18/02/2015

ஒரு மனிதன், ஒரு தேசம், ஒரு கனவு!



முதன் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடப் போகிறார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள். ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற கென்யா போன்ற அணிகள் கூட இப்போது நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதிப் பெற முடியவில்லை. ஆனால், தாலிபன்களுக்கும் அமெரிக்காவும் இடையே சிக்கி  கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று உலகக் கோப்பைக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றிருக்கிறது.  இது எப்படி சாத்தியமானது?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றி பேசினால் தாஜ் மாலிக் ஆலம் என்ற மனிதரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 1987-ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர் இந்த தாஜ் மாலிக் ஆலம். அகதிகள் முகாமில்  கிரிக்கெட்டை கற்றுக் கொண்ட அவர், விளையாட்டுக்களுக்குக்கூட தடை விதித்திருந்த தாலிபன்கள் ஆட்சியின்போதே ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை  நிர்மானிக்க முயற்சிகளை முன்னெடுத்தவர். ஆப்கான் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.

தாலிபன்கள் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமின்றி, அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வீரர், அணி நிர்வாகி, அணித் தேர்வாளர் என ஆப்கன் கிரிக்கெட்டில் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவருடைய கடும் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஆப்கன் அணி, இன்று  உலகக் கோப்பையில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

ஏற்கெனவே இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிதான் அணி விளையாடி இருந்தாலும், தாஜ் மாலிக்கின் பெருங்கனவு ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆப்கன் அணி விளையாட வேண்டும் என்பதுதான். அந்தக் கனவும் பிப்ரவரி 18-ம் தேதி நனவாகப் போகிறது. அன்றுதான் வங்கதேசத்துக்கு எதிராக உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

கலைகளுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆன்மாக்களை இணைக்கும் சங்கிலிகள் அவற்றுக்கு உண்டு என்பதுதான் அது. யுத்த பூமியான ஆப்கனின் வரலாற்றில் கிரிக்கெட் நல்ல மாறுதலைக் கொண்டுவரட்டும்!

தி இந்து, 18/02/2015

No comments:

Post a Comment