13/04/2014

தேர்தல் அறிக்கைகளெல்லாம் சும்மாதானா?


சுட்டெரிக்கும் கோடை வெயிலைவிடத் தகிக்கிறது தமிழக அரசியல் களம். வாக்குப்பதிவுக்கு இன்னும் பதினோரு தினங்கள் மட்டுமே உள்ளன. யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற பட்டிமன்றம் திரும்பிய பக்கமெல்லாம் நடந்தபடியிருக்க, அரசியல் கட்சிகள் ஓட்டுக்களைப் பெற வளையவளைய மக்களை வலம்வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பதிலடிகள், கேலிக்கூத்துகள் என பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தனை களேபரங்களும் மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தானே? நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் அதையொட்டி கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள்படி பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வெறும் சம்பிரதாயம்தான்

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம் என்று கட்சிகள் உறுதிமொழி அளிப்பது வாடிக்கை. இதுவரையிலும் கட்சிகள் மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களைப் பார்த்தல், தேர்தல் அறிக்கை என்பதே வெறும் சம்பிரதாயம் என்றே சொல்ல வைக்கிறது. தேர்தல் அறிக்கையை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதில் கட்சிகளுக்கே ஆர்வம் இல்லை என்பதுபோலத் தெரிகிறது. ஊறுகாய்போல சில இடங்களில் மட்டும் தேர்தல் அறிக்கைகளை குறிப்பிடும் கட்சிகள், மற்ற நேரங்களில் தாக்குதல் பாணி பிரச்சாரத்திலேயே ஈடுபடுகின்றன என்பது தெளிவு.

ஜெயலலிதாவின் பிரச்சாரம்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளர்களையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுவிட்டு, அதே வேகத்தில் பிரச்சாரத்துக்குக் கிளம்பிய முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பெரிதாக எடுத்துச்சொல்வதில்லை. பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களிலெல்லாம் காங்கிரஸையும் தி.மு.க-வையும் அவர் வறுத்தெடுக்கிறார். குறிப்பாக, தி.மு.க-வின் மீது ஏவுகணைகள்போலக் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. 2ஜி அலைக்கற்றை ஊழல், மின்வெட்டு போன்றவற்றுக்கெல்லாம் தி.மு.க-தான் காரணம், காவிரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் துரோகம், இலங்கைத் தமிழர் விஷயத்தில் நாடகம் என்று பல கட்டங்களில் அவர் பேசிய, சொன்ன கருத்துக்களே இப்போதும் மக்களின் முன்னால் வைக்கப்படுகின்றன.

போட்டிப் பிரச்சாரம்

தி.மு.க-வைப் பொறுத்தவரை ஜெயலலிதா சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லியே தி.மு.க-வின் பிரச்சார பீரங்கிகளுக்கு நாக்கு வறண்டுபோகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடுபற்றி ஜெயலலிதாவுக்குப் பதில் தரும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. பிரச்சார மேடைகளில் முக்கிய இடம் பெறுகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்தபோது செய்த சாதனைகள், ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மூடுவிழா என்ற வகையில் தி.மு.க-வின் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. சில இடங்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டிப் பேசுகிறார். தேர்தல் அறிக்கையை வழக்கமாகச் சுட்டிக்காட்டிப் பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த முறை இனம், மொழி சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உருக்கத்தையும் குழைத்துப் பேசுகிறார்.

மோடியை மையமிட்டு…

பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் அகில இந்திய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், அவற்றை மையப்படுத்தித் தமிழகத்தில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. வழக்கமாகத் தனிநபர் விமர்சனம், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், புகழ்மாலை சூட்டுவது என்ற பாணியையே இந்தக் கட்சிகள் அதிகம் கடைப்பிடிக்கின்றன. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை வெளியிடாததால், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சனம் செய்வதில் பிரச்சார நேரத்தைச் செலவிடுகிறார். இடையில் மோடி புகழ், குஜராத் புகழ் பாடும் விஜயகாந்த், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பேசி அவர் பாணியில் பிரச்சாரம் செய்கிறார். ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், மோடியை மையப்படுத்தியும், இலங்கைத் தமிழர் நலனை மையப்படுத்தியுமே பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. இடதுசாரிக் கட்சிகள் வழக்கம்போல, தங்கள் கொள்கை சார்ந்த விஷயங்களைப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன.

தமிழகத்தில் நடைபெறும் பிரச்சாரங்களைப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் போலில்லாமல், உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரங்கள் போலத்தான் தோன்றுகிறன. ஆக, தேர்தல் அறிக்கை ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகத் தேர்தல் களம்.

- தி இந்து,  13-04-2014

11/04/2014

மனசிருந்தா மார்க்கப்பந்து! கிரேஸி மோகன் கலகல...

கிரேஸி மோகன். தமிழ்க் கூறும் கொல்லுலகம் அறிந்த காமெடிச் சுரங்கம்.  டைமிங் காமெடியில் கிங். தமிழ் மொழியில் நகைச்சுவை வசனங்களை அவர் கையாளும் விதம் குறித்து கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல கொட்டினார். இனி ஓவர் டூ கிரேஸி மோகன்.

மொழின்னா என்ன? ரமண மகரிஷி அழகாக சொல்லியிருக்கிறாரு. மெளனமே ஒரு மொழிதான்னு. மெளனமே மிகப்பெரிய பேச்சுதான். எல்லா விஷயங்களுக்குமே பேச்சுதான் காரணம்.  நாம் நினைப்பது நன்றாக இருக்கும்.  அதை சொல்ல வரும்போது கொஞ்சம் குறைவாகும். எழுத வரும்போது இன்னும் குறைவாகும். பிரிண்ட்ல அதை பார்க்குபோது மோசமா தெரியும். சினிமாவும் அப்படித்தான். யோசிக்கிறப்ப நல்லா யோசிப்பாங்க. வசனம் எழுதும்போது நன்றாக எழுதுவாங்க. முடிக்கிறப்ப எல்லாமே மாறி போயிருக்கும்.

எனது குரு

கேமராவில் சூட்டிங் செய்கிறோம். அதை டிவிடிக்கு மாற்றுகிறோம். ஸ்பெஷல் எஃபெக்ட் சேர்க்கிறோம். ஒவ்வொன்றிலும் தரம் உயர வேண்டுமா இல்லையா? ஆனால், குறைந்திருக்கும். மொழியும் அப்படித்தான். ஒருவருக்கு இயற்கையாக, சுபாவமாக வருகிறது பாருங்க, அதுதான் நல்ல மொழி. ஆரம்ப காலங்களில் மொழியே இல்லாமல் மெளன படங்கள் வந்துச்சு. அதன்பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் வந்தாரு. காலத்தைத் தாண்டி மொழியில் சில பேரு முத்திரை பதித்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் அப்படியானவர்தான். மொழியில என்னுடைய குரு நாதர்கள் யாரென்று பார்த்தால், கி.வ.ஜெகநாதன், கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, கிருபானந்த வாரியார், கவிஞர் வாலி ஆகியோரைச் சொல்லலாம். மொழியில் கையாளுவதில் இவர்கள் எல்லாம் வல்லவர்கள்.

மொழி ஆளுமை

மொழி என்பது ஒரு ஊடகம், அவ்வளவுதான். அது ஒரு கடைக்கு போயி துணி வாங்குவது மாதிரிதான். துணியை எடுத்து அதை முழுக்கை தைப்பதா, ஸ்டைலா தைப்பதா, காலர் வைப்பதா, வேண்டாமா என்பதை அதை கையாளுபவரிடம்தான் அந்தத் திறமை இருக்கு. என்னைப் பொறுத்தவரை மொழியினாலதான் நான் ஜெயித்துக் கொண்டு இருக்கிறேன்.
 நம்ம தொழிலுக்கு மொழி ஆளுமை ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போ பாத்தீங்கன்னா, மைக்கேல் மதன் காமராஜன் படத்தில், கல்யாண விருந்து பண்ணும் காட்சி வரும். சாம்பார்ல மீன் விழுந்திடும். காட்சியில பாக்குறப்ப எல்லாருக்கும் சிரிப்பு வரும். இது இயல்பு. அதன்பிறகு ’வாட் யு மீன்.. ஐ மீன்..’ என்று பேசும்போதுதான் மொழி வரும். இந்த வசனம் காமெடியைக் கூட்டியது. அதாவது, சாம்பாரில் பல்லி விழுந்தாலும் தப்புதான். ஆனால், அந்த இடத்தில் ’வாட் யு மீன்..., ஐ மீன்...’ என்ற வசனம் எனக்கு கிடைத்ததால மீனை வைச்சுக்கிட்டேன். இந்த வசனம் அந்தக் காட்சியில் பளிச்சென வருவதற்கு வசனம் உதவியது. வசனத்திற்கு ஏற்ற காட்சி அமைத்தால் அதற்கு  ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ என்று பெயர். கதை, திரைக்கதை, வசனம் என வரிசையாக  எழுத வேண்டுமென்று இல்லை. வசனம், திரைக்கதை, கதை என மாற்றியும் எழுதலாம். கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்றசைந்ததும் கொடியசைந்ததா என்பது மாதிரிதான். அந்த நேரத்தில் எது நன்றாக வருகிறதோ அதை செய்துவிட வேண்டியதுதான்.

நகைச்சுவை மனோபாவம்

எனக்கு வாலி ரொம்பப் பிடிக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.  ஒருமுறை அவரோடு இருந்தப்போது, ஒருவர் வந்து கேட்டார். எப்போதும் கதர் உடையிலேயே இருக்கிறீர்களே என்று. அதற்கு வாலியிடம் இருந்து,  ‘வெதருக்கு ஏற்ற கதர்’ய்யா என்று பதில் வந்தது. இப்படி  நகைச்சுவையாக கூற ஒரு கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? பஞ்ச் இல்லாத இடத்திலும், நகைச்சுவை இல்லாத இடத்திலும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறோம் பாருங்க, அது ரொம்ப முக்கியம்.  அதேமாதிரி வாலியோட ‘கண்ணன் வந்தான் ராமா’வில் தேங்காய் சீனிவாசன் சொல்வாறு.  ‘பாருப்பா கிருஷ்ணா,  நான் இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறேன்’ என்று.  ‘அதற்கு எல்லாம் நீ செய்த பாவம்தான் காரணம்’ என்று எதிர்க்குரல் வரும். டெட்ராமைசின், டெராமைசின், குரோசின் என சின்(பாவம்)..சின்னு... மாத்திரைகள் பெயர் பதிலாக விழும். அப்படி வசனம் அமைக்க கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? எல்லாவற்றிலும் நகைச்சுவை இருக்கு என்று நினைக்கும் மனோபாவம் வேண்டும். அதற்கு கொஞ்சம் உழைக்கணும். மேலோட்டமாக இது போதும் என்று நினைத்தால் போதும்தான். நான் சில ஜோக்குகளுக்கு பத்து மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். அது மொழிக்கான காத்திருப்பு. மொழிக்காக காத்திருப்பது அலாதியானது.

என்னோட நாடகம் ஒன்றில்   ஹீரோ ஒரு பார்பரை டாக்டரா நடிக்க வைப்பாரு. பார்பரா அவர் இருக்குறப்ப கதாநாயகி பார்த்திருப்பா. டாக்டரா பார்க்கிறப்போ, கதாநாயகி கேட்பாள்,’ நான் உங்கள எங்கேயோ பார்த்திருக்கிறேனே’ என்று. அதற்கு பதில் எழுதனும். இதற்கு இரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். காலையில 5 மணிக்குதான அதற்கு பதில் கிடைத்தது. அந்த ஜோக் டைலாக் என்னான்ன, ‘என்னை நீங்க பார்த்தே இருக்க முடியாது. ஏன்னா நான் ஒன்லி ஃபார் ஜென்ஸ்’ என்று சொல்லுவான். அவன் வேற எதையோ சொல்லும்போதே அவனுடைய குணாதிசயம் வந்துடுச்சி இல்லையா. இதை எதுக்கு சொல்றோனா, மொழி இருக்கு பாருங்க, அதுக்காக காத்திருக்கணும். பொறுமை இருக்கணும். காத்திருக்கவனுக்கு மொழி நிச்சயமாக கிடைக்கும். மொழி மாறுவதை பத்தி ரொம்ப கவலைப்படக்கூடாது. மொழி கலப்பில்லாமல் எதையும் செய்ய முடியாது.

வட்டார வழக்கு

மொழியில் வட்டார வழக்கு இருக்கு இல்லையா? அதிலிருந்துதான் புதுக்கவிதைகள் எல்லம் வந்தன. ஆரம்ப காலங்களில் சினிமாவில், ’வாங்கோண்ணா,போங்கோண்ணா’ என்ற வசனங்கள் அதிகம் இருந்துச்சு. இதை சக்தி கிருஷ்ணசாமி போன்றவர்கள் மேம்படுத்தினாங்க. பாலச்சந்தர், சோ காலத்தில் ஒரு வரியில வசனங்களை கொண்டு வந்தாங்க. என்னோட காலத்தில் பட் பட்டென சொல்ற மாதிரி வசனங்கள் வந்து ரொம்ப சுலபமாயிடுச்சு. ஒரு வசனத்தை சொல்லும் போது பூர்வ பீடிகைகளையெல்லாம் சொல்லாமல் நேரடியாகவே சொல்லும் முறை வந்துடுச்சி. ஜனங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறார்கள். அவங்களவிட நாம் புத்திசாலியாக இருந்தால்தான் படம் ஓடும் என்பதை மனசுக்குள் வைத்துக்கொண்டு வசனம் எழுதனும்.

வட்டார வழக்கில் ஜோக் சொல்வது ரொம்ப ஈஸி கிடையாது. சதிலீலாவதி படம் எடுத்துக்கோங்க. படத்தில் கமல் கொங்கு பாஷை பேசியிருப்பாரு. நான் கோயமுத்தூர்காரன் இல்லை. இந்தப் படத்தில் என்னோட வசனங்களை எழுதின பிறகு அதை கோவை சரளாவிடம் கொடுத்து படிக்க வைச்சேன். அவர் படிக்கும் போது அதை பதிவு செய்து வசனங்களில் பயன்படுத்திக்கொண்டேன்.  ‘என்ற புருஷன்’ என்று சரளா பேசியதை வைத்தே,  ‘ஒன்ற புருஷன், ரெண்டற புருஷன்’னு காமெடி ஜோக் வைச்சேன். இதுதான் ஒரு எழுத்தானின், வசனகர்த்தாவின் திறமை. எந்த மொழியாகவும் இருந்தாலும் சரி, வட்டார மொழியாக இருந்தாலும் சரி, அதை பயன்படுத்திக்கொள்ளும் கெட்டிகாரத்தனம் வேண்டும்.

கண்ணதாசன் ஒரு முறை அவருடைய நண்பர் வீட்டுக்கு போயிருந்தார். காலிங் பெல்லை அழுத்தியதும், ‘’who is standing out side?'' என்று வீட்டுக்குள் இருந்து கேள்வி வந்தது. சிறிதும் தாமதிக்காமல், ‘’outstanding poet is standing out side'' என்று கண்ணதாசன் பதில் சொன்னார். ஆங்கிலமாக இருந்தாலும், அந்த வார்த்தைப் பிரயோகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.  ‘தெனாலி’ படத்தில் ஈழத்தமிழை பயன்படுத்தியபோது நானும் கமலும் ஈழ நாடகங்களை நிறைய பார்த்தோம். கேட்டோம். அதை வைத்துதான் வசனங்களை அமைத்தேன். நாம் சாதாரணமாக  ‘அவர் எனக்கு கடவுள் மாதிரி’ என்று சொல்வதை,  ‘’நீ சாதாரண மச்சான் இல்லை. தெய்வ மச்சான்’’ என்று மெருகேற்றி வசனம் அமைக்கப்பட்டது. அந்த வசனத்தை படத்தில் கமல் டெலிவரி செய்யும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

பிடித்த வசனம்

நான் எழுதிய வசனங்களிலேயே அவ்வை சண்முகியில் எழுதிய வசனம் ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி கோபித்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு போய்விடுவாறு. குழந்தையை பார்த்துக்கொள்ள கமலே பெண் வேடமிட்டு இன்டர்வியூவுக்கு வருவார். அவரைப் பார்த்ததும் குழந்தை ஓடி வந்து கட்டிப்பிடிக்கும். குழந்தையை தூக்கியவுடன் அப்பா என்று சொல்லும். உடனே கமல்,  ‘எப்படி கண்டிபிடிச்ச’ என்று குழந்தையைப் பார்த்து கேட்பார். உடனே அதுக்கு குழந்தை,’ என் அப்பா வாசனை எனக்குத் தெரியாதா?’ என்று கூறும். பொதுவாக அம்மா வாசனை குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். அப்பா வாசனையும் குழந்தைகளுக்குத் தெரியும் என்பதை ஆடியன்சுக்கு சொல்லணும் என்பதற்காக இந்த வசனத்தை வைத்தோம்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தின் ரீமேக். இந்தப் படத்தில நான் முன்னாபாய் படத்தின் ஒரு வசனத்தைக் கூட நான் பயன்படுத்திகொள்ளவில்லை. முழுவதுமாக என் பாண்யில் எழுதியிருந்தேன். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்துல நானும் நடிச்சிருக்கேன். சூட்டிங் போது பேப்பர்ல மடிச்சு கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பேப்பர திருப்பி பார்த்தப்ப அதுல மார்க்கப்பந்து என்ற பெயரைப் பார்த்தேன். உடனே என் கேரக்டருக்கு மார்க்கப்பந்து என்று வைத்துக்கொண்டேன். உதவியாளர்கள் நல்ல பெயரா வைக்கலாமேன்னு சொன்னாங்க. நான் கேட்கல. அந்தப் பேரு நல்லா இருக்கும்னு உள் மனது சொல்லுச்சி. அந்தப் பெயரை வைச்சுதான், ‘மனமிருந்தால் மார்க்கப்பந்து’ என்ற வசனத்தையும் எழுதினேன். அது மிகவும் பிரபலமாச்சு. எந்த ஒரு விஷயத்தையும்  நுணுக்கமாக அணுகி வசனம் எழுதுவதற்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமயோசித வசனம்

வசனகர்த்தாவுக்கு சமயோசிதமாக வசனம் எழுதும் திறமையும் வேண்டும். அருணாச்சலம் படத்துல தங்கையோட கல்யாண காட்சி. ஏற்பாடுகள் நடந்திக்கிட்டு இருக்கும். ரஜினி நடந்து வரும் முதல் காட்சி. அவரு என்ன நினைச்சரோ தெரியலை.  ‘சும்மா நடந்து வந்தா ஒரு மாதிரி இருக்கு. ஒரு டையலாக் கொடுங்க மோகன்’னு சொல்லிட்டாரு. என்ன வசனம் வைக்கலாம்னு சின்ன யோசனை. வேலையாள் ஒருவரை ஒரு இடத்துல உட்கார வைத்துவிட்டோம். இப்போ ரஜினி நடந்து வராரு. ரஜினி பக்கத்துல வந்ததும், வேலையாள் பொருளைத் துடைப்பார். உடனே ரஜினி, ‘பார்த்து வேலை செய். என்னை பார்த்தவுடன் வேலை செய்யாதே’ என்று சொல்வார். அது ஒரு பஞ்ச் டயலாக்கவும் வந்துச்சு.

ஆஹா படம் கூட நல்ல காமெடி வசனங்கள் நிரம்பிய படம்தான். கல்யாண வீட்டில் கதா நாயகி ஸ்வீட் பறிமாறிக்கொண்டிப்பாள். அவளிடம் போய்,  ‘பெயர் என்ன?’ என்று கேட்பான்  நாயகன்.  ‘ஜாங்கிரி’ என்று பதில் சொல்வாள் நாயகி.  நான், ‘உன் பெயர கேட்டேன்’ என்பான் நாயகன்.  ‘ஜானகி’ என்று பதில் கூறுவாள் நாயகி. உடனே நாயகன், ‘ஸ்வீட் நேம்’ என்பான். அதற்கு நாயகி,  ‘ஸ்வீட் பேரு ஜாங்கிரி’ என்பாள். இப்படி வசனங்கள் எழுதுறது இயற்கையாக அமைஞ்சிடிச்சு. வசனம் எழுதுவது எனக்கு சுலபமான வேலை ஆகிடுச்சு

வாசிப்புத் தேவை

என்னைப் பொறுத்தவரை ஆடியன்சுக்காக வசனம் எழுதுறவங்க ஜெயிப்பாங்க. மற்றவர்களை திருப்திபடுத்த வசனம் எழுதினா வெற்றி கிடைக்காது. வசனங்களை ஆடியன்சுக்கு புரிய மாதிரி  எழுதணும். புதுமையாக எழுதனும். அதற்கு ரொம்ப படிக்கணும். வாசிப்புகள் இல்லாமல் எதையும் புதிதாக சிந்திக்கவும் முடியாது. எழுதவும் முடியாது. 

- தி இந்து தமிழ்ப் புத்தாண்டு மலர், 2014

10/04/2014

சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு!


உலகில் மர்மம் நிறைந்த பகுதிகள் நிறைய உள்ளன. அதில் ஈஸ்டர் தீவும் ஒன்று. இங்கு அப்படியென்ன மர்மம் உள்ளது என்றுதானே நினைக்கிறீர்கள். ‘மோவாய்’ என்று அழைக்கப்படும் கற்சிலைகள் இங்கு நிறைய உள்ளன.

மோவாய் என்பது ‘பறவை மனிதன்’ என்ற உருவத்தைச் சொல்லும் வார்த்தை. பண்டைய கால மூதாதையர்களின் முகங்கள் இவை. இது தொன்மை வாய்ந்த ஒரு மனித இனத்தின் வழிபாட்டுச் சிலை. மோவாய் பற்றி இப்படி நிறையச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பறவை மனிதன் சிலை வழிபாடு தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டுக்கு அருகே ஈஸ்டர் தீவில் மிகப் பிரபலமாம். இதற்காக ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான சிலைகளை அத்தீவு முழுவதும் நிறுவி மக்கள் வழிபட்டதாகக் கூறுகிறார்கள். சிலைகளை வைப்பதற்காகவே அத்தீவில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மரம் அழிக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் அத்தீவில் மழை பொய்த்து விவசாயத்துக்கு வழி இல்லாமல் போனது. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பசியைப் போக்க மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று நர மாமிசம் உண்டு மடிந்தனர். எஞ்சியவர்கள் அம்மை நோயால் இறந்தனர் என இத்தீவைப் பற்றிப் பல கதைகள் உலா வருகின்றன.

உச்சக்கட்டமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்தே இத்தீவு துண்டிக்கப்பட்டு மர்ம தேசமாக மாறியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படி மர்மங்கள் நிறைந்த இத்தீவு 1888-ம் ஆண்டுக்குப் பின்புதான் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. இத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை முழுவதும் அறிய இப்போதும்கூட தொல்லியல் துறையினர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தீவில் தற்போது வரை 887 மோவாய் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. இந்தச் சிலைகளை எப்படி வடித்தார்கள், கற்களை எப்படித் தூக்கி நிறுத்தினார்கள் என்பதற்கெல்லம் துல்லியமான பதில்கள் இல்லை.

மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள ஈஸ்டர் தீவு மர்ம தேசமாகவே இன்றும் நீடிக்கிறது.

தி இந்து, 10-04-2014

04/04/2014

மான் கராத்தே விமர்சனம்



லாஜிக்கோடு கதை சொல்வது ஒரு ரகம். லாஜிக்கே இல்லாமல் மசாலாக்களை மட்டுமே நம்பிக் கதை பண்ணுவது இன்னொரு ரகம். ‘மான் கராத்தே இரண்டாவது ரகம்வலுவான ஒரு முடிச்சின் அடிப்படையில் சங்கிலித் தொடர் திரைக்கதை அமைக்கும் ஏ.ஆர். முருகதாஸ் எழுதிய மிக பலவீனமான கதை இது. 

பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலையிழக்கும் ஐந்து நண்பர்கள்( முன்று ஆண்கள், இரண்டு பெண்கள்) அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் கையில் சித்தர் ஒருவர் ஒரு செய்தித்தாளைக் கொடுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வரவிருக்கும் செய்தித்தாள் அது. அதில் ஒரு செய்தி இவர்களைப் பற்றியது. ராயபுரத்தில் வாழும் பீட்டர் (சிவகார்த்திகேயன்) மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்கிறார். அதில் கிடைக்கும் பரிசுத் தொகையான 2 கோடியை, ஐந்து ஐடி நண்பர்களுக்கும் அவர் கொடுப்பதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.
இதில் உற்சாகமடையும் அவர்கள் பீட்டரைப் பிடித்து வந்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால் அவருக்கு பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாது. இதனால் அவருக்கு பயிற்சியாளரை ஏற்பாடு செய்கிறார்கள். தான் காதலிக்கும் யாழினிக்கு (ஹன்சிகா) குத்துச் சண்டை பிடிக்கும் என்பதற்காக பீட்டரும் ஒப்புக்கொண்டு தயாராகிறார்.
முதல் இரண்டு சுற்றுக்களில் ‘மான் கராத்தே’ என்ற உத்தியை (எதிராளி முகத்தில் குத்த வரும்போது விலகிக்கொள்வது) பயன்படுத்தி சிவகார்த்திகேயன் வெல்கிறார். இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெறும்போதுதான் தெரிகிறது. பல ஆண்டுகளாக மாநில ஷாம்பியன்ஷிப் போட்டியை தக்கவைத்திருக்கும் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான மற்றொரு பீட்டர் (வம்சி கிருஷ்ணா)
என்று. நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய பீட்டர் இவர்தானோ என குழம்பும் ஐடி நண்பர்கள் ராயபுரம் பீட்டரை என்ன செய்தார்கள்? தனக்குக் குத்துச் சண்டை தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் காதலிக்காக இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு ராயபுரம் பீட்டர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
கதையாகப் பார்க்கும்போது சுவையாகத் தோன்றலாம். ஆனால் காட்சிகளாகப் பார்க்கும்போது தலை கிறுகிறுக்கிறது. நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்ப்பே இல்லாத சரடுதான் ‘மான் கராத்தே’ கதை. சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த எதிர்நீச்சலின் எதிர்மறை பிம்பம் இது. அதில் இருந்த முயற்சி, தன்னம்பிக்கை இரண்டையும் இழிவுபடுத்தும் விதமாக ஒரே நாளில் ஒருவன் குத்துச்சாண்டை வீரனாகி, பல ஆண்டுகளாக உழைத்து சாம்பியன்ஷிப் வென்ற ஒருவனை வீழ்த்துவதுபோல காட்டி, குத்துச்சண்டையையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் இழிவுபடுத்துகிறார் இயக்குநர்.  
கதையின் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமின்றி நாயகியின் அப்பா, ஐந்து ஐ.டி. நண்பர்கள், பயிற்சியாளராக வரும் ஷாஜி எனப் பல பாத்திரங்களும் பலவீனமாகவே இருக்கின்றன.
நடிப்பு, நடனம் இரண்டிலும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், டைமிங் சென்ஸைத் தவறவிட்டிருக்கிறார். மசாலாவை நம்பினோர் கைவிடப்படார் என்ற முடிவுடன் ஒரு புது இயக்குநர் (திருக்குமரன்) களம் இறங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹன்ஷிகா கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். முன்னணிக் காமெடியனாக வளர்ந்து வரும் சதீஷை வீணடித்திருக்கிறார்கள். படத்தில் நிமிர்ந்து உட்கார வைப்பவர் இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான். ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகமாகவே தட்டி அதை சராசரி ஆக்கிவிட்டிருக்கிறார்.
ராயபுரம் பீட்டருக்காக வெற்றியை விட்டு கொடுங்கள்’ ரியல் பாக்ஸர் பீட்டரிடம் அவரது மனைவி சொல்கிறார்.  ‘உன்னை யாராவது கேட்டால் நான் விட்டுத் தருவேனா, அதே மாதிரிதான் பாக்ஸிங்கும்’ என்று உணர்ச்சிக்கரமாக பேசும் அவர், ராயபுரம் பீட்டரிடம், ‘உன் காதலியை  விட்டுக்கொடு.. வெற்றியை விட்டுக் கொடுக்கிறேன்’ என்று வசனம் பேசுவது உச்சகட்ட முரண்.
பெருங்கூட்டத்திடம் தர்மடி வாங்கிய பின், முகத்திலும், மூக்கிலும் ரத்தம் வடிய  “மடங்க மடங்க அடிக்கிறதுலகூட இப்படியெல்லாங்கூடவா யோசிப்பாய்ங்க..! என்ற வடிவேலுவின் நிலைதான் ரசிகர்களுக்கும். 
மான் கராத்தே -  ரசிகர்களை ஏமாற்றிய மாய மான்.

மதிப்பெண்: 2.5 / 5