18/02/2015

ஒரு மனிதன், ஒரு தேசம், ஒரு கனவு!



முதன் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடப் போகிறார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள். ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற கென்யா போன்ற அணிகள் கூட இப்போது நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதிப் பெற முடியவில்லை. ஆனால், தாலிபன்களுக்கும் அமெரிக்காவும் இடையே சிக்கி  கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று உலகக் கோப்பைக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றிருக்கிறது.  இது எப்படி சாத்தியமானது?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றி பேசினால் தாஜ் மாலிக் ஆலம் என்ற மனிதரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 1987-ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர் இந்த தாஜ் மாலிக் ஆலம். அகதிகள் முகாமில்  கிரிக்கெட்டை கற்றுக் கொண்ட அவர், விளையாட்டுக்களுக்குக்கூட தடை விதித்திருந்த தாலிபன்கள் ஆட்சியின்போதே ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை  நிர்மானிக்க முயற்சிகளை முன்னெடுத்தவர். ஆப்கான் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.

தாலிபன்கள் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமின்றி, அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வீரர், அணி நிர்வாகி, அணித் தேர்வாளர் என ஆப்கன் கிரிக்கெட்டில் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவருடைய கடும் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஆப்கன் அணி, இன்று  உலகக் கோப்பையில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

ஏற்கெனவே இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிதான் அணி விளையாடி இருந்தாலும், தாஜ் மாலிக்கின் பெருங்கனவு ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆப்கன் அணி விளையாட வேண்டும் என்பதுதான். அந்தக் கனவும் பிப்ரவரி 18-ம் தேதி நனவாகப் போகிறது. அன்றுதான் வங்கதேசத்துக்கு எதிராக உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

கலைகளுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆன்மாக்களை இணைக்கும் சங்கிலிகள் அவற்றுக்கு உண்டு என்பதுதான் அது. யுத்த பூமியான ஆப்கனின் வரலாற்றில் கிரிக்கெட் நல்ல மாறுதலைக் கொண்டுவரட்டும்!

தி இந்து, 18/02/2015

14/02/2015

அதிகாரம் இல்லாத அரசுகள்!


டெல்லியில்  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு  அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று  கோரிக்கையையும் வைத்தார். டெல்லியில் மட்டுமல்ல,  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்கூட அந்தக் கோரிக்கை அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. யூனியன் பிரதேசங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன? ஏன் தனி மாநில அந்தஸ்து இங்கே எழுப்பப்படுகிறது?
யூனியன் பிரதேசங்களின் கதை
முதலில் இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் எப்படி வந்தன என்பதைத் தெரிந்து கொண்டால்தான் இதற்கான முழு விடையும் கிடைக்கும். ஆங்கிலேயர்களிடம் இருந்து  நாடு சுதந்திரம் அடைந்தபோது 563 சமஸ்தானங்கள் இங்கே இருந்தன. இந்தச் சமஸ்தானங்களை  இந்தியா என்ற ஒரே நாடாக இணைக்கப்பட்டன. ஆனால், இந்தியாவுக்குள் இருந்தாலும் சிலப் பகுதிகள் வெவ்வேறு  நாடுகளின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. புதுச்சேரி, மாஹி, ஏனம், காரைக்கால் ஆகிய பகுதிகள்  பிரெஞ்சு காலணியிலும், கோவா, டையூ, டாமன், தாத்ரா- நாகர்ஹவேலி ஆகிய பகுதிகள் போர்ச்சுகீசியர் காலணி ஆதிக்கத்திலும் இருந்தன.
 ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது அந்தமான் நிக்கோபார் தீவுகள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது  ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆங்கிலோ பர்மியர்கள் அந்தமானை தனி நாடாக அமைத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கினார்கள். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் அந்தமான் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இதேபோல லட்சத்தீவுகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தபோது  சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட மலபார் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படி ஏதோ ஒரு வகையில் வெவ்வேறு ஆளுகைகளின் கீழும், நிர்வாக ரீதியாக சிக்கல்களும் உள்ள பகுதிகள்தான் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களாக (ஒன்றியப் பகுதி) அறிவிக்கப்பட்டன.
 இவைத்தவிர திட்டமிட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. பஞ்சாப்பில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டபோது இரு மாநிலங்களும் சண்டிகரை கேட்டன. எனவே இரு மாநிலங்களுக்கும் பொதுவானப் பகுதியாக 1966-ல் யூனியன் பிரதேசமாக சண்டிகர் அறிவிக்கப்பட்டது. (அண்மையில்கூட ஆந்திராவையும் தெலங்கானாவையும் பிரித்தபோது ஐதராபாத்தை இரண்டு மாநிலங்களும் கோரின. அப்போது இரு மாநிலங்களுக்கும் பொதுவான யூனியன் பிரதேசமாக ஐதராபாத்தை அறிவிக்கலாம் என்ற யோசனை வைக்கப்பட்டது போல). டெல்லி என்பது  நாட்டின் தலைநகரப் பகுதியாக இருந்ததால் யூனியன் பிரதேசமாக இருந்தது. இப்படி யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கிறது. இவற்றில்  கோவா 1987-ம் ஆண்டில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. கோவாவுடன் இணைந்திருந்த டையூ, டாமன் இப்போது யூனியன் பிரதேசமாகவே தொடர்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, தேசிய தலை நகரப் பகுதியாக அறிவிக்கட்டு, வரையறுக்கப்பட்ட அதிகாரத்துடன்கூடிய சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டது.
ஆட்சித் தலைவர்கள்
இந்த யூனியன் பிரதேசங்கள் எல்லாம் குடியரசுத் தலைவரின் (மத்திய அரசு)  நேரடிக் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். இங்கெல்லாம் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் எனப் பதவிகள் உண்டு. குடியரசு தலைவர் மூலம் நியமிக்கப்படும் இவர்கள்தான் இந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைவர்கள். இதில் டாமன், டையூ, அந்தமான், லட்சத்தீவுகள், நாகர்-ஹவேலி, சண்டிகர் ஆகியப் பகுதிகளை   நிர்வாக அதிகாரிகள் நிர்வகித்து வருகிறார்கள்.  புதுச்சேரி, டெல்லியில் துணை நிலை ஆளுநர்கள் இருக்கிறார்கள். இந்த இரு பகுதிகளிலும் மட்டும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுகள் அமைப்படுகின்றன. அதற்கான சிறப்பு அதிகாரம் இந்த இரு பகுதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைக்கப்படுவடுவதால், மற்ற மாநிலங்களில் உள்ள அதிகாரங்களை புதுச்சேரியிலும் டெல்லியிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
அதிகாரங்கள் என்ன?
சரி, யூனியன் பிரதேசங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன?  மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி இந்திய அரசியலமைச் சட்டத்தில் பட்டியலிடப்படுள்ளன. இதில் மத்திய அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள், மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகள் என்பதால் பெரிய அளவில் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஒரு மாநிலத்துக்கு உள்ள அதிகாரங்களில் பாதி அளவுக்குக்குகூட அதிகாரங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இல்லை. முதலில் எந்தத் திட்டத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தால் செய்துவிட முடியாது. எல்லாத் திட்டத்துக்கும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
கடிவாளம் மத்திய அரசிடம்...
 மாநிலங்களில் அரசு அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றை சுலமபாக அந்த மாநில அரசே மேற்கொள்வதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? யூனியன் பிரதேசத்திலோ அது முடியாது. எந்த அரசு அதிகாரிக்கும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும். டெல்லி தலைநகரப் பகுதியாக இருப்பதால் காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் செயல்படும். புதுச்சேரியில்  காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உயரதிகாரிகள் பணியிட மாற்றம், நியமனம் ஆகியவற்றை மத்திய அரசே மேற்கொள்ள முடியும். இப்படி காவல்துறைகூட யூனியன் பிரதேச அரசின் கைகளில் இல்லை. இப்படி எதற்கும் அதிகாரம் இல்லாததால் எல்லாவற்றுக்கும்  மத்திய அரசையே யூனியன் பிரதேசங்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிறப்பு சட்டங்கள் மூலம் சட்டசபை, முதல்வர், அமைச்சர்கள் என சில யூனியன் பிரதேசங்களில் இருந்தாலும், எல்லா அதிகாரங்களும், உரிமைகளும் மத்திய அரசிடமே இருப்பதால்தான் டெல்லியிலும், புதுச்சேரியிலும்  மா நில அந்தஸ்து கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
உரிமைகள் என்ன?

 யூனியன் பிரதேசங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
* சட்டம், நீதித் துறைச் சார்ந்த நியமங்களை யூனியன் பிரதேச அரசால் செய்ய முடியாது.
*  யூனியன் பிரதேசங்களுக்கு என பள்ளி பாடத்திட்டம் எதுவும் கிடையாது. (உதாரணமாக புதுச்சேரியில் தமிழக பாடத் திட்டங்களைத்தான் பின்பற்றுகிறார்கள்.)
* வேலைவாய்ப்புத் திட்டங்கள் எதுவும் கிடையாது. நியமங்கள் அனைத்தும் யு.பி.எஸ்.சி. மூலம் நடைபெறுவதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது அரிது.
* யூனியன் பிரதேசங்களில் ஈட்டப்படும் வருவாய் மத்திய அரசுக்கே செல்லும். யூனியன் பிரதேசம் அவற்றை கையாள முடியாது.
*  திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை, நிதித் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
* நிதிக் குழுவில் யூனியன் பிரதேசங்களுக்கு நிரந்தர இடம் கிடையாது.
* மாநிலங்களில் இருப்பது போல உயர் நீதிமன்றம் கிடையாது. அருகில் உள்ள உயர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டதாக யூனியன் பிரதேசம் இருக்கும்.
பொறுப்புகள் யார் வசம்?
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள், செயல்பாடுகள் பற்றி அரசியல் சட்டத்தில் ஏழாவது பட்டியலில் குறிப்பிடப்படுள்ளது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பட்டியல்: இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்திய அரசின் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு. பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமானம், கப்பல், ரயில் போக்குவரத்துகள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு உள்ளிட்டவை முக்கியமானவை.
மாநில அரசின் பட்டியல் : இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் 66 துறைகள் இருந்தன. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. வேளாண்மை வருமான வரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணம், கேளிக்கை வரி  உள்ளிட்டவை இதில் முக்கியமானவை.
பொதுப்பட்டியல்: இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றியது. பொதுப் பட்டியலில் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது 49 துறைகள் உள்ளன. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு இவற்றில் முக்கியமானவை. 
- தி இந்து, 14/2/2015

07/02/2015

2007 - இந்தியாவை வெளியேற்றிய பங்களாதேஷ்!

2007ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு வெஸ்ட்இண்டீஸ் தீவுகளுக்கு வழங்கப்பட்டது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதன்முறையாக ‘சூப்பர் 8’ சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்படி விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணி களோடு பெர்முடா, கனடா, கென்யா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளும் களமிறங்கின. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பெர்முடா அணிகளும், ‘சி’ பிரிவில் நியூசிலாந்து, இங் கிலாந்து, கென்யா, கனடா அணிகளும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றன.

லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இந்திய அணி, கத்துக்குட்டி அணியான பங்களாதேஷ் அணியிடமும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடமும் பரிதாபமாக தோற்றன.

இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறின. மற்ற பிரிவுகளில் எதிர்பார்த்த அணிகளே தகுதி பெற்றன. சூப்பர் 8 சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் இலங்கை & நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக் காவும் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரே லியா இறுதிக்கு முன்னேறியது.

பார்படாஸில் ஏப்ரல் 28ல் நடந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 282 ரன் என்ற வெற்றி இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது. இடையில் சிறிது நேரம் மழை பெய்ய டக்வொர்த்&லூயிஸ் விதிப்பபடி 36 ஓவரில் 269 என இலங்கைக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியோ 215 ரன் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

2007 ரீவைண்ட்

லீக் சுற்றில் அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் ‘டை‘யில் முடிந்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இப்படி நடப்பது மூன்றாவது முறை.

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், டான் வேன் புங்கே வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். ஒருநாள் ஆட்டத்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார் கிப்ஸ்.

லீக் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தது பாகிஸ்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் போட்டி முடிந்த அடுத்த நாளே, அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இலங்கை வீரர் மலிங்கா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனைப் படைத்தார்.


- முத்தாரம், 2011

03/02/2015

2003 - பாய்ச்சல் ஆஸ்திரேலியா பரிதாப இந்தியா

2003-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகளோடு நெதர்லாந்து, நமீபியா, கனடா அணிகளும் இத்தொடரில் களமிறங்கின. அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’க்கு தகுதி பெற்றன. பிப்ரவரி 9 முதல் மார்ச் 24 வரை நடந்த இத்தொடரில், இந்திய அணி இறுதியாட்டத்திற்கு தகுதிப் பெற்றது மறக்க முடியாத ஹைலைட்!

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங் கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நமீபியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், கனடா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ‘பி’ பிரிவில் போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் சிக்ஸ்க்குக்கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறின.

ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடிய சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சுலபமாக அரையிறுதிக்கு தகுதிப்
பெற்றன. 3 மற்றும் 4-வது இடங்களை முறையே இலங்கையும், கத்துக்குட்டி அணியான கென்யாவும் தட்டுதடுமாறி பிடித்தன.

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மல்லுக்கட்டின. 212 ரன் என ஆஸ்திரேலியா நிர்ணயித்த எளிய இலக்கை விரட்டிய இலங்கை, 123 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகிட, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்னொரு அரையிறுதியில் இந்தியாவும் கென்யாவும் மோதின. இந்தியா நிர்ணயித்த 270 ரன் என்ற இலக்கை விரட்டிய கென்யா, 179 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 1983-க்கு பிறகு இரண்டாவது முறையாக சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்று அசத்தியது.

மார்ச் 24 அன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த இறுதியாட் டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, அதிரடியாக விளையாடி 359 ரன்களைக் குவித்தது. இலக்கை விரட்டிய இந்திய அணி, பதிலடி கொடுக்க முடியாமல் 234 ரன்னுக்கெல்லாம் ஆல்அவுட் ஆகி 2வது முறையாக கோப்பை வெல்லும் என்ற கனவை கலைத்தது. 1987, 1999-க்கு பிறகு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது ஆஸ்திரேலியா.

2003  ரீவைண்ட்

அரசியல் பிரச்னை காரணமாக இங்கிலாந்து அணி, ஜிம்பாப்வே சென்று விளையாட மறுத்தது. இதனால், ஜிம்பாப்வே அணி விளையாடமலேயே புள்ளிகள் பெற்றது. இதற்கான பலனை இங்கிலாந்து நன்றாகவே அனுபவித்தது. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஜிம்பாப்வே தகுதிப் பெற, இங்கிலாந்து மூட்டை கட்டியது.

இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் குவித்து புதிய சாதனைப் படைத்தார். தொடர் நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.

தென்ஆப்பிரிக்கா - இலங்கை லீக் சுற்று போட்டியில் 269 என்ற இலக்கை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணிக்கு சோதனையாக மழை வந்து வெற்றியைப் பறித்தது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 45 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என இலக்க மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக
தென்ஆப்பிரிக்கா 229 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்த போட்டி ‘டை’யில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இத்தொடரில் சவுரவ் கங்குலி 3 சதங்கள் விளாசி சாதனைப் படைத்தார்.

- முத்தாரம், 2011 பிப்ரவரி