
உலக அளவில் இரட்டை காமெடியர்களாக காலங்கள் கடந்தும் ஆராதிக்கப்படுபவர்கள் அமெரிக்காவின் லாரல் - ஹார்டி. இவர்களில் லாரல் குண்டாகவும் கொஞ்சம் அப்பாவியாகவும், ஹார்டி ஒல்லியான குறும்புக்காரராகவும் இருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து வயிறு குலுங்க செய்த சேட்டைகளால் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்த இரட்டையர்களே போலவே தமிழ் ரசிகர்களின் விலா எலும்பை நோக வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில் ஜோடி.
பெரும்பாலான படங்களில் கவுண்டமணிக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. செந்திலுக்கு அப்பாவித் தோற்றம். ‘அண்ணே... அண்ணே’ என வளைய வரும் செந்திலை, ‘டேய் கோமுட்டித்தலையா, பேரிக்காய் தலையா, பரங்கிக்காய் மண்டையா’ என திட்டியும், அடிப்பதே கவுண்டமணியின் பாணியாக இருந்தது. விதவிதமான வார்த்தைகளில் ஒருவர் திட்டி அடிப்பதையும் இன்னொருவர் அதை ஏற்பதும் தமிழ் காமெடி உலகில் புதிதாய் இருக்கவே கவுண்டமணி – செந்தில் ஜோடி தமிழ் சினிமா உலகில் கொடிக் கட்டிப் பறக்க ஆரம்பித்தது. கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்தால் அந்தப் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்று நிலையை குறுகிய காலத்திலேயே இருவரும் ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது தமிழ்ப் படங்களில் புதிது அல்ல. ஆனாலும், தங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் நடிக்கவே செய்தார்கள். ஆனால், ஒருவர் திட்டி அடிக்கவும், இன்னொருவர் அதை வாங்கிக் கொள்வதையும் எந்த ஈகோவும் இல்லாமல் செய்து ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்தவர்கள் கவுண்டமணியும் செந்தில் மட்டுமே. இந்த இணை எப்படி உருவானது? யார் உருவாக்கியது?

கவுண்டமணி - செந்தில் ஜோடி பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு இவர் எழுதிய காமெடி டிராக் வசங்களும் ஒரு காரணம். இருவருடைய நகைச்சுவை நடிப்பையும் கண்காணித்து, இருவருடைய தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் மிகப் பெரிய ஹிட் ஆனது. ‘ நான் பாடும் பாடல்’, ‘உதயகீதம்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ படங்களைத் தொடர்ந்து கவுண்டமணி- செந்திலை வைத்து வீரப்பன் எழுதிய காமெடி டிராக் பெரிய ஹிட் ஆயின.
முதன் முதலில் கவுண்டமணி - செந்தில் ஜோடி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் படங்களில்தான் ஒன்றாகச் சேர்ந்து தலைக்காட்ட ஆரம்பித்தது. ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் அதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர்களின் காமெடிக்குக் கிடைத்த அங்கீகாரமும் வரவேற்பும் இந்த ஜோடியை காமெடி ராஜாக்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் கவுண்டமணி ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாகவும் செந்தில் ‘கோமுட்டித் தலையன்’ ஆகவும் நடித்து புகழ்பெற்றனர். இதன்பிறகு 90-களின் இறுதிவரை இந்த ஜோடி அடித்த காமெடி லூட்டி தமிழ் ரசிகர்கள் காலத்தால் மறக்க முடியாதவை.
கவுண்டமணி செந்தில் ஜோடியின் மிகப் பெரிய வெற்றிக்கு செந்திலின் அப்பாவித்தனமும் எடக்குமடக்கான கேள்வியும், கவுண்டமணியை வம்பில் மாட்டிவிட்டு அப்பாவியாக வேடிக்கைப் பார்ப்பது போன்றவை காரணம் என்றால், செந்திலை கவுண்டமணி குசும்பும் நக்கலும் கலந்த வார்த்தைகளால் திட்டுவது, விரட்டி விரட்டி உதைப்பதுடன், அவருக்கெ உரிய உடல்மொழியும், வசனங்களை உச்சஸ்தாயில் கேலியாகவும் கிண்டலாகவும் வெளிப்படுத்தும் தோரணையும் முக்கிய காரணமாக இருந்தது உண்மை. இவை இந்த ஜோடியின் தனித்த அடையாளமாக மாறவும் செய்தது.
கவுண்டமணியும் செந்திலும் சக்கைப்போடு போட்ட காலத்தில் செந்திலை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம்கூட எழுந்தது. ஆனாலும், கவுண்டமணி-செந்தில் இணைக்கு வரவேற்பும் குறையவில்லை; ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. கவுண்டமணி செந்திலை திட்டி, அடித்தும்கூட இந்த ஜோடி தொடர்ந்து சினிமாவில் ஜொலிக்க கவுண்டமணி மற்றும் செந்திலின் ஜோடிக்கு இருந்த மவுசும் அவர்களைத் திரையில் பார்த்தாலே தங்களை மறந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை பாணியே முக்கிய காரணமாக அமைந்தது. சினிமாவைத் தாண்டி கவுண்டமணி-செந்தில் இடையே இருந்த அண்ணன் - தம்பி என்ற பாசப் பிணைப்பும் இதுபோன்ற விமர்சனங்களை இருவரும் புறந்தள்ள ஒரு காரணமாக இருந்தது.
1980-களில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்றவற்றில் கவுண்டமணி மற்றும் செந்திலின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், “கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்... என்னண்ணே உடைச்சிட்டீங்க!” என்று செந்தில் அப்பாவியாகப் பேசும் வசனத்துக்கு கவுண்டமணி பதில் வசனம் எதுவும் பேசாமல் ஓரக்கண்ணாலேயே செந்திலை முறைக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்பது நிதர்சனம். கவுண்டமணி வசனம் பேசாமலேயேகூட உடல்மொழியில் மட்டுமே நடித்து அதகளப்படுத்தினார் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.
இருவரும் ஒன்றாக நடித்த படங்களில் இருவருடைய டைமிங்கிற்கும் முக பாவங்களுக்கும் இணையாக
வேறெந்த காமெடியர்களும் செய்திருப்பார்கள் என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. காமெடிக் காட்சிகளில் கவுண்டமணியிடம் செந்தில் எப்போதும் அடிவாங்கினாலும், செந்தில் அடிவாங்குவதற்கு முன்னர் செய்திருக்கும் சேட்டைகளும் அடிவாங்கிய பிறகு காட்டும் ரியாக்சனும் கவுண்டமணி மேல் கோபமே ஆத்திரம் வராமல் அந்த காட்சிகள் கையாளப்பட்டிருக்கும். பெரும்பாலும் கவுண்டமணி செந்திலைப் போட்டுத்தாக்கினாலும் கவுண்டரைவிட செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு கவுண்டமணி ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் கூறலாம். இதற்கு ‘ராஜகுமாரன்’ உள்பட ஏராளமான படங்களை உதாரணமாக கூறலாம்.
கவுண்டமணி-செந்தில் ஜோடி சுமார் 400 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1980 மற்றும் 90-களில் இவர்களின் காமெடியை நம்பி படங்களில் நடித்த நாயகர்கள் பலர் உண்டு. 1950-60களில் நாயகர்களோடு இணைந்தே பெரும்பாலும் காமெடி காட்சிகள் நகரும். ஆனால், கவுண்டமணி-செந்தில் ஜோடி பல படங்களில் நாயகர்களோடு பெரிய அளவில் தொடர்பில்லாமல் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் வயிறைப் புண்ணாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாயகர்களுக்கு இணையாக இருவரும் ஜொலித்திருக்கிறார்கள். கவுண்டமணி-செந்தில் இருவரின் ஒருசேர கால்சீட்டுக்காக பல நாயகர்கள் காத்திருந்த காலங்கள் கூட உண்டு.
அந்தக் காலட்டங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுக்காமல் நடித்திருக்கிறார். ‘மன்னன்’, ‘உழைப்பாளி’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் சென்றிருப்பார் கவுண்டமணி. ‘சிங்காரவேலன்’ படத்தில் கமலையும் கலாய்த்து சிரிக்க வைத்திருப்பார். ரஜினி, கமலைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இதேபோல ‘வீரா’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ போன்ற ரஜினியின் படங்களின் சில காட்சிகளில் ரஜினியை ஓவர் டேக் செய்திருப்பார் செந்தில். அது கவுண்டமணி மற்றும் செந்திலுக்கே உரிய நகைச்சுவை ஆளுமையின் அடையாளம்.
பொதுவாக சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டமணி மன்னாதிமன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாககூட இருக்கும். ஆனால், சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். செந்திலோடு இணைந்து நடித்தபோது அப்பாடியான ஏராளமான வசனங்களை கவுண்டமணி வெளிப்படுத்தியிருப்பார். ‘உதய கீதம்’ படத்தில் செந்தில், “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணே” என்பார். பதிலுக்குக் கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என மிகச் சாதாரணமாகப் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்த பல படங்களின் வசனங்களை நினைத்தால் கூட அந்தக் காட்சிகள் கண் முன்னே தோன்றி இன்றும் வயிறைப் புண்ணாக்கும். ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ படத்தில் ‘இந்த டகால்டிதானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா, இது ஞாயமாடா’, ‘சின்னக்கவுண்டர்’படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகளை நினைத்தாலே உதட்டில் சிரிப்பு எட்டிப் பார்க்கும். ‘ராஜகுமாரன்’ படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலின் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்காக, ‘ நான் ஒரு முடிச்சவிக்கிம்மா’, ‘நான் ஒரு மொள்ளமாரிம்மா’ என்று மாறிமாறி பேசும் காட்சிகளும் இருவரின் காமெடி கலாட்டக்களுக்கு மட்டுமின்றி, இருவரும் உச்சத்தில் இருந்தபோது ஈகோ பார்க்காமல் நடித்ததற்கு ஓர் உதாரணம்.
நடிகர்களுக்காக, பாட்டுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காகப் பல திரைப்படங்கள் வெற்றிகரமாக 1980-90களில் ஓடியதுண்டு. அதைப்போலவே காமெடிக்காக மட்டும், படங்கள் ஓடியது கவுண்டமணி- செந்திலுக்காக மட்டுமே. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் வரை கோலோச்சிய இந்த இரட்டையர்கள், 1990-களின் இறுதியில் சேர்ந்து நடிப்பது குறைய ஆரம்பித்தது. புதுப்புது காமெடி வரவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

- தி இந்து 2017 தமிழ்ப் புத்தாண்டு மலர்