உலகில் எத்தனையோ அதிசயங்களும் விநோதங்களும் மர்மங்களும் ஏராளமாக இருக்கின்றன. இப்படி விநோதங்களும் மர்மங்களும் கொண்ட ஒரு தீவு உலகில் இருக்கிறது. இந்தத் தீவில் எங்கு பார்த்தாலும் அதிசயம் கொட்டிகிடக்கிறது. பார்க்கின்ற அனைத்துமே இதற்கு முன்பு நாம் பார்க்காதவை. இந்தத் தீவில் காணப்படும் பொருட்கள் எல்லாம் வேறு எங்கும் காணப்படாதவை. இப்படி அதிசயத் தீவாகப் பார்க்கப்படும் அதன் பெயர் சோகோட்ரா.
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கடற்கரை கொம்பு முனைக்கும் அரேபியத் தீபகற்பத்திற்கும் தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நான்கு தீவுகள் அடங்கிய அந்தச் சிறு தீவுக் கூட்டம். 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்த இத்தீவு, நாளடைவில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் காரணமாகத் தனித் தீவுக் கூட்டமானது.
கரடுமுரடான பாலைவனம் போல் உள்ளது இந்தத் தீவு. திட்டு திட்டாகக் காடு, பிரம்மாண்டப் பாறைகள், வித்தியாசமான மரங்கள், விலங்குகள், அழகான கடற்கரை, குகைகள் என இயற்கைக்கு வாக்கப்பட்ட பூமி இது. இங்குக் கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் மலைகள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள், பல்லுயிர் தாவரங்களை உலகில் வேறு எங்குமே காண முடியாது. வேற்றுக் கிரகச் சூழல் நிலவும் பகுதி இது என விஞ்ஞானிகள் அழைக்கும் இந்தச் சோகோட்ரா தீவு, ஏமன் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ளது.
இத்தீவில் 800-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இதில் 240 தாவர வகைகள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குடை போன்ற மரங்கள், பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் பூக்கள், பாறைகளைப் பொத்துக் கொண்டு வளரும் மரங்கள், மரங்களின் கீழ்ப்பகுதி குண்டாகவும் மேல்பகுதி சூம்பிப் போன விரல்கள் போலவும் காணப்படும் மரங்களின் கிளைகள் என எல்லாமே இங்கு வித்தியாசம்தான்.
டிராகன் மரங்கள் எனப் பெயரிடப்பட்ட மரங்கள் நிறைய உள்ளன. மரத்தில் எங்கேயாவது கீறல் ஏற்பட்டல் சிவப்பு வண்ணத்தில் திரவம் வரும். ரத்தம் உறிஞ்சும் டிராகனை நினைவுபடுத்தும் விதமாக இந்த மரங்களுக்கு டிராகன் மரம் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இயற்கை வளம் எந்த அளவுக்கு இங்கே கொட்டிக் கிடக்கிறதோ, அதே அளவுக்குப் புதிர்களும் நிறைந் திருக்கின்றன இத்தீவில். எனவே 2008-ம் ஆண்டில் இத்தீவுகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
இங்கு வளரும் தாவரங்கள் பற்றி முழுமையாக அறிய, தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். இந்த அதிசயத் தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
- இந்து தமிழ், 13/08/2014