17/06/2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்


ரஜினியின் மாஸ் வசனத்தைத் தலைப்பாகக் கொண்டு  சாம் ஆண்டன் இயக்கத்தில் வந்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

சென்னை ராயபுரத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறார் ராயபுரம்  நைனா (சரவணன்). அவருக்கு வயதாவதால் தன் மகள் ஹேமாவைக் (ஆனந்தி) தன்னை போல ஒரு தாதாவுக்குக் கட்டிக்கொடுத்து அவரை அடுத்த  நைனாவாக்க நினைக்கிறார். சரவணனின் அடியாட்கள் செய்யவேண்டிய ஒரு கொலையை ஜானி (ஜி.வி.பிரகாஷ்) செய்ததாக சரவணனிடம் அவரது அடியாட்கள் தப்பாகச் சொல்கிறார்கள்.  அடுத்த நைனாவாக அவர்தான் சரியான ஆள் என்றும் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஜி.வி.பிரகாஷோ ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வந்துவிடும் விசித்திர நோயாளி. போதாக்குறைக்கு சரவணனை விரட்டிவிட்டு வில்லன் ..... நைனாவாகிறார்.  வில்லனை டம்மி தாதா ஜி.வி.பி. வீழ்த்தி ராயபுரம் நைனாவானாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

காமெடி படமா, கேங்ஸ்டர் படமா என்று கணிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் ஒருசேர கலந்துக் கொடுத்திருப்பதில் இயக்குநர் சாம் ஆண்டன் பாஸாகிவிடுகிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் உல்டா போலவே இருந்தாலும், ஜி.வி.பிரகாஷின் தோற்றத்துக்கு ஏற்ற கதை. பாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஜி.வி.பி.யின் முந்தைய படங்களைவிட   நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். படத்தில் டான்ஸர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

நைனாவாக எடுத்த எடுப்பிலேயே மிரட்டுகிறார் சரவணன். ஆனால், அவரது கூட்டத்தில் சார்லி, கருணாஸ், யோகி பாபு என ஒவ்வொருவராக வர படம் காமெடி கியரில் பயணிக்கிறது. பாகுபலி படத்தில் வரும் காலகேயர்களின் பாசையில் பேசி கலகலப்பூட்டுகிறார் கருணாஸ். யோகி பாபுவும் கருணாஸுடன் சேர்ந்து காமெடியாட்டம் ஆடியிருக்கிறார். வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.

மசாலா படத்தின் தியரிப்படி நாயகி ஆனந்தி ஜிவிபியுடன் டூயட் பாடுகிறார்; ரொமான்ஸ் செய்கிறார்.  ‘பாகுபலி மகா’ என்ற கெட்டப்புடன் வரும் மொட்டை ராஜேந்திரன் பாத்திரம் புஷ்வானமாகிவிடுகிறது. ஜி.வி.பி.யின் அப்பாவாக வரும் வி.டி.வி. கணேஷ் போடும் திட்டங்கள் அரதப்பழசாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. வில்லனாக வரும் உடல்மொழியில் மிரட்டுகிறார்.
ரவுடியைத் தேர்வு செய்ய ரியாலிட்டி ஷோ நடத்துவது, ஜி.வி.பி.யின் சாகசங்களை டீஸராகக் காட்டுவது என சமகால டி.வி. ஷோக்களை கிண்டலடிக்கவும் செய்கிறார்கள். தெறி, வேதாளம், பாகுபலி, வெளிவரவிருக்கும் கபாலி படங்களின் இசை, வசனங்களை இயக்குநர் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் வரும் மன்சூரலிகான், பொன்னம்பலத்தையும்கூட 1990-களில்  நடித்த பாத்திரத்திலா காட்டுவது இயக்குநர்? சொந்த சரக்கில் இயக்குநருக்கு நம்பிக்கை இல்லையா? இரட்டை அர்த்த வசனங்களும் படத்தில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. ஜி.வி.பி. ஃபாதர் ஆவது போன்ற மத நம்பிக்கை சார்ந்த காட்சிகளில் காமெடியைப் புகுத்தியிருப்பது ரசிக்கவைக்கவில்லை.  காமெடி ட்ராக்கில் படம் வேகமாகப் பயணிக்கும்போது செண்டிமெண்ட்டுக்குள் புகுந்துவிடுகிறது. செண்டிமெண்டில் போகும்போது ஆக்‌ஷன், ஆக்‌ஷனுக்குள் போகும்போது காமெடி என மியூசிக்கல் சேர் போல கதை சுற்றிசுற்றி வருவது படத்துக்கு மைனஸ்.

காமெடி படம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதிப்படி லாஜிக்கே இல்லாமல் கதை பயணிக்கிறது. வில்லன் அடியாளின் எதிர்வீட்டிலேயே சரவணன் ஒளிந்துகொண்டிருப்பதுகூட வில்லனுக்கு தெரியாமல் இருப்பது, ரத்தத்தைக் கண்டாலே பயப்படும் ஜி.வி.பி. ஆஜானுபாகுவாக இருக்கும் வில்லனை கிளைமாக்ஸில் திடீரென புரட்டி எடுப்பது போன்ற காதில் பூச்சுற்றும் காட்சிகள் நிறைய உள்ளன.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார்.  ‘கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்...’ பாடாலை கானா வடிவில் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. இரட்டை சவாரி வேண்டாம் ஜிவிபி. கிருஷ்ணன் வின்செண்டின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். 

தாதா பாணியிலான ஒரு கதையை காமெடியாகக் காட்ட முடியும் என்ற  ரசணைக்குப் பெயர் கிடைக்கலாம்.

மதிப்பெண்: 2 / 5

No comments:

Post a Comment