார் ரேவதி. அறிமுகமான புதிதிலேயே அழுத்தமான கதைக் களங்கள் அமைவதெல்லாம் குறிஞ்சிப் பூ ரகம்தான். ரேவதிக்கு அப்படி அமைந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட முடியாது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறிக்கொண்டதும், அந்தக் கதாபாத்திரமாகவே ஜொலித்ததுமே காரணம். அந்த வகையில் தொடக்கக் காலத்தில் ரேவதி நடித்த ‘பொண்ணு பிடிச்சிருக்கு’, ‘கை கொடுக்கும் கை’, ‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’,  ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘கன்னி ராசி’,  ‘செல்வி’, ‘உதயகீதம்’, ‘பகல் நிலவு’, ‘குங்குமச்சிமிழ்’, ‘லட்சுமி வந்தாச்சி’ போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாகக் கொண்டுபோய் சேர்ந்தன.

அழுத்தமான கதைகள்

‘கை கொடுக்கும் கை’ படத்தில் கண் தெரியாத பெண்ணாகவும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கணவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் விதவையாகும் பெண்ணாகவும், ‘புதுமைப்பெண்’ படத்தில் சிறைக்குச் சென்ற கணவனை மீட்கப் போராடும் பெண்ணாகவும்; தன்னை சந்தேகப்படும் கணவனை தூக்கியெறிந்து செல்லும் புரட்சிப் பெண்ணாகவும் அவர் ஏற்ற அழுத்தமான கதாபாத்திரங்கள் அவரை ஊரெங்கும் பேச வைத்தன. ‘குங்குமச்சிமிழ்’ படத்தில்  வரதட்சனை கொடுக்க முடியாமல் திருமணம் தடைப்பட்ட பெண்ணாகவும், ‘ஆண் பாவம்’ படத்தில் திருமணம் தடைப்பட்டதால் கிணற்றில் விழுந்து ஊமையான பெண்ணாகவும் ‘உதயகீதம்’ படத்தில் அண்ணன் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் பெண்ணாகவும் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில் தனக்கு வந்திருக்கும் நோயை வீட்டில் யாருக்கும் சொல்மாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணாக இயல்பாக நடித்து பெண்களின் மனதிலும் பசை போட்டு
அமர்ந்தார்.

ரேவதியின் படம் என்றாலே குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு குடும்பக் கதாபாத்திரங்கள் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தின. அந்தக் காலகட்டத்தில்  குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு ரேவதி ரசிகர்களைச் சம்பாதித்திருந்தார். அப்போது சினிமா போஸ்டர்களில் ரேவதியின் படம் பெரியதாகப் போட்டு விளம்பரம் செய்த நிகழ்வுகளும் உண்டு. பெண்களை ஈர்ப்பதற்காக ரேவதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான  ‘புதுமைப்பெண்’ படத்தில் ரேவதியின் படத்தை மட்டும் பிரதானமாகப் பிரசுரித்ததை உதாரணமாகச் சொல்லலாம்.

பொருந்திய பாத்திரங்கள்

வெறுமனே குடும்ப பாங்கான பெண்ணாக மட்டும் ரசிகர்களைக் கவரவில்லை ரேவதி. துடுக்குத்தனமான, மாடர்ன் பெண் கதாபாத்திரங்களுக்கும் பெயர்போனவர் ரேவதி. கிராமத்து கதாபாத்திரங்களைப் போலவே சுட்டித்தனமான பாத்திரங்களும் மாடர்ன் பெண் பாத்திரங்களும் அவருக்கு இயல்பாகவே பொருந்தின. ‘ஒரு கைதியின் டைரி’, ‘புன்னகை மன்னன்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘பகல் நிலவு’, போன்ற படங்களில் அவர் துடுக்குத்தனத்தை ரசிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 
‘மௌன ராகம்’ படம் பெருநகரப் புற வாழ்க்கைப் பின்னணியோடு  அழகியலையும் கலந்து சொன்ன அற்புதமான காதல் படம். திருமண பந்தத்துக்குள் வந்த பிறகு இறந்துபோன காதலனை மறக்கமுடியாமல், தனக்காக காத்திருக்கும் கணவனையும் ஏற்க முடியாமல் வாழும் அந்தக் கதாபாத்திரத்தை தமிழ் மக்கள்  ரசித்தார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் ரேவதியைத் தவிர்த்து வேறு யாரையாவது நினைத்து பார்க்க முடியுமா?
கை கொடுக்கும் கை

முதல் மூன்றாண்டுகளில் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்றாலே இயக்குநர்கள் ரேவதியைத்தான் ‘டிக்’ செய்தார்கள். குறுகிய காலத்தில் நல்ல கதாபாத்திரங்களை அதிகமாக நடித்த நடிகைகளின் பட்டியலில் சாவித்திரிக்கு பிறகு ரேவதிதான் அந்த இடத்தை பிடித்தார். ரேவதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் சிறந்த விளங்கிய இயக்குநர்கள் மணிரத்னம், ஆர். சுந்தர்ராஜன், ரங்கராஜன்; நடிகர்கள் கமலஹாசன், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன் போன்ற முன்னணி நடிகர்களின் விருப்பத் தேர்வாக ரேவதியே இருந்தார்.  சின்னத் தாயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள்வரை ரேவதியின் தேதிகளுக்காகக்  காத்திருந்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு...

1983-ம் ஆண்டு தொடங்கி 1987வரை தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருந்த வேளையில், ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை ரேவதி காதல் திருமணம் செய்துகொண்டார். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது ஒரு நடிகை திருமணத்தைப் பற்றி யோசிப்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ரேவதி அதைத் துணிச்சலாகச் செய்தார். அவருடைய திருமணத்தால் ஏற்பட்ட இடைவெளி, தமிழ்த் திரையுலகில் அவரது இடத்தை சிறிது அசைத்துப் பார்த்தது.

ரேவதியின் திரையுலக வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்று எல்லோரும் நினைத்த வேளையில். ‘கிராமத்து மின்னல்’ என்ற படம் மூலம் மீண்டும்  மறு அவதாரம் எடுத்தார். அதன்பிறகு 1989-ம் ஆண்டில்  ‘உத்தமபுருஷன்’, ‘இதயதாமரை’, ‘அரங்கேற்றவேளை’ என ரேவதியின் சினிமா பயணம் மீண்டும் வேகம் பிடித்தது. ‘அரங்கேற்றவேளை’யில்  அவருடைய வழக்கமான சுட்டித்தனமான கதாபாத்திரமும் பிரபுடன் சேர்ந்து செய்த காமெடியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. 1990-ம் ஆண்டில் வெளியான ‘கிழக்கு வாசல்’ படம் நடிகர் கார்த்திக்கு மட்டுமல்ல, ரேவதிக்கும் திருப்புமுனையாக அமைந்தது. ‘தாயம்மா’ என்ற பாத்திரத்தில் விருப்பமில்லாமல் தாசியாகப் போகும் ஒரு பெண்ணின் வேதனையை யதார்த்தமாகப் பதிவு செய்திருந்தார் ரேவதி. இந்தப் படம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் அவருக்குப் பெற்றுதந்தது.  அதே ஆண்டில் வெளியான ‘அஞ்சலி’ படமும் ரேவதியின் நடிப்புக்குத் தீனிப் போட்டது. மனவளர்ச்சிகுன்றிய ஒரு குழந்தையின் தாயாகத் தேர்ந்த நடிப்பை
வழங்கியிருந்தார்.

குறையாத முக்கியத்துவம் 

1992-ம் ஆண்டில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்றார் ரேவதி. இந்தப் படத்தில் ‘பஞ்சவர்ணம்’ கதாபாத்திரத்தில் நடிகை மீனாவுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெகுளித்தனமான அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பொருந்தாமல் போகவே, ரேவதியை கமல் அழைத்தார். கமலின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ரேவதி அந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். ‘வெறும் காத்துதான் வருது..’ என்ற வசனம் இருபத்தை ஆண்டுகள் கழித்து இன்றும் பேசப்படுவதிலிருந்து அந்தக் கதாபாத்திரத்தின் வீச்சை அறியலாம்.

தமிழ்த் திரையுலகில் பத்தாண்டுகளைக் கடந்த பிறகும் ரேவதிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருந்ததை அவருக்கான கவுரவமாகச் சொல்லாம். ஏனென்றால், அப்போதும் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்துகொண்டுதான் இருந்தன. ‘மறுபடியும்’,  ‘பிரியங்கா’, ‘அவதாரம்’, ‘தொட்டாசிணுங்கி’,  ‘தலைமுறை’ போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இரண்டாயிரமாண்டுக்கு பிறகு தன் வயதுக்கேற்ற படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்ல, அவரது தாய் மொழியான மலையாளளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் கணிசமாக நடித்திருக்கிறார்.

இயக்குநராக அவதாரம்
புன்னகை மன்னன்


ரேவதிக்கு சினிமா இயக்கத்தின் மீதும் தீராக் காதல் இருந்தது. ‘மித்ரு மை ஃபிரெண்ட்’, ‘பிர் மிலேங்கே’, ‘கேரளா கஃபே’, ‘மும்பை கட்டிங்’ என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நான்கு படங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கியவை. இதுவரை தமிழ் படத்தை அவர் இயக்காதது ஒரு பெரும் குறைதான். 1990-கள் தொடங்கி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் ரேவதி நடித்திருக்கிறார். தற்போது சன் டி.வி.யில் ‘அழகு’ என்ற மெகா தொடர் மூலம் வீட்டு வரவேற்பரைக்கே வந்துகொண்டிருக்கிறார்.

இந்திய நடிகைகளில் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஜொலித்தவர் ரேவதி. மென்மையாகவும் அதே வேளையில் வலிமையாகவும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சினிமா உலகில் அபாரமாக வெளிப்பட்டவர். இதுபோன்ற நடிகைகள் எல்லாக் காலத்துக்கும் கிடைத்துவிட மாட்டார்கள்; அபூர்வமாகவே கிடைப்பார்கள். அந்த வகையில் ரேவதி ஓர் அபூர்வ நடிகை!

- இந்து தமிழ் தீபாவளி மலர், 2018

சாகச ராணி!



பன்னெடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளிலிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படியிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்தச் சாகச விளையாட்டை அந்தப் பெண் அனாயசமாக செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ்
சின்ன வயதில் பறவையைப் போல பறக்க முடியுதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங்களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை அவருக்குப் பீறிட்டு எழும். சின்ன வயதில் மனதில் ஆழமாகப் பதிந்த இந்த அவர், வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது. ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறந்தும், மலையிலிருந்து குதித்துப் பறக்கும் பயிற்சிகள் வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கும் பயிற்சி இது. ஆனால், குடிமகளாக இந்தப் பயிற்சியை பெரும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979-ம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயன பிறகுதான் அந்தப் பயிற்சியில் சேர்ந்தார் ரேச்சல். அப்படி கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்துஸ்கை ஜம்பிங்செய்ய கற்றுக்கொண்டார்.
ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளை ஆண்கள் மட்டுமே ஈடுபட்ட காலம் அது. அந்த சாகசத்தில் காலடி எடுத்து வைத்த முதல் இந்திய பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயன பிறகு அவர் செய்த இந்தச் சாகசம் இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு லைசென்ஸ்சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.
1983-ம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை ஈர்த்தது. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக்கங்களை அறிவதற்காக அமெரிக்காவுக்குப் பயிற்சிக்கு அரசே அனுப்பிவைத்தது. இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னியாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சியாளருடன் ஒரு சேர சேர்ந்து நடுவானில் குதிக்கும்டேண்டம் ஜம்பிங்எனும் பயிற்சியையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்நேரத்தைக் கணக்கிட்டு துல்லியமாகக் குதிக்கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.
தொடர்ந்து ஸ்கை டைவிங், ஜம்பிங்கில் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துதான் சாகசப் போட்டியாளராக களமிறங்கினார் ரேச்சல். அவரது திறமையை வெளிப்படுத்த 1987-ம் ஆண்டு உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாக முதல் பங்கேற்பாளர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். அதற்கு முன்புவரை பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு மேலே பறந்து தரையிறங்கி விளையாடி அனுபவம் பெற்ற ரேச்சல்முதன் முறையாக விளையாட்டுத் திடலில் பங்கேற்றது அப்போதுதான். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.
1988-ம் ஆண்டில் ஸ்வீடனில் உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார் ரேச்சல். இது அவர் பங்கேற்ற இரண்டாவது சர்வதேச தொடர். நான்கு விதமான போட்டிகளில் பங்கேற்ற ரேச்சல், முதன் முறையாக 6 வழிகளிலான குதிக்கும் போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். 1989-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவறவில்லை.
1991-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகச கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டியில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதேபோல 1995-ம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.
1995-ம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடைபெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும்போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங்குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதை தனக்குக் கிடைத்த பெரும் பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார் ரேச்சல்.
பல்வேறு நிகழ்வுகளின்போது காட்சி ரீதியிலான ஸ்கை டைவிங் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தார் ரேச்சல். இப்படி அவர் குதித்து நிகழ்வுகளுக்கெல்லாம் கணக்குவழக்கே இல்லை. 2000-ம் ஆண்டில் ஜோர்டான் இளவரசருடன் ஒரு சேர சேர்ந்து குதித்த நிகழ்வும் இவருடைய ஸ்கை டைவிங் பயணத்தில் முக்கியமானது.
ரேச்சல் தாமஸ்
வட துருவத்திலிருந்து குதிப்பது என்பது எவரெஸ்ட்டிலிருந்து குதிப்பதற்கு சமமாக ஸ்கை டைவர்ஸ் கருதுகிறார்கள். வட துருவத்திலிருந்து குதிக்கும் ஆசை ரேச்சலுக்கும் இருந்தது. 38 ஆண்டுகள் இதற்காகக் காத்திருந்தவருக்கு சரியான தருணம் 2002-ம் ஆண்டில்தான் அமைந்தது. வட துருவத்தில் 7 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை  டைவிங் செய்து அசத்தினார் ரேச்சல். அப்போது இந்திய ரயில்வேயின் 150-வது ஆண்டு விழா காலம். இதையொட்டி இந்தச் சாகசத்தை ரேச்சல் தாமஸ் செய்தார். வடதுருவத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. வட துருவத்துக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது மைனஸ் 45 முதல் மைனஸ் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 நாட்கள் இதற்காகத் தங்கியிருந்தார் ரேச்சல் தாமஸ்.
18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 2005-ம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது.
வானிலிருந்து குதிப்பது என்பது லேசப்பட்ட காரியம்மல்ல. காதைப் பிளக்கும் அளவுக்கு காற்றின் இரைச்சலே பயத்தை வரவழைத்துவிடும். பார்ப்பவர்களுக்கே பீதியூட்டும் ஸ்கை டைவிங் சாகசத்தை அச்சம் தவிர்த்து களமிறங்கி சாதித்தவர் ரேச்சல். இரண்டு முறை மரணத்தின் விளிம்புவரை சென்று பத்திரமாக தரையிறங்கி ஆச்சரியமூட்டியவர்.
ஸ்கை டைவிங் என்பது சாகச விளையாட்டு மட்டுல்ல.. இது ஒரு துல்லியமாகக் கணக்கிடக்கூடிய விளையாட்டும்கூடமிகுந்த எச்சரிக்கையோடு சில விநாடிகளில் தீர்க்கமான முடிவெடுத்து விளையாடும் திறன் இருந்தால் மட்டுமே விளையாட முடியும். அதற்கு வலிமையான மனோபலமும் தேவை. அந்தரத்தில் சமநிலைப்படுத்தி பறப்பதற்கு முதலில் கற்க வேண்டும். ஒவ்வொரு விநாடியும் கை, கால்களின்  நகர்வுகள் முக்கிய பங்காற்றும். இதில் போதுமான அனுபவம் பெற்றால்தான் ஸ்கை டைவிங் விளையாட்டிலேயே ஈடுபட முடியும். அந்தத் துணிச்சல் ரேச்சலுக்கு இருந்ததால்தான் இந்தச் சாகச விளையாட்டில் அவரால் சாதிக்க முடிந்தது.
தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் இப்போதும் ஸ்கை டைவிங் செய்யவும் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தூரம் நடப்பதையும் ஓடிப் பயிற்சி எடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரியராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.
- தி இந்து, 28-10-18