29/09/2023

இறைவன் விமர்சனம்

 


சென்னை மாநகரில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்களான அர்ஜூனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற போலீஸ் வேலையை விட்டே ஒதுங்குகிறார் ஜெயம் ரவி. என்றாலும் ஜெயம் ரவியை இலக்கு வைத்து துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்த சைக்கோ கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன. அவனை ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்பதுதான் ‘இறைவ’னின் மீதிக் கதை.

சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் தொடர்பான படங்கள் என்றால், ஓர் அழகான ஒன்லைன் கதையை வைத்துகொண்டு துரத்தலும் திகிலும் கொண்ட திரைக்கதையை எழுதுவார்கள். ஆனால், ஒரு வறட்சியான த்ரில்லர் கதைக்கு திகில் முலாம் பூச முயன்றிருக்கிறார் இயக்குநர். விளைவு, சீரியல் கில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு, படபடப்பு, திருப்பங்கள் எதுவும் இல்லாமல் பயணிப்பது ‘இறைவ’னின் பெரும் பலவீனம். படத்தின் தொடக்கத்திலேயே சைக்கோ கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, அவர் யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூரமான கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.

ஒரு சைக்கோ கொலையாளி என்றால், அவன் சைக்கோவாக ஆனதற்கான பின்னிணியை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வது படத்துக்கு வலுசேர்க்கும். அப்படியான எந்தக் காட்சிகளுமே படத்தில் இல்லாதது படத்துக்கு மைனஸ். முதல் பாகத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு திருப்பம் கவனம் பெறுகிறது. ஆனால், தெளிவற்ற பின்னணிக் கொண்ட திரைக்கதை இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட அயற்சிக்குள்ளாக்கி விடுகிறது.

சைக்கோ கொலையாளி - நாயகன் இடையே எந்தத் துரத்தலும் இல்லை. சர்வ சாதாரணமாக சைக்கோ கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். சண்டைப் போடுகிறார், அடிக்கிறார். திரும்பத் திரும்ப நடக்கும் இந்தக் காட்சிகள், ‘இறைவா, எங்களைக் காப்பாற்று’ என்று பார்வையாளர்களைக் கதறவைத்துவிடுகிறது. ஸ்மைலி கில்லர், காபி கேட் கில்லர் என்று விதவிதமாக பெயர்கள் வைத்து அழைத்தாலும், புதுமை இல்லாமல் நகரும் காட்சிகளால் படம் தள்ளாடுகிறது.

சைக்கோவிடமிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு பெண் பற்றி அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வக்கிரமானவை. ஊர் முழுக்க சிசிடிவி, கையில் எல்லோரும் செல்போனுடன் அழையும் காலத்தில் சைக்கோ கொலையாளி சர்வசாதாரணமாக காரில் கடத்துகிறார். இது கேள்விக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, ‘சிசிடிவி கேமரா இல்லாத இடமாகப் பார்த்து’ என்ற சரடு வசனத்தை விடுகிறார்கள். ‘பிரம்மா’ என்று அழைத்துக்கொண்டு இளம் பெண்களை கொலை செய்யும் ராகுல் போஸ், கொலை செய்வதற்காக சொல்லும் காரணங்களில் தர்க்கமே இல்லை. ஊரையே நடுங்க வைக்கும் அளவுக்கு கொலைகள் செய்து மருத்துவமனை சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி சுலபமாக தப்புவது போலீஸுக்கே அடுக்காது. போலீஸ் வேலையை விட்ட ஜெயம் ரவி, போலீஸாகமலேயே எல்லா போலீஸ் வேலையையும் செய்கிறார். இப்படி படம் முழுக்க நிறைய பூச்சுற்றல்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருப்பதைத் தவிர நேர்மறையான அம்சங்கள் எதுவும் இல்லை. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், ‘எனக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்று ஜெயம் ரவி பல வெரைட்டிகளில் கோபத்தைக் காட்டுகிறார். அர்ஜூன் கதபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பன் நரேனுக்காக உருகுவது, நயன் தாராவிடமிருந்து விலகி நிற்பது, நெருக்கமானவர்கள் கொலையாகும்போது பதறுவது என நடிப்பில் குறை வைக்கவில்லை. நயன்தாரா ஒருதலையாக காதலித்து உருகும் பெண்ணாக வந்துபோகிறார். சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸ் தன் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக வரும் வினோத் கிஷன் மிகை நடிப்பால் திணறடிக்கிறார். மேலும் படத்தில் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி, அழகம் பெருமாள், பக்ஸ், விஜயலட்சுமி ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் கவனம் பெறாவிட்டாலும், ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார். இருட்டில் நடக்கும் கொலைகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே. வேதாந்தம். இழுவையான காட்சிகளுக்கு கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஜே.வி. மணிகண்ட பாலாஜி.



No comments:

Post a Comment