12/06/2015

இனிமே இப்படித்தான் விமர்சனம்


முழு கதாநாயகனாக வல்லுவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்துக்கு அடுத்து  நடிகர் சந்தானம் நடித்திருக்கும் அடுத்த படம் இனிமே இப்படித்தான். காமெடியன் முகமூடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு,  நாயகனாக சந்தானம் தொடர்ந்து அரிதாரம் பூச இந்தப் படம் உதவுமா?

பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணம் வேண்டாம், காதல் திருமணமே நல்லது என்பது நாயகன் சந்தானத்தின் நம்பிக்கை. ஆனால் காதல் அமைய வேண்டுமே? ஏகப்பட்ட ‘பல்புகள்’ வாங்கிய பிறகு மஹா என்னும் பெண்ணை (அஷ்னா சாவேரி) நெருங்கினால் அவளும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறாள். கஜினி முகம்மது தோற்கும் அளவுக்கு முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி காணாத சந்தானம் பெற்றோர் கைகாட்டும் பெண்ணை (அகிலா கிஷோர்) மணக்கச் சம்மதிக்கிறார். அந்த நேரத்தில் பார்த்துத்தானா அஷ்னாவுக்குத் தன் மீது காதல் இருப்பது தெரிய வேண்டும்? காதலிக்கும் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் சந்தானம் அதிலிருந்து மீண்டாரா என்பதே ‘இனிமே இப்படித்தான்’ கதை.

 சந்தானம் படத்தில் என்னென்ன இருக்குமோ அவையெல்லாம் படத்தில் இருக்கிறது. சந்தானத்துக்கு ஏற்ற முழு நீள காமெடி கதைதான்.   சந்தானத்தின் பலமே காமெடிதான். அதற்கு சேதாரம் ஏற்படாமல் அவரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்கள் முருகானந்த் (முருகன் + ஆனந்த்).  நாயகனாக இருந்தாலும் நக்கலையும், நய்யாண்டியையும் கைவிடாமல் கலகலப்பாக்குகிறார் சந்தானம்.  அவருடைய வழக்கமான டைமிங் காமெடி  அவருக்கு பெரிதும் உதவி இருக்கிறது. எல்லாம் சரி, ஆனால் காதல் காட்சிகளிலும் அது தொடரும்போது பொருந்தாமல் போகிறது. கொஞ்சம் டான்ஸ் ஆடியும், வித்தியாசமாக ஹைஹீல்ஸ் செருப்பைப் போட்டுக்கொண்டும் ஃபைட் செய்து முன்னேறியிருக்கிறார் சந்தானம்.

படத்தில் இரண்டு நாயகிகள் என்றாலும், அகிலாவைவிட ஆஸ்னாவுக்கு அதிக முக்கியத்துவம். அகிலா கிஷோருக்குச் சிறிய வேடம்தான். நிறைவாகச் செய்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளரைப் பாராட்டியாக வேண்டும். சந்தானம், அஷ்னாவின் உடைகளின் தேர்வில் நல்ல ரசனை.
காதலுக்காக ஒரு பெண்ணைத் துரத்துவதெல்லாம் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். சந்தானம் தன் ஸ்டைலில் செய்கிறார். சந்தானம் தன் காதலைப் பற்றிப் பெண் வீட்டில் சொல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் வேடிக்கையாக இருக்குமளவுக்கு வலுவாக இல்லை. விடிவி கணேஷ் போன்ற ‘நண்பர்கள்’ குடித்தபடியும் குடிக்காமலும் பேசும் எந்தப் பேச்சும் கவரவில்லை.

மாமாவாக வரும் தம்பி ராமய்யாவின் சொதப்பல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பூட்டுகின்றன. ஆனால், கோவிலில் அவர் திட்டம் பலிக்காமல் போகும் காட்சி எடுபடுகிறது.   சந்தானம் காதலிக்கும் ஆஸ்னாவும், அவருக்கு நிச்சயக்கப்பட்ட அகிலாவும் எந்த வகையில் நண்பர்கள் என்பதை இயக்குநர் சொல்லாதது ஏமாற்றம்.

குட்டு உடைபட்ட பிறகு படம் சூடு பிடிக்கிறது. ஆனால் நாயகன் சந்தானம் என்பதாலோ என்னமோ இயக்குநர் முருகானந்த் இதிலும் வேடிக்கையைப் புகுத்துகிறார். கிளைமாக்ஸ் திருப்பமும் சந்தானத்தின் இமேஜை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. நாயகனாகிவிட்ட பிறகும் ஏன் இப்படி என்பதுதான் புரியவில்லை.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் கேட்கும்போது கேட்ட பாடல்கள் போலவே இருக்கின்றன. பிறகு யோசித்துப் பார்த்தால் மெட்டுக்கள் நினைவுக்கு வர மறுக்கின்றன. ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன் காட்சிகளில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறார். நாயகிகளை அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.

 காதலுக்கும் வீட்டில் செய்யும்ம் திருமண ஏற்பாட்டுக்கும் இடையேயான முரண்பாட்டை வேடிக்கையான சம்பவங்கள் மூலம் சொல்லும் முயற்சியில் இயக்குநர் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

மதிப்பெண்: 2 / 5