23/08/2011

சான்ஸ் பிடிக்க பில்லி சூனியத்தை நாடும் நடிகைகள்!

இரண்டு பாடகிகள் தொழில் போட்டியில் மாறி மாறி மாந்திரீக ஏவல் செய்துகொண்டது சில ஆண்டுகளுக்குமுன் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம். ‘எனக்கு வரும் வாய்ப்புகளை அவர் தட்டிப் பறிக்கிறார்’ என்று கொதித்து இப்படி மாந்திரீகத்தின் துணையை நாடியவர்கள் ‘தங்கமயமான’ ஒரு பாடகியும், ‘ஜொலிக்கும் பூச்சி’யின் பெயர் கொண்ட ஒரு பாடகியும். ஒருவர் அகால மரணமடைந்துவிட, இன்னொருவருக்கு வாய்ப்புகளே இல்லை. இதற்குக் காரணங்கள் வேறாக இருந்தாலும், கனவுத் தொழிற்சாலைக்காரர்களை மாந்திரீகம் விட்டு வைக்கவில்லை!

எதிரிகளை துவம்சம் செய்வது, கண்ணசைவில் காதலியை கரம் பிடிப்பது, நினைத்ததை வசப்படுத்துவது எல்லாம் சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டுமே சாத்தியம். நிஜவாழ்க்கையில்..? இதுபோன்ற காரியங்களை சாதிக்க சில நட்சத்திரங்கள் நாடுவது மாந்திரீகவாதிகளையே! பெரும் முயற்சிக்குப் பிறகு இவர்களில் ஒருவரைப் பிடித்து வாயைத் திறக்க வைத்தோம். ‘‘நடிகர், நடிகைகள் நினைக்கும் விஷயங்களை செய்துகொடுக்க வெளியூரிலிருந்து மாந்திரீகக்காரர்கள் சென்னைக்கு வந்து வசிக்கிறார்கள். இதுபோன்ற பில்லி, சூனிய ஏவல் வேலைகளுக்கு சில வரையறைகள் உண்டு. எல்லாமே பலித்துவிடாது. ஆனால், காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. எனவே மாந்திரீகவாதிகளை தேடிவரவும், தாராளமாகப் பணம் செலவழிக்கவும் பலரும் தயங்குவதில்லை. இதை சாதகமாக்கி சிலர் பணம் பறிக்கவும் செய்கிறார்கள்’’ என்று நம்மிடம் சொன்ன அவர், சாம்பிளுக்கு அடுக்கிய விஷயங்கள் கீழே... 

« கோடம்பாக்கத்தில் குதிரை நடிகை என பெயரெடுத்த ‘மங்களகரமான’ உயர நடிகை அவர். பெரிதாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், அவரை வசதியாக வாழவைத்தது மாந்திரீகம்தான். குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் செய்து, சர்வ லட்சணங்களோடும் இருக்கும் இவருடன் நெருக்கமாக இருந்தால், பணமும் வெற்றியும் நிச்சயம் என ஒரு மாந்திரீகவாதி கணிப்பு சொன்னார். இதைக் கேள்விப்பட்டு அந்த நடிகையை ‘நெருங்க’ பல நடிகர்களும் தவமாய் தவமிருந்திருக்கிறார்கள். கில்லியாய் வெற்றிகளைக் குவித்த ‘மைதான கேப்டனு’க்குக்கூட அந்த வகையில்தான் இந்தக் குதிரை நடிகையோடு அறிமுகமாம்! இப்போது குதிரை நடிகை இடத்தை ‘காலேஜ்’ நடிகைக்கு கொடுத்திருக்கிறார்கள் மாந்திரீகவாதிகள். தமிழில் வாய்ப்புகள் மங்கிப் போனாலும், இந்தக் காரணத்துக்காக ‘காலேஜ்’ நடிகையை நெருங்க சில மலையாள முக்கிய ஸ்டார்களும், தமிழ் புள்ளிகளும் பரபரக்கிறார்கள்.

« வரும் வாய்ப்புகளை வசியப்படுத்தியாவது பெற்று விட வேண்டும் என்று துடிப்பது, ‘சித்திரமாகப் பேசிய’ நடிகையின் பாலிஸி. பில்லி, சூனிய பார்ட்டிகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார் இவர். தயாரிப்பாளரோ, டைரக்டரோ படத்தில் புக் செய்ய வந்தால், வீட்டில் அவர்களுக்கு தடபுடலாக விருந்தோம்பல் நடக்கும். அதில் கண்டிப்பாக முட்டை ஆம்லெட்டும் இடம் பிடிக்கும். இந்த ஆம்லெட்டில்தான் ‘மேட்டர்’ இருக்கிறது. பில்லி, சூனியக்காரர்கள் மயிலிறகில் செய்த வசிய மருந்தைக் கொடுப்பார்கள். இந்த மருந்தை எந்த உணவுடன் சேர்த்துக் கொடுத்தாலும், அந்த டேஸ்டுக்கு அது மாறிவிடும். அந்த நடிகை இந்த வசிய மருந்தை ஆம்லெட்டில் கலந்து தருகிறார். இதைச் சாப்பிட்டால்..? அந்த வாய்ப்பு கண்டிப்பாக நடிகைக்கே கிடைக்கும்.

இன்னும் சில நடிகைகள் இதில் வேறொரு மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். பிசுபிசுப்பில்லாத எண்ணெய் போல இருக்கும் இந்த மருந்தை தங்கள் செல்போனில் தடவுகிறார்கள். டைரக்டரையோ, தயாரிப்பாளரையோ ஏதாவது சினிமா விழாக்களில், பார்ட்டிகளில் சந்திக்க நேரும்போது இப்படி வசிய மருந்து தடவிய செல்போனோடுதான் போகிறார்கள். பேசும்போது கேஷுவலாக தங்கள் செல்போனை நீட்டி, ‘‘லேட்டஸ்ட் மாடல்... எல்லா வசதிகளும் இருக்கு’’ என்று சொல்கிறார்கள். ஆர்வத்தோடு வாங்கிப் பார்க்கும் நபரின் உள்ளங்கையில் வசிய மருந்து பட்டதுமே வேலை செய்யத் தொடங்கிவிடுமாம். அப்புறம் சான்ஸ்கள் வந்து குவியுமாம்!

« படங்களுக்கு ஜெயிக்கும்விதமாக பெயர் வைப்பதற்காகவே கோடம்பாக்கத்தில் பில்லி, சூனிய, மாந்திரீக பார்ட்டிகள் சிலர் இருக்கிறார்கள்.
எத்தனை எழுத்தில் எப்படித் தலைப்பு வைத்தால் படம் ஓடும் என்பதை இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதற்காகவே சிறப்பு பூஜைகள் நடத்தி சில தலைப்புகளை டைரக்டர்களிடம் கொடுக்கிறார்கள். அதிலிருந்து அவர் சாய்ஸில் எடுத்துக் கொள்ளலாம். ‘லக லக லக’விலிருந்து ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக சக்கைப் போடு போடும் டான்ஸர் நடிகரின் ‘பயமுறுத்தும்’ படம் வரை இவர்கள் தீர்மானித்த தலைப்புகளுக்கு ஒரு பட்டியலே கொடுக்கலாம் என்கிறார்கள். இந்த டிரெண்டைப் பார்த்துவிட்டு, ஆவிகளோடு பேசி பெயர் வைக்கும் கோஷ்டியும் புதிதாகப் புறப்பட்டிருக்கிறது.

« பனியன் நகரின் பெரும் கோடீஸ்வரர் அவர். கண்ணுக்கு லட்சணமான மனைவியும் உண்டு அவருக்கு. ஆனாலும், ‘பார்ட்டி’ நடிகையோடு ‘டேட்டிங்’ செல்ல வேண்டும் என்று நீ...ண்ட நாள் ஆசை. ஒருவழியாக அந்த ஆசை ஒருநாள் நிறைவேறியது. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு அந்த நடிகையுடன் 3 நாட்களுக்கு வெளிநாடு செல்ல ‘டேட்டிங்’ கிடைத்தது. நாள் ஒன்றுக்கு 10 லகரம் என அதற்கு ஊதியமும் பேசப்பட்டது. வெளிநாடு கிளம்பும்போதே மாந்திரீகத்தை மீட் பண்ணிவிட்டு வந்த நடிகை, கையோடு ஒரு ஆயிலையும் கொண்டு வந்திருக்கிறார். நாடு திரும்பியதும் பணத்தைத் தரும் நேரத்தில் மாந்திரீகர் கொடுத்த ஆயிலை தொழில் அதிபருக்குத் தெரியாமல் அவர் மீது தடவியிருக்கிறார் நடிகை. அந்த நிமிடமே தொழிலதிபர் ஃபிளாட். முப்பது லட்சம் தர வேண்டிய இடத்தில் இரண்டு கோடி ரூபாயை ஏன் கொடுத்தோம் என்பது இன்றுவரை அவருக்குப் புரியவில்லையாம். அதன்பின் இந்த விவரங்கள் எல்லாம் ஆடிட்டரான அவரது மனைவிக்குத் தெரிந்து, இப்போது தொழிலதிபர் தனிமரமானது தனிக்கதை.

« பிரபல வாரிசு நடிகர் அவர். கொஞ்சம் சபல பேர்வழி. நடிக்க வந்ததிலிருந்தே நடிகைகளோடு சேர்ந்து கிசுகிசுக்கப்படுவதுதான் அவரது அடையாளம். திருத்துவதற்கு அவரது குடும்பம் எவ்வளவோ முயன்றும், தோல்வியே கிட்டியது. கோயில் கோயிலாகச் சுற்றியதில், பரிகாரங்கள் சொல்லும் ஒரு பார்ட்டியின் நட்பு அந்தக் குடும்பத்திற்கு கிடைத்தது. ‘அவர் திருந்த வேண்டும் என்றால், வீட்டில் ஒரு சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்று யோசனை கூறினார் அந்த பார்ட்டி. அதன்படி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜையும் சிறப்பாக நடந்தது. ‘எதற்காக பூஜை நடைபெறுகிறது’ என்பது தெரியாமலேயே பல நடிகர் நடிகைகளும் அந்த பூஜையில் கலந்து கொண்டது உச்சகட்ட காமெடி.

« தங்களுக்கு வாய்ப்புகள் வேண்டும் என வசியம் செய்வதுபோலவே, அடுத்தவர்களுக்கு போகும் வாய்ப்புகளைக் கெடுக்கவும் சில மாந்திரீகத்தை நாடுகிறார்கள். பொள்ளாச்சி அருகே காட்டுக்குள் சக்திவாய்ந்த அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கே சென்று ஒரு விசேஷ பூஜை செய்து, அந்த அம்மன் சிலைமீது மிளகாய் அரைத்துப் பூசிவிட்டு வருகிறார்கள். மிளகாயின் கடுப்பில் கோபம் கொள்ளும் அம்மன், அந்த எதிரியை தொழிலில் ஜெயிக்க விடாமல் செய்துவிடுமாம்!

« இப்படி பூஜை செய்யும் கோஷ்டிகள் பெருகிவிட, ‘‘உங்களுக்கு எதிராக யாரோ பொறாமையில் ஏவல் செய்திருக்காங்க. அதிலிருந்து உங்களைக் காப்பாத்திக்கறதுக்கு நான் வழி சொல்றேன்’’ என முன்னணி நட்சத்திரங்களிடம் இன்னொரு கோஷ்டியினர் போகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டில் விசேஷ பூஜை செய்து, யாரோ ஏவல் செய்திருப்பதை ‘கண்டுபிடிக்கிறார்கள்’ இவர்கள். அதைத் தொடர்ந்து பரிகார பூஜையும் நடத்துகிறார்கள். பெயர், ராசி எல்லாம் பார்த்து... இடது காலிலோ அல்லது வலது காலிலோ சிவப்பு அல்லது கறுப்புக் கயிறு கட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். ‘கடைவீதி’ நடிகையும் ‘பெல்’ நடிகையும் இப்படி கயிறு கட்டிக்கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

இப்படி கோடம்பாக்கத்தில் கடை விரித்திருக்கும் பல மாந்திரீகர்கள், கேரளாவின் வடகரா அருகே இருக்கும் கல்லேரி குட்டிச்சாத்தான் கோயிலில் விசேஷ பூஜை செய்து எடுத்து வந்ததாகச் சொல்லி மருந்துகளை சப்ளை செய்கிறார்கள். சென்டிமென்ட்டுக்கு தலைவணங்கும் தமிழ் சினிமாக்காரர்கள் பலர் இதையும் நம்புவதுதான் விநோதம்!

- குங்குமம்,  22-08-2011

22/08/2011

வெளிநாடுகளில் வலம் வருது நம்மூர் ஜிக்குபுக்கு!


‘பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்... பேரீச்சம்பழம்...’ ‘கரகாட்டக்காரன்’ ஸ்டைலில் இந்த டயலாக்கை திருச்சி பொன் மலையில் யாராவது சொன்னால், ரயில்வே பணிமனை ஊழியர்கள் அடிக்க வந்துவிடுவார்கள். இந்தியாவில் இயக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் மறு அவதாரம் எடுப்பது இங்குதான். அப்படி புத்துயிர் பெற்ற எஞ்சின்கள் ‘ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு’ என வெளிநாடுகளில் வலம் வருகின்றன. இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் எஞ்சின்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போயிருக்கின்றன!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீராவி எஞ்சின்கள் தயாரிப்பதற்காக 1897ல் நாகப்பட்டினத்தில் ரயில்வே பணிமனை தொடங்கினார்கள். போக்குவரத்து வசதி சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, 1926-ல் திருச்சி பொன்மலைக்கு பணிமனை இடம் பெயர்ந்தது. அந்தக் காலகட்டத்தில மீட்டர்கேஜ் எஞ்சின்கள் தயாரிப்பே இங்கு பிரதானம்.

1962-ம் ஆண்டுக்குப் பிறகு டீசல் ரயில் எஞ்சின்கள் தயாரிக்கும் பணி களைகட்ட ஆரம்பித்தது. 1993-ம் ஆண்டுவரை இதுவே தொடர்ந்தது. அதன்பிறகு படிப்படியாக அகலப்பாதைக்கு மாறியதால் மீட்டர்கேஜ் டீசல் எஞ்சின்களுக்கு வேலையே இல்லாமல் போனது. அவை எதற்குமே உபயோகப்படாது என்று நினைத்த வேளையிலதான் ‘ரீமாடலிங் கான்செப்ட்’ அறிமுகமானது. அதாவது, இந்த ரயில் எஞ்சின்களில் சில மாறுதல்கள் செய்து அகலப்பாதையில் ஓடுவது போல மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கியது.

உலகளவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் இருப்பது இந்தியாவில்தான். நமக்குத் தேவையானதை நாமே தயார் செய்துகொள்கிறோம். ஆனால், ஏழை நாடுகளோ வெளிநாடுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். குறிப்பா ஆப்ரிக்க நாடுகள் பலவும் நம்பியிருப்பது இந்தியாவைத்தான். இது ஒருவகையில் அந்த நாடுகள் ரயில்வே துறையில் வளர நாம் செய்யும் உதவி. இதற்காகவே இரு அமைப்புகளை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்த அமைப்புகள் மூலமாகத்தான் மீட்டர்கேஜ் எஞ்சின்களை அந்தந்த நாட்டு வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரியும், அகலப்பாதையில ஓடுவது போலவும் ரீமாடலிங் செய்து அனுப்புகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்ப வேலையை இந்தியாவிலேயே பொன்மலை ரயில்வே பணிமனை மட்டும்தான் செய்கிறது. முதன் முதலாக 1993-ல் இந்தப் பணி தொடங்கியது. மலேசியாவுக்கு இங்கிருந்து முதல் ரீமாடலிங் எஞ்சின் பயணமானது. 2010-ம் ஆண்டு வரை அதிகபட்சமாக மலேசியாவுக்கு 48 எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. தான்சானியாவுக்கு 14, மியான்மருக்கு 16, சூடானுக்கு 10, மொசாம்பிக்குக்கு 26 ரயில் எஞ்சின்கள் அனுப்பப்பட்டன. சூடானில் தயாரிக்கப்பட்ட ஹிடாச்சி ரக 4 மீட்டர்கேஜ் எஞ்சின்களை அகலப்பாதைக்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கொடுத்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டு நிலவரப்படி மொத்தம் 129 மீட்டர்கேஜ் எஞ்சின்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

பொதுவாக பழைய பொருட்களை என்னதான் ரீமாடலிங் செய்து பயன்படுத்தினாலும் உடனுக்குடன் பழுதாவது இயல்பு. ஆனால், பொன்மலை பணிமனையிலிருந்து இத்தனை ஆண்டுகளில் இங்கிருந்துபோன எந்த ரயில் எஞ்சினும் ரிப்பேர் ஆகி திரும்ப வரவே இல்ல. சாதாரணமாக பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து ஒரு எஞ்சின் வெளியே சென்றால், 8 ஆண்டுகள் கழித்துத்தான் மீண்டும் பராமரிப்புக்கே வரும். அந்தளவுக்கு பக்காவா இங்கே அனுப்புகிறார்கள். எஞ்ஜின் அனுப்புவதற்கு முன்பே அந்தந்த நாட்டுப் பொறியாளர்கள் இங்கு வந்து பயிற்சி எடுத்துட்டு சென்றுவிடுகிறார்கள். ஏதாவது சிறு பிரச்சினை வந்தால், அதை அவர்களே சமாளிக்க இந்தப் பயிற்சி உதவுகிறது.

இப்படி ரீமாடலிங் செய்யப்பட்ட மீட்டர்கேஜ் எஞ்சின்களை ஏழை நாடுகளுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நம்மூரில் ரயில்வே பிளாட்பாரங்களில் ஷன்டிங் அடிக்கவும் ரீமாடலிங் எஞ்சின்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

துரும்பைக்கூட இரும்பாக்குறாங்க நம்ம ஆளுங்க!

 குங்குமம், 22/8/2011