26/05/2014

ஆனந்திபென் பட்டேல்: ஆசிரியர் பணியில் இருந்து முதல்வர் பதவிக்கு



மாநிலத்தில் ஒரே சமயத்தில் ஆளுநராக ஒரு பெண்ணும், முதல்வராக ஒரு பெண்ணும் இருக்கும் சம்பவங்கள் எப்போதாவதுதான் அரங்கேறும். இப்போது அது குஜராத்தில் நடந்திருக்கிறது. குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றதன் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது. பார்ப்பதற்கு சாது போல இருக்கும் ஆனந்திபென், செயலில் புலிப் பாய்ச்சல் காட்டக்கூடியவர். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அரசியலில் இவர் தனி அடையாளத்துடனேயே செயல்பட்டது இவரது தனிச்சிறப்பு. இதற்கு இரண்டு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம்.

ஆண்கள் பள்ளியின் ஒரே மாணவி

குஜராத்தில் மேஷ்னா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்திபென். படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், இவர் வசித்து வந்த மாவட்டத்தில் பெண்கள் படிப்பதற்கென்று தனிப் பள்ளிக்கூடம் இல்லை. அப்போது அந்த மாவட்டத்தில் ஒரே ஒரு ஆண்கள் பள்ளிக்கூடம் மட்டுமே இருந்தது.

அந்தப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று ஆனந்திபென் பட்டேல் வீட்டில் அடம் பிடித்தார். பெற்றோர் விரும்பவில்லைதான். ஆனாலும், மகளின் ஆசையை நிறைவேற்றினர். 700 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் ஒரே மாணவியாகக் ஆனந்திபென் பட்டேல் கல்வி பயின்றார். 4-ம் நிலை வரை அந்தப் பள்ளியில் படித்த பிறகு அடுத்தடுத்த மேற்கல்வியை வெவ்வேறு ஊர்களில் படித்தார். பிறகு ஒரு பள்ளியின் முதல்வராக உயர்ந்தார்.

பேரணி பெண்

1992-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ராமஜென்ம பூமியை மையமாக வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது. அந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ‘தேசிய ஒற்றுமை பேரணி’யைப் பாரதிய ஜனதா நடத்தியது. பல மாநிலங்கள் வழியாகச் சென்று முடிவில் காஷ்மீரில் உள்ள நகரில் தேசியக்கொடியை ஏற்றுவதுதான் திட்டம். இதற்காக நாடு முழுவதும் 1,500 பாரதிய ஜனதா தொண்டர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் ஒரே பெண்ணாக ஆனந்திபென் பட்டேலும் இடம் பிடித்தார்.

மிகுந்த பதற்றத்திற்குரிய பேரணி, பிரச்சினைகள் வரலாம் என்று தெரிந்தும் இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக தைரியமாகக் களம் இறங்கினார் ஆனந்தி. இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக இவர் பங்கேற்றதன் மூலம் தேசியத் தலைவர்களுடன் நல்ல அறி முகம் கிடைத்தது. இது அரசியலில் இவர் அடுத்த நிலைக்குச் செல்லவும் வழிவகுத்தது.

துணிவு, தைரியத்துடன் செயல்பட்டால் நல்ல நிலைக்குச் செல்லலாம் என்பதற்கு குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நல்ல உதாரணம்.

20/05/2014

யார் இந்த அமித் ஷா?


















உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகளில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான தொகுதிகளில்தான் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நரேந்திர மோடி அலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அந்த அலையை உத்தரப் பிரதேசத்தில் பேரலையாக மாற்றிக் காட்டியவர் அமித் ஷா.
ஆமாம், நரேந்திர மோடியின் வலதுகரம், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர், ஷோரப்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மோடிக்காக இளம் பெண் வேவுபார்க்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என பல சர்ச்சைகளுக்கு ஆளான அமித் ஷாதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். யார் இந்த அமித் ஷா? குஜராத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் இவர் சாதித்தது என்ன?
நதிமூலம்
பெரிய தொழில்குடும்பத்திலிருந்து வந்தவர்தான் இந்த அமித் ஷா. இவரும் ஒரு தொழிலதிபர்தான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கங்களில் ஈடுபட்டுப் பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தவர். 1985-ம் ஆண்டில் பா.ஜ.க-வில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞரணிப் பிரிவில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காகத் தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா பலமுறை பணியாற்றியிருக்கிறார். இதன்மூலம் அத்வானியுடன் அமித் ஷாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்படித்தான் நரேந்திர மோடியுடனும் நெருக்கம் ஏற்பட்டது.
ஆட்சியில் முக்கியத்துவம்
2002-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு இடம் கிடைத்தது. அமைச்சரவையில் இளையவரான அமித் ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் வழங்கப்பட்டன, பலரது புருவங்களை உயர்த்தின. நரேந்திர மோடியின் வலதுகரமாக மாற இது ஒரு கருவியாக இருந்தது. 2007-ம் ஆண்டில் மீண்டும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோதும் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
குஜராத்திலிருந்து உ.பி-க்கு…
இந்தக் காலகட்டத்தில் அவர் பதவியில் இருந்தபோதுதான் சோரப்தீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் சிக்கினார். 2005-ம் ஆண்டில் நடந்த சோரப்தீன் ஷேக் கொலை வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சி.பி.ஐ. விசாரணைக்கு மாறியது. இதன்பிறகே என்கவுன்ட்டரில் அமித் ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கு தெரியவந்தது. 2009-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் உத்தரவின்படி இளம் பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அமித் ஷா தலையும் உருண்டது இந்தக் காலக்கட்டத்தில்தான். போலி என்கவுன்ட்டர் வழக்கின் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு குஜராத்தை விட்டு வெளியேறுமாறு அமித் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவே, நரேந்திர மோடிக்கு வசதியாகப் போனது. சரியாக ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்ட பிறகு, அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தில் போய்த் தங்குமாறு உத்தரவிட்டார். அதோடு, உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சாதி அரசியல் ஆதிக்கம் உள்ள உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள், தலித்துகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதே அமித் ஷாவுக்கு மோடி கொடுத்த பணி. கடந்த ஓராண்டு காலமாக அங்கு தங்கி, கிராமங்கள்தோறும் சென்று பா.ஜ.க. தொண்டர்களை உசுப்பிவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, அதைச் செய்தும் காட்டினர் அமித் ஷா. மோடி போட்டியின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாசம் அடைந்ததோடு புலிப் பாய்ச்சல் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த உத்தி அமித் ஷாவுக்கு உதவியது.
வெறுப்பு வித்தை
அயோத்தி பிரச்சினையைத் தூசுதட்டி, ராமர் படத்துடன் கூடிய பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் அமித் ஷா முன்னெடுத்தார். இடையே முசாபர்நகர் கலவரத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு அரசியலை பா.ஜ.க-வினர் மத்தியில் அமித் ஷா தூண்டிவிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவை வாக்குகளைப் பெறவும் உதவியது. குறிப்பாக, சமாஜ்வாடி ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்குகளைக் கவர வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டம்? அதைத் திறம்படச் செய்து களப்பணியாற்றிய வகையில் அமித் ஷாவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
சமாஜ்வாடி வெறும் ஐந்து இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் குடும்பத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் அமேதியும், ரேபரேலியும் மட்டும் காங்கிரஸ் வசம். அப்னாதளம் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. எதிர்க் கட்சிகளுக்குக் கிடைத்தது அவ்வளவுதான். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.
இந்த இடத்தில் ஒன்றை நினைவுகூர வேண்டும். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதியை இங்கு களம் இறக்கிப் பார்த்தது பா.ஜ.க. ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்கள் கோலோச்சிய காலத்திலேயே 1991-ல் 51 தொகுதிகளும், 1996-ல் 52 தொகுதிகளும், 1998-ல் 59 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க-வால் வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, வாஜ்பாய் நான்கரை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட 29 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க-வால் வெல்ல முடிந்தது.
கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தலா 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த பா.ஜ.க., தற்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை அள்ளியுள்ளது. நரேந்திர மோடியின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இது இருந்தாலும், இதன் பின்னணியில் முழுக்க முழுக்க இருப்பவர் அமித் ஷாதான். அமித் ஷாவுடன் ஷோரப்தீன் என்கவுன்ட்டரைத்தான் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். உண்மையில், அவர் சமீபத்தில் ஏராளமான என்கவுன்ட்டர்களை நிகழ்த்தியிருக்கிறார். உ.பி-யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று எல்லாக் கட்சிகளையும் சரமாரியாக என்கவுன்ட்டர் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க-வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதை நீர்த்துப்போகாமல் செய்வது இனி நரேந்திர மோ ஆட்சியின் கையில் உள்ளது.
- தி இந்து, 20/05/2014 (நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்குப் பிடிறகு எழுதப்பட்ட கட்டுரை)

16/05/2014

2014 தேர்தல் - அதிமுக மாஸ்... திமுக புஸ்... மோடி பாஸ்!



நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கருத்துக் கணிப்புகள் கூறியபடியே அதிமுகவே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. மோடி ஆதரவு அலை எந்த விதத்திலும் தமிழகத்தையும் அதிமுகவையும் அசைத்துப் பார்க்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. 

கூடவே நிழல் போல ஒட்டிக்கொண்டிருந்த இடதுசாரிகளை அதிமுக கழற்றி விட்டபோது அக்கட்சித் தொண்டர்கள் சற்று சோர்வடையவே செய்தனர். தொடக்கத்தில் 30 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையில் இருந்து 21 தொகுதிகள் வரை அதிமுக வெற்றி பெறும் என்று வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியபோது தேர்தல் வெற்றி பற்றி அதிமுகவினருக்கு படபடப்பு ஏற்பட்டது. 

ஆனால், தொகுதி வாரியாக மேற்கொண்ட பிரசாரம், மத்திய அரசால் தமிழகம் இழந்த உரிமைகள், அதற்கு திமுக உடந்தையாக இருந்ததாக செய்த பிரசாரம், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு அலையை அதிமுக சம்பாதிக்காதது ஆகியவை அதிமுகவுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பெருவாரியான வெற்றியைத் தேடி தந்திருக்கிறது.  “திமுக - காங்கிரஸூக்கு கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்” என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை அமோக ஆதரவை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.

“டெல்லி செங்கோட்டைக்குச் செல்ல அதிமுக எக்ஸ்பிரஸ் தயார்” என அக்கட்சியின் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதில் இருந்தே பிரதமர் பதவியை அவர் குறி வைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிமுகவினரும், “ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தாருங்கள்” என்றே பிரசாரம் மேற்கொண்டனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆதரவு அளித்துள்ளதும் தெரிகிறது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு நிச்சயம் கூடும். மத்தியில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே மத்தியில் ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை என்றபோதும், 37 எம்.பி.களைக் கொண்டு  தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஜெயலலிதா நிச்சயம் பாடுபடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

1999, 2004, 2009 என கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை ஒரு  தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் பலத்த அடியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கையும், மின்வெட்டையும் மையப்படுத்தி பிரசாரம் செய்த திமுகவுக்கு தேர்தல் முடிவு பெரும் பின்னடைவுதான். குறிப்பாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமாகத் தோல்வியடைந்த திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கவுரவமான வெற்றியை எதிர்பார்த்தது. ஆனால், மக்களின் பார்வை திமுக பக்கம் திரும்பவில்லை என்பது  வெட்டவெளிச்சமாகியுள்ளது.

 நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை, திமுக-அதிமுகவுக்கு மாற்று, பிரம்மாண்ட கூட்டணி எனப் புறப்பட்ட தேமுதிக தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், 2 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிப் பெற்றிருப்பது பெரும் வெற்றிதான். அதுவும் பிரதான கட்சியான  திமுகவே ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதபோது இந்தக் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அந்தக் கூட்டணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சுமார் 19 சதவீத வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றிருப்பதும் அரசியலில் முக்கியத்துவம் பெறும்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனது அக்கட்சிக்கு இனிவரும் காலம் சோதனை களமாக அரசியல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாமக, பாஜக ஆகிய கட்சிகள் திமுக, அதிமுக ஆதரவில்லாமல் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடையலாம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிக்கு இரு தொகுதிகளில் பெற்ற வெற்றி நிச்சயம் தெம்பைத் தரும்.

தனித்து களம் கண்ட காங்கிரஸ் எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது என்றாலும், தங்களுக்கு 5 சதவீத வாக்குகள் தமிழகத்தில் இருப்பதை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்தில் அக்கட்சிக்கு கூட்டணி பேச வாய்ப்பாக அமையும். ஒட்டுமொத்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு, தமிழக மக்கள் அதிமுக பக்கமே நிற்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறது!.

கட்டுரை எழுதிய நாள் 16-05-2014