30/11/2019

அஞ்சலி: பாலாசிங் எனும் அபூர்வம்


நான்கு மாதங்களுக்கு முன்பு பாலா சிங்கை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். ‘நாயகன், நாயகி, இயக்குநர் ஆகியோரைத் தாண்டி குணச்சித்திர வேடத்தில் ஜொலிக்கும் கலைஞர்களைப் பற்றிய பேட்டி’ என்று அறிமுகம் கொடுத்தேன். “துக்கடா வேஷத் தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய பேட்டின்னு சொல்லுங்க தம்பி” என்று யதார்த்தம் குறையாமல் கலகலவென்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் பாலா சிங். சினிமாவில் மாபெரும் கனவோடும் தணியாத தாகத்தோடும் காலடி எடுத்து வைத்த பாலாவை தமிழ் சினிமா வாரி அணைத்துக்கொள்ளவும் இல்லை; தூற்றி விரட்டவும் இல்லை என்பதுதான் நகை முரண்.

வில்லன், குணச்சித்திரம், அரசியல்வாதி என எந்தக் கதாபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்தும் அற்புதமான கலைஞர்தான் பாலா. சிறு வேடமோ முழு நீள வேடமோ அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அபார ஆற்றல் உடையவர். அவருடைய நடிப்பில் மிகை இருக்காது. கெட்-அப்பை பெரிய அளவில் மாற்றிக்கொள்ளாமல், நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய அற்புதமான நடிப்புக் கலைஞர் பாலா சிங்.
நாகர்கோவில் அருகே உள்ள அம்சிக்காகுழி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா. படிக்கும் வயதிலிருந்தே நாடகங்கள் என்றால் அவருக்கு ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், தேவாலயங்களில் நாடகங்கள் போட்டு தன்னை நாடகக் கலைஞராக நிலைநிறுத்திக்கொண்டார்.

நாடகங்களைப் போடுவதற்காக ஒவ்வோர் ஊருக்கும் பயணப்பட்ட பாலா, மேடை ஏறாத ஊர்களே இல்லை. பெரும் நம்பிக்கையோடும் சினிமா கனவோடும் சென்னை நோக்கி வரும் கலைஞர்களைப்போல் பாலாவும் 80-களின் தொடக்கத்தில் சென்னைக்குள் அடி வைத்தார். சென்னையில் பத்திரிகையாளர் ஞாநியின் பரிக்ஷா நாடக் குழு பாலாவை மேடையேற்றி அழகு பார்த்தது. உளவியல் மருத்துவரான ருத்ரனும் தன் பங்குக்கு அவரை நாடகங்களில் நடிக்க வைத்தார்.

முதல் படம்

நாடகங்களில் நடிப்பதே சினிமாவுக்கான முன்னோட்டம் என்ற அடிப்படையில் சினிமா வாய்ப்புக்காக அலையத் தொடங்கினார் பாலா. சென்னையில் பாலா ஏறி இறங்காத இயக்குநர்களின் வீடுகளே கிடையாது. ஆனால், ஏமாற்றமே அவருடைய வாழ்க்கையானது. சென்னையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் கைதூக்கிவிடவும் ஆள் இல்லை என்ற நிலையில், சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் மட்டும் அவருக்குள் ஆழமாக வேரோடி இருந்தது.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் தலைகாட்டினார் பாலா. பிறகு பாலா நடித்தது எல்லாமே ‘துக்கடா’ வேடங்கள்தான். சினிமாவுக்குள் புழங்கிக்கொண்டே இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற எழுதப்படாத விதிக்கு பாலாவும் விதிவிலக்கல்ல. உதவி இயக்குநர், புரொடெக்‌ஷன் மேனேஜர் எனப் பல அவதாரங்களை எடுத்தார். அப்படிக் கிடைத்த அறிமுகமும் நாடகத்தில் ஈடுபாடு உடைய நாசரின் உதவியும் பாலா சிங் என்ற சிறந்த கலைஞனை ‘அவதாரம்’ மூலம் அரிதாரம் பூச வைத்தது.

1993-ல் நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் அந்த வில்லன் வாய்ப்பு அத்தனை சுலபமாகக் கிடைத்துவிட வில்லை. ‘காமத்தை எப்போதும் கண்களிலும், முதுகில் குத்தும் சூழ்ச்சியை முகத்திலும் காட்டி’ அவர் முன்பாகவே ஒரு காட்சியை நடித்துக்காட்ட ஆடிப்போனாராம் நாசர். அப்படித்தான் அந்த வில்லன் 'பாசி'யாகத் தமிழ் ரசிகர் கள் மனதில் ஒட்டிக்கொண்டார்.‘அவதார’த்தைத் தொடர்ந்து ‘ராசி’, ‘பொற்காலம்’, 'ஆனந்த பூங்காற்றே’, ‘விருமாண்டி’ என நல்ல படங்கள் பாலாவுக்கு அமைந்தன. ஆனால்,
பெரிய வில்லன் நடிகராக வந்திருக்க வேண்டிய பாலா, பின்னாளில் வில்லனுக்கு சப்போர்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம்.

கடைசி வரை நடிப்பு

எந்த சப்போர்ட்டிவ் கதாபாத்திரலும் முத்திரைப் பதித்து ஜொலிக்க பாலா தவறியதில்லை. அதற்கு உதாரணமாக ‘புதுப்பேட்டை’யைச் சொல்லலாம். வில்லனாகவோ, சப்போர்ட்டிவ் வில்லனாகவோ நடிப்பவர்கள் எல்லாம் கத்திக்கொண்டே இருக்கும் காலம் இது. ஆனால், சத்தம் போடாமல் நடிப்பின் மூலம் வில்லன் கதாபாத்திரத்துக்கும் உயிர்கொடுத்தவர் பாலா. இன்றைய தலைமுறையினர் பாலாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய நடிப்பு உத்தி இது.

என்னதான் நடிப்பில் முத்திரைப் பதித்தாலும், தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுபவர்களுக்கே மாலை, மரியாதை கிடைக்கும் என்ற நியதி பாலாவின் சினிமா வாழ்க்கையிலும் தொடரவே செய்தது. அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் எப்போதும்போலவே நடித்துக் கொண்டிருந்தார். அரசியல் படம் என்றால் பாலாவுக்கு எப்போதும் ஓரிடம் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அதற்கு சமீபத்திய உதாரணமாகிப் போனது ‘என்.ஜி.கே’ படத்தின் திரைக்கதையில் திருப்புமுனை ஏற்படுத்திய அவருடைய அருணகிரி கதாபாத்திரம்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலாவிடம், சினிமாவில் எப்போதும் புழங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணம் கடைசிவரை மாறவே இல்லை. கிடைக்கும் வேடங்களைப் பற்றி கவலைப்படாமல், எத்தனை வயதானாலும் நடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவருடைய கடைசிக் காலம்வரை அது நடந்தது மட்டுமே தமிழ் சினிமா பாலா சிங்குக்குக் கொடுத்த ஒரே கவுரவம்.

23/11/2019

சாகச விளையாட்டின் சாதனை மங்கை


ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற சாகச விளையாட்டு இந்தியாவிலும் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்தியவர் அந்தப் பெண். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற இமாலய சாதனையைப் படைத்தவர் அவர். அவரால் இன்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துளிர்த்து வளரத் தொடங்கியிருக்கிறது. இளம் பெண்களின் புதிய ரோல் மாடலாக உருவெடுத்திருக்கும் அவர், 25 வயதான தீபா கர்மாகர்!

புகழ்பெற்ற வீராங்கனைகளை அள்ளிக்கொடுத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராதான் இவரது சொந்த ஊர். எளிமையான குடும்பத்தில் பிறந்த தீபாவின் அப்பா துலா கர்மாகர் பளு தூக்கும் வீரர். சிறு வயதிலிருந்தே தன்னை போலவே மகளையும் விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்பது அவரது கனவு. பளு தூக்குதல் விளையாட்டு அல்லாமல் ஜிம்னாஸ்டிக்கை அவர் தேர்ந்தெடுத்தார். இந்தியாவில் பெரிய அளவில் வளராத ஜிம்னாஸ்டிக்ஸில் தன் மகளை வீராங்கனையாக்க வேண்டும் என்று விரும்பியது ஆச்சரியம்தான்.

வார்க்கப்பட்ட தீபா

தீபாவுக்கு ஆறு வயதாகும்போதே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. பெற்றோருக்கு இருக்கும் கனவு பிள்ளைக்கும் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை அல்லவா? தீபாவுக்கும் அப்படித்தான் இருந்தது. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் இருந்தார் தீபா.

பிறகுதான் தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது ஏன் ஆர்வம் இல்லை என்பதை அவரது பயிற்சியாளர் சோமா நந்தி கண்டுபிடித்தார். தீபாவின் கால்கள் தட்டையாக இருந்ததால், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் அவரால் ஈடுபாட்டுடன் விளையாட முடியவில்லை என்பதை உணர்ந்தார். சாகச விளையாட்டான ஜிம்னாஸ்டிக்ஸின் பலமே கால்கள்தான். கால்கள் வலிமையாகவும் நெகிழும் தன்மையுடனும் சமநிலைத்தன்மையுடனும் இருப்பது அவசியம். தட்டையான பாதங்கள் இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் ஜொலிக்க முடியாது என்பதால், தீபாவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் தொடங்கினார் பயிற்சியாளர்.

குறிப்பாகக் கால்களுக்கு மட்டும் தனி பயிற்சி அளித்தார். தொடர்ச்சியான பயிற்சிகளும் எல்லையில்லா முயற்சிகளும் திருவினையாயின. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடும் அளவுக்கு தீபாவின் பாதங்கள் நெகிழ்வுதன்மையுடன் மாறின. இதன்பின்னரே தீபாவுக்கு முறையான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் தொடங்கின.
தொடக்கத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், தன்னுடைய குறைதான் அதற்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து மீள அந்தச் சின்ன வயதில் தீபா கொடுத்த ஒத்துழைப்புதான், அவரை பிற்காலத்தில் சாம்பியன் வீராங்கனையாக்கத் துணை நின்றது.

அடிப்படை வசதிகள் இல்லை

ஜிம்னாஸ்டிக்ஸில் அவர் உச்சத்தைத் தொடுவதற்கு முன்பு, அந்த விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு ஒரு பொருட்டே அல்ல என்ற நிலைதான். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற முறையான உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. அதுவும் பின்தங்கிய மாநிலமான திரிபுராவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

 ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக் கூடத்தில் எங்கு பார்த்தாலும் எலிகள்தான் உலாவும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்றழைக்கும் அளவுக்கு ஆபத்தான இந்தச் சாகச  விளையாட்டில் பயிற்சியில் ஈடுபடும் அளவுக்கு எந்த வசதியும் இல்லாமல்தான் இந்த விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார் தீபா கர்மேகர். குறைகளையும் நிறைகளாக்கிக்கொள்ளும் மன உறுதி அவரிடம் இருந்ததால், இந்த விளையாட்டில் முன்னேறத் தொடங்கினார் தீபா.

அங்கீகாரம் வந்தது 

இதன் பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார் தீபா. முதன்முதலில்  2007-ம்  ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்றதுதான் அவரது முதல் பதக்கம். டெல்லியில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் தீபாவுக்கும் இடம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியில் தீபா பெரிதாக சாதிக்கவில்லையென்றாலும், இந்தியாவின் ஆண்கள் அணியைச் சேர்ந்த ஆசிஷ் குமார் முதன் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்றார். ஆசிஷ் வென்ற பதக்கம் ஜிம்னாஸ்டிக்ஸில் சர்வதேச பதக்கம் வெல்ல தீபாவுக்கு உந்துதலை தந்தது.

தொடர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பல்வேறு வகையான  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட தீபாவுக்கு 2014-ம் ஆண்டு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த முறையும் அவரது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதும் காமன்வெல்த் போட்டிதான். 2014-ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் தீபா. ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சூடிகொண்டார். இந்த வெற்றிக்கு பிறகு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்கேற்க ஆரம்பித்தார் தீபா. 2015-ல் ஜப்பான் ஏஆர்டி ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஒலிம்பிக் பெருமை

2016-ம் ஆண்டு தீபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்க தீபா தகுதி பெற்றார். இந்தப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார் தீபா. ஒலிம்பிக்கில் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார் தீபா. ஆனால்,  இந்திய வீராங்கனை ஒருவரின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைப் பார்த்து உலகமே திரும்பி பார்த்தது.

கடந்த 11 ஆண்டுகளில் மாநிலம், தேசியம், சர்வதேசம் என அனைத்து வடிவங்களிலும் 77 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் தீபா. இவற்றில் 67 தங்கப் பதக்கங்களும் அடங்கும். தீபாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைக் கண்டு 2016-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கியது.  2017-ம் ஆண்டு 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தீபா கர்மாகரும் இடம்பிடித்தார்.


ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் ஆபத்தான 'புரோடுனோவா வால்ட்’டில் பங்கேற்ற ஐந்து சர்வதேச வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் தீபா தவிர மற்றவர்கள் ஒலிம்பிக்கிலும் தடம் பதித்தவர்கள். தீபாவுக்கும் அந்தத் தருணம் ஒரு நாள் நிச்சயம் அமையும். அப்போதுதான் அவரது அந்தரச் சாகசம் முழுமை பெறும்.

இந்து தமிழ், 16/12/2018

17/11/2019

ஆக்‌ஷன் விமர்சனம்

ஓர் அரசியல்வாதி குடும்பம். அப்பா முதல்வர் (பழ. கருப்பையா) மகன் துணை முதல்வர் (ராம்கி). இன்னொரு மகன் ராணுவ கர்னல் (விஷால்). தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர் ஒருவர் கொல்லபடுகிறார். அதே பிரசாரத்தில் விஷாலின் காதலியும் (ஐஸ்வர்யா லெக்மி) கொலையாகிறார். அந்தப் பழி ராம்கி மீது விழுகிறது. அடுத்து ராம்கியும் தற்கொலை செய்கிறார். இந்த மூன்று மரணத்துக்கும் யார் காரணம் என ஆராய்கிறார் விஷால். அந்தக் காரணகர்த்தாக்களைப்  பழித் தீர்க்க விஷால் ‘ஆக்‌ஷன்’ அவதாரம் எடுப்பதே படத்தின் கதை.

பக்கா ஆக்‌ஷன் கதையைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் சுந்தர்.சி-க்கு நீண்ட நாள் ஆவல் போல. அதை இந்தப் படத்தின் மூலம் தீர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இது சுந்தர். சி-யின் படமா என அடுத்தடுத்து காட்சிகள் யோசிக்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒரு பலவீனமான கதையை சுந்தர். சி படமாக்கியிருக்கிறார். படம் தொடக்கமே துருக்கியில் துரத்தலில் தொடங்குகிறது. அந்தத் துரத்தல் படம் முடியும் வரை நம்மையும் சேர்த்தே துரத்துகிறது. 

அரை மணி நேர ஃபிளாஸ்பேக்கைக் கடந்துவந்தால், அதன் பிறகு 2 மணி நேரமும் ஆக்‌ஷன் காட்சிகளால் பார்வையாளர்களைத் திணறடிக்கிறார்கள். படம் லண்டன், கரிபீயன் தீவு, துருக்கி, பாகிஸ்தான் என எங்கெங்கோ சுற்றிவருகிறது. ஒன்று துரத்திகொண்டே இருக்கிறார்கள்; இல்லை ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டையும் செய்யாத வேளையில் சண்டைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மூன்றையும் முதலில் படமாக்கிவிட்டு, அதற்கு ஒரு கதையை இயக்குநர் தயார் செய்திருப்பார் போல. ஒரு துரத்தல், ஆக்‌ஷன் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பின்னணி கதை அமையவில்லை.

4 ஆயிரம் கோடியை வாங்கிவிட்டு தலைமறைவாகும் தொழிலதிபருக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிக்கும் என்ன தொடர்பு என்பதை துளிகூட படத்தில் சொல்லவே இல்லை. படத்தின் முக்கியமான் இந்த இடத்தை இயக்குநர் அப்படியே கைகழுவிவிடுகிறார். துருக்கியில் அதிநவீன பாதுகாப்பு கொண்ட வங்கியின் சர்வர் அறையில் புகுந்து பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி விடுவது, ஒரு முதல்வரின் வீட்டில் புகுந்து அவருடைய மகனை அதுவும் துணை முதல்வரை தூக்குமாட்டிவிடுவது, இந்த சிசிடிவி யுகத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்துகொண்டு தேசிய தலைவரை கொல்வது எனப் படத்தில் டன் கணக்கில் பூச்சுற்றல்கள்.

வழக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் படம் என்றால், தீவிரவாதி
தலைவருடன் நாயகன் மல்லுக்கட்டுவதுடன் முடிந்துவிடும். ஆனால், இந்தப் படத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதியையே விஷால் ஒரு காட்டு காட்டுகிறார். போலீஸும் இண்டர்போலும் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் ஒரே ஆளாக ஒவ்வொரு நாட்டுக்கும் போய் செய்கிறார் விஷால்.

படத்தின் நாயகன் விஷால், சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவருடைய வாட்டசாட்டமான உயரமும் அதற்கு உதவுகிறது. தலை முடியில்கூட அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். சண்டைக் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். குறிப்பாக லண்டன், துருக்கி சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தின் நாயகி தமன்னா, சக ராணுவ வீராங்கனையாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், துரத்தல் காட்சிகளில் சில இடங்களில் விஷாலுக்கு இணையாக நடித்திருக்கிறார்.

இன்னொரு நாயகியாக வரும் ஐஸ்வர்யா லெக்மி அவ்வப்போது சிணுங்கிக்கொண்டுவந்து, பிறகு இறந்துபோகிறார். தொழில்முறை கில்லராக வரும் அகான்ஷா கவர்ச்சியிலும் சண்டைக் காட்சியிலும் மிரள வைக்கிறார். முதல்வராக வரும் பழ கருப்பையா வழக்கம்போல அடுக்குமொழி பேசி செல்கிறார். துணை முதல்வராக வரும் ராம்கியை விரைவாகவே கொன்றுவிடுகிறார்கள். லண்டனில் ஹேக்கராக வரும் யோகிபாபு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். தீவிரவாதியாக வரும் கபீர் துகான் சிங்,  ‘நான் யார் தெரியுமா?’ என்று கத்திக்கொண்டே இருக்கிறார்.
    
படத்துக்கு இசை ஹிப் ஹாப் ஆதி. பாடல்கள் மனதில் ஒட்டவும் இல்லை. படத்துக்கும் இடையூராகவே வந்து செல்கின்றன. இயக்குநரைவிட இந்தப் படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் அதிகம் உழைத்திருக்கிறார். சில சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகளுக்காக நிச்சயம் அவரை பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் டட்லியையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். வேகமான துரத்தலையும் துருக்கியையும் அவ்வளவு அழகாக கேமராவுக்குள் கடத்தியிருக்கிறார்.  

 'அவன் வந்தால் ஆப்ஷன் கிடையாது... ஆக்‌ஷன்தான்’ என்று படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வரும். அதை மட்டுமே நம்பி கதையில் கோட்டை விட்டதில், ‘ஆக்‌ஷன்’ எந்த ரியாக்‌ஷனையும் ஏற்படுத்தவில்லை.

மதிப்பெண்: 2 / 5

05/11/2019

துரோகத்தால் வீழ்ந்த திப்பு சுல்தான்!

மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தான் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. நான்காம் ஆங்கிலோ - மைசூர் போரின்போதே ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு திப்புவின் கோட்டை இரையாகிவிட்டது. அத்துடன் இது மைசூர் அரண்மனைகளைவிட ஒரு நூற்றாண்டு பழமையானதும்கூட. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது.

திப்பு சிறை

மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே
திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை
தெரிகிறது சிறைக்கூடம். தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவரையொட்டி காவிரி ஓடுகிறது. தரை மட்டத்துக்குக் கீழே சிறைச்சாலை என நுட்பமாகக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கினால், பூமிக்கு 30 அடி ஆழத்தில்தான் சிறைக் கூடம் தெரிகிறது.
உள்ளே நுழைந்தால் இன்னும் ஆச்சரியம். சிறை இரண்டு வரிசையாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பெரிய தூண்கள் உள்ளன. தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவரில் வரிசையாய்ச் சிறுசிறு கற்கள். ஓர் அடி நீளத்துக்கு ஒரே அளவாகச் சம இடைவெளியில் இந்தச் சிறுகற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையே நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு நீட்டச் செய்து இந்தச் சிறு கற்களுடன் கைகளைப் பிணைத்துக் கட்டிவிடுவார்களாம். சுவரில் உள்ள ஒரு துவாரத்தைத் திறந்துவிட்டால், காவிரி நீர் இந்தச் சிறையை மெல்ல நிரப்பிவிடும். மரண பீதியுடன் கைதிகள் ஜலசமாதி ஆகிவிடுவார்களாம்.
அது சரி, இந்தச் சிறைக்கு ஆங்கிலேய அதிகாரியின் பெயர் எப்படி வந்தது? நான்காம் ஆங்கிலோ-மைசூர் போருக்கு முன்பாக திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டார் ஆங்கிலேய அதிகாரியான கர்னல் பெய்லிஸ். அதனால், இந்தச் சிறைக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.

தண்ணீர் வாயில்

அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத்  ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். திப்பு சுல்தான் நாள்தோறும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். மூன்றுமுறை ஆங்கிலோ- மைசூர் போர் நடந்தும் வீழ்த்த முடியாத திப்புவை, மீர் சாதிக் எனும் திப்புவின் படைத் தளபதி மூலமே
‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’
வீழ்த்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஒரு நாள் வழக்கம்போல இங்கே நீராட வந்த திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் படை திடுமென நுழைந்து எதிர்பாராமல் தொடுத்த தாக்குதலை முறியடிக்க முடியாமல் கொல்லப்பட்டார் திப்பு. ஒரு வீரனை வேறெப்படி வீழ்த்த முடியும்?
கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.

திப்பு இறந்த இடம்

சற்றுத் தள்ளி திப்பு சுல்தான் கட்டிய ஜும்மா மசூதியைப்
திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
பார்த்தோம். இந்த மசூதி இருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சிக்கு வந்த பிறகே ஆஞ்சநேயர் கோயில் போய், மசூதி வந்ததாகவும் சொன்னார் வழிகாட்டி. கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயர் சில வரலாற்றுப் புத்தகங்களில் திப்புவுக்கு உண்டு. ஆனால், இந்த மசூதிக்கு நேர் எதிரே ரங்கநாதர் கோயிலும் உள்ளது. கோயில்களை இடித்தவர் திப்பு என்றால், ரங்கநாதர் கோயிலை மட்டும் அவர் எப்படி விட்டுவைத்தார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் மானியமும் வழங்கியவர் திப்பு. இதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது.

திப்பு சுல்தானின் கோடை மாளிகை
கோடை மாளிகை

திப்புவின் வரலாறு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிபடியே அங்கிருந்து வெளியே வந்தோம். 15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மஹால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம்.

மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு
திப்பு சமாதி
சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள். திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாய் பாத்திமா பேகத்தின் சமாதிகளுக்கு அருகிலேயே திப்புவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்திலும் திப்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வெளியேயும் எங்கே பார்த்தாலும் சமாதிகள்தாம். ஆனால், கண்ணைக் கவரும் நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகளும் முகப்பில் உள்ள பெரிய தோட்டமும் இந்த இடத்தை அழகாக்குகின்றன.