எந்திரன் படத்துக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்திருக்கும் படம் லிங்கா. 1990-களில் பெரும் ஹிட் அடித்த முத்து, படையாப்பா ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி கைகோத்திருக்கும் படம். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்துள்ள லிங்கா ரசிகர்களுக்கு மடை திறந்த இன்ப வெள்ளத்தைக் கொடுத்திருக்கிறதா, இல்லையா?அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?
சென்னையில் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுகிறார் ராஜவம்சத்தின் வாரிசான லிங்கா (ரஜினி). அவரை ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைத்து சோலையூர் கிராமத்துக்கு அழைத்துவருகிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுஷ்கா. அந்த ஊரில் உள்ள அணைக்கு அருகில் அமைந்த கோயிலை இவர் கையால் திறக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர் மன்றாட, காரணம் புரியாமல் லிங்கா குழம்புகிறார். தன் அரண்மனை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று, வறட்சி, வெள்ளம் இரண்டாலும் பாதிக்கப்படும் சோலையூர் மக்களுக்காக பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியவர் லிங்காவின் தாத்தா ராஜா லிங்கேஸ்வரன். இதற்காகப் பெரும் கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்ட தியாகி.
தன் தாத்தாவின் அருமை பெருமையை உணர்ந்த லிங்கா, தற்போது ஒரு அரசியல்வாதியின் பேராசையால் அந்த அணைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதன் பிறகு அணைக்கு வரும் ஆபத்தையும் ஊர் மக்களையும் பேரன் லிங்கேஸ்வரன் எப்படி காக்கிறார் என்பதுதான் மீதி கதை.
தாத்தா - பேரன் கதை. இரண்டையும் ரஜிதான் செய்திருக்கிறார். ஆனால், தத்தாவும் பேரனும் நேரடியாக சந்தித்திக் கொள்ளும் காட்சிகள் கிடையாது. தாத்தா வேடம் ஏற்றிருக்கும் ரஜினியின் கதை 75 ஆண்டுகளுக்கு முன்னால் நகர்கிறது. பேரன் ஏற்றிருக்கும் வேடம் இப்போது நகர்வது போல் அமைத்திருக்கிறார்கள். படத்தில் இரண்டு ரஜினிக்கும் ‘லிங்கேஸ்வரன்’ என்றுதான் பெயர்.
வழக்கம்போல ரஜினி அறிமுக பாடலோடு ஆரம்பிக்கிறது. படம் முழுவதையும் தன் தோளில் போட்டுக் கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் ஜொலிக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். பஞ்ச் வசங்கள் இல்லாமலும், அரசியல் பொடி வசனங்கள் இல்லாமல் இயல்பான வசனங்களையை தனக்கே உரிய இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார்.நேரடியாக கதைக்குள் நுழைந்துவிட்டு ‘லிங்கா’ ரஜினியை அறிமுகம் செய்கிறார்கள். கோச்சடையானில் கேப்சர் மூவ்மெண்டில் ரஜினியைக் காட்டியதால் ஏமாந்து போயிருந்த ரசிகர்களை லிங்கா ஏமாமற்றவில்லை.
இளமைத் துள்ளலோடும் அதே உற்சாக வேகத்துடனேயே ரஜினி வலம் வருகிறார். ஸ்டைலாக சட்டையைத் தூக்கிவிடும்போது ரஜினியின் ஸ்டைல் ஜிலிர் என்று மின்னுகிறது. அறிமுக பாட்டில் முடிந்ததில் தொடங்கி பேரன் ரஜினி, சந்தானம், கருணாகரனின் காமெடி ரகளைத் தொடங்குகிறது. காமெடி கலாட்டாக்கள் சில இடங்களில் சலிப்புத் தட்டினாலும் ரஜினியால் தப்பிவிடுகிறது. ரஜினியை எப்படியும் சோலையூருக்கு அழைத்துச் செல்வதற்காக அனுஸ்கா அவர் பின்னாலேயே அலைகிறார்.
படத்தின் கதைக்களம் முழுவதும் ஃபிளாஷ்பேக்கில்தான் விரிகிறது. மூன்று மணிநேரப் படத்தில் இவர் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டும் இரண்டு மணிநேரம் விரிகிறது. ரஜினி என்பது ஒரு மந்திரம் என்றால் அதை எப்படிப் பிரயோகிப்பது என்ற வித்தை தெரிந்தவர்களில் கே.எஸ். ரவிகுமாரும் ஒருவர்.
லிங்கேஸ்வரன் ராஜாவாக ரஜினிதான் கதையைத் தன் தோள்களில் சுமக்கிறார். எல்லாச் சொத்துக்களையும் இழப்பது, எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவது ஆகியவை ரஜினியின் முந்தைய படங்களில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். ராஜா ரஜினிக்குக் குடைச்சல் தரும் வெள்ளைக்கார கலெக்டர், அவரது மனைவியின் மிரட்டலால் மனம் மாறுவது மிகப் பழைய ஃபார்முலா. வெள்ளையர்களை விமர்சிக்கும் வேகத்தில் தேசபக்தியைக் காட்டிலும் இன வெறுப்பு தூக்கலாக இருக்கிறது. ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பது தவறுதான் என்றாலும், கிளைமாக்ஸின் கோமாளித்தனம் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. படத்தின் நீளம் சோர்வடைய வைக்கிறது.
அறிமுகக் காட்சியிலேயே கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு சண்டையில் சிக்சர் அடிக்கிறார் லிங்கேஸ்வரன் ரஜினி. வெள்ளைக்கார அதிகாரிகளுடன் வாக்குவாதம், மக்களைத் திரட்டி அணை கட்டும் போராட்டம், அனைத்தையும் துறக்கும் தியாகம் என்று ரஜினிக்குச் செமத்தியான தீனி. அமர்த்தலாகவும் நக்கலாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார். ‘தாத்தா ரஜினி’ ராஜ கம்பீரம் சேர்த்திருக்கிறார் என்றால், பேரன் ரஜினி கலகலப்பின் மொத்தக் குத்தகைத்தாரராக இருக்கிறார்.
இளம் ஹீரோக்களுக்குச் சவால்விடும் அளவுக்கு ரகளை செய்கிறார். சந்தானம் கோஷ்டியுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறை சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சலிக்கவும் வைக்கின்றன. ‘நண்பேன்...’ என்று சந்தானம் தொடங்கி வைக்க, ரஜினி ‘டா’ என்று முடித்துவைக்கிறார். ஆனால் ரஜினியின் இமேஜுக்கு வலு சேர்க்கும் பஞ்ச்களுக்குப் பஞ்சமில்லை.
ரஜினிக்கு அடுத்தபடியாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக அணை கட்டும் காட்சிகள், வெள்ளத்தை அணை தாக்குப்பிடிக்கும் காட்சி ஆகியவை அற்புதம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஏமாற்று கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் கூடத் தரமான கிராஃபிக்ஸைத் தர முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது. ரஹ்மானின் இசையில் பின்னணி இசை கவர்கிற அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை. ‘சோனாக்ஷிக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
படம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாமனிதனை டைட்டிலில் கவுரவப்படுத்தியிருந்தால் பெருமையாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே. ரஜினி மந்திரத்தைச் சரியாகப் பிரயோகித்திருக்கும் ரவிகுமார் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மதிப்பெண்: 2.5 / 5
No comments:
Post a Comment