21/02/2014

எழுவர் விடுதலையும் அரசியலும்


ராஜிவ் கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை  விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதே மூவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இப்போது நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமே. ஆனால், இந்த முடிவின் பின்னணியில் உள்ளார்ந்த அரசியல் பொதிந்துக் கிடக்கிறது என்பதே  உண்மை.

ஈழ பிரச்சினை, ஈழ தமிழர் விவகாரங்களில் திடீர் ஆதரவு அவதாரம் எடுத்த அதிமுக, ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆதரவு தீர்மானங்களை நிறைவேற்றியதையும் முடிச்சு போட்டுத்தான் பார்க்க வேண்டும். ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ஏற்படுத்திய தீயை அதிமுக அரசு அணையாமல் பார்த்துக்கொண்டது என்றே சொல்லலாம். அதிமுகவின் முக்கிய அரசியல் எதிரியான திமுக, காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்ததும், மத்திய அரசில் பங்கு பெற்றதும் அதிமுகவுக்கு சாதகமாக போனது. மத்திய காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானங்கள் ஒருவிதத்தில் திமுகவையும் சேர்த்தே குறி வைத்து நிறைவேற்றப்பட்டன.

இப்போது விஷயத்துக்கு வருவோம். 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைப்பதாக 110 அறிக்கையின் கீழ் சட்டப்பேரவையில் ஜெயலலிதா வாசித்த அறிக்கை அப்பட்டமான அரசியல் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த அறிக்கையில், 1999ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது 3 பேரின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.


இந்த விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் அல்லர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 1998ஆம் ஆண்டில் குஜ்ரால் அரசு கவிழ்க்கப்பட்டதற்கு என்ன காரணம்? ராஜிவ் கொலையில் திமுக மீது ஜெயின் கமிஷன் குற்றம் சாட்டியதாகக் கூறி குஜ்ரால் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் 1999ஆம் ஆண்டில் கருணாநிதி தண்டனை குறைப்பு முடிவை எடுக்காதது பெரிய ஆச்சர்யமான விஷயமாகத் தெரியவில்லை.

 2008ஆம் ஆண்டும் திமுக ஆட்சியின் போது  நீண்ட காலம் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘’ நளினியை விடுதலை செய்தால், ராயப்பேட்டையில் தங்குவார் என்றும், இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் அப்போது ஆட்சி நடத்திய கருணாநிதியிடம் இருந்து இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

இதோ இப்போது ஜெயலலிதா முறை. இதே நளினி இப்போது, சில நாட்களுக்கு முன்பு, பரோல் கேட்டு தாக்கல் செய்த மனு என்ன ஆனது? வயதான தன் தந்தையை பார்க்கவும், அவரோடு ஒரு மாதம் தங்கி பராமரிக்க நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் செல்ல 1 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனு மீது வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் என்ன பதில் மனுத்தாக்கல் செய்தார். திமுக ஆட்சியில் என்ன காரணம் சொல்லப்பட்டதோ, அதே காரணம், நளினியை பரோலில் விட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று பதில் மனுவில் சொல்லப்பட்டது.

இது நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இப்போது என்ன ஞானோதயம்
(தேர்தல் ஞானோதயம்) ஏற்பட்டதோ 7 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை. மூவர் தண்டனையைக் குறைக்க உச்ச நீதிமன்றத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு 3 நாட்கள் கெடு வேறு. இதை மத்திய அரசு எதிர்த்தால், தமிழின விரோதப்போக்கு என்று காங்கிரஸையும், அதோடு கூட்டணி சேர நினைக்கும் கட்சிகளையும் பிரச்சாரத்தின் போது வறுத்தெடுக்கலாம். இப்படி நுட்பமான அரசியல் இதில் பொதிந்துக் கிடக்கிறது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, திமுகவையும் காங்கிரஸையும் குறி வைத்து தாக்குவதற்கும்,  தேர்தல் நேரத்தில் தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் தன் நிலையை உயர்த்திக்கொள்ளவும் இந்த முடிவு பயன்படலாம்.

தி இந்து நடுப்பக்கம், 21-02-2014

13/02/2014

நள்ளிரவில் பூஜை, மரமே கடவுள்..!


நள்ளிரவு பூஜை என்றாலே பலருக்கும் ஒரு அச்சம் உள்ளது. நரபலி பூஜையோ, மந்திரவாதி பூஜையோ என்று நடுங்குவார்கள். ஆனால், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கோயிலில் நள்ளிரவில் நடக்கும் பூஜையில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்வது காலங்காலமாக நடைபெற்றுவருகிறது. வாரத்தில் திங்கள்கிழமை தோறும் நள்ளிரவில் மட்டும் நடை திறக்கப்படும் இக்கோயில், பரக்கலக்கோட்டை என்ற இடத்தில் உள்ளது. இங்கு மரமே இறைவானாகப் பொது ஆவுடையார் என்ற பெயரில் சிவபெருமான் வீற்றுள்ளார்.

இங்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடை திறக்க என்ன காரணம்? அதுவும் நள்ளிரவில் மட்டும் ஏன் திறக்கிறார்கள்? இங்கு மரமே இறைவனாகக் காட்சியளிக்க என்ன காரணம்? அதற்குக் கோயிலின் தலபுராணத்தில் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

இல்லறத்தில் இருந்து சிவனை வழிபட்டு வந்தார் வானுகோபர். அதேபோலத் துறவு கொண்டு சிவனை வணங்கி வந்தார் மகாகோபர். இவர்கள் இருவரும் இறைவனை அடைய இல்லறமே ஏற்றது என்றும், துறவறமே ஏற்றது என்றும் தங்களுக்குள் வாதிட்டு தில்லை அம்பலத்தில் நடனமாடும் இறைவனிடம் நீதி வேண்டினர்.

அப்போது அசரீரியாகத் தோன்றிய இறைவன், ‘’தெற்கே பொய்கை நல்லூரில் உறங்கும்புளி, உறங்காப்புளி என்ற இரண்டு புளிய மரங்கள் உள்ளன. அங்கே சென்று காத்திருங்கள்' என்று உத்தரவிட்டார். அதன்பிறகு கார்த்திகை சோமவாரம் என்று சொல்லப்படும் கார்த்திகை மாதத் திங்கட்கிழமை அன்று தில்லையில் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்ட பிறகு, நள்ளிரவில் பொய்கை நல்லூரில் நடராஜ பெருமாள் ஆலமரம் ஒன்றின் அடியில் தோன்றித் துறவிகளின் வாதங்களை வழக்காடு மன்றம் நடத்திக் கேட்டாராம்.

‘’உள்ளத் தூய்மையோடு உண்மையான அன்போடு வழிபட்டால் இறைவனைத் துறவறத்தின் மூலமும் அடையலாம், இல்லறத்தின் மூலமும் அடையலாம்’’ என்று இருவரும் சமரசம் அடையும் வகையில், பொதுவான தீர்ப்பினை வழங்கிச் சென்றார். இருவருக்கும் மத்தியஸ்தம் செய்ததால் சம்ஸ்கிருதத்தில் மத்தியப்புரீஸ்வரர் என்றும் தமிழில் பொது ஆவுடையார் என்றும் இங்குள்ள இறைவன் அழைக்கப்படலானார்.

இறைவனை அடையும் நோக்கில், ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் நள்ளிரவு பூஜை நடக்க இதுவே காரணம். கோயில் என்றதும் ராஜகோபுரம், கர்ப்பக்கிரகம், கல்மண்டபம் இருக்கும் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். இயற்கையோடு இயைந்த இறைவன் பழைமையான ஆலமரத்தின் அடியிலேயே காட்சியளிக்கிறார். மரத்தடியில் சிவலிங்கம் போன்ற சிலைகளோ, சாமி உருவங்களோ கிடையாது. இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோயில், மரமே தலவிருட்சம். தற்போது மர வேரில் லிங்கம் போன்று அலங்கரித்துச் சிவஉருவம் கொண்டுவந்துள்ளனர்.

இங்கு ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பிறகு நடை சாத்தப்படும்.

பகலில் வழிபாடு கிடையாதா என்று நினைக்க வேண்டாம். வருடத்தில் ஒரே ஒருநாள் அதுவும் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோயில் திறந்திருக்கும். இரவில் கோயில் பூட்டப்பட்டு விடும்.

இக்கோயில் ஆலமரத்தில் உள்ள இலைகளைப் பிரசாதமாக எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால் வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்பதும் நம்பிக்கை. இயற்கையுடன் இணைந்திருக்கும் பொது ஆவுடையாரை ஒருமுறையாவது தரிசிக்க முயற்சி செய்யலாமே.

06/02/2014

தாயும் ஆன இறைவன்


திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் மலைக்கோட்டையில் குடிகொண்டு பொதுமக்களுக்கு அருள்பாலித்து வரும் தாயுமானவருக்கு வாழைத்தார் வைத்து வழிபாடு நடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எதற்காக இந்த வாழைத்தார் வழிபாடு என்று உங்களுக்குத் தெரியுமா? தாயுமானவர் புராணக் கதையைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு விடை கிடைத்து விடும்.

பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்தவர் ரத்தினக் குப்தன். இவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை பேறு இல்லை. குழந்தை வேண்டி இறைவனை வழிபட்டு வந்தார். இறைவன் அருளால் ஓர் அழகிய புதல்வியைப் பெற்றார் இவர். அக்குழந்தைக்கு ரத்னாவதி எனப் பெயரிட்டார்.

ரத்னாவதி பெரியவளாகித் திருமணப் பருவத்தை அடைந்தவுடன் வரன் தேடத் தொடங்கினார். திருசிராமலையில் வாழ்ந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் ரத்தினகுப்தன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்றது. தாயாகும் பேறும் அடைந்தாள் ரத்னாவதி. திருசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்தி நாதரைத் தினந்தோறும் வழிபட்டு வந்தாள் ரத்னாவதி.

மகப்பேறு காலம் நெருங்கியது. இந்தத் தகவலைப் பூம்புகாரில் இருக்கும் தன் தாய்க்குத் தெரியப்படுத்தி உடனே வரும்படி தகவல் சொல்லி அனுப்பினாள் ரத்னாவதி. தாயும் மகளுக்கு வேண்டிய மருந்துகள் எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து திருசிராமலைக்குப் பயணமானாள்.

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்தத் தாயால் திருசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்னாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். இன்று வருவாள், நாளை வருவாள் எனக் காத்திருந்த மகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏக்கத்தில் தவித்த மகள், தாயைக் காணவில்லையே எனக் கவலை கொண்டாள். தன் கவலையைச் செவ்வந்தி நாதரிடம் கண்ணீருடன் முறையிட்டாள் ரத்னாவதி. இறைவன் தனது பக்தையின் கண்ணீரைக் கண்டு கவலையையும், வேதனையையும் அடைந்தார். அவர் மனம் கரைந்தது. உடனே, ரத்னாவதியின் தாய்வேடம் பூண்டார் இறைவன். செவ்வந்தி நாதர் ரத்னாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக் கண்ட மகளுக்குப் பூரிப்பும். ஆனந்தமும் தாங்கவில்லை. தாயாக வந்த இறைவன் ரத்னாவதியுடன் தங்கினார்.

பிரசவத்துக்கான உரிய நேரம் வந்தது. தாய் வேடத்தில் இருந்த இறைவன் மகளுக்கு மருத்துவம் பார்த்தார். மகள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகளோடு சில நாட்கள் தங்கிய இறைவன் தாயையும், சேயையும் பராமரித்து வந்தார்.

இடையில், காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்னாவதி திகைத்தாள். இதென்ன இரண்டு தாய்கள். இதில் உண்மையான தாய் யார்? அவள் குழப்பம் நீங்குவதற்குள் இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றிக் காட்சியளித்தார்.

அன்று முதல் திரிசிராமலை செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப் பெற்றார். அதாவது, தாயும் ஆன இறைவனே தாயுமானவர். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்னாவதியும் தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள். இந்தப் புராணக் கதையின் நம்பிக்கை படி குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபடுவது பக்தர்களின் வாடிக்கை. வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையைக் கருவறையில் வைத்துப் பூஜித்து, பின்பு அதைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனிச் சந்நிதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

இந்தப் புராணக் கதையை விளக்கும் வகையில், செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த லீலை, திருச்சி தாயுமானவர் ஆலயச் சித்திரைப் பெருவிழாவில் 5ம் நாள் விழாவாக நடைபெறுகிறது.


04/02/2014

இங்க என்ன சொல்லுது விஜயகாந்த்?


தே.மு.தி.க-வின் உளுந்தூர்பேட்டை மாநாட்டை ஜெயலலிதா நீங்கலாகப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்திருப்பார்கள் அல்லது முடிவாக விஜயகாந்த் என்னதான் சொன்னார் என்பதைத் தங்கள் கட்சியின் இதர தலைவர்களிடம் கேட்டிருப்பார்கள். “கூட்டணி வேணாம்னு சொல்றாங்க...” என்று தன் முடிவைத் தொண்டர்கள் மீது விஜயகாந்த் போட்டதைப் பார்த்த பெரும்பாலானோர் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்: “பாருங்க… நான் அப்பவே சொல்லலே?!”

என்னதான் பாஸ் சொன்னார்?

ஒருபக்கம் தி.மு.க-வும் அதன் தலைவர் கருணாநிதியும் கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்க, இன்னொரு புறம் பா.ஜ.க-வும் தமிழருவி மணியனும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, கடைசியில் விஜயகாந்த் கொடுத்த ‘ட்விஸ்ட்’ மாநாட்டுக்கு வந்த தொண்டர்களே எதிர்பாராதது.

அப்படி என்ன சொன்னார் விஜயகாந்த்? தொண்டர்களைப் பார்த்து ‘இதுவா? அதுவா?’ பாணியில் “கூட்டணி வேணுமா… வேணாமா?” என்ற கேள்வியைக் கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் “வேணாம்… வேணாம்” என்று கையசைத்தனர். உடனே, தொண்டர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு “பாருங்க, வேணாம்னு சொல்றான் என் தொண்டன்” என்றார். ஆஹா, இப்படித் தொண்டர்களைக் கேட்டு கூட்டணி முடிவை எடுக்கும் ஒரு தலைவரை இந்தியாவில் நாம் பார்க்க முடியுமா என்று வியப்பில் ஆழ்த்திய அடுத்த நொடி, “என் தொண்டர்கள் சொல்றதுதான் எனக்கு முக்கியம். அதேசமயம், கட்சித் தலைமை என்ன முடிவு செய்யுமோ அதைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று போட்டாரே ஒரு போடு, ‘ஐயையோ! மறுபடியும் மொதல்ல இருந்தா?’ என்று திகைத்துவிட்டனர் யாவரும்.

இன்னொரு கணக்குக்கு உதவி

எப்படியும் இது இறுதி முடிவல்ல என்று அவருடைய கட்சியினரே கருதும் நிலையில், விஜயகாந்த் முன்பு இப்போது உள்ள வாய்ப்புகள் என்ன? தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை தற்போது நான்கு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தி.மு.க-வுடன் கூட்டணி. இரண்டாவது, பா.ஜ.க-வுடன் கூட்டணி. மூன்றாவது, காங்கிரஸுடன் கூட்டணி. நான்காவது, தனித்து அல்லது புதிய கூட்டணி. இவற்றில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?

தி.மு.க. கூட்டணியின் சாதக பாதகங்கள்

சாதகம்: தி.மு.க-வுக்கு அடுத்துப் பெரிய கட்சி எதுவும் இல்லை. இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து தே.மு.தி.க-வுக்குக் கிடைக்கும். விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு 4-5 சீட்டுகளைத் தி.மு.க. ஒதுக்கினால்கூட, மீதி 35 தொகுதிகள் இருக்கும். கொஞ்சம் அழுத்திக் கேட்டால் 12-15 தொகுதிகள் வரை தே.மு.தி.க. பெற முடியும். தி.மு.க-வின் 25-30% வாக்கு வங்கியுடன் தே.மு.தி.க-வின் 8-10% வாக்கு வங்கி சேர்ந்தால் அ.தி.மு.க. கூட்டணிக்குக் கடும் சவாலைக் கொடுக்கலாம்.

பாதகம்: தி.மு.க. தலைமையின் குடும்பச் சண்டை, அந்தக் கட்சியையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் பாதிக்கலாம். தி.மு.க. மீதான ஊழல் புகார்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க-வின் அணுகுமுறை போன்ற காரணங்களால் இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெறுவதில் பின்னடைவைச் சந்திக்கலாம். அ.தி.மு.க-வைத் தொடர்ந்து தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதன் மூலம் வைகோ, ராமதாஸ் போலத் தனித்தன்மையை (?!) விஜயகாந்த் இழக்கலாம்.

பா.ஜ.க. கூட்டணியின் சாதக பாதகங்கள்:

சாதகம்: பா.ஜ.க. கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி என்ற அந்தஸ்து தே.மு.தி.க-வுக்குக் கிடைக்கும். தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் ஒருசேர விமர்சித்து வாக்குகள் சேகரிக்கலாம். அகில இந்திய அளவில் இருப்பதாகக் கூறப்படும் ‘மோடி அலை’ இந்தக் கூட்டணிக்கு உதவலாம். இந்தக் கூட்டணி கணிசமாக வெற்றிபெற்றால், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இதே கூட்டணியை வைத்துக்கொண்டு விஜயகாந்த் சந்திக்கலாம்.

பாதகம்: யார் பெரியவர் என்ற எண்ணம் கூட்டணிக்குள் பூதாகாரமாகலாம். தே.மு.தி.க. விரும்பும் பல தொகுதிகளைப் பா.ம.க., ம.தி.மு.க. குறிவைக்கும் என்பதால், தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் பிரச்சினை வரலாம். பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டுகளை விஜயகாந்த் இழக்க நேரிடலாம். இந்தக் கூட்டணிக்கு ஏறத்தாழ 20% வாக்குகள் கிடைக்கலாம். இந்த வாக்குகள் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றிபெற உதவினாலும் வாக்குப் பிரிப்பு அ.தி.மு.க-வுக்கோ தி.மு.க-வுக்கோ சாதகமாகலாம்.

காங்கிரஸ் கூட்டணியின் சாதக பாதகங்கள்:

சாதகம்: விஜயகாந்தும் இல்லாவிட்டால், தனித்து விடப்படும் நிலையில் இருக்கும் காங்கிரஸிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பேரம் பேசலாம்.

பாதகம்: காங்கிரஸ் மீதான ஊழல் எதிர்ப்பு அலை தே.மு.தி.க-வையும் சேர்த்துச் சுருட்டலாம்.

தனித்து போட்டி முடிவின் சாதக பாதகங்கள்:

சாதகம்: 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இழந்த ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று’என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்பிப் பிரச்சாரம் செய்யலாம். ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை வலுவாக எழுப்ப வாய்ப்பு கிடைக்கும்.

பாதகம்: 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பிரிப்பு மூலம் அப்போது தி.மு.க. பயனடைந்தது. இப்போது தே.மு.தி.க-வின் முக்கிய எதிரிக் கட்சியான அ.தி.மு.க. லாபம் அடையலாம். நாடாளுமன்றத்துக்குள் தே.மு.தி.க. அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு மங்கிவிடலாம். வெற்றி கிடைக்காது என்பதால், தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகம் சோர்வடையலாம்.

கண்ணைக் கட்டுதே!

தே.மு.தி.க-வை வைத்து யார் போட்டுப்பார்த்தாலும் இந்தக் கணக்குகள்தான் வரும். ஆனால், விஜயகாந்த் போடும் கணக்கு என்ன என்று தெரியவில்லையே?

04/02/2014, தி இந்து (நடுப்பக்கம்)

01/02/2014

பண்ணையாரும் பத்மினியும் விமர்சனம்

உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத மோகத்தையும், காமெடியையும், பரிதவிப்பையும், உண்மையான அன்யோன்யமான காதலையும் சம விகிதத்தில் கலந்துச் சொல்ல வந்திருக்கிறது பண்ணையாரும் பத்மினியும் படம்.

வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் கிராமத்து மக்களுக்கு பண்ணையார் ஜெயப்பிரகாஷ்தான் எல்லாமே. கேட்கும்போது உதவி மட்டுமல்ல, தன் வீட்டில் டி.வி., போன் போன்ற எல்லாப் பொருட்களையும் கிராமத்து மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் அளவுக்கு பாசக்கார பண்ணையார். தன் பெண்ணின் பிள்ளைப்பேறுக்காக ஊருக்குச் செல்லும்  மகாதேவன், காரை  பண்ணையார் வீட்டில் விட்டுச் செல்கிறார். பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஊரே திரண்டு வந்து பண்ணையாரிடம் உதவி கேட்கிறது. ‘’வண்டியை எடுங்கள்’’ என்று பண்ணையார் உத்தரவிடும் போது காரை ஒட்ட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். அந்த ஊரிலே டிராக்டர் ஓட்டத் தெரிந்த விஜய் சேதுபதியை அழைத்து வருகிறார்கள். அதன் பிறகு கிராமத்தின் நல்லது கெட்டது அனைத்திலும் காரும் ஒன்றாகி விடுகிறது. வீட்டில் எந்தப் பொருள் இருந்தாலும், அதை சாதுர்யமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடும் பண்ணையாரின் மகள் நீலிமா ராணி காரையும் எடுத்து சென்று விடுகிறார். அதன் பிறகு கார் மீண்டும் பண்ணையாரிடம் வந்ததா? இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

கார் மீது மோகம் என்பதைத் தாண்டி அன்பை பொழிகிறார்கள் பண்ணையாரும் விஜய்சேதுபதியும். காருக்கு ஒன்று என்றால் உருகிறார்கள். தன் திருமண நாளுக்குள் காரை ஓட்டக் கற்றுக் கொண்டு மனைவியை கோயிலுக்கு அழைத்து செல்ல மெனக்கெடும் ஜெயப்பிரகாஷூம், காரை ஓட்டினால்தான் கோயிலுக்கு வருவேன் என்று உசுப்பேத்தும் பண்ணையார் மனைவியும், கார் ஓட்ட கற்றுக் கொடுத்தால், பண்ணையார் தன்னை காரிடம் இருந்து பிரித்து விடுவார் என்று விஜய் சேதுபதி அச்சமடைவதும் என சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ்.   அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கிறார். இளம்ஜோடி படத்தில் இருந்தாலும், வயதான ஜோடியான பண்ணையாரும் அவரது மனைவிக்கும் இடையிடையே ஏற்படும் ஊடல், ஒரே விஷயத்துக்காக  கணவனும் மனைவியும் மாறி மாறி விஜய் சேதுபதியிடம் உருகுவது, கோபித்துக்கொள்வது, விட்டுக்கொடுப்பது ஆகிய காட்சிகள் இதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துகிறது.  கதாநாயகன்-நாயகி என்று சொல்லுமளவுக்கு இருவரையும் படம் முழுக்க காட்டியிக்கும் இயக்குநர் அருண்குமாருக்கு சபாஷ் போடலாம்.
பண்ணையாரின் திருமண நாளுக்கு முன்பாகவே காரை  நீலிமா ராணி எடுத்துக் செல்லும் போது அனைவரும் செய்வதறியாது தவிப்பதில் ஒவ்வொருவரும் சிறப்பாக  நடித்திருக்கிறார்கள்.

பண்ணையாரின் வீட்டுவேலைக்காரனாகவும், காருக்கு கிளீனராகவும் வரும்   ‘கனாகாணும் காலங்கள்’ பால சரவணன் பீடை என்ற கதாபாத்திரத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தமிழ்ப் படத்தில் கதாநாயகியை எப்போதும் அழகு பதுமையாகவும், சிரித்த முகத்துத்துடனும், மங்களகரமாகவும் காட்டும் இயக்குநர்களுக்கு மத்தியில், இழவு காட்சியில் அழுகை முகத்துடன் காட்டி தமிழ் சினிமா சென்டிமெண்டை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஒருபக்கம் செண்டிமெண்டை உடைத்த அவர், இன்னொரு புறம் மூட நம்பிக்கையை காமெடி என்ற பெயரில் தூக்கி பிடித்திருப்பது முரண். பீடை.. பீடை என்று படம் முழுக்க சொல்லி விட்டு ‘ நான் தொட்டால் எதுவும் விளங்காது’ என்று அந்த கதாபாத்திரம் மூலமே சொல்ல வைத்திருப்பது மூட நம்பிக்கையின் உச்சம்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். "எங்க ஊரு வண்டி",  "உனக்காகப் பொறந்தேனே", "பேசுறேன் பேசுறேன்" ஆகிய பாடல்கள்  மனதை வருடுகின்றன. பின்னணி இசையமைப்பிலும் தேர்ந்த இசைக் கலைஞராக மின்னியிருக்கிறார்.  ஏற்கனவே குறும்படமாக வெளிவந்து பாராட்டை பெற்ற நம்பிக்கையின் அடிப்படையில்  இப்பட்டத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். பிரமாண்டம், அடிதடி, வெட்டு, குத்து, பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லாம படம் எடுத்துள்ளதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டலாம்.

கார் ஓட்ட கற்பதற்காக எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது, செயற்கைத்தனமாக நடந்துக் கொள்ளும் பண்ணையார் மகளின் நடவடிக்கைகள் போன்ற காட்சிகள்  இடையில் அழுப்பைத் தட்டுகின்றன.  விஜய் சேதுபதி சம்பளத்துக்கு கார் ஓட்டுகிறாரா இல்லையா என்பதை படம் முழுக்கவே கண்டுபிடிக்க முடியவில்லை. பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் பொதுமக்களின் உயிரை பற்றி துளியும் மதிக்காமல் காரோடு ரேஸூக்கு போவது நம்பும்படியாக இல்லை.

படத்தில் இப்படி சில வழுக்கல்கள் இருந்தாலும்,  பண்ணையாரும் பத்மினியும் உணர்வுகளின் சங்கமம்.

மதிப்பெண்: 3 / 5