28/06/2019

கரகாட்டக்காரன் 30 ஆண்டுகள்: களிப்பு தந்த கரகம்!

கரகாட்டக்காரன்
இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது ‘கரகாட்டக்காரன்’ படம் ஓடிக்கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம். ‘மாரியம்மா... மாரியம்மா..’ பாடலுக்கு தியேட்டரில் சாமி வந்து ஆடும் பெண்களின் படம் இடம்பெற்ற விளம்பரம்தான் ‘கரகாட்டக்காரன்’ படத்தைப் பார்க்கத் தூண்டியது.
திருச்சியில் ஜூபிடர் தியேட்டரில் ஆரவாரமாக ஓடிக்கொண்டிருந்த ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு அம்மா அழைத்துசென்றபோது கிளைமாக்ஸில் வரும் ‘மாரியம்மா...’ பாட்டுக்காகப் படம் தொடங்கியதிலிருந்தே காத்திருந்தேன்.

அந்தப் பாட்டு வருவதற்கு முன்பாக தியேட்டரில் விளக்குகளை ஒளிரவிட்டுவிட்டார்கள். பெண்கள் பகுதியில் சூடம், திருநீறு, தீப்பெட்டி சகிதம் தியேட்டர் ஊழியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். நாடி, நரம்பை தூண்டிவிடும் இசையுடன் கூடிய ‘மாரியம்மா... மாரியம்மா...’ பாடலைக் கேட்டதும் உண்மையிலேயே பெண்கள் பலர் சாமியாட்டம் போட்டார்கள்.
அப்படி ஆடும் பெண்களுக்குச் சூடம் ஏற்றி, திருநீறு பூசி சாந்தப்படுத்தும் பணிகளும் கச்சிதமாக நடந்தேறின. ‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தியேட்டரில் பார்த்தபோது கிடைத்த மறக்க முடியாத அனுபவம் இதுதான்.

அந்தப் படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் வரும் நினைவும் இதுதான். இப்போதும் அதன் எண்ண ஓட்டங்கள் அந்தப் பழைய நினைவுகளைக் கிளறிகொண்டிருக்கின்றன. 1980-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் மாயாஜாலத்தை நிகழ்த்திய படம் ‘கரகாட்டக்காரன்’.

இதோ, அந்தப் படம் வெளியாகி ஜூன் 16-ம் தேதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ‘கரகாட்டக்காரன்’ படத்தையோ, அதன் பாடல்களையோ, அதன் காமெடி காட்சிகளையோ டி.வி.யில் இப்போது பார்க்க நேர்ந்தாலும், ரிமோட் ஓய்வுக்குச் சென்றுவிடும். காலம் கடந்தும் ‘கரகாட்டக்கார’னுக்குக் கிடைக்கும் மரியாதை அது.

கிராமிய கதாபாத்திரங்களுக்கும் கரகம் எடுத்து ஆடும் கரகாட்டக் கலைஞர்களின் கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தியது ராமராஜன் - கனகா இணை. நகைச்சுவைக்கு
வாழைப்பழ காமெடி சீன்..
கவுண்டமணி - செந்தில் இணை. கூடவே கோவை சரளாவும் ஜால்ரா கூட்டமும். சென்டிமென்டுக்கு சண்முகசுந்தரம், காந்திமதி, கோகிலா. வில்லத்தனத்துக்கு சந்தானபாரதி, சந்திரசேகர். இவர்கள் எல்லோருக்கும் மேலே படத்தின் முக்கிய நாயகன் இசைஞானி இளையராஜா. ‘கரகாட்டக்காரன்’ படத்தின் காம்போவே அவ்வளவுதான்.

‘கரகாட்டக்கார’னின் வெற்றி என்பது 80-களின் இறுதியில் ஈடு இணையில்லாததாக அமைந்தது. அந்தக் கால கட்டத்தில் கதாநாயகர்களின் சாகசங்களைக் கொண்ட படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு தென்றலைப் போல வந்த படம் ‘கரகாட்டக்காரன்’. ரஜினி, கமல் எனப் பெரிய ஹீரோவுக்குக் கிடைக்கும் வரவேற்பு ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு எடுத்த எடுப்பிலேயே கிடைக்கவில்லை ‘ஸ்லோ பிக்அப்’ படம்தான்.

ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள், அதைப் பற்றிச் சிலாகித்துப் பேசிப்பேசியே அந்தப் படத்துக்கு விளம்பரத்தைத் தந்தார்கள். படத்தைப் பற்றியும், அதன் இசையைப் பற்றியும் பாடலைப் பற்றியும் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றியும் குறிப்பாக வாழைப்பழ காமெடியையும் ஆராதித்த ரசிகர்களால் பின்னர் அந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி சென்றது.

‘கரகாட்டக்கார’னின் வெற்றிக்கு எதை முக்கியக் காரணமாகச் சொல்ல முடியும்? அந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைமிக்க காட்சி பிடித்திருக்கலாம். ஆனால், தமிழர்களின் மரபு சார்ந்த அடையாளத்தை வெகுமக்கள் ஊடகம் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

அதற்கு முன்புவரை சினிமாவில் காட்சியின் ஊடாகக் காட்டுப்பட்டுவந்த ‘கரக’ கலையைப் படம் முழுக்க காட்டிய இயக்குநரின் கைவண்ணமும் பாராட்டத்தக்கது. கங்கை அமரன் இயக்குநராகப் பரிணமித்த காலத்தில் தமிழின் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்த படம் இது. ‘கரகம்’ எடுத்து ஆடும் ஒரு சமூகத்தின் இசையைப் பட்டிதொட்டியெங்கும் தட்டி எழுப்பி பார்வையாளனுக்குள் ஒருவிதமான களிப்பை ‘கரகாட்டக்காரன்’ ஏற்படுத்தியது. அந்த இசைக்குக் காரணகர்த்தாவாக விளங்கியது இசைஞானி இளையராஜா.

தில்லானா மோகனம்பாள்
‘கரகாட்டக்காரன்’ படத்தின் கதை புதுமையானதும் இல்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதி 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் தாக்கத்தில் உருவாகி கிராமியக் கதைக் களத்தையும் கிராமியக் கலையையும் பொருத்திக்கொண்டு வெற்றி பெற்ற ஜனரஞ்சக இசைச்சித்திரம்தான் ‘கரகாட்டக்காரன்’.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாகஸ்வரக் கலைஞருக்கும் நாட்டியக் கலைஞருக்கும் இடையே காதல் கதை என்றால், ‘கரகாட்டகாரன்’ படத்தில் இரு கரகாட்டக் கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதல்தான் கதை.

‘தில்லானா மோகனம்பாள்’ படத்தில் தனியாக நகைச்சுவைக் கூட்டம், திகட்ட வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், மனதை மயங்கச் செய்யும் பாடல்கள், காதலுக்கு அம்மா குறுக்கீடு, நாயகிக்காக மல்லுக்கட்டும் வில்லன் ஆகியவைதான் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கதைக் களம்.

அதே சட்டகத்திலிருந்து பெரிதாக மாறாமல் வெளியான படம்தான் ‘கரகாட்டக்காரன்’. தனியாக நகைச்சுவைக் கூட்டம், திகட்ட வைக்கும் நகைச்சுவை காட்சிகள், மனதை மயங்க செய்யும் பாடல்கள், காதலுக்கு மாமா குறுக்கீடு, நாயகிக்காக மல்லுக்கட்டும் வில்லன் என ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் என்னென்னவெல்லம் திரைக்கதையில் இருந்ததோ அந்த ‘பேக்கேஜ்’ ‘கரகாட்டக்கார’னிலும் உண்டு.

‘தில்லானா மோகனம்பாள்’, ‘கரகாட்டக்காரன்’ சாயலில் 1999-ல் வெளியான ‘சங்கமம்’ படத்தின் கதையும் அதே டெம்பிளேட்
சங்கமம்
கதைதான். வெவ்வேறு காலகட்டங்களில் ‘தில்லானா மோகனம்பாள்’, ‘கரகாட்டக்காரன்’, ‘சங்கமம்’ வந்திருந்தாலும் ‘கரகாட்டக்கார’னின் வெற்றி 30 ஆண்டுகளைக் கடந்து இன்றும் பேசப்படுகிறது.

இன்னும் பல தலைமுறை தாண்டியும் ‘கரகாட்டக்கார’னின் இசைப் பெருமையும் ராமராஜன் என்ற வசூல் நாயகனை உருவாக்கிய வரலாறும் தமிழ் சினிமாவில் பேசப்படும். வெகுஜன சினிமா என்ற வகைமையில் ‘கரகாட்டக்காரன்’ ஏற்படுத்திய தடம் இன்னும் தொடர்வதே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி.

- இந்து தமிழ், 28/06/2019

06/06/2019

ஒரு கோப்பையின் பயணம்!

பதினோராவது முறையாக நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி இந்த ஆண்டுடன்  நாற்பது ஆண்டுகள்  நிறைவடைகின்றன என்பதுதான் அது. இன்று பிரமிப்பூட்டும் வகையில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால பயணங்கள் இருக்கின்றன.
 
 முயற்சி
இன்று பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளைச் சுலபமாக நடத்தி விட முடிகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு அது கடினமான ஒன்று. ஒரு நாள் கிரிக்கெட் அறிமுகமாவதற்கு முன்பு வரை கிரிக்கெட் என்பதே ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் வடிவ போட்டியாக மட்டுமே இருந்தது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்திலேயேகூட இரண்டும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டிகளை நடத்த முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
ஒலிம்பிக் விளம்பரம்
1900-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஒலிம்பிக் என்பதால் பல நாடுகள் கிரிக்கெட் நடைபெற்றிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த ஒலிம்பிக்கில் நடந்தது ஒரே ஒரு போட்டிதான். அந்தப் போட்டியில் இங்கிலாந்தும் பிரான்சும் விளையாடின. இரண்டு நாட்கள் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதில் நெதர்லாந்தும், பெல்ஜியமும்கூட  விளையாடுவதாக இருந்தது. ஆனால், அந்த அணிகள் திரும்ப பெறப்பட்டதால் அப்போது போட்டி நடைபெறவில்லை. இருந்தாலும் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு தொடருக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது இந்த ஒலிம்பிக்தான். இந்த ஒலிம்பிக்குக்குப் பிறகு அதிலிருந்து கிரிக்கெட்  நீக்கப்பட்டது தனிக்கதை.
ஒரு நாள் போட்டி அறிமுகம்
இதன் தொடர்ச்சியாக 1912-ம் ஆண்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு டெஸ்ட் போட்டி  இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. ஆனால், மோசமான வானிலை, மக்கள் ஆர்வம் காட்டாததால் முத்தரப்பு டெஸ்ட் தொடர் பிரகாசிக்கவில்லை. இதன்பிறகு பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு பெரிதாக முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சுமார் 50 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தில் கவுண்டி கிளப் போட்டியில் ஒரே நாளில் போட்டி முடிவு தெரியும் வகையிலான கிரிக்கெட் தொடங்கியது
1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஃபிரண்ட்ஸ் புராவிடன்ட் டிராபி இந்த வகையிலான போட்டியை இன்னும் பிரபலப்படுத்தியது. கிளப் அணிகள் தவிர்த்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்தன. இன்று .பி.எல். போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதைப் போல இப்போட்டிகளைக் காண மக்களும் ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஒரு நாள் வகையிலான கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்தில் ஆர்வம் அதிகரித்தது.
மழையால் நடந்த கிரிக்கெட்
முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தில் ஒரு நாள்  போட்டிக்கு மவுசு கூடிய வேளையில்கூட உடனடியாக எந்த சர்வதேச போட்டியும் 1960-களின் இறுதி வரை நடைபெறவேயில்லை. 1970-71ம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றது. டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 5 வரை டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அப்போதேல்லாம் டெஸ்ட் போட்டியின் இடையில் ஒரு நாள் ஓய்வு நாளும் வரும். எனவே டெஸ்ட் போட்டி அட்டவணை ஆறு நாட்களாக இருக்கும்.  
அப்படி நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களும் மழை காரணமாக   ஒரு பந்து கூட வீசப்படவில்லை. கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக ஜனவரி 5-ம் தேதி 40 ஓவர்களைக் கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தான் சர்வதேச  முதல் ஒரு நாள் போட்டி என்று அழைக்கிறார்கள். இந்தப் போட்டிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு கூடியது. கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளில் ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்டன.
முதல் உலகக் கோப்பை
இதை இன்னும் பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) முடிவு செய்தது. அதற்காக .சி.சி. கையில் எடுத்தததுதான் உலகக் கோப்பை கிரிக்கெட். அப்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என ஆறு அணிகள் டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்தைப் பெற்றிருந்தன. இந்த ஆறு நாடுகளையும் .சி.சியால சுலபமாக ஒருங்கிணைக்க முடிந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெறாத இலங்கையை விளையாட அழைத்தார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் அணி எதுவும் இல்லாமல் இருந்தது.   
முதல் உலகக் கோப்பையுடன் லாயிட்
நிறவெறிக் கொள்கை காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவால் பங்கேற்கமுடியவில்லை. இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்க என்ற அணி வந்தது. கிழக்கு ஆப்பிரிக்கா என்பது கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா நாடுகளின் கிளப் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி. இப்படி எட்டு அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வழியாக 1975-ம் ஆண்டில்  மூன்றுக்கும்  மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற முதல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியது.
மெருகேறிய தொடர்
அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டுமே இயற்கையாகவே உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்த வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. இங்கிலாந்தில் பகல் நேரம் அதிகம் என்பதால் 60 ஓவர் போட்டிகளை சுலபமாக நடத்த முடிந்தது. 1987-ம் ஆண்டுதான் முதல் முறையாக உலகக் கோப்பை நடத்தும் இடம் மாறியது. இந்தியாதான் அதற்கான பெரும் முயற்சியை எடுத்தது. இங்கு பகல் நேரம் குறைவு என்பதால் போட்டி 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன.
அன்று உலகக் கோப்பையில் விளையாட அணிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இன்றோ உலகக் கோப்பையில் பங்கேற்க நாடுகள் போட்டி போடுகின்றன. ஒவ்வொரு  நான்கு ஆண்டுகளுக்கும் உலகக் கோப்பை தொடர்ந்து மெருகேறி வருகிறது. புதிய நாடுகள், புதிய விதிமுறைகள், புதிய தொழில்நுட்பங்கள் என  உலகக் கோப்பை மட்டுமல்ல, கிரிக்கெட்டின் வடிவமும் மாறிக் கொண்டே வருகிறது.

மாறிய வடிவங்கள்
 1975, 1979, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் புரூண்டசியல் காப்பீட்டு நிறுவனமே ஸ்பான்ஷராக இருந்தது. எனவே முதல் மூன்று கோப்பைகளுமே அப்படியே அழைக்கப்பட்டன. 1987-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்ஷர் செய்தது. எனவே ரிலையன்ஸ் உலகக் கோப்பை என்று அழைக்கப்பட்டது.
1992-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை பென்ஷன் ஹெட்ஜட்ஸ் உலகக் கோப்பை என்றும், 1996  இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையை வில்ஸ் உலகக் கோப்பை என்றும் அழைத்தார்கள். ஸ்பான்ஷர்களுக்கு ஏற்ப கோப்பையின் வடிவமும் மாறிக் கொண்டே இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக .சி.சி.யே உலகக் கோப்பையைத் தயாரிக்க முடிவு செய்தது. இதனை 1999-ம் ஆண்டில் .சி.சி. செயல்படுத்தியது.  அப்போது முதல் .சி.சி. உலகக் கோப்பை என்றழைக்கப்படுகிறது.

- தி இந்து (வெற்றிக்கொடி), 10-02-2015