தமிழ்நாட்டில் நீண்ட காலம் கழித்து, ‘அதிகாரத்தில் பங்கு’ என்கிற விவாதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்திருக்கிறார். அதிகாரத்தில் பங்கு என்பதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிற முழக்கத்தைத்தான் முன்வைக்க விசிக முற்படுகிறது. இதுபோன்ற முழக்கங்கள் தமிழ்நாட்டில் புதிதல்ல. ஆனால், இதுவரை தமிழ்நாட்டில் அது சாத்தியமானதில்லை என்பது வரலாறு. குறிப்பாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி அமரும் திராவிடக் கட்சிகள் அந்த முழக்கங்களைப் பொருட்படுத்தியதில்லை அல்லது அதற்கான வாய்ப்புகளும் உருவானதில்லை.
இணையாகப் போட்டி
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியமைக்கும் திறன் உள்ள கட்சிகளாக திமுக, அதிமுகவே இருக்கின்றன. இந்தக் கட்சிகளின் தலைமையில் தேர்தல் கூட்டணிகள் அமைந்தாலும், வெற்றிக்குப் பிறகு தோழமைக் கட்சிகளுடன் அதிகாரத்தை அவை பங்கிட்டுக் கொண்டதில்லை. தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு இக்கட்சிகள் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடுவது ஒரு காரணம். தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரத்தில் பங்கு என்று தோழமைக் கட்சிகள் வலியுறுத்த முடியாத இடத்தில் இருப்பது இன்னொரு காரணம்.
தமிழ்நாட்டில் 1967 முதலே தேர்தல் கூட்டணி உருவாகத் தொடங்கி விட்டது. 1980 தொடங்கி 1990-களின் மத்தி வரை தமிழ்நாடு தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தபோதும், காங்கிரஸுடன் இக்கட்சிகள் கூட்டணி அமைத்தபோதும்கூட அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கோஷங்கள் எழுந்ததில்லை. 1980இல் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தபோது சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் சரிசமாகத் தொகுதிகளில் போட்டியிட்டன. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்கிற கேள்வியும் எழுந்தது. ‘மு. கருணாநிதிதான் முதல்வர்’ என்று அன்றைய பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தி முற்றுப்புள்ளி வைத்தார். தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறவில்லையென்றாலும், ஒரு திராவிடக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் இணையாகத் தொகுதிகளைத் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கியது வரலாறு.
புதிய சூத்திரம்
அதன்பிறகு அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வேறுவிதமான சூத்திரத்தைப் பின்பற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது, மக்களவைக்குக் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிடுவது என்று அதிகார எல்லையை வரையறுத்துக்கொண்டன. அதாவது, தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு, மத்தியில் காங்கிரஸ் அரசு. 1984 சட்டமன்றம் - மக்களவை, 1989 மக்களவை, 1991 சட்டமன்றம் - மக்களவை, 1996 சட்டமன்றம் - மக்களவைத் தேர்தல்களில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி இதைத்தான் பின்பற்றியது. எனவே, அதிமுக – காங்கிரஸ் கூட்டணிக் காலத்தில் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷங்கள் எழவேயில்லை.
இதே அணுகுமுறையைத்தான் 1996இல் திமுகவும் பின்பற்றியது. அன்று காங்கிரஸிலிருந்து வெளியேறி, புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைக்கு அதிகத் தொகுதிகளையும் சட்டமன்றத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலும் தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. எனவே, இயல்பாகவே அதிகாரத்தில் பங்கு அளிக்க முடியாத வகையில், தனித்தே தாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்குத் தோழமைக் கட்சிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட வைப்பதை மாறாத அணுகுமுறையாகத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்தன. 2001இல் அதிமுக கூட்டணியில் முக்கியக் கட்சிகளாக இருந்த தமாக, பாமக; 2011இல் தேமுதிக போன்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் என்கிற அழுத்தத்தைக் கொடுக்க முனைந்ததில்லை.
சாதிக்க முடியாத காங்கிரஸ்
விதிவிலக்காக 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் பெரும்பான்மை பெற முடியாத நிலையைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகளையும் திமுக நிறைவு செய்தது. 2006-11 காலத்தில் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் வேண்டும் என்கிற கோரிக்கைகள் அக்கட்சியினர் சார்பில் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழவே செய்தன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதையும், புதுச்சேரியில் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதையும் கூறி திமுக சமாளித்தது. ஒரு வகையில், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற தங்களுடைய கொள்கையை இந்தக் காலகட்டத்தில் கச்சிதமாகவே பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளையும் திமுக பூர்த்தி செய்தது.
விசிகவின் குரல்
தற்போது ஒரு தசாப்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு விவாதம் எழ, திமுக கூட்டணியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயனித்துக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாகியிருக்கிறது. அதிகாரத்தில் பங்கு தொடர்பாக திருமாவளவன் பேசிய பழைய காணொளியை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது, நீக்கியது போன்ற செயல்கள் கூட்டணி ஆட்சி என்கிற விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றன. அடித்தட்டு மக்கள் அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற வகையிலும், தேர்தலில் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிற கூட்டணி, வெற்றி பெறுகிறபோது அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைப்பதில் தவறில்லைதான். ஆனால், அது ஏன் நடைபெறுவதில்லை என்பதுதான் கேள்வி.
அதிகாரத்தில் பங்கு தொடர்பாக எழுந்த விவாதம் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக முதல்வரிடம் பேசவில்லை. 1999லிருந்து நாங்கள் வலியுறுத்துகிற கருத்து இது. இதை நாங்கள் எப்போதுமே பேசுவோம்” என்று சொல்லியிருக்கிறார். திருமாவளவனின் கருத்துக்கு திமுக தரப்பிலிருந்து பதில் வரவில்லை. என்றாலும் 2006-11இல் காங்கிரஸ் தயவுடன் ஆட்சியில் இருந்தபோதே அதிகாரத்தில் பங்கு அளிக்காத திமுக, இப்போது மட்டும் எப்படி கொடுக்கும் என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. மாறாக, திருமாவளவனின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக, திராவிடக் கட்சிகள் எப்போதும் தனித்த ஆட்சி என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.
செவிமடுக்குமா திராவிடக் கட்சிகள்?
தேர்தல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்காக மட்டும் அமைக்கப்படுவதில்லை. ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும்தான். அந்த வகையில் கூட்டணி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திராவிடக் கட்சிகள், தோழமைக் கட்சிகளுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிப்பது என்பது கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு கூட்டணிக்காக வாக்களித்த மக்களுக்கும் அளிக்கும் மரியாதையும்கூட. ஆனால், தமிழ்நாட்டில் அது நிகழாமல் போவதற்கு தோழமைக் கட்சிகளிடம் உள்ள போதாமை ஒரு முக்கியக் காரணம். அது - தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்டு சவால் விடுக்கும் அளவுக்குத் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தவோ, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாமலோ போவதுதான். அதுதான் இங்கு திராவிடக் கட்சிகளுக்கு வசதியாகிவிடுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் திமுக, அதிமுக அல்லாத கட்சியோ அல்லது கூட்டணியோ குறிப்பிட்ட தேர்தல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனவா? திமுக, அதிமுகவுக்கு மாற்றாகத் தேர்தலில் களமிறங்கிய கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றியைப் பெற்றிருக்கின்றன? தேர்தல் வெற்றிக்கு திமுக அல்லது அதிமுகவைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்தான் தோழமைக் கட்சிகள் இருக்க வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. தேர்தலில் குறைந்தபட்ச வெற்றிக்காகத் திராவிடக் கட்சிகளின் எந்த முடிவையும் சமரசம் செய்துகொண்டு ஏற்கும் நிலையில்தான் தோழமைக் கட்சிகள் இருக்கின்றன. எனில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்? தேர்தலில் தனித்தே போட்டியிட்டாலும், குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறும் அளவுக்கு வளர்ச்சியைக் காட்டி, முக்கியத்துவத்தை உணர்த்தும்போதுதான் அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளுக்கு உயிர் கிடைக்கும்; திராவிடக் கட்சிகளும் செவிமடுக்கும்.
அதே நேரத்தில் அருதி பெரும்பான்மை பெற்றபோதும் 2014, 2019இல் மத்தியில் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு அளித்து பாஜக ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற அண்டை மாநிலமான ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் பெரும்பான்மை பெற்றபோதும் குறைந்த வாக்கு வங்கி உள்ள பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கும் சந்திரபாபு நாயுடு அதிகாரத்தில் பங்கு அளித்திருக்கிறார். எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு நீண்ட நாட்களுக்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அதற்கான காலமும் வெகுதூரத்தில் இல்லை.