16/12/2016

புதையலைத் தேடி...


த்ரில்லிங், காமெடி, ஆக்‌ஷன் ஆகியவற்றை சரிவிகித கலவையோடு கலந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது ஜாக்கிசானின் ‘குங்ஃபூ யோகா’ படம். இந்தியா - சீன கூட்டுத் தயாரிப்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் டிரையிலரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சியாளர் ஜாக்கி சான். இந்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியை அமைரா. இவர்களது டீம் பழங்கால மகத நாட்டு புதையலைத் தேடிச் செல்கிறது.  அப்படி போகும்போது அந்தப் புதையல் திபெத்தில் இருப்பது தெரிய வருகிறது. அந்தப் புதையலைக் கண்டுபிடித்து, வசமாக்க ஜாக்கி சான் செய்யும் தந்திரங்கள், காமெடிகள், ஆக்‌ஷன்களின் கோர்வைதான் ‘குங்ஃபூ யோகா’வின் கதை.

இந்தப் படம் சீனாவிலும் இந்தியாவிலும் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் ஜாக்கிசான்  செய்யும் காமெடி கலந்த சேட்டைகள் டிரையிலரிலேயே தெறிக்க வைக்கிறது. அதுவும் பெரிய சிங்கம் ஜாக்கி சானோடு காரில் வரும் காட்சியும், அதோடு ஜாக்கி சான் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை நிச்சயம் விலா நோக சிரிக்க வைக்கும். இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பு என்பதால் படத்தில் இந்திய கலைஞர்களுக்கும் இடம் கிடைத்திருக்கிறது.

‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ‘சந்திரமுகி’, ‘கத்தி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த சோனு சோட், இந்தப் படத்தில் ஜாக்கி சான் புதையலைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல திசரா பாட்னி, ஜெயின் குமார் போன்ற இந்திய நட்சத்திரங்களும் ‘குங்ஃபூ யோகா’வில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை ஸ்டேன்லி டோங் இயக்கியுள்ளார். மாண்டரின், இந்தி, ஆங்கிலம் என
மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.


04/12/2016

சைத்தான் விமர்சனம்

புத்திசாலி இளைஞனுக்கு ஏற்படும் முன்ஜென்ம ஞாபகத்தால்  நடக்கும் த்ரிலிங்கான சம்பவங்களின் கோர்வைதான் ‘சைத்தான்’.

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார் புத்திசாலி இளைஞன் தினேஷ் (விஜய் ஆண்டனி). அவருக்கு ஐஸ்வர்யாவுடன் (அருந்ததி நாயர்) திருமணம் ஆன சில நாட்களில், மண்டைக்குள் விநோதமான ஒலி கேட்கிறது. அந்த ஒலி சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி. இது விபரீதங்களில் போய் முடிகிறது. விஜய் ஆண்டனியின் குடும்பத்தினரும், கம்பெனி முதலாளியும் மனநல மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள். இடையிடையே துரத்தும் அந்தக் குரலின் பேச்சைக் கேட்டு, ஜெயலட்சுமியைத் தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த ஜெயலட்சுமி? விஜய் ஆண்டனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, என்பதுதான் சைத்தான்  சொல்லும் கதை.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்ற நாவலின் சில பகுதிகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறிமுகப் படத்தையே சைக்கலாஜிக்கல் திகில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
இடைவேளை வரை  அடுத்தடுத்து நடக்கும் திகில் மற்றும் சுவாரஸியமான சம்பவங்களால் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. ஆனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இரண்டாம் பாகம் புஸ்வானமாக்கிவிடுகிறது. திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல திரைக்கதை பயணிக்கிறது. கோர்வை இல்லாத காட்சிகள், தெளிவில்லாத நாயகியின் பாத்திரப் படைப்பு, படத்தின் இறுதியில் வில்லனின் அறிமுகம், முன்ஜென்ம ஞாபகத்துக்கு விஜய் ஆண்டனி மீது செலுத்தப்படும் மருந்து பரிசோதனை காரணம் போன்ற காட்சிகள் படத்தின் கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்காக மாறிவிடுகிறது.

 முன்ஜென்மத்தில்  தமிழாசிரியராக வரும் விஜய் ஆண்டனிக்கு சர்மா என்ற பெயர்; ஜெயலட்சுமியைத் தேடி தஞ்சாவூர் செல்லும் விஜய் ஆண்டனி, திடீரென மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது, சம்பந்தமே இல்லாமல் உதவும் ஆட்டோ ஓட்டுநர்,  மருந்து மாபியா கும்பலால் விஜய் ஆண்டனியைத் திருமணம் செய்ய அனுப்பி வைக்கப்படும் நாயகியின் பின்னணி என பல காட்சி அமைப்புகளுக்கு தெளிவான விடைவில்லை. முன்ஜென்மம் பற்றி எந்த நினைப்பும் வராத விஜய் ஆண்டனியை, முன் ஜென்மத்துக்கு மனநல மருத்துவரே அழைத்து செல்வதெல்லாம் லாஜிக்கை மீறிய ஓட்டைகள். கொடூர வில்லனை கடைசியில் காமெடியன் போலக் காட்டுவது உச்சபச்ச அபத்தம்.

 சாப்ட்வேர் பொறியாளராகவும், முன்ஜென்மத்தில் தமிழாசிரியராகவும் வரும் விஜய் ஆண்டனி, இறுதியில் ஆக்‌ஷன் அவதாரமும் எடுத்து ஸ்கோர் அள்ளிவிடுகிறார். விநோதமான ஒலி கேட்கும்போது மிரள்வது, அதிலிருந்து விடுபட போராடுவது என நடிப்பும் அவருக்குக் கைக்கொடுத்திருக்கிறது.  நாயகியாக வரும் அருந்ததி நாயருக்கு பொருத்தமான வேடம் என்றாலும், ஒரே மாதிரியான முக பாவனையும், உடல் மொழியும் அலுப்பூட்டுகின்றன. ஒய்.ஜி. மகேந்திரன், மீரா கிருஷ்ணா, சாருஹாசன், முருகதாஸ் போன்றவர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசையையும் விஜய் ஆண்டனியே கவனித்திருக்கிறார். இரண்டு பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘ஜெயலட்சுமிஈஈ...’ என படம் முழுவதும் படரவிடப்படும் இசை செவிகளை ஈர்க்கிறது. படத்துக்கு ஒளிப்பதிவு பிரதீப் காளிபுரயாத். எடிட்டிங் வீரா செந்தில்ராஜ். த்ரில்லிங் படங்களுக்கே உரிய எடிட்டிங் படத்தில் மிஸ்ஸிங்.

சவாலானக்கு கதைகளத்துக்கு இலுவையான திரைக்கதை 'சைத்தா'னை விழி பிதுங்க நிற்க வைக்கிறது.

மதிப்பெண்: 2 / 5

02/12/2016

2016 - வெற்றிகொடி கட்டிய நாயகன் யார்?


தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கோடு இருந்தாலும், திரையில் ஜொலிக்கும் நாயகர்கள்தான் அந்தந்தப் படங்களின் ஒட்டுமொத்த அடையாளங்கள்.  நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டிகள் எப்போதும் இருந்தாலும், ஓர் ஆண்டில் நாயகர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை, படங்களின் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நாயகர்களின் உச்சத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்?

முன்னணி நாயகர்களான கமல்ஹாசன், அஜித்குமார் நடித்த படங்களைத் தவிர பிற முன்னணி நாயகர்களின் எல்லா படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன. ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பல படங்கள் வரிசை கட்டி  ரசிகர்களை மகிழ்வித்தன. ஏற்கெனவே வெற்றிக்கொடிகளை பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டு பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று மட்டும் பார்ப்போம்.

விஜய்

ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும்
விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’.  பாசமுள்ள சாதுவான அப்பா, ஃபிளாஷ்பேக்கில் ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களைக் காட்டி அவரது ரசிகர்களைத் தெறிக்கவிட்டார் விஜய். அந்தக் காலத்து சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தைப் பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்பியது. ஏற்ற இறக்கங்களாக விஜய்க்கு இருந்து வரும் வெற்றி - தோல்வி படங்களின் வரிசையில் ‘தெறி’ ஓரளவு வெற்றி படம்தான்.

விக்ரம்


கமலஹாசனுக்கு அடுத்து உடலை வருத்தி, மெனக்கெட்டு நடிக்கும் நடிகர் விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்து இந்த ஆண்டு தலைகாட்டிய படம் ‘இருமுகன்’.   நாயகனாக ‘அகிலன்’, வில்லனாக ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் காட்டி விக்ரம் நடித்த படம். வில்லனைப் பிடிக்க அகிலன் காட்டும் தீவிரம், அதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ‘லவ்’வின் வில்லத்தனம் இரண்டும் ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால், காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ‘இருமுகன்’ பெறவில்லை.

சூர்யா

முன்னணி நாயகர்கள் எல்லோரும் ஒரு படத்தில் தலைகாட்டினால் போதும்
என்ற இலக்கணத்துக்கு இந்த ஆண்டு சூர்யாவும் தப்பவில்லை.  ‘24’ என்ற த்ரில்லர் பாணி படமொன்றில் மட்டுமே சூர்யா நடித்தார். மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்ததில் ரசிகர்களை சீட்டில் நிமிர உட்கார வைத்தார் சூர்யா. ஆனால், சூர்யாவின் வழக்கமான முக பாவனைகளும், காட்சி அமைப்புகளும் ஏற்படுத்தும் சலிப்புகள் படத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்கவும் செய்தது.

சிம்பு

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படம் வெளியாவதற்கே நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்புவுக்கு, இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாயின. அதுவும் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தள்ளிப்போய்க்கொண்டிருந்த ‘இது நம்ம ஆளு’, மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என இரு படங்கள் வெளியாயின. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சாக்லெட் பையனாகவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தாடி வைத்து சிம்பு நடித்ததும்தான் வித்தியாசங்கள்.  சிம்புவுக்கு நயன்தாரா ஜோடி என்று ஏற்படுத்திய பரப்பரப்பு  அளவுக்கு ‘இது நம்ம் ஆளுவில்’ எந்தப் பரபரப்பையும் விறுவிறுப்பையும் பார்க்க முடியவில்லை.  ‘அச்சம் என்பது மடமையடா’ அவ்வப்போது ‘விடிவி’ பார்த்த பாதிப்பை ஏற்படுத்துவதால், பெரிய ஆரவாரமில்லாமல் இருபடங்களும் நகர்ந்தன.

தனுஷ்

கடந்த ஆண்டு நான்கு படங்களில் நடித்த சிம்புவின் சகப் போட்டியாளரான தனுஷ், இந்த ஆண்டு ‘தொடரி’, ‘கொடி’ என இரண்டு படங்களோடு திருப்தியாகிவிட்டார். இதில் ‘கொடி’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் தலை காட்டினார். கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில்
நடக்கும் ஒரு காதல் பயணம்  என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு சறுக்கியதால் ‘தொடரி’ ரசிகர்களின் தொடர் ஆதரவைப் பெற முடியாமல் போனது. ஆனால், அதிகமான சவால்கள் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்தது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.

அதேசமயம், தீபாவளி அன்று வெளிவந்த ‘கொடி’ படம் ஓரளவு உயர பறந்தது. இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் சேர்த்திருந்தார். வழக்கமான திரைக்கதை பாணி, அரசியலில் லாஜிக்கே இல்லாமல் சுலபமாக வெற்றி பெறுவது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் ‘கொடி’ உயர பறக்க தடையாக இருந்தன. இருந்தாலும் இரண்டு படங்களில் ஒன்று ஓரளவு சோடைபோகமல் போன வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சி கொடுத்திருக்கும்.

ஜீவா


முன்னணி நாயகர்களின் பட்டியலில் இருந்தாலும், இன்னும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் திணறும் ஜீவாவுக்கு இந்த ஆண்டு ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ என மூன்று படங்கள் வெளியாயின. ‘போக்கிரி ராஜா’ படம் நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி கதை. ‘திருநாள்’ படத்தில் ரவுடி, ‘கவலை வேண்டாம்’ படத்தில் காதல், திருமணம் என தடுமாறும் இளைஞர் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், மூன்றுமே ஜீவாவுக்கு கைகொடுக்காமல் போனது. பழைய பாணி கதைகள், சலிப்பேற்றும் திரைக்கதை மற்றும் பாத்திர அமைப்புகள் என மூன்று படங்களும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றன. சிறப்பான நடிப்பை உடல்மொழியிலும் பேச்சிலும்  ஜீவா வெளிப்படுத்துவதில் சோடைபோகாவிட்டாலும், அதையும் தாண்டி அவருக்கு அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.

விஷால்

பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுக்கப் போராடிக் கொண்டிருக்கும்
விஷாலுக்கு இந்த ஆண்டு ‘கதகளி’, ‘மருது’ என இரண்டு படங்கள் வெளியாகின. ‘கதகளி’ ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம் என்றால், ‘மருது’வோ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. கதையைப் போலவே பாத்திர படைப்பிலும் புதுமை இல்லை. ஆக்‌ஷன் மற்றும் கூலித் தொழிலாளிக்கு ஏற்ற உடற்கட்டும் உயரமும் கைக்கொடுக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு கைக்கொடுக்கவில்லை. அதற்கு விஷாலைக் குறைகூற முடியாது. அதற்கு இயக்குநர்களின் கற்பனை பற்றாக்குறையே காரணம். இதுபோன்ற் காரணங்களால் வெற்றிப் படத்துக்காக விஷால் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மூன்று பேர்

முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் மூன்று நடிகர்களின் கேரியர் கிராஃப் மட்டும் பரமபத ஏணியில் ஏறுவதைப் போல ஏறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.

கார்த்தி

கார்த்தி நடித்த ‘தோழா’’, ‘காஷ்மோரா’ இரண்டும் வசூலிலும், ரசிர்கர்களைக் கவர்ந்ததிலும் குறைவைக்கவில்லை. கழுத்துக்குக் கீழே செயலிழந்துபோன உடலுடன் வலம் வரும் நாகர்ஜூனாவின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் பாத்திர வார்ப்பில் கொஞ்சமும் பிசகாமல் நடித்து ‘தோழா’வில் கவர்ந்தார் கார்த்தி. இன்னொரு புறம் ‘காஷ்மோரா’வில் இரண்டு வேடங்கள்; மூன்று பரிமாணங்களில் வந்து ஈர்த்தார். அதுவும் ‘காஷ்மோரா’ பாத்திரத்தில் கலகல கார்த்தியாக ரசிர்களின் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டார். இரண்டு படங்களுமே வெவ்வேறான கதையமைப்புகள், திரைக்கதையமைப்புகள், பாத்திர உருவாக்கங்கள், என அமைந்தத்தில் கார்த்திக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டுதான்.

சிவகார்த்திகேயன்

 ஒரே பாணியிலான நடிப்பு, கதைத் தேர்வு, கலகலப்பான நகைச்சுவை பிளஸ் காதல் என கலந்து கொடுத்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வியாபார ரீதியில் உச்சம் பெற்று வரும் இவர்,
தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக இந்த ஆண்டு மாறியிருக்கிறார். ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ என இரண்டு படங்களுமே இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்கள். ‘ரஜினி முருகன்’ படத்தில் அவரது நடனம், நக்கலான முகப் பாவனை, காமெடி சென்ஸ் மூலம் படத்தை ஹிட் அடிக்க வைத்தவர், ‘ரெமோ’வில் காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்தார். இதில் பெண் வேட நடிப்பில் தனி முத்திரையும்  பதித்தார்.  துரத்தி காதலிக்கும் கதையம்சம் கொண்ட ‘ரெமோ’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களை ஈர்க்கவே செய்தது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிகொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டும் ஏறுமுகம்தான்.

விஜய் சேதுபதி

மசாலா படமா, முறுக்கு மீசை போலீஸ் படமா, கிராமத்துப் படமா, பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாத ஆணின் படமா, குடும்ப சூழ்நிலையில்
தடுமாறும் இளைஞனின் படமா, சிரிப்பு ரவுடி பாத்திரமா- இவை எல்லாவற்றுக்கும் ஒரேசாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையை இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் பார்த்தது. ஒரே ஆண்டில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்களில் நடித்து இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையையும், பாத்திரப் படைப்புகளையும் கொண்ட படங்கள்தான். இதில் எல்லாவற்றிலும் பொருந்திக்கொண்டது விஜய் சேதுபதிக்கே உரிய தனிச்சிறப்பு. 6 படங்களில் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, சேதுபதி, இறைவி ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆரவாரம் இல்லாத இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற பேச்சும், உடல்மொழி மாற்றமும் விஜய் சேதுபதிக்கு கைக்கொடுக்கிறது. தொடர்ந்து மாறுப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கையிலும், வெற்றிகளின் எண்ணிக்கையிலும், வணிக ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு கவனம் ஈர்த்த நாயகர்களில் விஜய் சேதுபதியே முன்னணியில் உள்ளார்.

- தி இந்து, 02-12-2016