29/05/2016

உறியடி விமர்சனம்

ஜாதிய தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுக்கொண்டிருக்கும் நுட்பமான அரசியலையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம்  ‘உறியடி’. ஏராளமான புதுமுகங்களைக் களத்தில் இறக்கி உறியடிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா?

இறந்துபோன ஒரு ஜாதிய தலைவருக்கு சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார்.  உடனே அரசியல் கட்சி தொடங்க திட்டமிடுகிறார்கள் சாதி சங்கத்தினர். ஜாதி சங்கத்தில் உள்ள மைம் கோபி, ஒரு பொறியியல் கல்லூரிக்கு எதிரே பார் கடையை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைப் பகடைக்காயாக்கி அரசியல் கட்சியைத் தொடங்க திட்டமிடுகிறார். இந்த நுட்பமான ஜாதி அரசியல் விளையாட்டில் சிக்கி மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார் விஜயகுமார். அவரோட மூன்று நண்பர்கள். நான்கு பேருமே கல்லூரி மாணவ பருவத்துக்குரிய துறுதுறுப்புடன் சுற்றுகிறார்கள். அவர்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 15 ஆயிரம் ஜாதி ஓட்டுகளை அரசியல் கட்சியாக மாற்ற  துடிக்கும் பாத்திரத்தில் மைம் கோபி ஸ்கோர் செய்கிறார். ஜாதி அரசியல்வாதிகளின் உண்மையான மனத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துகிறார். லாட்ஜ் ஓனராக வரும் சுருளி வஞ்சமே உருவானவ பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். பொது இடத்தில் அவமானபடுபவன் பழிவாங்கப் புழுங்குவதை கண் முன்னே கொண்டு  வந்து நிறுத்துகிறார். படத்தில்  நடித்துள்ள ஹெல்லா பென்னாவை நாயகி என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். தமிழ் படத்தில் வசனமே பேசாத நாயகி இவராகத்தான் இருப்பார். 

படம் முழுவதுமே மாணவர்கள் குடியும் கும்மாளமுமாகவே இருக்கிறார்கள். எப்போதும் பாரிலேயே விழுந்துக்கிடக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றாலும் முறுக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.  கொலை செய்யும் அளவுக்கு அடிதடியில் ஈடுபட்டாலும் திரும்பவும் கல்லூரியில் ஜாலியாகவே இருக்கிறார்கள்.  படத்தில் போலீஸே இல்லை. இப்படி காதில் நிறையவே பூமாலையைச் சுற்றுகிறார் இயக்குநர் விஜயகுமார்.

ஜாதி சங்கத் தலைவர் சிட்டிஸன் சிவக்குமார், பார் ஓனர் மைம் கோபி, சாதி வெறி கொண்ட ஆட்களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்க்கொள்ளும் காட்சிகள் திக்திக் ரகமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஜாதிய படமாக இருந்தாலும, எந்த ஜாதி என்றுகூட அனுமானிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக படம் பண்ணியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

மிகவும் அழுத்தமான கதைத்தான். ஓரிடத்தில் சறுக்கினாலும் மொத்த திரைக்கதையும் சீட்டுக் கட்டுப் போல சரியும் அபாயம் உள்ள படைப்புதான். ஆனால், படத்தில் அதுதான் நடந்திருக்கிறது. சாதி அரசியல் கதையும், மாணவர்கள் நான்கு பேரின் கதையும் தனியாகப் பயணிக்கிறது. ஆனால், இரண்டையும் ஒரு கோட்டில் ஒன்றாக இணைப்பதில் இயக்குநர் கோட்டை விடுகிறார். இதனால், பிரேக் இல்லாத வண்டி போல படம் இஷ்டத்துக்குப் பயணிக்கிறது.

படத்துக்கு பின்னணி இசையையும் விஜயகுமாரே செய்திருக்கிறார். ஆண்டனிதாசனின் இசை பாடலுக்கு வலு சேர்க்கவில்லை. பால் லிவிங்ஷ்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

உறியடி - குறியில்லாத அடி

மதிப்பெண் - 2.5 / 5

No comments:

Post a Comment