07/06/2010

தாகம் தீர்க்குமா கடல்?


சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல... மகாராஷ்டிரா மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஆம்.. அங்கும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள். பல நாடுகளிலும் கடல் நீரைக் குடிநீராக ருசித்து வருகிறார்கள். கரிக்கும் கடல் நீர், எப்படி சுவைமிக்க சிறுவாணி தண்ணீராக மாறுகிறது?

பூமியில் நான்கில் 3 பங்கு நீர்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படி நீர் சூழ்ந்த உலகில்தான் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ஏன் தண்ணீர் பஞ்சம்? காரணம், உப்பு நீர்! உலக நீர்வளங்களில் 97 சதவீதம் உப்பு நீரே. 3 சதவீதம் மட்டுமே நன்னீர். இந்த நீரையும் போட்டிப்போட்டுக்கொண்டு மாசுபடுத்திவருகின்றனர் மக்கள். நிலத்தில் மிச்சம் மீதியுள்ள நிலத்தடி நீரையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சாத குறை. உலகில் தண்ணீர் தேவை ஜிவ்வென இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில், நீர் இருப்போ தள்ளாடுகிறது. அப்படியானால், தண்ணீருக்காக யுத்தம் வருமோ? கவலை வேண்டாம்... நிலப்பரப்பில் நீர் தீர்ந்தாலும் இருக்கவே இருக்கிறது. கடல்!

கடல் நீரை அப்படியே எடுத்துப் பருகினால்தானே உப்புச்சுவை தெரியும். உப்பு நீக்கி சுத்திகரித்து பருகினால், உப்பு இருக்கும் இடமே தெரியாது. சென்னைக்கு அருகே மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வங்காள விரிகுடா தண்ணீர், சென்னை வீட்டுக் குழாய்களில் கொட்ட இருக்கிறது.
உலகில் இப்போது 7,500 உப்பு நீக்கி நிலையங்கள் இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளில் மக்களின் குடிநீர் தேவையைக் கடல் நீர்தான் நிவர்த்திசெய்கிறது. தினமும் கோடிக்கணக்கான லிட்டர் கடல் நீர், மக்களின் வயிற்றில் குடிநீர் வார்த்துவருகிறது!

தொழில்நுட்பம் 1

 கடல் நீர் எப்படி குடிநீராகிறது? இது ரொம்ப சிம்பிள். பள்ளியில் படித்த தொழில்நுட்பம்தான். தலைகீழ் சவ்வூடு பரவல். அந்த முறையில் சுலபமாக உப்பை நீக்கிவிடலாம். சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதே.

தொழில்நுட்பம் 2

வளைகுடா நாடுகளில் வேறொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக குழாய் நீரை நன்றாகச் சூடாக்கி, ஆற வைத்து
பருகியிருக்கிறீர்களா? தண்ணீரைக் காய்ச்சுவதற்கு முன் இருந்த சுவை, அதைச் சூடாக்கிய பின் இருக்காது. தண்ணீரைச் சூடாக்கும்போது அதில் கலந்துள்ள தாதுக்கள் குறைந்துவிடும். கனல்சக்தி மூலம் உப்பு நீக்கும் திட்டமும் இப்படித்தான். வளைகுடா நாடுகளில் கடல் நீரை பிரமாண்ட பாய்லர்களில் பெட்ரோல், டீசல் கொண்டு சூடாக்கி, குளிர்வித்து, சில  தொழில்நுட்பங்கள் மூலம் உப்பு நீக்கி பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்பம் 3

இவை இரண்டும் 50 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான். 2,400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க கப்பல் மாலுமிகள் ஆவியாக்கும் முறையைப் பயன்படுத்தி கடல் நீரில் உப்பை நீக்கிக் குடிநீராக்கி உபயோகப்படுத்துகின்றனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ‘ஆவியாதல்’ முறையும் ஏற்கனவே சொன்னது போலத்தான். உப்பு நீரை பலமுறை கொதிக்க வைத்து குளிரூட்டி வடிகட்டிப் பயன்படுத்தினால், உப்புச்சுவை குறைந்துகொண்டே வரும்.

தொழில்நுட்பம் 4

பெருகிவரும் மக்கள்தொகை, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக, வருங்காலங்களில் தேவை இரட்டிப்பாகலாம். அப்போது தண்ணீர் தேவையைத் தீர்மானிப்பதில் கடல் நீரே தீர்வாக இருக்கலாம். எல்லா நாடுகளிலும் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில் நுட்பமும் கடல் நீரை குடி நீராக மாற்ற உதவுகிறது. அது அனல் மின்சார நிலையம் அல்லது அணுமின் நிலையத்தின் டர்பைன் வெளிக் கழிவிலிருந்து வெளியேறும் வெப்பத்தை உபயோகிப்பது. எரிபொருள் வளங்கள் இல்லாத நாடுகளில் சவ்வூடு பரவல் முறையில் கோடிகணக்கில் பணம் செலவு செய்து, கடல் நீரைக் குடிநீராக்குவதைவிட, மலிவான வழியில் அனல்மின் அல்லது அணுக்கரு வெப்ப சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக்கலாம்.

உலகில் 2025-ம் ஆண்டில் மக்கள்தொகை 800 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 100 கோடி பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்று குண்டு வீசியிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு. அப்போது மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்கப்போவது கடல் அன்னைதான்!

தாகம் தீர்க்கும் கடல்!

* வளைகுடா நாடுகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் 1,483 நிலையங்கள் உள்ளன. முதன்முதலில் இதற்கான நிலையம் அமைத்த நாடு - குவைத் (1957). ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் ஆகிய மூன்று நாடுகளிலும் சேர்ந்து தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.
* 1965-ல் இஸ்ரேல், 1970-ல் சவுதி, 1997-ல் ஜப்பான், 2000-ல் கத்தார் எனப் பல நாடுகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.
* 2000-ல் அமெரிக்காவின் டெக்சாஸ், ஃபுளோரிடா, அட்லாண்டா, கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களில் 1,200 உப்பு நீக்கி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* 2000-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் பல நாடுகளில் தினமும் 600 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* இந்தியாவில் 2004-ம் ஆண்டிலேயே ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறிய நிலையங்கள் அமைக்கப்பட்டு, தினமும் 30 ஆயிரம் லிட்டர் கடல் நீர் குடி நீராக்கப்பட்டுவருகிறது.
* ஆயிரம் லிட்டர் கடல் நீரில் உப்பு நீக்க ரூ.200 முதல் ரூ.250 வரை செலவு ஆகும்.

முத்தாரம், 07/06/2010

No comments:

Post a Comment