28/05/2018

இந்தியாவின் நீச்சல் மங்கை


தொழில்முறை நீச்சல் போட்டியாளராக இருப்பது ஒரு ரகம். சாதனை நோக்கில் நீச்சல் போட்டியாளராக இருப்பது இரண்டாவது ரகம். புலா சவுத்ரி இந்த இரண்டும் சேர்ந்த கலவை. தொடக்கத்தில் தொழில்முறை நீச்சல் போட்டியாளராக உருவாகி, பின்னர் சாதனை படைக்கும் நோக்கில் நீச்சலில் புலிப் பாய்ச்சல் காட்டியவர் இவர். ‘இந்தியாவின் நீச்சல் ராணி’ எனப் புகழப்பட்டவர். தொழில்முறையாகக் குறைந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் சாதனை நோக்கில் இவர் நிகழ்த்தியவை மலைக்க வைப்பவை.

ஆறு வயதில் நீச்சல்

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் புலா சவுத்ரி. சிறுவயதில் மற்ற குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிய போது புலாவோ வீட்டருகே இருந்த குட்டையில் இறங்கி விளையாடுவாராம். தினமும் குட்டையில் நேரத்தைக் கழித்த , புலா கை, கால்களைத் தண்ணீரில் அடித்து நீந்தப் பழகியபோது அவருக்கு ஆறு வயது. தொடர்ந்து நீச்சலில் ஆர்வம் காட்டியதால், ஹூக்ளி ஆற்றில் நீச்சல் பழகப் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அந்த ஆற்றில் நீந்தித்தான் நீச்சல் நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார்.

தங்கம் மேல் தங்கம்

மூன்றாண்டுகளுக்குள் நீச்சல் அத்துப்படியான நிலையில் போட்டிகளில் களம்கண்டார். ஒன்பது வயதில் தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றார். அவரைவிட வயதில் மூத்தவர்கள் போட்டியிட்டபோதும் வெற்றி என்னவோ புலாவுக்குத்தான் கிடைத்தது. அவர் பெற்ற முதல் பதக்கம் இது. இதன்பிறகு தேசிய ஜூனியர், சீனியர் அளவிலான போட்டிகளில் புலா தொடர்ந்து பங்கேற்றார். தேசிய அளவில ஆறு தங்கப் பதக்கங்களையும் வென்றார்.

சர்வதேசப் போட்டிகளிலும் புலா பங்கேற்றிருக்கிறார். தெற்காசிய அளவிலான நீச்சல் போட்டி அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது. 1991-ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற புலா, தங்கப் பதக்கம் வென்றார்.

கடல்களின் மீது காதல்

இந்த வெற்றிக்குப் பிறகு தொழிற்முறை நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதைக் குறைத்துக்கொண்ட புலா, நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வம் பின்னர் வெவ்வேறு கண்டங்களில் கடல்களைக் கடக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்தது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகளை எதிர்த்து நீந்தவும் பயிற்சியெடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டுகள் கடலிலேயே பொழுதைக் கழித்தார். கடல் பயிற்சி எதுவும் வீணாகவில்லை. 1989-ல் முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஆச்சரியமூட்டினார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பிறகு புலா சவுத்ரியின் தன்னம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து உலகில் உள்ள பல வளைகுடாக்களையும் கால்வாய்களையும் கடக்க அவர் முடிவு செய்தார். இதற்கிடையே 1996-ல் உள்நாட்டிலும் அவர் மிகப் பெரிய சாதனையை அரங்கேற்றினார். அப்போது முர்ஷிதாபாத்தில் தேசிய நீச்சல் போட்டி நடந்தது. அதில் நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்ற புலா சவுத்ரி 81 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வெற்றிவாகை சூடி, புதிய சாதனையையும் படைத்தார். அப்போது அவருக்கு 16 வயதுதான்!

ஏழு கடல் தாண்டி...

இந்த வெற்றிக்குப் பிறகு அவரது கவனம் முழுக்க கடலின் பக்கம் திரும்பியது. 1996-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்தி உலக சாதனை படைத்தார். 1998-ல் மத்திய தரைக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கும் ஜிப்ரால்டர் ஜலசந்தியை மூன்றரை மணி நேரத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். அதன் பின்னர் ஐரோப்பாவில் உள்ள திர்ரேனியக் கடல், நியூசிலாந்தில் உள்ள குக் ஜலசந்தி, கிரீஸில் உள்ள டொரன்னஸ் வளைகுடா, கலிபோர்னியாவில் உள்ள கேட்டலினா கால்வாய் ஆகியவற்றை நீந்திக் கடந்தார்.

தென்னாப்பிரிக்காவின் ரோபன் தீவிலிருந்து கேப்டவுன் நகருக்கு நீந்தி சாதனை படைத்தார். 1999-ல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததன் பத்தாவது ஆண்டு தினத்தையொட்டி மீண்டும் ஆங்கிலக் கால்வாயை இன்னொரு முறை கடந்தார். இதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை இரண்டு முறை கடந்த முதல் ஆசியப் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

2004-ல் இலங்கையின் தலைமன்னார் இந்தியாவின் தனுஷ்கோடி இடையிலான தொலைவை 14 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் உலகில் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார்.

அரசியலில் வெற்றிமுகம்

உலகில் உள்ள கால்வாய்களைக் கடந்த வெற்றிப் பெருமிதத்துக்கு நடுவே புலாவுக்குத் திருமணமும் முடிந்திருந்தது. புலாவின் வெற்றிக்கு அவருடைய கணவர் சஞ்சீவ் சக்கரவர்த்தி பக்கத்துணையாக இருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் சஞ்சீவ் ஊக்குவித்துவந்தார். வீட்டை அவர் கவனித்துக்கொண்டதால்தான், புலாவால் பயிற்சிகளுக்குச் செல்ல முடிந்தது. ஏழு கடல்களையும் நீந்திக் கடக்க முடிந்தது.

முதன்முறை ஆங்கிலக் கால்வாயைக் அவர் கடந்த பிறகு 1990-லேயே அர்ஜூனா விருதுக்குப் புலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இன்னொரு மகுடமாக அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வானார். ஒரே ஆண்டில் இரட்டை விருதுகளைப் பெற்று அந்த விருதுகளுக்குப் பெருமைச் சேர்த்தார். நீச்சலைத் தாண்டி அரசியலிலும் இறங்கி, மூழ்காமல் நீந்தி வெற்றிக்கொடி நாட்டினார் புலா. மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் இருந்ததே அதற்குச் சான்று.

ஊக்கமளிக்கும் புலா

தற்போது 48 வயதாகும் புலா சவுத்ரி, கொல்கத்தாவில் நீச்சல் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, ஏராளமான இளம் பெண்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார். நீச்சலில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்படுவது வாடிக்கை. அப்போதெல்லாம் அவர் சொல்லும் ஒரே பதில் இதுதான்: “ஒரே ஒரு நாள்கூட பயிற்சியைத் தவறவிட்டுவிடாதீர்கள். சாதிப்பதற்குக் கடினப் பயிற்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை. நீச்சலில் சாதிக்க வேண்டுமென்றால் கனவில்கூட கடல்தான் வர வேண்டும்”.

(வருவார்கள் வெல்வார்கள்)
- தி இந்து, 27/05/2018

21/05/2018

ராக்கெட் ராணி

இந்திய பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இன்று வீராங்கனைகளுக்குப் பஞ்சமே இல்லை. நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளுக்கும் குறைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பாட்மிண்டன் மகளிர் பிரிவின் முகமாக மட்டுமல்ல, நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே வீராங்கனையாகவும் வலம்வந்தவர் அபர்ணா போபட். மும்பையைச் சேர்ந்த இவர், தேசிய அளவிலான பாட்மிண்டன் தொடர்களில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தைத் தொட்டவர். இதனாலேயே ‘இந்திய பாட்மிண்டன் ராணி’ என்ற சிறப்புக்கும் சொந்தக்காரனார்.

முதல் முத்திரை

சிறுவயதிலிருந்தே டென்னிஸ் மீது தீராத ஆசைகொண்டிருந்த அபர்ணா, பாட்மிண்டன் பக்கம் திரும்ப அவருடைய பாட்மிண்டன் பயிற்சியாளர் அனில் பிரதான்தான் காரணம். அபர்ணா டென்னிஸில் லாகவமாகவும் வேகமாகவும் பந்தை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, பாட்மிண்டன் விளையாட்டு சரியாக இருக்கும் என்று கணித்தவர் அவர்தான். அவரது வழிகாட்டுதல்படி எட்டு வயதில் பாட்மிண்டனில் காலடி எடுத்துவைத்த அபர்ணா, பின்னர் பாட்மிண்டனில் சாதித்தது வரலாறு.

தொடக்கத்தில் அனில் பிரதான் மூலம் பாட்மிண்டன் விளையாடக் கற்றுக்கொண்ட அபர்ணா, 1994-ல் ‘பிரகாஷ் படுகோன் பாட்மிண்டன் அகாடமி’யில் சேர்ந்து தனது திறமையைக் கூர்தீட்டிக்கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாட்மிண்டனின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தேசிய போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1989-ல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து அவரது பாட்மிண்டன் பயணம் தொடங்கியது. முதல் தொடரிலேயே முத்திரை பதித்து வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு 11 வயது.

சாதனை மேல் சாதனை

1996-ல் முதன்முதலாக சீனியர் பிரிவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். அந்தத் தொடரிலிருந்து அபர்ணாவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. 1997 தொடங்கி 2006 வரை தேசிய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார் அபர்ணா. இந்தக் காலகட்டத்தில் அவர் தொடர்ச்சியாக ஒன்பது முறை பட்டம் வென்றார். இதுவரை எந்த இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும் செய்யாத சாதனை இது. அத்துடன் இந்திய பாட்மிண்டனின் பிதாமகன் என்றழைக்கப்படும் பிரகாஷ் படுகோனின் சாதனையைச் சமன் செய்தார்.

சர்வதேச அளவிலும் அவர் முத்திரை பதித்தார். 1996-ல் டென்மார்க்கில் நடைபெற்ற உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பினார். இதேபோல 1998-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை அவரைத் தேடிவந்தது. 2004 மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 2000, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். உலகத் தரவரிசைப் பட்டியலில் 16-வது இடம் வரை முன்னேறினார்.

எமனாக வந்த காயம்

2005-ல் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம், கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகி அபர்ணாவின் பாட்மிண்டன் வாழ்க்கையை முடிக்கக் காத்திருந்தது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடிய அபர்ணா, காயத்துடனே விளையாடி 2006-ல் தேசிய சீனியர் பட்டத்தை வென்றார். அபர்ணா வென்ற கடைசி தேசிய சீனியர் பட்டம் இதுதான். இந்தப் பட்டத்தை வென்றபோது அபர்ணாவுக்கு 27 வயது. இறுதிப் போட்டியில் இவர் வீழ்த்தியது யாரைத் தெரியுமா? இன்று பாட்மிண்டனில் நட்சத்திர வீராங்கனையாகத் திகழும் சாய்னா நேவாலைத்தான் தோற்கடித்தார். அப்போது சாய்னாவுக்கு 15 வயது.

2006-ல் நடைபெற்ற மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிக்கு இந்தியா தயாரானது. ஏற்கெனவே மணிக்கட்டு வலியுடன் இருந்த அபர்ணா, காமன்வெல்த் போட்டிக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மணிக்கட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காமன்வெல்த் போட்டிக்குத் தயாரானார். அந்தத் தொடரில் தனிநபர் பிரிவில் அபர்ணாவால் சாதிக்க முடியவில்லை. ஆனால், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அந்தத் திருப்தியோடு நாடு திரும்பிய அவர், பாட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். மணிக்கட்டுக் காயம் தீவிரமடைந்ததால் இந்த முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஓய்வு பெறும்போது தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் அவர் இருந்தார்.

ஊக்க மருந்து சர்ச்சை

பத்தாண்டு பாட்மிண்டன் பயணத்தில் கரும்புள்ளியாகத் தோன்றும்வகையில் அபர்ணாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் 2000-ல் நடந்தது. அப்போது டெல்லியில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அபர்ணா ஊக்க மருந்து உட்கொண்டதாக முடிவுவந்தது. சளித் தொந்தரவுக்காக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், ஊக்க மருந்து உட்கொண்டதாகத் தோற்றம் தந்து சர்ச்சையானது. ஆனால், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு அபர்ணாவுக்கு மூன்று மாதத் தடை விதித்தது. இதனால், அந்த ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஒரு நிகழ்வைத் தவிர அபர்ணா போபட்டின் பாட்மிண்டன் பயணம் சிறப்பாகவே இருந்தது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது 2005-ல் அபர்ணாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது 40 வயதாகும் அபர்ணா போபட் மும்பையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். இந்திய பாட்மிண்டன் லீக்கில் ‘மும்பை மாஸ்டர்ஸ்’ அணியின் பயிற்சியாளராகவும் அவ்வப்போது இருந்துவருகிறார்.

அபர்ணா அன்று பாட்மிண்டனில் பெற்ற ஒவ்வொரு வெற்றியும் இந்த விளையாட்டின்பால் பெண்களை ஈர்த்தது. பாட்மிண்டனில் பல வீராங்கனைகளுக்கும் வழிகாட்டியானார். இவரைப் பின்பற்றி ஏராளமான இளம் பெண்கள் பாட்மிண்டனில் காலடி எடுத்துவைத்தனர். அப்படி வந்த வீராங்கனைகள் மூலம் இன்று இந்திய பாட்மிண்டன் மகளிர் குழு உச்சத்தில் இருக்கிறது. அதற்கெல்லாம் விதையாக இருந்தவர் அபர்ணா போபட்!

(வருவார்கள் வெல்வார்கள்)
- தி இந்து, 20/05/2018

13/05/2018

சிக்ஸர் சாந்தா!


கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு எப்போதும் மவுசு குறையாது. அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றின் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுபவர் சாந்தா ரங்கசாமி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன், மகளிர் டெஸ்ட் போட்டியில் வெற்றி தேடித் தந்த முதல் கேப்டன், மகளிர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை, முதல் சிக்ஸர் விளாசிய வீராங்கனை இப்படிப் பல ‘முதல்’களுக்கு சாந்தா சொந்தக்காரர். இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு இவரே அடித்தளம். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

வீதியிலிருந்து சர்வதேசத்துக்கு

ஆண்கள் மட்டுமே கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்தில், மகளிர் கிரிக்கெட் வடிவம் பெற உதவியவர்களில் சாந்தா ரங்கசாமிக்குத் தனி இடம் உண்டு. கிரிக்கெட் விளையாடும் பெண்களுக்குப் பெரிய அளவில் வரவேற்போ ஆதரவோ பெரும்பாலும் இருப்பதில்லை. இப்படியொரு சூழலில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட் மட்டையோடு மைதானத்துக்கு வந்து விளையாடுவது என்பது பெண்களுக்குக் கனவிலும் சாத்தியமாகாதது. அப்படியான பின்னணியிலிருந்துதான் சாந்தா ரங்கசாமியின் கிரிக்கெட் வாழ்க்கையும் தொடங்கியது.

1960 -70-களில் சாந்தாவின் பால்யம் பெங்களூருவில் கழிந்தது. கிரிக்கெட் மீது தீராத ஆசைகொண்ட சாந்தா, வார இறுதி நாட்களில் பையன்களோடும் தன் வீட்டருகே வசித்த தோழிகளோடும் சேர்ந்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். வீதியில் கிரிக்கெட் விளையாடியவர், 20 வயதில் சர்வதேச அளவில் இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடும் அளவுக்குத் தன் திறமையை மெருகேற்றிக்கொண்டார். இவரைப் போலவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட்டின் மீது மோகம் கொண்ட இளம் பெண்களைக் கொண்டே இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் கட்டமைக்கப்பட்டது.
முதல் தொடர்

 சாதனை மேல் சாதனை

1973-ல் கிரிக்கெட் விளையாடப் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 14 அணிகளுக்கு இடையே போட்டித் தொடர் ஒன்று நடைபெற்றது. அந்தத் தொடரின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது சாந்தாவுக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்திய மகளிர் அணி உருவாக்கப்பட்ட போது கேப்டனாக இருக்கும் வாய்ப்பு சாந்தா ரங்கசாமியைத் தேடி வந்தது. ஆல்ரவுண்டராக அவர் இருந்தது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

1975-ல் நியூசிலாந்து மகளிர் அணியும் (5 டெஸ்ட்), ஆஸ்திரேலியா மகளிர் அணியும் (3 டெஸ்ட்) இந்தியாவுக்கு வந்தன. இந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக மொத்தமாக 527 ரன்களையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தமாக 203 ரன்களையும் சாந்தா குவித்தார். இந்த டெஸ்ட் போட்டிகள் எதுவுமே அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள் என்பதால் சாந்தாவின் சாதனைக் கணக்கில் இவை ஏறவில்லை. ஆனால், அவரை ஒரு சிறந்த கிரிக்கெட்டராக இந்தத் தொடர்கள் அடையாளம் காட்டின.

1976 - இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா காலடி எடுத்துவைத்தது. பெங்களூருவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயணம் தொடங்கியது. சாந்தா ரங்கசாமி தலைமையில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் களம் கண்டது. ஆறு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் அது. அதில் பாட்னாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிபெற்றமுதல் சர்வதேச வெற்றி.

ஆல்ரவுண்டர்

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இந்த முதல் தொடர் முழுவதுமே அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை சாந்தா வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் நான்கு அரை சதங்களை விளாசிய சாந்தா, எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் டெஸ்ட் தொடரிலேயே ஒரு வீராங்கனையாக, கேப்டனாக முத்திரைப் பதித்து அசத்தினார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு 1977-ல் இந்திய மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சென்றது. அந்தத் தொடர் சாந்தாவுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.

டுனெடின் நகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஆனால், அந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சாந்தா அபாரமாக விளையாடி 108 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். அந்தப் போட்டியில் அவர் விளாசிய சிக்ஸரும், இந்திய வீராங்கனை ஒருவர் விளாசிய முதல் சிக்ஸர் என்ற சிறப்பைப் பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமே 177 ரன்கள்தான் சேர்த்தது. இதில் சாந்தா விளாசிய 108 ரன், போட்டியை டிராவில் முடிக்க உதவியது.
முதல் இரண்டு ஆண்டுகள் இந்திய மகளிர் அணி குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறைந்தது. 1976 முதல் 1991வரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த சாந்தா மொத்தமே 16 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மொத்தமாக 1 சதம், 6 அரை சதம் உள்பட 750 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்த 16 டெஸ்ட் போட்டியில் 12 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக சாந்தா இருந்திருக்கிறார்.

குறைவாகப் பங்கேற்பு

இதே காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளிலும் சாந்தா விளையாடியிருக்கிறார். 1982 முதல் 1986 வரை 19 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார். ஒரு அரை சதம் உள்பட மொத்தம் 287 ரன்களையும், 12 விக்கெட்டுகளையும் சாந்தா எடுத்திருந்தார். 1982-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்குத் தலைமை வகித்தவரும் சாந்தாதான். சுமார் 15 ஆண்டு காலம் நீடித்த சாந்தாவின் கிரிக்கெட் பயணம் 1991-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. குறைந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், மகளிர் கிரிக்கெட்டின் ‘பிதாமகள்’களில் சாந்தாவும் ஒருவர்.

சாந்தா கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த 1976-லேயே அர்ஜூனா விருது பெற்று வியப்பூட்டினார். சர்வதேச கிரிகெட்டில் அடியெடுத்துவைக்கும் முன்பே இந்த விருதைப் பெற்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் ‘சி.கே. நாயுடு’ வாழ்நாள் சாதனை விருது முதன்முறையாகச் சாந்தா ரங்கசாமிக்கு 2017-ல் வழங்கப்பட்டது. அந்த வகையிலும் வாழ்நாள் சாதனை விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமைக்கு இவர் சொந்தக்காரரானார். தற்போது 64 வயதாகும் சாந்தா ரங்கசாமி, கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்று பெங்களூருவில் வசித்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)

- தி இந்து, 13/05/2018

07/05/2018

பி.டி. உஷா: தடகளப் புயல்

1980-ல் சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் சென்றனர். அவர்களில் 16 வயதுப் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்தது. தடகளத்தில் மலைகள் மோதிய அந்த ஓட்டப் போட்டியில், இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். பதக்கம் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், முதல் இளம் பெண் என இரண்டு சாதனைகளுக்குச் அந்தப் பெண் சொந்தக்காரரானார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தடம் பதிக்கும் நோக்கத்தோடு அந்தப் பெண் பங்கேற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இறுதிச் சுற்றில் எப்படியும் அவர் பதக்கம் வெல்வார் என நாடே காத்திருந்தது. ஆனால், 0.01 விநாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
நூலிழையில் பதக்க வாய்ப்பை அவர் தவறவிட்டிருந்தாலும், அந்தத் தோல்வி அவரை சர்வதேச அளவில் உயரத்துக்குக் கொண்டுசென்றது. அவர், ‘இந்தியாவின் தங்க மங்கை’, ‘ஆசிய தடகள ராணி’, ‘பையொலி எக்ஸ்பிரஸ்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பி.டி. உஷா. 1980-90-களில் தடகள விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரே இந்திய வீராங்கனை.

உழைப்பால் பெற்ற வெற்றி

‘பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா’ என்ற பெயரில் கோழிக்கோடு பையொலி கிராமத்திலிருந்து தொடங்கிய அவரது தடகளப் பயணம் மிக நீண்டது. அதில் அவர் சந்தித்த இமாலய வெற்றிகள், எதிர்பாராத தோல்விகள், வலி மிகுந்த தருணங்கள், பீறிட்ட சந்தோஷங்கள் என ஒவ்வொன்றும் பல கதைகளைச் சொல்லும். இந்தியாவின் தடகள முகமாக அந்தக் காலகட்டத்தில் கோலோச்சிய பி.டி. உஷா, விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணியில் அவர் சிறுவயதிலிருந்து தொடங்கிய உழைப்பும் அடங்கியிருக்கிறது.

கண்ணூரில் 1976-ல் விளையாட்டுப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்கள். அந்தப் பள்ளிக்கு கோழிக்கோடு மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்வானார் பி.டி. உஷா. அப்போது அவருக்கு 12 வயதுதான். தடகளத்தில் புயல் வேகத் திறமையை வளர்த்துக்கொண்ட அவர், முதன்முதலாக 1977-ல் தேசிய அளவிலான தடகளப் போட்டியில்100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார்.
அன்று தொடங்கிய பி.டி. உஷாவின் மின்னல் வேக ஓட்டம் இருபது ஆண்டுகளில் அவரைத் தடகள உலகில் பிரபலமாக்கியது; ஆசிய அளவில் ஓட்ட ராணியாக அழகு பார்த்தது. ‘இந்தியா தங்கப் பதக்கம் ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே...’ என பி.டி. உஷாவை மனதில்கொண்டு திரைப்பாடலும் எழுத வைத்தது.

ஆசிய சாதனை

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அளவில் பி.டி. உஷா முடிசூடா ராணியாகவே விளங்கினார். 1982 தொடங்கி 1989 வரை ஓட்டத்தில் பதக்கங்களைக் குவித்தார். டெல்லியில் 1982-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கால் வலியுடன் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்று முத்திரை பதித்தார். பி.டி. உஷா பெற்ற முதல் சர்வதேசப் பதக்கங்கள் இவைதாம். பின்னர் குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.

1986-ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி அவரை மேலும் உயர்த்தியது. அந்தத் தொடரில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்து ஓட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பி.டி.உஷா, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தார். ஒட்டுமொத்தமாக 1983 முதல் 1989வரை பல்வேறு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற பி.டி. உஷா, 17 தங்கப் பதக்கங்களை வென்று ‘தங்க மங்கை’ என்று தன்னை அழைப்பதற்கு நியாயம் சேர்த்தார். தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார்.

நம்பிக்கை நட்சத்திரம்

1991-ம் ஆண்டு அவரது வாழ்க்கை
யில் முக்கியமானது. அந்த ஆண்டுதான் அவர் திருமணம் செய்துகொண்டார். மத்திய தொழில் படை இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன் அவரது வாழ்க்கைத் துணையானார். திருமணத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தடகள பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை. பி.டி. உஷா இனி மைதானத்துக்கு வரப்போவதில்லை என்று நினைத்த வேளையில், ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் களத்தில் வந்து நின்றார். சர்வதேச அளவில் தடகளத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று தன் கணவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகக் களத்துக்குத் திரும்பினார்
.

மீண்டும் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். குறிப்பிடும்படியான பல வெற்றிகளை 1998-ல் குவித்தார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் நான்கு பிரிவுகளில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றார். ஒட்டுமொத்தமாக தடகளத்தில் மட்டும் 101 சர்வதேசப் பதக்கங்கள் பெற்று சாதனையிலும் சதமடித்திருக்கிறார். தடகளத்தில் இந்த அளவுக்குச் சாதனை படைத்த வீராங்கனைகள் இந்தியாவில் வேறு எவரும் இல்லை.

23 ஆண்டுகள் ஓயாமல் ஓடிய அவரது கால்கள் 2000-ம் ஆண்டோடு ஓய்வுபெற்றன. தடகளப் பயணத்தில் அவர் பெற்ற விருதுகளுக்கும் பஞ்சமில்லை. அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ‘கிரேட்டஸ் அத்லெடிக் உமன்’ விருது, ஆசியாவின் சிறந்த அத்லெடிக் விருது, தங்கக் காலணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றார். தடகள விளையாட்டின் முகமாக இருந்த அவர், இந்தியாவில் ஏராளமான இளம் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் மாறினார். அவரைப் பின்பற்றி இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடகளத்தில் காலடி எடுத்துவைத்தனர். இன்றும் பி.டி. உஷாவை மனதில்கொண்டு தடகளத்துக்கு வரும் பெண்கள் ஏராளம். ஏனென்றால், தடகளத்தில் அவர் பதித்த தடம் அழுத்தமானது.

தற்போது 53 வயதாகும் பி.டி. உஷா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். கோழிக்கோட்டில் ‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்’ என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, இளம் வீராங்கனைகளுக்குத் தடகளப் பயிற்சி அளித்துவருகிறார். டிண்டு லூகா, ஜெஸ்ஸி ஜோசப், சஹார்பனா சித்திக் போன்றோர் இவரது மாணவிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.

(வருவார்கள், வெல்வார்கள்)

- தி இந்து, 06/05/2018

05/05/2018

வெற்றிகரமானதா மூன்றாவது அணி?


இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் மூன்றாவது அணி தொடர்பான பேச்சுகள் எழுவது வாடிக்கை. தற்போதும் மூன்றாவது அணிக்கான முஸ்தீபுகள் மாநிலக் கட்சிகளிடம் தொடங்கிவிட்டன. மூன்றாவது அணி என்பது இந்தியாவில் வெற்றிகரமான அணியாக எப்போதெல்லாம் வலம் வந்திருக்கிறது?

தேசிய முன்னணி

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக பிற தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் கூட்டணியே மூன்றாவது அணி என்று உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால், இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரே ஒரு முறைதான் மூன்றாவது அணி வெற்றிகரமாக உருவாகியிருக்கிறது. ஆனால், மாநில கட்சிகள் ஒருங்கிணைப்பது என்பது புதிதல்ல. முதன்முதலில் 1989-ம் ஆண்டில்தான் மாநிலக் கட்சிகள் அடங்கிய ஒரு அணி வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்று இப்போது சொல்லப்படுவதைப்போல, இதை மூன்றாவது அணி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அன்று காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. பாஜக வளர்ந்துவரும் கட்சியாக இருந்தது. எனவே இரு கட்சிகளுக்கும் மாற்றாக இந்தக் கூட்டணி உருவாகவில்லை. அன்று நாடாளுமன்றத்தில் முழு பலத்தோடு இருந்த ராஜீவ் காந்தியை வீழ்த்தவே இந்தக் கூட்டணி உருவானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய வி.பி.சிங்கை மையப்படுத்தி இந்தக் கூட்டணிக்கு மாநிலக் கட்சிகள் அச்சாரமிட்டன.

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) என்று பல கட்சிகள் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், இந்தக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஜனதா தளம்’ என்ற பெயரில் புதிய கட்சியை வி.பி.சிங். உருவாக்கினார். காங்கிரஸை வீழ்த்த ஜனதா தளத்தோடு இடதுசாரிகள் இணைந்தன. திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளும் வி.பி.சிங்கை வலுப்படுத்த கரம் கோர்த்தன. 1988-ம் ஆண்டில்‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் அந்தக் கூட்டணி உருவெடுத்தது.

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜகவும், இடதுசாரிகளும் வெளியே இருந்த ஆதரவு அளித்தனர். வி.பி.சிங் தலைமையிலான அரசு, 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது. வி.பி.சிங் அரசு கவிழ்ந்த பிறகு தேசிய முன்னணியும் சிதறியது.

ஐக்கிய முன்னணி


ஆறு ஆண்டுகள் கழித்து, 1996-ல் மூன்றாவது அணி என்று நிஜமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக ஓர் அணி உதயமானது. ஆனால், இது தேசிய முன்னணியைப்போல தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அல்ல. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு உருவான கூட்டணி. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அன்றைய தினம் பாஜக தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க உருவான கூட்டணி. ஜனதா தளம், திமுக, தமாகா, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்பட பல கட்சிகள் சேர்ந்து, ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் செயல்பட்டன.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டாலும், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இந்தக் கூட்டணிக்கு பலம் கிடைக்கவில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னணிக்கும் பொதுவான எதிரியாக இருந்த பாஜகவை வீழ்த்த ஐக்கிய முன்னணி அரசை காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரித்தது. சுமார் 20 மாதங்கள் மட்டுமே நீடித்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் என இரண்டு பிரதமர்கள் பதவிக்கு வந்தனர். காங்கிரஸ் நடத்திய அரசியல் சடுகுடு ஆட்டத்தில், ஆட்சி கவிழ்ந்து ஐக்கிய முன்னணி இருக்கும் இடம் தெரியாமல் போனது.

ஃபெடரல் ஃபிரண்ட்

இதன்பிறகு பாஜக, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்து ஆட்சி நடைபெற்று வந்தாலும், மூன்றாவது அணி என்பது பேச்சளவிலேயே இருந்துவருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ‘ஃபெடரல் ஃபிரண்ட்’ என்ற பெயரில் பிராந்தியக் கட்சிகளின் கூட்டமைப்பை, அதாவது மூன்றாவது அணியை அமைப்பதற்கான யோசனையை வெளிப்படுத்தினார். இப்போது போலவே நவீன் பட்நாயக், நிதீஷ் குமார், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், கடைசி வரை அப்படி ஒரு கூட்டணி கட்டமைக்கப்படமலேயே போனது.

2014-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ‘ஃபெடரல் ஃபிரண்ட்’ பற்றி பேசி வருகிறார். அவருக்கு துணையாக தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் களமிறங்கியிருக்கிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களை சந்திரசேகர ராவ் தொடர்ச்சியாகச் சந்தித்து பேசிவருகிறார். தேர்தலுக்கு முன்பு பூதாகரமாக விவாதிக்கப்பட்டு, கலகலத்துவிடுவது மூன்றாவது அணி பற்றிய பேச்சின் வாடிக்கை. இந்த முறையாவது பேச்சுவார்த்தைகள் முழுமை பெற்று மூன்றாவது அணி உருவாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

- தி இந்து, 04/05/2018