20/04/2021

அந்த ஒரு நிமிடம் 2: கவனம் சிதறிய சிறுவனின் விஸ்வரூபம்!

 

“இந்தச் சிறுவன் எதற்கும் உதவ மாட்டான்” - மைக்கேலின் அம்மா டெப்பியைப் பார்ப்பவர்கள் எல்லாம் இதைத்தான் சொன்னார்கள். சிறு வயதிலிருந்தே மைக்கேல் வித்தியாசமாக இருந்தான். எதிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டேயிருப்பான். எதையுமே அவனால் ஒழுங்காகச் செய்ய முடியாது. படிப்பிலும் படுமந்தம். ஏற்கெனவே கணவர் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், மகன் மைக்கேலின் நிலையால் நிலைகுலைந்துபோனார் டெப்பி.

பயந்த குழந்தை

தன் மகனை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார். மைக்கேலுக்குக் ‘கவனச்சிதறல்’ பிரச்சினை இருப்பதாக சில மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்குத் தீர்வாக நீச்சல் கற்றுக்கொடுக்கும்படி பரிந்துரைத்தார்கள். அதன்படியே டெப்பி செய்தார். ஆனால், நீச்சல் குளத்தைக் கண்டதுமே பயந்து தெறித்து ஓடினான் மைக்கேல். இதைக் கண்டு டெப்பி மேலும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில்தான் மைக்கேலுக்கு, பாப் பவுமன் என்கிற நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். துறுதுறுவென இருக்கும் மைக்கேலைக் கண்டதும், ‘பிற்காலத்தில் இவன் பெரிய நீச்சல் வீரனாக வருவான்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். இதைக் கேட்டு டெப்பிக்கு ஆச்சரியம். எல்லோருமே எதிர்மறையாகக் கூறும் தன் பிள்ளையை, இவர் மட்டும் நேர்மறையாக கணிக்கிறாரே என்று உள்ளுக்குள் சந்தேகம்.

செதுக்கிய சிற்பி

பாப் பவுமன் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மையாகின. மைக்கேலைப் படிப்படியாகச் செதுக்கினார் பாப். அவர் அளித்த பயிற்சியில் மைக்கேலுக்கு நீச்சல் அத்துப்படியானது. தண்ணீரைக் கண்டு பயந்த மைக்கேல், எப்போதும் நீச்சல் குளமே கதியெனக் கிடக்கத் தொடங்கினான். பிறகு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டிகளுக்கு அனுப்பத் தொடங்கினார் பாப். சில போட்டிகளில் வெற்றி கிடைத்தது. அதுவே மைக்கேலின் அம்மாவுக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஆனால், ‘மைக்கேலின் திறமைக்கு இந்த வெற்றியெல்லாம் தூசு’ என்று மைக்கேலை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார் பாப்.

சிறிது சிறிதாக முன்னேறி வந்த மைக்கேல் 15 வயதிலேயே அமெரிக்க தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவித்தான். அந்தத் தருணத்தில் வீடு திரும்பிய மைக்கேலை, அவனுடைய அம்மா டெப்பி ஆடம்பரமாகச் செலவுசெய்து வரவேற்றார். இதைக் கண்டு பாப் முகம் சுளித்தார். “சின்ன சின்ன வெற்றிக்காக மைக்கேலைக் கொண்டாதீர்கள். அது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மறைத்துவிடும். தான் சாதித்துவிட்டோம் என்கிற எண்ணத்தை வரவழைத்துவிடும். மைக்கேல் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்” என்று டெப்பியிடம் முகத்துக்கு நேராகவே கடுகடுத்தார் பாப்.

ஒலிம்பிக் நாயகன்

மைக்கேலின் அம்மாவுக்கு அது புரிந்ததோ இல்லையோ, அருகிலிருந்த மைக்கேலுக்குப் பளிச்செனப் புரிந்தது. அன்று முதல் நீச்சலில் புதியபுதிய நுணுக்கங்களைத் தேடித்தேடிக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான் மைக்கேல். எப்போதும் தீவிரப் பயிற்சியில் இருந்தான். இவற்றையெல்லாம் விடாப்பிடியாக பின்தொடர்ந்த மைக்கேல், 23-வது வயதில் நீச்சலில் உச்சம் தொட்டான்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நீச்சலில் எட்டுத் தங்கப் பதக்கங்களை வென்று மலைக்கவைத்த அந்தச் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ். தொடர்ந்து 2012 ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை வென்று நீச்சலில் புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்கள், அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்த வெற்றி மைக்கேல் பெல்ப்ஸையே சேரும் என்றாலும், அதன் பின்னணியில் முழுக்கமுழுக்க உழைத்தவர் பயிற்சியாளர் பாப் பவுமன்தான். யாருமே ஒரு பொருட்டாக நினைக்காத சிறுவனைப் பார்த்த நிமிடத்தில் கணித்தது மட்டுமின்றி, அவன் பிரம்மாண்ட வெற்றியைப் பெற கவனச்சிதறல் கூடாது, சின்னக் கொண்டாட்டம்கூடக் கூடாது என்று அவர் சொன்ன அந்த ஒரு நிமிட அறிவுரையும்தான் மைக்கேல் பெல்ப்ஸை ஒலிம்பிக் சாதனையாளராக்கியது!

13/04/2021

2011 Cricket world cup : அந்த ஒரு நிமிடம் 1: கிரிக்கெட்டில் வலது இடது சங்கமம்!


அது 2011ஆம் ஆண்டு. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம், கட்டுக்கடங்காத கூட்டம். 275 ரன் என்று இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி விரட்டத் தொடங்கியது. வந்த வேகத்தில் வீரேந்திர சேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் நடையைக் கட்டினார்கள். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனம் உடைந்து சுக்குநூறானது. 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை ஏந்துமா அல்லது கனவாகிப் போகுமா என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

அடுத்தது யார்?

ஆனால், கவுதம் கம்பீரும் விராட் கோலியும் இலங்கை பந்துவீச்சைச் சமாளித்து விளையாடி, ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், அன்றைய கேப்டன் தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் இறங்கினார். மூத்த வீரர் சச்சின் கொடுத்த யோசனையைப் பற்றியே ஆலோசனை. கோலி, கம்பீரில் யாராவது ஒருவர் அவுட் ஆனால், யாரைக் களமிறக்குவது என்று பரபரத்தார்கள்.

சச்சின் தெரிவித்த அந்தத் திடீர் யோசனை இதுதான். ‘இடதுகை ஆட்டக்காரர் கம்பீரும் வலதுகை ஆட்டக்காரர் கோலியும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே யுவராஜ் சிங், தோனி என இரு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஒருவேளை வலதுகை வீரர் கோலி அவுட்டானால், களத்துக்கு வலதுகை பேட்ஸ்மேனான தோனியே களமிறங்குவது நல்லது. இடதுகை பேட்ஸ்மேன் கம்பீர் அவுட்டானால், இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் களமிறங்குவது நல்லது’.

யோசனைக்குச் செயல்வடிவம்

கிரிக்கெட்டில் வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது அது எதிரணி பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் சுமையையும் குழப்பத்தையும் தரும். இருவருக்கும் ஏற்றாற்போல பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டும். இதைப் பயன்படுத்தி ரன்களைக் குவிக்கலாம். விக்கெட்டையும் காப்பாற்றிக்கொள்ளலாம். இதுதான் அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த யோசனை. இதைப் பற்றிதான் ஆலோசனை நடந்தது. இது கேப்டன் தோனிக்கும் சரியெனப்பட்டது.

அப்போதுதான் இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் முரளிதரன் பந்துவீசத் தொடங்கியிருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முரளிதரன் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் இருந்ததால், பயிற்சியின்போது அவருடைய பந்துவீச்சில் விளையாடிய அனுபவம் தோனிக்கு இருந்தது. எனவே, விக்கெட் விழாமல் அவருடைய பந்துவீச்சைச் சமாளித்து விளையாட முடியும் என்று தோனியும் தன் கருத்தைப் பகிர்ந்தார். இந்தத் திட்டம் அணிக்கு நல்லது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்தனர்.

வெற்றிக்கான பாதை

114 ரன்களை இந்திய அணி எட்டியபோது வலதுகை ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டமிழந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது வீரராகக் களமிறங்கிக்கொண்டிருந்த இடதுகை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் அடுத்து களமிறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், வலதுகை ஆட்டக்காரரான கேப்டன் தோனி களமிறங்கினார்.


மீண்டும் களத்தில் இடது (கம்பீர்), வலது (தோனி) ஆட்டக்காரர்களின் ஆட்டமே நீடித்தது. இந்த இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இது இந்திய அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றது. 223 ரன்களில் இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டமிழந்த பிறகு, இன்னொரு இடது கை ஆட்டக்காரரான யுவராஜ் சிங் களமிறங்கினார்.

யுவராஜ் சிங்கும் (இடது) தோனியும் (வலது) சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் குலசேகரா பந்துவீசியபோது, தோனி ஓங்கி அடித்த சிக்ஸ் பெவிலியனைத் தாண்டியபோது இலங்கை தோல்வியைத் தழுவியது. 28 ஆண்டுகால கனவு நனவானதில் நாடே குதூகலித்தது.

அனுபவம் பேசும்

அனுபவம் எப்போதுமே கைகொடுக்கும். அன்றைய தேதியில் இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் விளையாடியிருந்த அனுபவ வீரர் சச்சின், அந்த சில நிமிடங்களில் கொடுத்த யோசனை மிகப் பெரிய பலனைத் தந்தது. வெற்றி பெற சூழ்நிலைக்கேற்ப திட்டங்கள் தேவை. அதைத் துணிந்து செயல்படுத்த திறமையும் தேவை. அதைவிட முக்கியம், அணி விளையாட்டில் ஒருங்கிணைப்பு அவசியம். விளையாடும் எல்லோருமே ஒருங்கிணைப்புடன் இயங்கும்போதுதான் வெற்றி நம்மைத் தேடி வரும்.

(2011 உலகக் கோப்பையை இந்தியா வென்று ஏப்ரல் 2ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவு)