30/10/2018

ரேவதி: அபூர்வ நடிகை!

தமிழ் சினிமாவில் அறிமுகப் படத்தில் தொடங்கி அடுத்தடுத்த படங்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்பதுகளில் ஒருவரை கைநீட்டி கூர வேண்டுமென்றால், நடிகை ரேவதியைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது. அறிமுகமான ‘மண்வாசனை’ படத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வந்தவர் ரேவதி.

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்துகொண்டிருந்தார்கள் நடிகை ஸ்ரீதேவியும் ஸ்ரீபிரியாவும். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே ஸ்ரீதேவியின் முழு கவனமும் இந்திக்குத் திரும்பிவிட, இன்னொரு நடிகையான ஸ்ரீபிரியாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்துகொண்டிருந்த காலம். அப்போது  ஏற்பட்ட வெற்றிடத்தை ராதிகா, அம்பிகா, ராதா போன்றோர் நிரப்ப முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு இணைந்தார் நடிகை ரேவதி. அவர்களிலிருந்து மாறுபட்டு தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார். அந்தக் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் தந்த அமோக ஆதரவால், தமிழில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாகப்  பதித்தவர் ரேவதி.

கோலோச்சிய நடிகை

இயக்குநர் பாரதிராஜாவால் 1983-ம் ஆண்டில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் ரேவதி அறிமுகமானபோது அவரை ஓர் அசல் தெற்கத்தி பெண் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ‘முத்துபேச்சி’ என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பான கிராமத்துப் பெண்ணாக மாறிப் போயிருந்தார். முதல் பாகத்தில் பழமொழி பேசி துடுக்குத்தனமாகவும் இரண்டாம் பாகத்தில் தாய் மாமனுக்காகக் காத்திருந்து ஏமாறும் பெண்ணாகவும் தேர்ந்த நடிப்பை ரேவதி வழங்கியிருந்தார்.  முதல் படமே தமிழில் அவருக்கு அமர்க்களமான
புதுமைப் பெண்
வரவேற்பை பெற்றுதந்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகள் தமிழ் சினிமாவின் இளவரசியாக கோலோச்சினார் ரேவதி. அறிமுகமான புதிதிலேயே அழுத்தமான கதைக் களங்கள் அமைவதெல்லாம் குறிஞ்சிப் பூ ரகம்தான். ரேவதிக்கு அப்படி அமைந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட முடியாது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறிக்கொண்டதும், அந்தக் கதாபாத்திரமாகவே ஜொலித்ததுமே காரணம். அந்த வகையில் தொடக்கக் காலத்தில் ரேவதி நடித்த ‘பொண்ணு பிடிச்சிருக்கு’, ‘கை கொடுக்கும் கை’, ‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’,  ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘கன்னி ராசி’,  ‘செல்வி’, ‘உதயகீதம்’, ‘பகல் நிலவு’, ‘குங்குமச்சிமிழ்’, ‘லட்சுமி வந்தாச்சி’ போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாகக் கொண்டுபோய் சேர்ந்தன.

அழுத்தமான கதைகள்

‘கை கொடுக்கும் கை’ படத்தில் கண் தெரியாத பெண்ணாகவும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கணவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் விதவையாகும் பெண்ணாகவும், ‘புதுமைப்பெண்’ படத்தில் சிறைக்குச் சென்ற கணவனை மீட்கப் போராடும் பெண்ணாகவும்; தன்னை சந்தேகப்படும் கணவனை தூக்கியெறிந்து செல்லும் புரட்சிப் பெண்ணாகவும் அவர் ஏற்ற அழுத்தமான கதாபாத்திரங்கள் அவரை ஊரெங்கும் பேச வைத்தன. ‘குங்குமச்சிமிழ்’ படத்தில்  வரதட்சனை கொடுக்க முடியாமல் திருமணம் தடைப்பட்ட பெண்ணாகவும், ‘ஆண் பாவம்’ படத்தில் திருமணம் தடைப்பட்டதால் கிணற்றில் விழுந்து ஊமையான பெண்ணாகவும் ‘உதயகீதம்’ படத்தில் அண்ணன் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் பெண்ணாகவும் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில் தனக்கு வந்திருக்கும் நோயை வீட்டில் யாருக்கும் சொல்மாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணாக இயல்பாக நடித்து பெண்களின் மனதிலும் பசை போட்டு
அமர்ந்தார்.

ரேவதியின் படம் என்றாலே குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு குடும்பக் கதாபாத்திரங்கள் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தின. அந்தக் காலகட்டத்தில்  குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு ரேவதி ரசிகர்களைச் சம்பாதித்திருந்தார். அப்போது சினிமா போஸ்டர்களில் ரேவதியின் படம் பெரியதாகப் போட்டு விளம்பரம் செய்த நிகழ்வுகளும் உண்டு. பெண்களை ஈர்ப்பதற்காக ரேவதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான  ‘புதுமைப்பெண்’ படத்தில் ரேவதியின் படத்தை மட்டும் பிரதானமாகப் பிரசுரித்ததை உதாரணமாகச் சொல்லலாம்.

பொருந்திய பாத்திரங்கள்

வெறுமனே குடும்ப பாங்கான பெண்ணாக மட்டும் ரசிகர்களைக் கவரவில்லை ரேவதி. துடுக்குத்தனமான, மாடர்ன் பெண் கதாபாத்திரங்களுக்கும் பெயர்போனவர் ரேவதி. கிராமத்து கதாபாத்திரங்களைப் போலவே சுட்டித்தனமான பாத்திரங்களும் மாடர்ன் பெண் பாத்திரங்களும் அவருக்கு இயல்பாகவே பொருந்தின. ‘ஒரு கைதியின் டைரி’, ‘புன்னகை மன்னன்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘பகல் நிலவு’, போன்ற படங்களில் அவர் துடுக்குத்தனத்தை ரசிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 
‘மௌன ராகம்’ படம் பெருநகரப் புற வாழ்க்கைப் பின்னணியோடு  அழகியலையும் கலந்து சொன்ன அற்புதமான காதல் படம். திருமண பந்தத்துக்குள் வந்த பிறகு இறந்துபோன காதலனை மறக்கமுடியாமல், தனக்காக காத்திருக்கும் கணவனையும் ஏற்க முடியாமல் வாழும் அந்தக் கதாபாத்திரத்தை தமிழ் மக்கள்  ரசித்தார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் ரேவதியைத் தவிர்த்து வேறு யாரையாவது நினைத்து பார்க்க முடியுமா?
கை கொடுக்கும் கை

முதல் மூன்றாண்டுகளில் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்றாலே இயக்குநர்கள் ரேவதியைத்தான் ‘டிக்’ செய்தார்கள். குறுகிய காலத்தில் நல்ல கதாபாத்திரங்களை அதிகமாக நடித்த நடிகைகளின் பட்டியலில் சாவித்திரிக்கு பிறகு ரேவதிதான் அந்த இடத்தை பிடித்தார். ரேவதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் சிறந்த விளங்கிய இயக்குநர்கள் மணிரத்னம், ஆர். சுந்தர்ராஜன், ரங்கராஜன்; நடிகர்கள் கமலஹாசன், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன் போன்ற முன்னணி நடிகர்களின் விருப்பத் தேர்வாக ரேவதியே இருந்தார்.  சின்னத் தாயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள்வரை ரேவதியின் தேதிகளுக்காகக்  காத்திருந்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு...

1983-ம் ஆண்டு தொடங்கி 1987வரை தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருந்த வேளையில், ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை ரேவதி காதல் திருமணம் செய்துகொண்டார். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது ஒரு நடிகை திருமணத்தைப் பற்றி யோசிப்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ரேவதி அதைத் துணிச்சலாகச் செய்தார். அவருடைய திருமணத்தால் ஏற்பட்ட இடைவெளி, தமிழ்த் திரையுலகில் அவரது இடத்தை சிறிது அசைத்துப் பார்த்தது.

ரேவதியின் திரையுலக வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்று எல்லோரும் நினைத்த வேளையில். ‘கிராமத்து மின்னல்’ என்ற படம் மூலம் மீண்டும்  மறு அவதாரம் எடுத்தார். அதன்பிறகு 1989-ம் ஆண்டில்  ‘உத்தமபுருஷன்’, ‘இதயதாமரை’, ‘அரங்கேற்றவேளை’ என ரேவதியின் சினிமா பயணம் மீண்டும் வேகம் பிடித்தது. ‘அரங்கேற்றவேளை’யில்  அவருடைய வழக்கமான சுட்டித்தனமான கதாபாத்திரமும் பிரபுடன் சேர்ந்து செய்த காமெடியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. 1990-ம் ஆண்டில் வெளியான ‘கிழக்கு வாசல்’ படம் நடிகர் கார்த்திக்கு மட்டுமல்ல, ரேவதிக்கும் திருப்புமுனையாக அமைந்தது. ‘தாயம்மா’ என்ற பாத்திரத்தில் விருப்பமில்லாமல் தாசியாகப் போகும் ஒரு பெண்ணின் வேதனையை யதார்த்தமாகப் பதிவு செய்திருந்தார் ரேவதி. இந்தப் படம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் அவருக்குப் பெற்றுதந்தது.  அதே ஆண்டில் வெளியான ‘அஞ்சலி’ படமும் ரேவதியின் நடிப்புக்குத் தீனிப் போட்டது. மனவளர்ச்சிகுன்றிய ஒரு குழந்தையின் தாயாகத் தேர்ந்த நடிப்பை
வழங்கியிருந்தார்.

குறையாத முக்கியத்துவம் 

1992-ம் ஆண்டில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்றார் ரேவதி. இந்தப் படத்தில் ‘பஞ்சவர்ணம்’ கதாபாத்திரத்தில் நடிகை மீனாவுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெகுளித்தனமான அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பொருந்தாமல் போகவே, ரேவதியை கமல் அழைத்தார். கமலின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ரேவதி அந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். ‘வெறும் காத்துதான் வருது..’ என்ற வசனம் இருபத்தை ஆண்டுகள் கழித்து இன்றும் பேசப்படுவதிலிருந்து அந்தக் கதாபாத்திரத்தின் வீச்சை அறியலாம்.

தமிழ்த் திரையுலகில் பத்தாண்டுகளைக் கடந்த பிறகும் ரேவதிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருந்ததை அவருக்கான கவுரவமாகச் சொல்லாம். ஏனென்றால், அப்போதும் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்துகொண்டுதான் இருந்தன. ‘மறுபடியும்’,  ‘பிரியங்கா’, ‘அவதாரம்’, ‘தொட்டாசிணுங்கி’,  ‘தலைமுறை’ போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இரண்டாயிரமாண்டுக்கு பிறகு தன் வயதுக்கேற்ற படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்ல, அவரது தாய் மொழியான மலையாளளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் கணிசமாக நடித்திருக்கிறார்.

இயக்குநராக அவதாரம்
புன்னகை மன்னன்


ரேவதிக்கு சினிமா இயக்கத்தின் மீதும் தீராக் காதல் இருந்தது. ‘மித்ரு மை ஃபிரெண்ட்’, ‘பிர் மிலேங்கே’, ‘கேரளா கஃபே’, ‘மும்பை கட்டிங்’ என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நான்கு படங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கியவை. இதுவரை தமிழ் படத்தை அவர் இயக்காதது ஒரு பெரும் குறைதான். 1990-கள் தொடங்கி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் ரேவதி நடித்திருக்கிறார். தற்போது சன் டி.வி.யில் ‘அழகு’ என்ற மெகா தொடர் மூலம் வீட்டு வரவேற்பரைக்கே வந்துகொண்டிருக்கிறார்.

இந்திய நடிகைகளில் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஜொலித்தவர் ரேவதி. மென்மையாகவும் அதே வேளையில் வலிமையாகவும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சினிமா உலகில் அபாரமாக வெளிப்பட்டவர். இதுபோன்ற நடிகைகள் எல்லாக் காலத்துக்கும் கிடைத்துவிட மாட்டார்கள்; அபூர்வமாகவே கிடைப்பார்கள். அந்த வகையில் ரேவதி ஓர் அபூர்வ நடிகை!

- இந்து தமிழ் தீபாவளி மலர், 2018

சாகச ராணி!



பன்னெடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தரையை எட்டிப் பார்த்தாலே பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும். பறக்கும் விமானத்திலிருந்தோ பெரிய மலைகளிலிருந்தோ குதிக்க வேண்டும் என்றால் எப்படியிருக்கும்? முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போய்விடும். பார்ப்பவர்களுக்குப் பீதியூட்டும் இந்தச் சாகச விளையாட்டை அந்தப் பெண் அனாயசமாக செய்து, இந்தியாவின் சாகச மங்கையாக மாறினார். அவர், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் வீராங்கனையான ரேச்சல் தாமஸ்
சின்ன வயதில் பறவையைப் போல பறக்க முடியுதா என குழந்தைகள் ஏங்குவார்கள். ரேச்சலும் அப்படித்தான் ஏங்கினார். விமானங்களைப் பார்க்கும் போதெல்லாம் பறக்கும் ஆசை அவருக்குப் பீறிட்டு எழும். சின்ன வயதில் மனதில் ஆழமாகப் பதிந்த இந்த அவர், வளர்ந்த பிறகு செயல்வடிவம் பெறத் தொடங்கியது. ஆக்ராவில் இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு  நடுவானில் பறந்தும், மலையிலிருந்து குதித்துப் பறக்கும் பயிற்சிகள் வழங்கிவந்தது. ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கும் பயிற்சி இது. ஆனால், குடிமகளாக இந்தப் பயிற்சியை பெரும் பாக்கியம் ரேச்சலுக்கும் கிடைத்தது. 1979-ம் ஆண்டில் 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயன பிறகுதான் அந்தப் பயிற்சியில் சேர்ந்தார் ரேச்சல். அப்படி கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி அடிப்படை பயிற்சியை முடித்துஸ்கை ஜம்பிங்செய்ய கற்றுக்கொண்டார்.
ஸ்கை ஜம்பிங், டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளை ஆண்கள் மட்டுமே ஈடுபட்ட காலம் அது. அந்த சாகசத்தில் காலடி எடுத்து வைத்த முதல் இந்திய பெண் என்ற சிறப்போடு ஸ்கை டைவிங்கில் குதித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயன பிறகு அவர் செய்த இந்தச் சாகசம் இந்தியா முழுவதும் அவருக்குப் புகழ் வெளிச்சத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் ஸ்கை டைவர் என்ற சிறப்பு பெற்றதால், அந்தச் சாகச விளையாட்டில் ஈடுபட அவருக்கு லைசென்ஸ்சான்றிதழை இந்திய ஸ்கை டைவிங் கூட்டமைப்பு வழங்கியது.
1983-ம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற ரேச்சல், காட்சி ரீதியிலான டைவிங் செய்து அசத்தினார். தொடர்ந்து ஸ்கை டைவிங்கில் இவர் செய்துகாட்டிய சாகசங்கள் அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை ஈர்த்தது. ஸ்கை டைவிங்கில் மேலும் நுணுக்கங்களை அறிவதற்காக அமெரிக்காவுக்குப் பயிற்சிக்கு அரசே அனுப்பிவைத்தது. இந்தப் பயிற்சியின்போது கலிபோர்னியாவில் 150 முறை டைவிங் செய்து தனது பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சியாளருடன் ஒரு சேர சேர்ந்து நடுவானில் குதிக்கும்டேண்டம் ஜம்பிங்எனும் பயிற்சியையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தார்நேரத்தைக் கணக்கிட்டு துல்லியமாகக் குதிக்கும் பயிற்சியிலும் நிபுணத்துவம் பெற்றார்.
தொடர்ந்து ஸ்கை டைவிங், ஜம்பிங்கில் ஈடுபட்டுவந்தபோதும், சில ஆண்டுகள் கழித்துதான் சாகசப் போட்டியாளராக களமிறங்கினார் ரேச்சல். அவரது திறமையை வெளிப்படுத்த 1987-ம் ஆண்டு உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. இந்தியா சார்பாக முதல் பங்கேற்பாளர் என்ற பெருமையோடு இந்தப் போட்டியில் ரேச்சல் பங்கேற்றார். அதற்கு முன்புவரை பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு மேலே பறந்து தரையிறங்கி விளையாடி அனுபவம் பெற்ற ரேச்சல்முதன் முறையாக விளையாட்டுத் திடலில் பங்கேற்றது அப்போதுதான். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலக்கைப் பூர்த்தி செய்தார் ரேச்சல்.
1988-ம் ஆண்டில் ஸ்வீடனில் உலக பாராசூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார் ரேச்சல். இது அவர் பங்கேற்ற இரண்டாவது சர்வதேச தொடர். நான்கு விதமான போட்டிகளில் பங்கேற்ற ரேச்சல், முதன் முறையாக 6 வழிகளிலான குதிக்கும் போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். 1989-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் பாராசூட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அதே காலகட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க ரேச்சல் தவறவில்லை.
1991-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்தார். இந்திய விமான சாகச கூட்டமைப்பு நடத்திய இந்தப் போட்டியில், பெண் போட்டியாளராகப் பங்கேற்ற ஒரே வீராங்கனை ரேச்சல் மட்டுமே. இதேபோல 1995-ம் ஆண்டில் ஆக்ராவில் நடைபெற்ற தேசிய ஸ்கை டைவிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இலக்கை நிறைவு செய்து சாதித்தார்.
1995-ம் ஆண்டில் போபால் நகரில் தேசிய இளையோர் திருவிழா நடைபெற்றபோது நடந்த ஒரு நிகழ்வை ரேச்சல் பெருமையான விஷயமாகக் குறிப்பிடுவது வாடிக்கை. இந்த நிகழ்வில் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவும் பங்கேற்றார். ரேச்சல் தரையை நோக்கி வரும்போது எந்தப் பகுதியில் அவர் தரையிறங்குவார் என்பதை அறிய ஆர்வமிகுதியால் சங்கர் தயாள் சர்மா எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். வானில் பறந்தபோதே இதைக் கண்ட ரேச்சல், இதை தனக்குக் கிடைத்த பெரும் பெருமைமிகு அங்கீகாரமாகக் குறிப்பிடுகிறார் ரேச்சல்.
பல்வேறு நிகழ்வுகளின்போது காட்சி ரீதியிலான ஸ்கை டைவிங் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தார் ரேச்சல். இப்படி அவர் குதித்து நிகழ்வுகளுக்கெல்லாம் கணக்குவழக்கே இல்லை. 2000-ம் ஆண்டில் ஜோர்டான் இளவரசருடன் ஒரு சேர சேர்ந்து குதித்த நிகழ்வும் இவருடைய ஸ்கை டைவிங் பயணத்தில் முக்கியமானது.
ரேச்சல் தாமஸ்
வட துருவத்திலிருந்து குதிப்பது என்பது எவரெஸ்ட்டிலிருந்து குதிப்பதற்கு சமமாக ஸ்கை டைவர்ஸ் கருதுகிறார்கள். வட துருவத்திலிருந்து குதிக்கும் ஆசை ரேச்சலுக்கும் இருந்தது. 38 ஆண்டுகள் இதற்காகக் காத்திருந்தவருக்கு சரியான தருணம் 2002-ம் ஆண்டில்தான் அமைந்தது. வட துருவத்தில் 7 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை  டைவிங் செய்து அசத்தினார் ரேச்சல். அப்போது இந்திய ரயில்வேயின் 150-வது ஆண்டு விழா காலம். இதையொட்டி இந்தச் சாகசத்தை ரேச்சல் தாமஸ் செய்தார். வடதுருவத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. வட துருவத்துக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது மைனஸ் 45 முதல் மைனஸ் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 நாட்கள் இதற்காகத் தங்கியிருந்தார் ரேச்சல் தாமஸ்.
18 நாடுகளில் 656 முறை ஸ்கை டைவிங் செய்து சாதித்திருக்கிறார் ரேச்சல். 16 முறை விமானத்திலிருந்து நடுவானில் குதித்து சாகசத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவரது வீரதீர சாகசத்தைக் கண்டு தேசிய சாகச விளையாட்டு விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 2005-ம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதும் ரேச்சலுக்கு வழங்கப்பட்டது.
வானிலிருந்து குதிப்பது என்பது லேசப்பட்ட காரியம்மல்ல. காதைப் பிளக்கும் அளவுக்கு காற்றின் இரைச்சலே பயத்தை வரவழைத்துவிடும். பார்ப்பவர்களுக்கே பீதியூட்டும் ஸ்கை டைவிங் சாகசத்தை அச்சம் தவிர்த்து களமிறங்கி சாதித்தவர் ரேச்சல். இரண்டு முறை மரணத்தின் விளிம்புவரை சென்று பத்திரமாக தரையிறங்கி ஆச்சரியமூட்டியவர்.
ஸ்கை டைவிங் என்பது சாகச விளையாட்டு மட்டுல்ல.. இது ஒரு துல்லியமாகக் கணக்கிடக்கூடிய விளையாட்டும்கூடமிகுந்த எச்சரிக்கையோடு சில விநாடிகளில் தீர்க்கமான முடிவெடுத்து விளையாடும் திறன் இருந்தால் மட்டுமே விளையாட முடியும். அதற்கு வலிமையான மனோபலமும் தேவை. அந்தரத்தில் சமநிலைப்படுத்தி பறப்பதற்கு முதலில் கற்க வேண்டும். ஒவ்வொரு விநாடியும் கை, கால்களின்  நகர்வுகள் முக்கிய பங்காற்றும். இதில் போதுமான அனுபவம் பெற்றால்தான் ஸ்கை டைவிங் விளையாட்டிலேயே ஈடுபட முடியும். அந்தத் துணிச்சல் ரேச்சலுக்கு இருந்ததால்தான் இந்தச் சாகச விளையாட்டில் அவரால் சாதிக்க முடிந்தது.
தற்போது 63 வயதாகிவிட்ட நிலையிலும் இப்போதும் ஸ்கை டைவிங் செய்யவும் செய்கிறார். இதற்காக தினமும் 6 கி.மீ. தூரம் நடப்பதையும் ஓடிப் பயிற்சி எடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் ஆசிரியராகவும் செயல்பட்டு இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிவருகிறார்.
- தி இந்து, 28-10-18