26/12/2014

பேய்கள் ஜெயிக்கின்றனவா?

அரண்மனை 2...
தமிழ் திரையுலகை பேயும் பிசாசும் பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தியேட்டர்களில் பேய்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்து வெற்றி பெற்ற 'பீட்சா' படம், பேய் படங்களுக்கும் திகில் படங்களுக்கும் சிவப்புக் கம்பளத்தை விரித்துகொடுத்தது. வெற்றி இயக்குநர்களான சுந்தர்.சி, மிஸ்கின் முதல் புதுமுக இயக்குநர்கள் வரை பலர் திகில் படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து திகில் படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கலைக்க வந்தன. ஆனால், இந்த திகில் படங்கள் ரசிகர்களைப் பயமுறுத்தியதா?

 ‘அரண்மனை’, ‘யாமிருக்க பயமே’, ‘ர’, ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ உள்பட பல பேய் படங்கள் இந்தாண்டு வெளிவந்துள்ளன. இந்த வாரம் ‘பிசாசு’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த ஆண்டும் மட்டும் பேயையும் திகிலையும் இணைத்து கொண்டு டிராவல் செய்த படங்கள் 25 சதவீதம் வந்திருப்பதாகக் திரையுலகில் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘மைடியர் லிசா’,  ‘யார்’ போன்ற படங்களை இப்போது பார்த்தாலும் அடிவயிறு கலங்கும். இன்னொருவர் உடலில் ஆவி புகுந்துகொண்டு பழிவாங்கும் கதைகள்தான் இவை. இப்படி பேய் படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்தப் படங்களில் அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் சிறந்த திகில் பட அந்தஸ்தை இப்படங்களுக்கு பெற்று கொடுத்தன. இப்போதும் பயமுறுத்தும் பேய் படங்கள் வரவே செய்கின்றன. ஆனால், இப்போது வரும் பேய் படங்கள் ரசிகர்களை கவருகிறதா என்பது பெரும் கேள்விகுறிதான். எல்லாவற்றிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்  ரசிகர்கள்.  இது பேய் படங்களுக்கும் பொருந்தவே செய்கிறது.

தியேட்டரில் பேய் படங்களைப் பார்க்கும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குநர்களாகி அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாகக் கணித்துவிடுகிறார்கள்.  அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடியாமல் இருந்தால்தான் அது திகில். அப்படியில்லையென்றால் சலிப்புதான் மிச்சமாகும். இப்போது வந்துகொண்டிருக்கும் பல பேய் மற்றும் திகில் படங்கள் இந்தப் பாணியில்தான் இருக்கின்றன.
யாமிருக்க பயமேன்...

தொடர்ந்து ஒரே மாதிரியான திகில் படங்கள் வந்த வேளையில்தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமாக ‘பீட்சா’ படம் வந்தது. கணிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையும் கச்சிதமாக இருந்தது. திகிலும் திடீர் திருப்பங்களும் ‘பீட்சா’ படத்தை வெற்றிப் படமாக மாற்றியது. அதன்பிறகு தமிழ் திரையுலகில் பேய் படங்களும், திகில் படங்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த ஆண்டும் அப்படி வந்தப் படங்களில் ‘அரண்மனை’யும்,  ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘சந்திரமுகி’யில் தொடக்கத்தில் காமெடியை தொட்டுவிட்டு இடையில் பயத்தை லேசாக காட்டிவிட்டு இறுதியில் பயமுறுத்தியிருப்பார்கள். அதே திரைக்கதை பாணிதான் கிட்டத்தட்ட இந்த இரு படங்களிலும் பின்பற்றப்பட்டிருந்தன. அதோடு கிளாமரான ஹீரோயின்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமான பாழடைந்த பங்களா, பழைய அரண்மனை, ஆவி, மர்மக் கொலைகள் என கதை நகர்ந்தாலும், திகிலை காமெடியாக காட்டிய உத்திதான்  இப்படங்களைக் கரைச் சேர்த்தன.

இப்படங்களைத் தவிர்த்து பிரபு யுவராஜ் இயக்கிய  ‘ர’ என்கிற படம் பேண்டசி வகை திகில் படமாக வெளிவந்தது. ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ என்ற படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் வீரா, கிரிக்கெட்டிலிருந்து பேய் வருவதுபோல காட்டியிருந்தார். பேய் படங்களில் லாஜிக்குகள் பெரியதாக தேவையில்லையென்றாலும் சொல்லப்படும் விஷயம் கொஞ்சமாவது இயல்பாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுமனே கொடூர பேய் ஒப்பனை, கொலை செய்யும் பேய், அதை அடக்க மந்திர தந்திரம் என அரைத்த மாவையே அரைத்தால் பேய் படங்கள் எப்படி ஜெயிக்கும்? பல பேய்ப் படங்கள் இந்த ஆண்டு வெளி வந்திருந்தாலும், இந்தப் பேய்
கள் ரசிகர்களை பயமுறுத்தியது மாதிரி தெரியவில்லை.

பேய் படங்களைத் தவிர்த்து க்ரைம் திகில் படங்களாக ‘ நீ நான் நிழல்’, ‘தொட்டால் விடாது’, ‘தெகிடி’, ‘சரபம்’ ஆகிய படங்களும் ரசிர்களுக்கு பயம் காட்ட வந்தன. ஆனால், பீட்சாவின் சாயல் இப்படங்களில் இருந்ததால், பெரிய அளவில ரசிகர்களை கவர முடியவில்லை. பேய் படங்களாக இருந்தாலும், அதிலும் தேவை வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதையமைப்பு என்பதைப் புரிந்து கொண்டால் பேய்களும் இங்கே நிச்சயம் ஜெயிக்கும்.

-தி இந்து. 2014

14/12/2014

லிங்கா விமர்சனம்


எந்திரன் படத்துக்கு பிறகு  நான்கு ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்திருக்கும் படம் லிங்கா. 1990-களில் பெரும் ஹிட் அடித்த முத்து, படையாப்பா ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி கைகோத்திருக்கும் படம். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்துள்ள லிங்கா  ரசிகர்களுக்கு மடை திறந்த இன்ப வெள்ளத்தைக் கொடுத்திருக்கிறதா, இல்லையா?அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?

சென்னையில் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுகிறார் ராஜவம்சத்தின் வாரிசான லிங்கா (ரஜினி). அவரை ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்க வைத்து சோலையூர் கிராமத்துக்கு அழைத்துவருகிறார் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுஷ்கா. அந்த ஊரில் உள்ள அணைக்கு அருகில் அமைந்த கோயிலை இவர் கையால் திறக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர் மன்றாட, காரணம் புரியாமல் லிங்கா குழம்புகிறார். தன் அரண்மனை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று, வறட்சி, வெள்ளம் இரண்டாலும் பாதிக்கப்படும் சோலையூர் மக்களுக்காக பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியவர் லிங்காவின் தாத்தா ராஜா லிங்கேஸ்வரன். இதற்காகப் பெரும் கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்ட தியாகி.
தன் தாத்தாவின் அருமை பெருமையை உணர்ந்த லிங்கா, தற்போது ஒரு அரசியல்வாதியின் பேராசையால் அந்த அணைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதன் பிறகு அணைக்கு வரும் ஆபத்தையும் ஊர் மக்களையும் பேரன் லிங்கேஸ்வரன் எப்படி காக்கிறார் என்பதுதான் மீதி கதை.

தாத்தா - பேரன் கதை. இரண்டையும் ரஜிதான் செய்திருக்கிறார். ஆனால், தத்தாவும் பேரனும் நேரடியாக சந்தித்திக் கொள்ளும் காட்சிகள் கிடையாது. தாத்தா வேடம் ஏற்றிருக்கும் ரஜினியின் கதை  75 ஆண்டுகளுக்கு முன்னால் நகர்கிறது. பேரன் ஏற்றிருக்கும் வேடம் இப்போது நகர்வது போல் அமைத்திருக்கிறார்கள். படத்தில் இரண்டு ரஜினிக்கும் ‘லிங்கேஸ்வரன்’ என்றுதான் பெயர்.

வழக்கம்போல ரஜினி அறிமுக பாடலோடு ஆரம்பிக்கிறது. படம் முழுவதையும் தன் தோளில் போட்டுக் கொண்டு  ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் ஜொலிக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். பஞ்ச் வசங்கள் இல்லாமலும், அரசியல் பொடி வசனங்கள் இல்லாமல் இயல்பான வசனங்களையை தனக்கே உரிய இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார்.நேரடியாக கதைக்குள் நுழைந்துவிட்டு ‘லிங்கா’ ரஜினியை அறிமுகம் செய்கிறார்கள்.  கோச்சடையானில் கேப்சர் மூவ்மெண்டில் ரஜினியைக் காட்டியதால் ஏமாந்து போயிருந்த ரசிகர்களை லிங்கா ஏமாமற்றவில்லை.

இளமைத் துள்ளலோடும் அதே உற்சாக வேகத்துடனேயே ரஜினி வலம் வருகிறார். ஸ்டைலாக சட்டையைத் தூக்கிவிடும்போது ரஜினியின் ஸ்டைல் ஜிலிர் என்று மின்னுகிறது. அறிமுக பாட்டில்  முடிந்ததில் தொடங்கி பேரன் ரஜினி, சந்தானம், கருணாகரனின் காமெடி ரகளைத் தொடங்குகிறது. காமெடி கலாட்டாக்கள் சில இடங்களில் சலிப்புத் தட்டினாலும் ரஜினியால் தப்பிவிடுகிறது. ரஜினியை எப்படியும் சோலையூருக்கு அழைத்துச் செல்வதற்காக அனுஸ்கா அவர் பின்னாலேயே அலைகிறார்.
படத்தின் கதைக்களம் முழுவதும் ஃபிளாஷ்பேக்கில்தான் விரிகிறது. மூன்று மணிநேரப் படத்தில் இவர் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டும் இரண்டு மணிநேரம் விரிகிறது. ரஜினி என்பது ஒரு மந்திரம் என்றால் அதை எப்படிப் பிரயோகிப்பது என்ற வித்தை தெரிந்தவர்களில் கே.எஸ். ரவிகுமாரும் ஒருவர்.

லிங்கேஸ்வரன் ராஜாவாக ரஜினிதான் கதையைத் தன் தோள்களில் சுமக்கிறார். எல்லாச் சொத்துக்களையும் இழப்பது, எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவது ஆகியவை ரஜினியின் முந்தைய படங்களில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். ராஜா ரஜினிக்குக் குடைச்சல் தரும் வெள்ளைக்கார கலெக்டர், அவரது மனைவியின் மிரட்டலால் மனம் மாறுவது மிகப் பழைய ஃபார்முலா. வெள்ளையர்களை விமர்சிக்கும் வேகத்தில் தேசபக்தியைக் காட்டிலும் இன வெறுப்பு தூக்கலாக இருக்கிறது. ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பது தவறுதான் என்றாலும், கிளைமாக்ஸின் கோமாளித்தனம் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறது. படத்தின் நீளம் சோர்வடைய வைக்கிறது.

அறிமுகக் காட்சியிலேயே கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு சண்டையில் சிக்சர் அடிக்கிறார் லிங்கேஸ்வரன் ரஜினி. வெள்ளைக்கார அதிகாரிகளுடன் வாக்குவாதம், மக்களைத் திரட்டி அணை கட்டும் போராட்டம், அனைத்தையும் துறக்கும் தியாகம் என்று ரஜினிக்குச் செமத்தியான தீனி. அமர்த்தலாகவும் நக்கலாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார். ‘தாத்தா ரஜினி’ ராஜ கம்பீரம் சேர்த்திருக்கிறார் என்றால், பேரன் ரஜினி கலகலப்பின் மொத்தக் குத்தகைத்தாரராக இருக்கிறார்.

இளம் ஹீரோக்களுக்குச் சவால்விடும் அளவுக்கு ரகளை செய்கிறார். சந்தானம் கோஷ்டியுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறை சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சலிக்கவும் வைக்கின்றன. ‘நண்பேன்...’ என்று சந்தானம் தொடங்கி வைக்க, ரஜினி ‘டா’ என்று முடித்துவைக்கிறார். ஆனால் ரஜினியின் இமேஜுக்கு வலு சேர்க்கும் பஞ்ச்களுக்குப் பஞ்சமில்லை.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக அணை கட்டும் காட்சிகள், வெள்ளத்தை அணை தாக்குப்பிடிக்கும் காட்சி ஆகியவை அற்புதம். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஏமாற்று கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் கூடத் தரமான கிராஃபிக்ஸைத் தர முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது. ரஹ்மானின் இசையில் பின்னணி இசை கவர்கிற அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை. ‘சோனாக்‌ஷிக்கு நடிக்க அதிக வாய்ப்பு. அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாமனிதனை டைட்டிலில் கவுரவப்படுத்தியிருந்தால் பெருமையாகவும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே. ரஜினி மந்திரத்தைச் சரியாகப் பிரயோகித்திருக்கும் ரவிகுமார் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மதிப்பெண்: 2.5 / 5

12/12/2014

மீண்டும் வருவாரா அந்த ரஜினி?

முள்ளும் மலரும்
ரஜினியின் மிகச் சிறந்த படம் எது? அவருடைய ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் இந்தக் கேள்வி கடினமாகத் தோன்றலாம். ஆனால், சினிமாவைச் சினிமாவாக மட்டுமே பார்க்கும் யதார்த்தமானவர்கள் பட்டெனச் சொல்லும் முதல் படம் ‘முள்ளும் மலரும்’. தமிழில் ‘பாசமலர்’ பாணியில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அந்தப் பாணியில் பதிவு செய்யப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று. காளி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் கலக்கியிருப்பார் ரஜினி. கோபம், இயலாமை, வெறுப்பு, பாசம் என யதார்த்தமான நடிப்பில் பல இடங்களில் ஸ்கோர் செய்திருப்பார் ரஜினி. ‘இந்தக் காளி கெட்ட பய சார்’ எனப் பஞ்ச் வசனங்கள் இல்லாத காலகட்டத்திலேயே இயல்பாகப் பேசி நடித்திருப்பார்.

இளமை ஊஞ்சலாடுகிறது
வில்லத்தனமான கதாபாத்திரங்களில் இருந்து விடுபட்டு அடுத்தகட்டக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படமும் ரஜினியின் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படம்தான். இந்தப் படத்தில் ரஜினியின் ஸ்டைல் காட்சிகள் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், தன் நண்பன் செய்த தவறைப் பொறுக்க முடியாமலும், அதற்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும் காட்சியிலும் கமலுக்கு இணையாக இயல்பாகத் தன்னை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சோகம் ததும்பிய படங்களிலும், ‘ராகவேந்திரா’ போன்ற சாந்த சொரூபி படங்களிலும் ரஜினி நடித்திருக்கிறார் என்பதெல்லாம் இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சரியமான விஷயமாகவே இருக்கும்.

இதுபோன்ற சில படங்கள் அவர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு வந்திருந்தாலும், அதிரடி ஆக் ஷன் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாகவும், டான் போன்ற கதாபாத்திரங்களிலும் வந்த படங்கள் அவரது இயல்பான நடிப்புத் திறமையை மங்கச் செய்தன. ஸ்டைல் மன்னன், மாஸ் ஹீரோ என்ற இமேஜுக்கு ஏற்ப அவரது ஸ்டைல்களும், அதிரடிக் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் அவரது படங்களை ஆக்கிரமித்தன.
இதுபோன்ற ஸ்டைல்களையும் அதிரடிக் காட்சிகளையும் ரஜினியும் அவரது ரசிகர்களும் விரும்பினார்களோ இல்லையோ, பட முதலாளிகளும், இயக்குனர்களும் விரும்பியதன் விளைவு, இயல்பான நடிப்பில் இருந்து தடம் மாறிப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் எந்த இடத்திலும் ரஜினி மாஸ் ஹீரோ என்ற இமேஜிலிருந்து வெளி வர முடியாமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

முள்ளும் மலரும்
அடுத்து வரப்போகும் ரஜினியின் படங்களில்  மாஸ் ஹீரோ முத்திரை மாறாமலேயே ரஜினியின் கதாபாத்திரம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருகாலத்தில் ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆண்டுக்கு ஒரு படம் என்ற அளவுக்குச் சுருங்கியபோது, அவரது பட அறிவிப்பே தலைப்புச் செய்தியாக மாறியது. எப்போதாவது ரஜினி படம் வெளிவரும் இன்றைய நிலையில் இனி ‘முள்ளும் மலரும்’ போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் நடித்த ரஜினியைக் காணவே முடியாதா? அதுவும், தற்போது வயதாகி விட்ட நிலையிலும், அவரது உடல்நிலை முன்பு போல ஒத்துழைக்க மறுக்கும் சூழ்நிலையிலும் ரஜினியை இயல்பான நடிப்பில் காண ஒரு கூட்டம் இப்போதும் காத்திருக்கிறது. அதைக் காணத் தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

ரஜினி நடித்த சமகாலத்தில் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி இப்போது ஹாலிவுட் அளவுக்கு உயர்ந்து விட்ட அவரது நண்பர் அமிதாப்பச்சன் ‘பா’, ‘சர்க்கார்’, ‘சீனிகம்’, ‘நிசப்த்’ போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிகிறது. 1980களில் அமிதாப் படங்களின் பல ரீமேக் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ரஜினியாலும் இதுபோன்ற படங்களில் நிச்சயம் நடிக்க முடியும். அந்த நாளைக் காண அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் கூறு நல்லுலகமும் காத்திருக்கிறது.

(ரஜினியின் பிறந்த நாளையொட்டி 2014-ல் எழுதியது)