04/12/2016

சைத்தான் விமர்சனம்

புத்திசாலி இளைஞனுக்கு ஏற்படும் முன்ஜென்ம ஞாபகத்தால்  நடக்கும் த்ரிலிங்கான சம்பவங்களின் கோர்வைதான் ‘சைத்தான்’.

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார் புத்திசாலி இளைஞன் தினேஷ் (விஜய் ஆண்டனி). அவருக்கு ஐஸ்வர்யாவுடன் (அருந்ததி நாயர்) திருமணம் ஆன சில நாட்களில், மண்டைக்குள் விநோதமான ஒலி கேட்கிறது. அந்த ஒலி சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி. இது விபரீதங்களில் போய் முடிகிறது. விஜய் ஆண்டனியின் குடும்பத்தினரும், கம்பெனி முதலாளியும் மனநல மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள். இடையிடையே துரத்தும் அந்தக் குரலின் பேச்சைக் கேட்டு, ஜெயலட்சுமியைத் தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த ஜெயலட்சுமி? விஜய் ஆண்டனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, என்பதுதான் சைத்தான்  சொல்லும் கதை.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்ற நாவலின் சில பகுதிகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறிமுகப் படத்தையே சைக்கலாஜிக்கல் திகில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
இடைவேளை வரை  அடுத்தடுத்து நடக்கும் திகில் மற்றும் சுவாரஸியமான சம்பவங்களால் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. ஆனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இரண்டாம் பாகம் புஸ்வானமாக்கிவிடுகிறது. திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல திரைக்கதை பயணிக்கிறது. கோர்வை இல்லாத காட்சிகள், தெளிவில்லாத நாயகியின் பாத்திரப் படைப்பு, படத்தின் இறுதியில் வில்லனின் அறிமுகம், முன்ஜென்ம ஞாபகத்துக்கு விஜய் ஆண்டனி மீது செலுத்தப்படும் மருந்து பரிசோதனை காரணம் போன்ற காட்சிகள் படத்தின் கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்காக மாறிவிடுகிறது.

 முன்ஜென்மத்தில்  தமிழாசிரியராக வரும் விஜய் ஆண்டனிக்கு சர்மா என்ற பெயர்; ஜெயலட்சுமியைத் தேடி தஞ்சாவூர் செல்லும் விஜய் ஆண்டனி, திடீரென மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது, சம்பந்தமே இல்லாமல் உதவும் ஆட்டோ ஓட்டுநர்,  மருந்து மாபியா கும்பலால் விஜய் ஆண்டனியைத் திருமணம் செய்ய அனுப்பி வைக்கப்படும் நாயகியின் பின்னணி என பல காட்சி அமைப்புகளுக்கு தெளிவான விடைவில்லை. முன்ஜென்மம் பற்றி எந்த நினைப்பும் வராத விஜய் ஆண்டனியை, முன் ஜென்மத்துக்கு மனநல மருத்துவரே அழைத்து செல்வதெல்லாம் லாஜிக்கை மீறிய ஓட்டைகள். கொடூர வில்லனை கடைசியில் காமெடியன் போலக் காட்டுவது உச்சபச்ச அபத்தம்.

 சாப்ட்வேர் பொறியாளராகவும், முன்ஜென்மத்தில் தமிழாசிரியராகவும் வரும் விஜய் ஆண்டனி, இறுதியில் ஆக்‌ஷன் அவதாரமும் எடுத்து ஸ்கோர் அள்ளிவிடுகிறார். விநோதமான ஒலி கேட்கும்போது மிரள்வது, அதிலிருந்து விடுபட போராடுவது என நடிப்பும் அவருக்குக் கைக்கொடுத்திருக்கிறது.  நாயகியாக வரும் அருந்ததி நாயருக்கு பொருத்தமான வேடம் என்றாலும், ஒரே மாதிரியான முக பாவனையும், உடல் மொழியும் அலுப்பூட்டுகின்றன. ஒய்.ஜி. மகேந்திரன், மீரா கிருஷ்ணா, சாருஹாசன், முருகதாஸ் போன்றவர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசையையும் விஜய் ஆண்டனியே கவனித்திருக்கிறார். இரண்டு பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘ஜெயலட்சுமிஈஈ...’ என படம் முழுவதும் படரவிடப்படும் இசை செவிகளை ஈர்க்கிறது. படத்துக்கு ஒளிப்பதிவு பிரதீப் காளிபுரயாத். எடிட்டிங் வீரா செந்தில்ராஜ். த்ரில்லிங் படங்களுக்கே உரிய எடிட்டிங் படத்தில் மிஸ்ஸிங்.

சவாலானக்கு கதைகளத்துக்கு இலுவையான திரைக்கதை 'சைத்தா'னை விழி பிதுங்க நிற்க வைக்கிறது.

மதிப்பெண்: 2 / 5

No comments:

Post a Comment