02/04/2018

காஞ்சிபுரம் ஆச்சரியங்கள்: பாதாள கிணறும் வற்றாத குளமும்

அய்யங்கார்குளம்
கோயில் நகரம் என்ற பெயர் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. புகழ்பெற்ற கோயில்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றி ஏராளம். அவற்றில் புகழ்பெற்ற பழமையான ஒரு கோயில் அய்யங்கார்குளத்தில் உள்ளது. அதுதான் சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலைப் பற்றியும், கோயிலின் பின்புறம் உள்ள அய்யங்கார்குளம், நடவாவிக் கிணறு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமான கதைகள் உலா வருகின்றன. கோடையில்கூட வற்றாத அய்யங்கார்குளமும், எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் நடவாவிக் கிணறும், கிணற்றின் அழகான கட்டுமானமும் வியப்பின் குறியீடுகளாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.

பிரம்மாண்ட கோயில்

காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அய்யங்கார்குளம். பாலாற்றின் கரைக்கே அருகே இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது இந்த ஊர். அய்யங்கார்குளத்தை அடைந்தவுடனே முதலில் கண்ணில் தென்படுவது சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில்தான். இந்தக் கோயிலை ‘கற்றளிக் கோயில்’ என்கிறார்கள். அதாவது, கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்ட கோயில். கோயிலின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்கள் பிரம்மாண்டமாகக் காணப்படுகின்றன.  கோபுரம், மூலவர் விமானம், மூன்று சுற்று பிராகாரங்கள், உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள், வெளி பிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள், வடக்கு வாயிலில் கோபுரம் என நேர்த்தியாகவும் கலை அம்சத்துடனும் உள்ளது இக்கோயில்.

மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபம், 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபமும் அழகாக உள்ளன. பார்ப்பதற்கு பழமையாகவும் பாழடைந்தது போலவும் காணப்படும் இந்தக் கோயில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில்  கட்டப்பட்ட கோயில். ஆஞ்சநேயர் கோயில் அய்யங்கார்குளத்தில் வந்ததற்கு ஒரு சுவாரசியமான கதையைச் சொல்கிறார் இக்கோயிலில் பூசாரியாக இருக்கும் தங்கவேல். 

சஞ்சீவராயர் கோயில் முகப்பு
மூலிகை மகிமை
 “இந்தக் கோயிலில் உள்ள சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் இருகரம் கூப்பிய நிலையில் அயோத்தி இருக்கும் வடக்குத் திசையைப் பார்த்தபடிதான் இருப்பார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது இந்திரஜித் செலுத்திய கொடிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகிவிட்டார். லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்துவிட்டது. அதிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்தான்  சஞ்சீவிராய ஆஞ்சநேயர்.  தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இதுதான். இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு  இருப்பதும் இங்கும் மட்டும்தான். இந்தக் கிராமத்தில் சஞ்சீவி மூலிகை பரவிக் கிடக்கிறது. எனவே, இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரை பாம்பு, தேள் என எந்த விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட்டதில்லை. இந்தப் பகுதியில் எங்குமே விஷ ஜந்துகளைப் பார்க்கவே முடியாது. எல்லாமே சஞ்சீவராயரின் மகிமை” என்று கோயில் புராணத்தைச் சொல்கிறார் தங்கவேலு.

கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது தவழ்ந்துதான் வரவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குக் குறுகலாக அமைத்திருக்கிறார்கள். கருவறையைச் சுற்றியுள்ள இடம்  குளிர்ச்சியாகவே இருக்கிறது. கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் கருவறை இருக்கும்படி நுணுக்கமாக கோயில் கருவறையை அமைத்திருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லும் தங்கவேலு, இன்னொரு விஷயத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“இந்தக் கோயிலிலிருந்து முன்பு ஆஞ்சநேயர் விக்ரஹத்தை சிலர் திருடி சென்றுவிட்டார்கள். ஆனால், திருடியவர்களால் நீண்ட தூரம் சிலையைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. அதிகப் பாரம் காரணமாக ஓரிடத்தில் சிலையைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு சிலையை மீட்டு மீண்டும் கோயில் கருவறையில் நிறுவினார்கள். இது ஆஞ்சநேயரின் மகிமையால் நிகழ்ந்த நிகழ்வு” என்கிறார் தங்கவேலு.

பிரம்மாண்ட குளம்

இக்கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய பிரம்மாண்டமான குளம் உள்ளது. பார்ப்பதற்கு ஏரி போல காணப்படும் இந்தக் குளம் 133 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கிறது. அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். இந்தப் பிரம்மாண்ட குளமும் இந்தக் கிராமத்துக்குப் பெருமை சேர்க்கிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது அவரது உதவியுடன் லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பெயர் தாங்கியபடி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் குளத்துக்கு ‘ஸ்ரீதாத சமுத்திரம்’ என்று  இன்னொரு பெயரும் இருக்கிறது.

வற்றாத குளம்
இந்தக் குளத்தை அதிசய குளமாக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பார்க்கிறார்கள். எப்போதும் இந்தக் குளத்தில் தண்ணீர் இருப்பதால், ஊரில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததில்லை என்கிறார்கள். அது மட்டுமல்ல, வழக்கமாக ஆறுகளில் மட்டுமே சற்று பெரிய படித்துறை இருக்கும். ஆனால், இந்தக் குளத்திலேயே பெரிய படித்துறை இருக்கிறது. சஞ்சீவராயர் கோயிலின் பின்புற வாசல் படித்துறையுடன் முடிகிறது. அந்தப் படித்துறையிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை உள்ள பகுதியில் தண்ணீர் எப்போதுமே இருக்கிறது. கோடைக் காலத்தில்கூட இந்தக் குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் ததும்பும் என்று பெருமையாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

 இந்தக் குளத்தில் எந்தக் காலத்திலும் தண்ணீர் இருக்க என்னக் காரணம் என்று அந்தப் பகுதியில் விசாரித்தபோது, குளத்தில் கிணறு இருப்பதாகவும்,  அந்தக் கிணறிலிருந்து தண்ணீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், மழைக் காலத்தில் சேரும் தண்ணீர்தான் வற்றாமல் எப்போதும் இங்கே இருக்கிறது என்கிறார்கள். எப்போதும் இங்கே தண்ணீர் இருக்க  ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும், கோடை காலத்தில்கூட அய்யங்கார்குளத்தில் தண்ணீர் வற்றி பார்த்ததேயில்லை என்பதை மட்டும் எல்லோருமே உறுதியாகச் சொல்கிறார்கள். 
குளத்தைச் சுற்றி சிற்பங்கள்
அழகிய சிற்பங்களில் ஒன்று...

இந்த அய்யங்கார்குளத்தின் கரையைச் சுற்றி கற்பாறைகளைக் கொண்டு அடுக்கடுக்காகச் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பாறைகளுக்கு இடையே அழகிய சாமி சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் பள்ளிக்கொண்டிருப்பதைப் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பாறைகளுக்கு நடுவே கல்லால் ஆன தட்டும் அதனருகில் காய்கறிகள் வைத்துக்கொள்ள சிறு குழியும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் சாமிக்கு இத்தட்டிலேயே உணவுப் படைத்திருக்கிறார்கள் என்றும் யாத்ரீகர்களாக வருபவர்கள், தட்டில் வைத்து சாப்பிடவும், குழியில் காற்கறிகளை வைத்துக்கொள்ளவும் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள் என்றும்

இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஆனால், சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துக்கொள்ள ஏதுவாகவே இந்தக் குளத்தைச் சுற்றி இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அய்யங்கார்குளத்தைச் சுற்றியுள்ள இந்த அழகிய வேலைப்பாடுகளும் பார்ப்பவர்களை ஈர்க்கத் தவறவில்லை.

 நடவாவிக் கிணறு

அய்யங்கார்குளத்தில் உள்ள இன்னொரு சிறப்பு நடவாவிக் கிணறு. அய்யங்காகுளத்தின் வடக்குக் கரையின் பின்புறம் உள்ளது இந்தக் கிணறு. பார்ப்பதற்கு அத்தனை கலையம்சத்துடன் காணப்படுகிறது இந்தக் கிணறு. நீளவாக்கில் உள்ள இந்தக் கிணற்றின் நாலாப் புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னியர் சிலைகள் அழகாகக் காட்சி தருகின்றன. கிணற்றுக்குள் இறங்க வசதியாக படிக்கட்டுகள் காணப்படுகின்றன. முடிவில் பாதாளத்தில் மண்டபம் ஒன்று தெரிகிறது. அந்த மண்டபம் முழுவதும் நீரால் மூழ்கிக் கிடக்கிறது. அதனையொட்டி, கல்லால் ஆன ஏற்றம் பிரம்மாண்டமாக நிற்கிறது. கிணற்றிலிருந்து நீரை இறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மண்டபம் மட்டுமல்ல, படிக்கட்டுகள்வரை நீர் நிரம்பிக் கிடக்கிறது. அய்யங்கார்குளத்தைப் போலவே இதுவும் எப்போதும்
 நடவாவிக் கிணறு
வற்றாத கிணறு.

 இந்தக் கிணறு இங்கே அமைந்ததற்கு சுவாரசியமான விஷயம் ஒன்று உள்ளது. “அந்தக் காலத்தில் இந்தக் கோயில் வளாகத்துக்கு உள்ளே ஒரு கிணறு தோண்ட முயன்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே கோழி கூவியது போல் குரல் கேட்டிருக்கிறது. அதனால் அந்தப் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு முறை தோண்ட முயன்றபோது, எண்ணெய் விற்பதுபோல் குரல் கேட்டிருக்கிறது. அப்போதும் பணியை நிறுத்துவிட்டார்கள். கோயில் வளாகத்துக்குள் கிணறு வெட்டும்போது இப்படி தடங்கல் வந்ததால், மூன்றாவது முறை வேறு வழியில் கிணறு வெட்டியிருக்கிறார்கள். மூன்றாவது முறை கோயிலுக்கு நேர்எதிரே குளக் கரையின் பின்புறம் கிணறு வெட்டப்பட்டது. அதுதான் இந்த நடவாவிக் குளம். இதைப் பாதாளக் கிணறு என்றும் சொல்லுவோம்” என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஹரி.

சித்ரா பவுர்ணமி விழா
நடவாவிக் கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று உற்சாசம் கரைபுரளும். அன்றைய தினம் காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றிலிருந்து எழுந்தருள்கிறார். இதற்காக  நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிவிடுகிறார்கள். ஆனால், முன்பெல்லாம் ஏற்றம் மூலமே தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள். தண்ணீர் முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்து கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார். பின்னர் கிணற்றிலிருந்து எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்படுகிறார்.

இரவில் நடக்கும் இந்த நிகழ்வைக் காண அய்யங்கார்குளத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் இங்கே ஏராளமாக வருகிறார்கள். எதற்காகவும் இந்த நிகழ்வை நிறுத்தாமல் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று நடத்திவருகிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே நடவாவிக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கப்படுகிறது. பிற நாட்களில் எதற்காகவும் இங்கிருந்து தண்ணீர் இறைக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வு முடிந்த பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டுதான் உள்ளே செல்ல முடியும். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், வரதராஜப் பெருமாள் கிணற்றிலிருந்து எழுந்தருளிய பிறகு, அடுத்த சில மணி நேரத்தில் நடவாவிக் கிணற்றில் படிக்கட்டு அளவுக்கு தண்ணீர் உயர்ந்துவிடுகிறது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் வளம் இருக்கிறது.

இந்தப் பகுதியில் ஏராளமான சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காஞ்சிபுரத்தில் முக்கியமான கோயிலாக இருந்தும், சஞ்சீவ ஆஞ்சநேயர் கோயிலும், அய்யங்கார்குளமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோயில் சுவர்கள் பெயர்ந்து பாழடைந்துக் காணப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய சுற்றுலாதளமாக உருவாகும் வாய்ப்பு இந்தப் பகுதிக்கு இருக்கிறது. ஆனால்,  கண்டுகொள்வோர்தான் யாருமில்லை.

எனினும் அய்யங்கார்குளம், சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில், நடவாவிக் கிணறு என மூன்று சிறப்புகளால் இந்தப் பகுதியின் பெருமைக்கு குறைவில்லை!

- தி இந்து, 2018 சித்திரை மலர்

2 comments:

  1. Replies
    1. தொடர்பு எண்ணை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

      Delete