21/03/2011

சுனாமி ராட்சசன்!



இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்படியொரு அழிவை ஜப்பான் சந்தித்ததில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2011, மார்ச் 11 அன்று ஜப்பானில் பூமாதேவி ரிக்டர் அளவில் 8.9 புள்ளி ஆட்டம் போட்டுவிட்டுப் போக, வழக்கமான பூகம்பம்தானே என்று ஜப்பான்வாசிகள் நினைத்தனர். ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் கடலுக்கடியில் இருந்து சுனாமி ராட்சதனும் கரையைக் கடந்து பேயாட்டம் ஆட, சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது ஒட்டுமொத்த ஜப்பான் தேசமும்! உலகையே அதிரச் செய்யும் பூகம்பமும், சுனாமியும் எப்படி நிகழ்கின்றன?  சுனாமி வருவதை முன்கூட்டியே அறிய முடியாதா? இவற்றைத் தெரிந்து கொள்ள பூமிப்பந்தைக் கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.
மூன்று அடுக்குகளைக் கொண் டது பூமி. இதன் உட்புறக்கருவிலும், அதை ஒட்டிய நடுப்பகுதியிலும் 5000 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் கொதிக்கும் குழம்பு போன்று இருக்கிறது. இதன் மேற்புறம் இருக்கும் தட்டில்தான் நாம் இருக்கிறோம். இந்த தட்டு கடலின் ஆழப்பகுதியில் 4 முதல் 10 கிலோமீட்டர் தடிமனும், நிலப்பகுதியில் 32 முதல் 71 கி.மீ. தடிமனும் கொண்டது. இந்த தட்டு ஒன்றாக இல்லை. கால்பந்தின் மேலே இருக்கும் கட்டங்கள் போல 12 தனித்தனி தட்டுகளாகவே உள்ளன. இந்த 12 தட்டுகளின் மேல்தான் எல்லா கண்டங்களும், கடல்களும் இருக்கின்றன.
பூமிப்பந்தின் உட்புறக் குழம்பில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளால் இந்த 12 தட்டுகளும் மெல்ல நகர்கின்றன. இந்த நகர்வு கிட்டத்தட்ட நமக்கு நகம் வளர்கிற அதே வேகத்தில்தான் நிகழ்கிறது. இவ்வளவு மெதுவாக நகர்ந்தாலும் அதன் விளைவுகள் மிக பயங்கரமானவை. இந்த தட்டுகள் ஒன்றோடொன்று மோதுகிற நேரத்தில் பூகம்பம் ஏற்படுகிறது. ஓராண்டில் உலகம் முழுக்க நடக்கிற பூகம்பங்களின் மொத்த சக்தி, ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டுகளைப் போல ஒரு லட்சம் அணுகுண்டுகளுக்கு ஈடானது!
கடலுக்கடியில் ஒரு பூகம்பமோ, எரிமலைச்சீற்றமோ ஏற்படும்போது அதன் வீரியத்தைப் பொறுத்தே சுனாமி ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றத்தால் உருவாகும் பெரிய, வேகமாகச் செல்லக்கூடிய அலைகள்தான் சுனாமி. இவை சாதாரண கடலலைகள் போல வரிசையாக அடுத்தடுத்து வராது. ஒரு அலைக்கும் அடுத்த அலைக்கும் இடையே சமயத்தில் நூறு கி.மீ. இடைவெளி கூட இருக்கும். ஒரு சுனாமி கரையைத் தாக்கிய பிறகு ஒருமணி நேரம் கழித்துக்கூட அடுத்த சுனாமி தாக்கும்.
சுனாமி வருவது கடலின் மேல்மட்டத்திலிருந்து பார்த்தால் தெரியவே தெரியாது. அது கடலின் ஆழமான பகுதியிலேயே மிகவேகமாகப் பயணிக்கும். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். சமயங்களில் 800 கி.மீ. வேகத்தில்கூட அது கரையை நோக்கி வரும். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சுனாமி ஏற்படுகிறது என்றால் அந்த நொடியே நீங்கள் ஒரு ஜெட் விமானத்தில் சீறிப்பறந்தால்கூட நீங்கள் டோக்கியோ போய்ச் சேருவதற்குள் அது சேர்ந்து தாக்கிவிடும். அவ்வளவு வேகம்!
ஆழ்கடலில் வேகமாக வரும் அது, கரையை நெருங்கும்போது கடலின் ஆழம் குறைவதால் வேகம் குறையும். அப்படி வேகம் குறையும்போது அது தனது உயரத்தை நீட்டிக்கொள்ளும். சமயங்களில் 30 மீட்டர் உயரம் வரைகூட எழும்பும். ஜப்பானில் 33 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழுந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு உயரத்தில் அலைகள் எழுந்து வந்தால், அது கடற்கரை நகரங்களை மூழ்கடித்து விடும்தானே? எல்லாவற்றையும் அபகரித்து விடும்தானே? அதுதான் ஜப் பானில் நடந்தேறியிருக்கிறது.
புயல் போன்ற சீற்றங்களின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். கரையைத் தாண்டி கடல் யாரையும் எதுவும் செய்யாது. கடலுக்குப் போன மீனவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். சுனாமி அப்படியே உல்டா... கடலுக்குள் இருக்கும் சின்ன கட்டுமரத்தைக்கூட இது ஒன்றுமே செய்யாது. அதுமட்டுமல்ல, அதில் இருப்பவர்களால் ‘தங்களைத் தாண்டி படுபயங்கரமான சுனாமி ஒன்று போகிறது’ என்பதைக்கூட உணரமுடியாது.

கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படும்போது அங்கிருக்கும் தண்ணீர் பெருமளவு இடம்பெயர்கிறது. புவிஈர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் தனது இடத்துக்கே வர ஆசைப்படுகிறது. இப்படி அது ததும்பும்போது பேரலையாக உருவெடுக்கிறது. அந்த அலையின் கனமும் வேகமும் பூகம்பத்தால் எந்த அளவுக்கு பூமிக்கடியில் உருமாற்றங்கள் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்தது. ஒரு சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அடுத்தடுத்து 10 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேர இடைவெளிவரை அடுத்தடுத்த அலைகள் தாக்கும். இந்தத் தாக்குதலின் வீரியம் கரையைப் பொறுத்து மாறுபடும். குறுகிய வளைகுடா போன்ற பகுதிகளில் இது நுழையும்போது பெரியஅலை குறுக்கப்படுவதால் சீற்றம் கொடுமையாக இருக்கும். கரைப்பகுதியில் மாங்குரோவ் காடுகள், பவழப்பாறைகள் இருந்தால் அவை அலையைத் தடுப்பதால் சேதம் குறைவாக இருக்கும்.
பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியாது. அது எந்த அபாய அறிகுறிகளையும் கொடுத்துவிட்டு வருவதில்லை. ஆனால், அதன் விளைவாக வரும் சுனாமியைக் கண்டுபிடிப்பது சாத்தியமே. இப்படி ஒரு கண்டுபிடிப்பு சிஸ்டத்தை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது. 1946 ஏப்ரல் முதல் தேதி அன்று அலாஸ்கா அருகே ஒரு பூகம்பம் தாக்கி ஹவாய் தீவில் சுனாமி உருவாகி, 159 பேரை சுருட்டிக் கொண்டுபோனது.
அமெரிக்கவை பதைபதைக்க வைத்த இந்தக் கொடூரத்துக்குப் பிறகு ‘பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு’ என்ற அலுவலகம் உருவாக்கப்பட்டது. சுனாமி பாதிப்புக்கு ஆளாகும் பல நாடுகள் இதில் உறுப்பினர்கள் ஆயின. ரிக்டர் அளவில் 7.5-க்கு மேல் ஏற்படும் பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்பது பொதுவான கருத்து. இப்படி ஒரு பூகம்பம் ஏற்பட்டதும் அந்தக் கடலுக்கு அருகே சுனாமி தாக்கக்கூடிய இடத்தில் இருக்கும் கரையோர மக்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர்கள் மூட்டைமுடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு தயாராகிவிடுவார்கள். இப்படி சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் இருந்தும், ஜப்பானை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது சுனாமி.
இயற்கையை யாரால் வெல்ல முடியும்?
- முத்தாரம், 21-3-2011

14/03/2011

1987- சாதித்த ஆஸ்திரேலியா கோட்டைவிட்ட இந்தியா!


இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதல் உலகக் கோப்பை.   முதல்முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து  நடத்திய தொடர்.  60 ஓவரிலிருந்து 50 ஓவர் போட்டியாக நடந்த முதல் உலகக்தொடரும் இதுதான். 1983-ல் விளையாடிய அதே 8 அணிகள், அதே லீக் சுற்று முறை இப்போதும் பின்பற்றப்பட்டது.  இந்த உலகக்கோப்பையை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ததால், ‘ரிலையன்ஸ் உலகக்கோப்பை’ என அழைக்கப்பட்டது.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பிடித்தன. அக்டோபர்  9 முதல் நவம்பர் 8 வரை போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணி இரண்டாவது முறையாக கபில்தேவ் தலைமையில் களமிறங்கியது.

‘ஏ’ பிரிவில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தின. இரு அணிகளும் 6 லீக் ஆட்டங்களில் தலா 5 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சுலபமாக தகுதிபெற்றன. ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மல்லுக்கட்டின. இறுதியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் 3 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற வெஸ்ட்இண்டீஸ், முதன்முறையாக லீக் சுற்றோடு மூட்டை கட்டியது பரிதாபம்!

இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்தே ஆட்டத்தின் போக்கை வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு! பம்பாயில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவையும், லாகூரில் நடந்த இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி நடந்த ஈடன்கார்டன் மைதானம் 95 ஆயிரம் ரசிகர்களுடன் நிரம்பி வழிந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டி இது. இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்ததால், ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தில் 253 ரன் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இங்கிலாந்து 246 ரன் மட்டுமே எடுத்து 7 ரன்னில் கோப்பையைக் கோட்டைவிட்டது. முதன்முறையாக ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்றது.  குறைந்த ரன்னில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது அப்போது.


ஹைலைட்ஸ்

இந்த உலகக்கோப்பையில் மறக்க முடியாத  நிகழ்வுகள் சில இருக்கின்றன. லாகூரில் பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீசும் மோதிய லீக் ஆட்டம் என்றும் மனதில் நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 216 ரன்களை பாகிஸ்தான் துரத்தியது. 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை. அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கர்ட்னி வால்ஷிடம் கேப்டன் ரிச்சர்ட்ஸ் பந்தைக் கொடுத்தார். பந்துகளை எதிர்கொண்ட அப்துல் காதர் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி கடைசி பந்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதை கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் படுத்து கண்ணீர் விட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இந்தத் தோல்விதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் பறித்தது. முதல் முறையாக அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் மூட்டைக் கட்டியது.

முதல் செஞ்சுரியும், ஹாட்ரிக் விக்கெட்டும்

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இத்தொடருடன் ஓய்வு பெற போவதாக இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார்.  டெஸ்ட் போட்டியில் 34 சதங்களை விளாசியிருந்த கவாஸ்கர், ஒரு நாள் போட்டியில் ஒரு சதம்கூட அடித்ததில்லை. கடைசியாக உலகக் கோப்பையிலாவது சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஒவ்வொரு லீக் போட்டியாக முடிந்தது. கடைசி லீக் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மட்டுமின்றி கவாஸ்கரின் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது.  நியூசிலாந்த் எடுத்த 221 ரன்களைத் துரத்திய இந்தியா, 33வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கவாஸ்கர் இந்தப் போட்டியில் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதுதான் கவாஸ்கர் முதாலவதாகவும் கடைசியாகவும் எடுத்த ஒரு நாள் போட்டியின் சர்வதேச சதம்.

இதேபோட்டியில் இந்திய பந்துவீச்சாளர் உலகக் கோப்பையில் புதிய சாதனையைப் படைத்தார். அது, சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ரூதர்போர்ட், ஸ்மித், சேட்ஃபீல்டு ஆகிய மூன்று பேரையுமே பவுல்டு மூலம் சேட்டன் சர்மா வெளியேற்றினார். உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் விக்கெட் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய நவ்ஜோத் சித்து சிங் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரர் என்ற பெருமையோடு,  ‘சிக்ஸர் சித்து’ என்ற பெயரையும் பெற்றார்.

இந்த உலகக்கோப்பையிலும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. இறுதியாட்டத்தில் 75 ரன் குவித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- முத்தாரம், 2011 ஜனவரி